Monday, August 31, 2009

பேச்சிலர் பார்ட்டி!!

பார்ட்டி-1:சாம்பல் தட்டு

பாஸ்கிக்கு கல்யாணம். கிருஷ்ணகிரியில். வழக்கம் போல ரூம்.. மாப்பிள்ளையின் தம்பியின் கவனிப்பு, பாட்டில்கள், நொறுக்குத் தீனிகள்.. இரவு முழுவதும் பேச்சு.. என்று சுகமாய் கழிந்தது. அப்புறம் ஒவ்வொருத்தனும்.. கன ஜோராக ஏத்தல், இழுத்தல், பினாத்தல், பேத்தல், அனத்தல் என்று போதையின் ஒவ்வொரு படிநிலையிலும் நின்று கதவைத் தட்ட ஆரம்பித்தோம்.

நான் ஹாப் பாட்டில் ஸிக்னேச்சர் + மிக்சர் + பரோட்டா என்று என் சிற்றுரையை முடித்துக் கொண்டேன். அமைதியாக தூங்கி எழுந்து காலையில் கல்யாணத்துக்கு கூட(!?) போனோம். பேசிக்கொண்டிருக்கும் போது பிரகாஷிடம்,

"நல்லவேளை நைட் சரக்கடிச்சிட்டு யாரும் ஹாப்-பாயில் போடலே" என்றேன்.
அதுக்கு பிரகாஷ் சொன்னான்..

"ஆமா! ஆனா நீதான் சாப்பிடும்போது, பரோட்டா பதிலா.. பக்கத்தில் இருந்த ஆஷ்ட்ரேயில் கைவைச்சிட்ட; விட்டிருந்தா வாயில போட்டிருப்பே!"
பார்ட்டி-2: கர்த்தரின் தீர்ப்பு

காலேஜ் ஜுனியர் ஸ்டாலினுக்கு கல்யாணம்! ஊட்டியில இருக்கிற ஒரு கிறித்துவ சபையில்.

காலையில் சர்ச்சில் தம்பதியினர் ஆஜர். சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள், பந்துக்கள் அனைவரும் திரண்டிருக்க.. சர்ச் பாதிரியார்.. சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கிறார். சர்ச்சின் கடைசி வரிசையில் ஸ்டாலினின் தோழர்கள். எல்லோரும் விழி பிதுங்கும் அளவுக்கு டைட். அதில் ஒருவன்.. உட்கார முடியாமல் கண்கள் சொருக சரிய ஆரம்பித்திருக்கிறான். மப்பு வாசனை வேறு கர்த்தர் வரைக்கும் போயிருக்கிறது. பொறுமையிழந்த பாதிரியார்.. மைக்கில் சொன்னது:

"அந்த சிறுவர்களைத் திருச்சபையிலிருந்து வெளியேற்றுங்கள்"

பார்ட்டி-3: ஒரு 'சந்தோஷ' சம்பவம்!

மும்பைக்கு வேலையாக சென்ற ஜே செந்தில், நண்பன் சந்தோஷை பார்த்திருக்கிறான். வாடா மாப்ளே.. நல்ல பப்புக்கு போவோம் என்று அழைத்திருக்கிறான். சந்தோஷ் கூடவே அவனின்​மும்பை நண்பனையும் அழைத்தான். அந்த மும்பைக்காரன்தான் ஸ்பான்சராம். ஒரு ரவுண்ட் முடிந்ததும். ஸ்பான்ஸரர் டிஸ்கொதேக்கு சென்று ஆ(ட்)ட ஆரம்பித்து விட்டாராம். சந்தோஷ் சொன்னானாம்..

"செந்திலு, நாமளும் போயி டான்ஸ் ஆடிட்டு வரலாம்டா"

"என்னடா இது புதுசா? நாம எப்ப ஆடியிருக்கோம்?"

"நீ வேற.. ஸ்பான்ஸர் பண்றவனுக்கு டான்ஸ் ஆடலேன்னா கோபம் வந்துரும்... அப்புறம் ரெண்டாவது ரவுண்ட் கிடைக்காது.. இப்ப நாம போயி ஆடுனாதான் சைட்டிஷ்ஷே ஆர்டர் பண்ணுவான்"

"அடப்பாவி"

"விடறா.. நமக்கு அடிக்கிறதில ஆசை.. அவனுக்கு ஆடறதில்ல ஆசை"

பார்ட்டி-4: கல்யாணப் பரிசு!

