Wednesday, March 11, 2015

சிவாவை அறிந்து கொள்ளுதல்


அன்பிற்குரிய நீங்கள் சிவா பற்றி தெரிந்து கொள்ளுதல் முக்கியம் என்று தோன்றியதால் இதை எழுதப் பணித்தவனாகிறேன். காற்று என்பது தென்றல், வாடை, புயல், சூறாவளி என்று பல வடிவங்களில் வரும் போகும் என்று மட்டும் நம்பி இருந்தவனிடம், 'இல்லே ஜெகா.. இப்பெல்லாம் காற்று இன்கம்மிங் கால், அவுட்கோயிங் கால் அப்புறம் குறுஞ்செய்தி சிலசமயம் எம்எம்எஸ் போன்ற வடிவங்களிலும் வ. போகும்' என்று சொன்னவ.... னகரமா இல்லை ரகரமா என்று புரியவில்லை. வயதில் என்னை விட 10 கூடுதலாகவும் மனதில் 15 பருவங்கள் குறைவாகவும் இருப்பவரை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை.

சிவா தான் பிறந்து வளர்ந்த ஊரில் மிகு குடிபோதையில் மிதந்து சென்றாலும் யாருக்கும் எந்த வித்யாசமும் தெரியாது. ஏனென்றால் மிக நிதானந்தில் சாதாரணமாய் நடந்த வரும் சிவாவே ஊர்க்காரர்களுக்கு மப்பும் மந்தாரமுமாய் தெரிந்ததே காரணம். இதையொட்டி நீங்கள் சிவாவை ஒரு குடிகாரன் என்று தப்பர்த்தம் புரிந்து கொள்ள வேண்டாம். சிவா எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா ஜனங்களிடமும் ஒரே மாதிரியாக கால் பின்னப் பின்ன நடந்து திரிகிறான்.

நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப் போகும் நண்பருக்காக கைக்காசுக் கொடுத்து ரோஜாப் பூ வாங்கி அதை புது நண்பனிடம் 'பாஸ்.. உங்களப் பத்தி ஜெகா நிறைய சொல்லியிருக்கான்..' என்று பணிந்து மலர் கொடுத்து அறிமுகமாகிக் கொள்வான். நண்பர் கையில் பூவோடு நம்மை திகிலாய் பார்ப்பார்.

இரைச்சலான பேருந்துப் பயணத்தில் ஒருமுறை, யப்பா, பின்சீட்டு பெண்கள் பேச்சு எவ்வளவு தாள நயத்தோடு இருக்கு, கேட்டியா? நிச்சயம் தஞ்சாவூர்காரர்கள்தான் என்றான்.

ஒருமுறை இவன் கதையைப் படித்துப் பாராட்டி கடிதம் எழுதிய ஒருவரை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தோம். தமிழ் வாசக மனங்களின் போக்குக்கு அவரும் விதிவிலக்கல்ல.. தினசரி வாராந்தரிகளுக்கு வாசக கடிதம் எழுதுபவர்.. பிரசுரமானதை வெட்டி ஒட்டி பாதுகாத்துக் கொள்ளுமம் வாசகர் அவர். காபி டீ உபசரிப்பெல்லாம் முடிந்த பின், விடையனுப்பும் போது காசு ஏதும் வேண்டுமா என்று கேட்டார். திக்கித்து சார் அப்படி எதுவும் வேண்டாம்.. உங்கள் வாசக கடிதத்துக்காகதான் பார்க்க வந்தேன் என்ற எளிய உண்மையை குரல் கம்ம விளக்கி விடைபெற்றான் ஒரு படியேறிய படைப்பாளியாக.

ஆசைக்கடலில் தேடிய முத்து என்று பாடல் முணுமுணுத்தால், ஏன் கடலில் அமுத்துறதிலதும் தேடி அமுத்துற என்பான்!

எழுதும் கதையில் இடையிட்டு நாமாக ஏதாவது திருத்தம் சொன்னால், அட பிரமாதமாயிருக்கேப்பா.. அப்படியே எழுதுவோம் எனும் எளிய படைப்புக் கடவுள்!

செம்புலப் பெயநீராக பழகும் நண்பர் குழாமுக்கு ஏற்ப பேசும் திறனாளி..

எதிர்வரும் பெண்ணை, அவள் கையுளுள்ள நோட்டை, நோட்டின் அட்டையிலுள்ள டெண்டுல்கரை என அனைத்தையும் நொடியில் உள்வாங்கி, சப்தமாக, டெண்டுல்கர்கள் வாழ்க என்பான். அப்பெண் குறுநகைப் பூத்து நகர்வாள் உடன்வரும் நமக்கு எதுவும் புரியாது - சிவா விளக்காமல்.

உலகின் எல்லா கணங்களையும் எல்லா நிறங்களையும் பேதமற காதலிக்கும் பித்தன்.

No comments: