தலைப்பைப் பார்த்ததும் 'கிர்'ரென்று ஃபீல் பண்ணுபவர்கள், கோக், பெப்ஸியை ராவாக குடிக்கத் தயங்குபவர்கள், நிலா, தெருவிளக்கு,தெருநாய் பார்த்து பேசத் தெரியாதவர்கள்... கொஞ்சம் பார்த்துப் படிக்கவும்.
நவீனமா சிறப்பா எப்படி கவிதை எழுதறதுன்னு சொல்லித்தருவது மட்டுமே நம் பட்டறையின் நோக்கம்.
இடம்: காலடி அலுவலகத்தின் மொட்டைமாடி, சேஷாத்ரிபுரம், பெங்களூரு
நேரம்: மாலை 6க்கு ஆரம்பிய்க்கும்.. (அப்போதுதான் மொ.மாடியிலிருக்கும் நாயை கீழே அவுத்து விடுவாங்க) பட்டறை முடிவு நேரம் சரக்கின் இருப்பைப் பொறுத்தது!
அனுமதி: ஆண் கவிஞர்கள் (சரக்குடன் வருக! இல்லே தம்மோடயாவது வாங்க! எதுவும் இல்லாட்டி போவுது உங்க கவிதை புக்குகளை எடுத்துட்டு வராமயாவது வந்து சேருங்க!)
பெண் கவிஞர்கள் (அனுமதி இலவசம்!!!)
மற்றும் திருநங்கை கவிஞர்கள்
தகுதி: பேப்பர், பென்சில் (முனை சீவப்பட்டிருக்க வேண்டும்) மற்றும் பேனா
கரகாட்டகாரன் (ராமராஜன், கனகா, கவுண்டமணி-செந்தில், நடித்த தமிழ் படம்) பார்த்திருக்க வேண்டும்
ஆரம்பிப்பமா நம்ம பட்டறையை..
கவிதை என்பதை கவி, பாடல், கவுஜ, கழுதை,ஹைகூ, செய்யுள், லிமரிக் என்று பல ராகங்களில் சொல்லப்பட்டாலும் கவிதை என்று அழைப்பதே பொதுவானது என்கிறது எவ்வளவு குடித்தாலும் தெளிவாகவே இருக்கும் கவிஞர் சங்கம் (வட்டக்கிளை - எண் 6, குற்றாலம் பிராஞ்சி)
கவிதைக்கென்று ஒரு உடல் (anatomy) இருக்கிறது:
தலைப்பு (இல்லாமல் கூட இருக்கலாம்.. அது உங்க கெத்தைப் பொறுத்து அமைகிறது)
முகவாய் (அல்லது முகரைக் கட்டை)
மத்தியம்
வால் (அல்லது twist)
இந்த பாகங்களில் நேர்த்தியாக படிமங்களை (கவிகாட்சிகள் அல்லது images) போட்டுத் தெளித்து, லேசாக வறுத்து, தாளித்து, பொன்னிறமாக கருகல் வாடை இல்லாமல் எடுத்து வைத்தால் கவிதை வந்துவிடும்.
கரகாட்டக்காரன் கதையை அப்படியே செய்யுள் வடிவத்தில் இல்லாமல், சிறுகதை வடிவத்திலும் இல்லாமல் ஒரு கவிதையாக எழுத வைப்பதே நம் காலடியின் கவிதைப்பட்டறையின் நோக்கம்!
எப்படி?
கரகாட்டகாரன் படத்தில் முதல் சீனை நினைத்துக் கொள்ளுங்கள்..
அல்லது டப்பா வண்டியை ஒரு கோஷ்டியே தள்ளிக் கொண்டு வரும் காட்சி? சிவப்பு காரு, உள்ள யாரு, தள்ளிப்பாரு.. ஞாபகத்துக்கு வந்துவிட்டதா? இதை தொட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்... இப்படி:
செந்நிற செவ்வகத்தின் உள் ஒரு கிளி (கோவை சரளா)
சேர்ந்தணைத்தாற் போல் பத்து உள்ளங்கைகள் (காரைத் தள்ளறவங்க கை எண்ணிக்-கை)
உச்சிவெயில் பரவித் தெரிக்கிறது
சாந்து அப்பிய சேந்தமங்கலத்தான் முகத்தில் (அம்புட்டு அழுத்தமா ராமராஜனுக்கு மேக்கப் போட்டிருக்காங்களாம்)
அத்துவான காட்டுக்குள் வித்துவானின் (கவுண்டமணி)
செவ்வகத்தின் ஸ்தலபுராணம் (இந்த காரை இதுக்கு மின்னாடி ஐதராபாத் நிஜாம் வச்சிருந்தாரு...)