எனக்கு கல்யாணம் நிச்சயமானது. நண்பர்களுக்குப் பத்திரிக்கை கொடுக்க சென்னை சென்றிருந்தேன். நண்பர்கள் எங்களுக்கு இப்பவே ஒரு பேச்சிலர் 'ஓப்பனிங்' பார்ட்டி.. அப்புறம் மாரேஜ் முந்தின ராத்திரி தனியா ஒரு 'பினிஷிங்' பார்ட்டி என்று கேட்டிருந்தார்கள்.

சரியென்று.. அங்கே 10 நண்பர்களுக்கு ஓப்பனிங் ஆயிற்று. ஒவ்வொருத்தனும் கொலை மப்பு..! வேலுவும் பாண்டியும் தனியா ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணிக்​கொண்டிருந்தார்கள்.அப்புறம் வேலு என்னிடம் சொன்னான்.

"மச்சி, கல்யாணத்து உனக்கு டிவியைக் கிப்டா கொழுத்திரலாம்னு இழுக்கம்டா"

எனக்கு தனியாக ஒரு கட்டிங் சாப்பிட்ட மாதிரி இருந்தாலும், பவ்யமாக,

"அதெல்லாம் எதுக்குடா, நீங்க வந்தாலே போதும்டா"

பாண்டி குறுக்கிட்டு, "சேசே.. என்ன ஜெகனு அப்படி சொழ்ழிட்டே? டிவிதான் வாங்கப் போழோம்.. என்ன பிழாண்டு வேழும்னு மட்டும் சொல்லு? எழ்ஜி...? சாம்சங்..?"

வேலு, "பாண்டியா, அதெல்லாம் நழ்ழ பிழாண்டா நாம பாழ்த்து வாங்கிக்கலாம்... " என்று, என்னிடம் திரும்பி,

"மச்சி, நீ வேற யார்கிட்டயும் டிவி கிப்ட் வாங்கிடாதே.. இப்பவே சொழ்ழிரு.. பசங்க அழ்ரெடி டிவி வாழ்ங்கித் த(ர)ழதா இருக்குன்னு"

நண்பர்களை வியந்தவாறே ஊர் திரும்பிவிட்டேன். ஈரோட்டில் கல்யாணம்.. நண்பர்களும் வந்திருந்தார்கள். இரண்டு அறை புக் செய்திருந்தேன்.. பத்தாது என்று மூன்றாவதாக ஒரு அறையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்... சரக்குக்கு மட்டும் பத்தாயிரம் அன்றைய இரவிலேயே செலவாகியிருந்தது. பக்கத்திலிருந்த அம்மணி பாத்து வியப்பது தெரிந்தது.. நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

காலையில் முகூர்த்தம் எல்லாம் முடிந்து, சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்கள் நண்பர் பெருமக்கள்! டிவியை சென்னையிலிருந்தே பேக் பண்ணி எடுத்துட்டு வராங்களா, இல்லை இங்க ஈரோட்டில வாங்கிட்டு வராங்களான்னு ஒரே பரபரப்பா இருந்தது.

முதலில் அஞ்சு பேரு வந்து கைகுலுக்கினாங்க! போட்டோ எடுத்துக்கிட்டாங்க! வீடியோவுக்கும் அசையாம நின்னு போஸ் கொடுத்திட்டு, கிளம்பறோம்டா மச்சின்னு கெளம்பிட்டாங்க.. சரி அடுத்த செட் பசங்களாவது பெருசா எதாச்சும் தூக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா.. அவிங்களும் அதே கைகுலுக்கல், போஸ், டாடா பைபை!!! கடைசியா ஒரு குரூப் வந்தது.. அவங்க கையிலயும் ஒண்ணையும் காணோம்... ஒரு சின்ன கிப்ட் பாக்ஸ்.. ​கவர்.. கர்ச்சீப் எதுவும் இல்லை.. bursting the bubbleன்னா என்ன்னு அப்பதான் புரிஞ்சுது!
வாய்விட்டே கேட்டுட்டேன் செந்தில்ராஜிடம்,

"டே கோழி! ஏதோ டிவி கொடுக்கப் போறதா பசங்க சொன்னாங்க?"

அதுக்கு கூலா அவன் சொன்னது.. இப்ப கூட எந்த கிப்டைப் பாத்தாலும் ஞாபகத்து வந்து நிக்குது!!

"மச்சி, தங்கியிருந்த லாட்ஜ்ல கூட ஒரு டிவி பாத்தோம்.. நல்லாதான் இருந்தது! பசங்க இதையே எடுத்திட்டுப் போயி ஜெகனுக்கு கொடுத்திடலாம்னு சொன்னாங்க.. பட், அந்த லாட்ஜ்ல ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. சரி வரட்டுமா?"