விவரிக்க கேட்டுவிட்டு
குழல்ஊதும் கோமுட்டித் தலையன் (செந்தில்) கேட்டான்
செவ்வகத்தின் பழைய சொந்தகாரியை யார் வைத்திருந்தது - அப்போது
நாதஸ்வரத்தில் மிருதங்கம் வாசிக்கப்பட்டது! (வேறென்ன? அப்புதான்!)
நிற்க. இப்ப நாம கவிதையின் மத்திய பிரதேசத்தில நுழையப் போறோம்..
இந்த இடத்தில ராமராஜன்-கனகா காதல், வில்லன், டான்ஸ், எல்லாத்தையும் போட்டு மிக்ஸிங் பண்ணனும். கொஞ்சம் கொலமுயற்சி மாதிரிதான்.. ஆனாலும் துணிந்து இறங்க வேண்டியது கவிக்கடமை ஆகிறது!
அதுக்கு முன்னாடி உங்க வீட்டில இருக்கிற முருகன் படம் போட்ட காலண்டர், அதில இருக்கிற ராசி-பலன், பழைய நியூஸ் பேப்பர், போண்டா பேப்பர் இதில இருந்து கிடைக்கிற சங்கதிகள் எல்லாத்தையும் உங்க அடிடிடி மனசில போட்டு ஒரு பிசை பிசைஞ்சுக்கோங்க.. வொக்கபிலரிக்கு பயன்படும். என்ன?
ரைட் ஆரம்பிப்போம்...
சலங்கை அவிழ்ந்த கால்கள்
இரவின் வீதியின் சஞ்சாரிக்கின்றன
திடுமென முன் வந்த தேவதை
மோகினி பேய்கள் உண்டு என்று நிறுத்தினாள்.
தேவதையின் கால் கண்டவன் சொன்னது:
முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு
சந்தனம் கரைச்சுப் பூசணும் எனக்கு
கொல்லென்று சிரித்துப் பறந்தாள் தேவதை
இரவின் கூட்டினுள்!
(அதாவது ராமராஜன் தனியா ராத்திரி நடந்து வரும்போது கனகா பேசற காட்சிதான் இது)
பயமா இருக்கு, வயித்த கலக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றவங்க... நோ வே! கம்முனு உக்காருங்க!
அப்புறம் இந்த வாழைப் பழ காமடி?? அதையும் மத்திய பிரதேசத்திலேயே வாழைப்பழத்தில ஊசி மாதிரி சொருகிட வேண்டியதுதான். ஆங்... இப்ப உங்களுக்கே இந்த கவிதையை மேற்கொண்டு எடுத்துச் செல்லணும்னு பரபரக்குதா? அதுதான் கவிதையோட சிறப்பம்சமே!
வாங்க வாழைப்பழத்தை(யும்) பிழீஞ்சிடலாம்:
ஞானபண்டிதனை அழைத்து
இரண்ட வாழைப்பழங்கள் வாங்கி வரப் பணித்தான்
வந்து தந்தான் ஒன்று
இன்னொன்று எங்கென்று கேட்டதுக்கு....
அந்த இன்னொன்று இதுதான் என்ற
பிரபஞ்சத் தத்துவத்தை
பிசைந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.
மேற்கொண்டு நீங்களே கரகாட்டகாரனை முன்வைத்து கவிதையின் மத்திய பிரதேசம், வால்பகுதி என எளிதாக வளர்த்திச் செல்லாம். கவிதையை சிலிம்மாக எழுதினால் அதை கவிதையென்றும் செழிப்பாக எழுதிவிட்டால் நீள்கவிதையென்றும் சொல்லிக்கொள்ளலாம் (அதற்கு தனியாக ஒரு நாக்கு தேவைப்படும்)
கவிதை எழுத ஆரம்பிப்பவர்களுக்கு சில முக்கியமான குறிப்புகள்:
1. கவிதையை நீங்கள் எழுத அதிகம் குறிப்புகள் படிக்க வேண்டியதில்லை (கேட்டால் கவிதைதான் என்னை எழுதிச் செல்கிறது என்று சொல்லிக்கலாம்) ஆனால், எழுதிய கவிதைக்கு யாராவது பொருள் கேட்டு வந்துவிட்டால்தான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் (குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கம்பர், சிம்போர்க்கா, நெரூதா, சில்வியா பிளாத், எரிக்கா ஜாங், காப்கா, செகாவ், வேர்ட்ஸ்வொர்த் போன்று பல புரியாத குறுக்குச்சந்து, முட்டுச்சந்துக்குள் எல்லாம் லெப்ட், ரைட், யூ-டர்ன் எல்லாம் போட்டு எஸ்ஸாகத் தெரிந்திருக்க வேண்டும்)
2. கவிதை என்று வந்தபின்னாடி வார்த்தை வறட்சி என்று வருவதுண்டு. அதற்கு தீர்வு: பெரிய புத்தகமாக எடுத்துக்கொண்டு (எதோவோரு சப்ஜெக்ட், கோலம் போடுவது, சமையல் குறிப்பு, பஞ்சாகம், லிப்கோ டிக்சனரி இப்படி) அதில் படக்கென்று ஒரு பக்கத்தை திறந்து அதில் கிடைக்கும் 1, 2 வார்த்தைகளை பயன்படுத்திக் கொல்க
3. முன்பு ஆண் கவிஞர்களுக்கு என்று ஒரு ப்ரத்யேக அடையாளம் இருந்ததுண்டு (கண்ணாடி, தாடி, ஜோல்னாபை, ஜிப்பா) இப்பொழுது எல்லாம் நவீனமாகி விட்டபடியால் கவிஞர்கள் எப்போதும் மப்டியிலேயே திரிகிறார்கள். அதனால் வாலன்டியராக நீங்கள் யாரிடமும் கவிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு முழி பிதுங்காதீர்கள்.
4. வாக்கியங்களை உடைத்து உடைத்து எழுதுவது ஒரு நேக்கு. அதற்கு ஒரு எளிய உபாயம்: உங்கள் இடுகை விண்டோவின் பாதிக்கு மேல் வார்த்தைகள் வருகிறாற் போல் தெரிந்தால்.. உடைத்துவிடுங்கள்!
5. முக்கியமாக அச்சுறுத்துகிற வாக்கியங்களை பிரயோகிக்கவும். உ-ம்: நீங்கள் ஒரு கார்ப்பரேஷன் தொட்டியைப் பார்க்கிறீர்கள். அதற்குள் ஒரு ஆணுறை கிடக்கிறது. அதை அப்படியே குப்பைத் தொட்டிக்குள் ஆணுறை என்று சன்-நியூஸ்தனமாக எழுதக் கூடாது. அதை எப்படி கவிதையா சொல்றதுன்னா... கார்ப்பரேஷன் தொட்டிக்குள் அவிழ்ந்து கிடக்கிறது ஆதாமின் குற்றப்பத்திரிக்கை.. இதுதான் திடுக் வரிகள்! புரியுதோ?
காலடியின் கவிதைப் பட்டறையில் பங்கேற்கும் அனைவரும் கவிஞர் அடையாள அட்டை (போட்டோவுடன்) தரப்படும்
(இதற்கு தனிக்கட்டணம் ரூ. 44 மட்டுமே) இந்த அடையாள அட்டை கீழ் கண்ட இடங்களுக்கு இலவச அனுமதி தருகிறது:
1. தாராபுரம் அஞ்சு முக்கு பார்
2. அதுக்கு முன்னாடி இருக்கிற முறுக்குக் கடை
3. குடை ரிப்பேர் கோவிந்தன் கடை
4. தீவிர சிகிச்சைப் பிரிவு (பெருநகரங்களில் மட்டும்)
5. எலும்புக்கூடு படம் போட்ட டிரான்ஸ்பார்மர்கள் (கம்பிவலை இல்லாதவைகள் மட்டும்)
6. ராவுத்தரின் வெள்ளிக் கிழமை மந்திரிப்பு கூட்டங்கள்
கவிஞர் ஐடி கார்டின் அதர் பெனிபிட்ஸ்:
1. அடுத்த கவி பட்டறைகளுக்கான இலவச அழைப்பு
2. புத்தக வெளியீட்டின் போது இலவச விசில் மற்றும் பொழிப்புரை
3. பதிப்பகம் அனுமதித்தால் (அல்லது கிடைத்தால்) புத்தகத்திற்கு முன்னுரை
4. எந்த தண்ணியிலயும் நனையாத அடையாள அட்டை
5. அட! நம்மக்கிட்டயும் ஒரு ஐடி கார்ட் இருக்கேங்கிற ஆத்ம திருப்தி
அனைவரும் வருக! கவிஞராய் திரும்புக!!
முக்கியமான பின் குறிப்பு:
இது முழுக்க முழுக்க காமெடியாகப் படிக்க பட வேண்டியது என்று அகில பாரத மைனர் குஞ்சுகள் மகாசபை குலை நடுங்க வேண்டிக் கொள்கிறது.