இப்படி என் கல்யாணத்து சிறப்பா மங்களம் பாடுனது இந்த நண்பர்கள்தான்!

பார்ட்டி-5 - நம்ம ஊர்ல பார்ட்டி!!

சந்தோஷ் அப்ப எனக்கு சின்சியரான சிஷ்யன்.. அவன் ஊர் தர்மபுரி பக்கம் இருந்த பெரியாம்பட்டி! ஒருநாள் கிளாஸ் ரூமிலேயே வயிற்று வலியால் சுருண்டான். ஊர் திருவிழா என்று கொஞ்சம் ஓவராக சாப்பிட்டுவிட்டானாம்.

ரொம்ப நாள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது, நண்பன் கைலாஷ், சந்தோஷ் ஊர் திருவிழா எப்படி கொண்டாடுகிறார்கள் என்று விளக்கியது இப்படி:

"மச்சி,சந்தோஷ் ஊர்ல பெரிய்ய்ய திருவிழாவும்.. மொத்த ஊரும் திரண்டு வந்து, ஒரு ஃபுல்லு, ஒரு ஹாப்பு, ஒரு குவாட்டரு அப்புறம் ஒரு கட்டிங்ன்னு வாங்கி அவங்க ஊர் கிணற்றில் ஊத்திட்டாங்களாம்.. ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தரும்.. மொண்டு மொண்டு குடிக்கிறாங்களாம்.. எல்லார்த்துக்கும் செம மப்பாம்... சந்தோஷ் மட்டும் பாட்டில்ல மிச்சம் இருக்கிற ஒரே ஒரு சொட்டு சரக்கை அப்படியே ராவா ஊத்திட்டானாம்... அதுதான் பயங்கர மப்பாகி.. வயிறே வலிக்க ஆரம்பிச்சிருச்சாம்..!"
* * *

Saturday, August 29, 2009

எலக்கியவாதியின் பழைய டைரி


பற​வைக் கூடுகளின் எளி​மையாய் ​நெய்யப்பட்டிக்கிறது இவனது ஆன்மா.

- யூமா. வாசுகி, உயிர்த்திருத்தல் சிறுக​தையிலிருந்து..


அடுத்தடுத்துச் ​சொல்வ​தைவிட, இ​டை​வெளிக்கு அப்புறம் ​சொல்லப்படுப​வை நன்றாகத்தான் இருக்கின்றன. ​சொல்​லை இடை​வெளியும், இ​டை​வெளி​யை ​சொல்லும் கூழங்கல்லாய் உருட்டி ஈரமண்ணில் ஒதுக்கும்​போது ஆறும் அழகு. க​ரையும் அழகு.

- வண்ணதாசன், உள்புறம் வழியும் துளிகள் சிறுக​தையிலிருந்து..


பாஸ்கர், உன் ம​னைவி​யை நீ பார்க்க உனக்குச் ​சொல்லி ​கொடுப்பதன் அதிகப்பிரசங்கித்தனம் எனக்குத் ​தெரியாததல்ல. அதற்குக் கண் ​வேண்டும். ஆனால் கண்ணுக்கு உனக்குப் ​பொழுதில்​லை.

- லாசரா, எதிர்ப்பு சிறுக​தையிலிருந்து..


விரியும் உதடுகள் வழிநடத்திச் ​செல்லும் முடிவில் - ​செல்லரித்த இ​லைகள் உதிர்ந்து புதுக்குருத்​தென ​தேடிவருபவனுக்காகக் காத்திருப்பாள் புவனா.

- யூமா. வாசுகி, வான்நதி சிறுக​தையிலிருந்து..


* * *

கவிதைகள் (ஜெகநாதன்!)

குளத்துள் எறியும்

எல்லாக் கற்களிலும்

விரிஅ​லைகளாய் க​ரை ஒதுங்குகிறது

கல்​லை எறிந்த

கவ​லை!


*

.... தாகங் தீர்த்த

​பேராற்றின் ​செங்க​ரை​யை

நாணல் கடக்கிறது

சுவடுக​ளை மட்டும் விடுத்து


* * *

புத்தகங்கள்...

விழி. பா. இதய​வேந்தன்

​சேஷையா ரவி- அறிவின் க​ரை​யை மீறி

சா. கந்தசாமி - 20ம் நூற்றாண்டின் சிறுக​தைகள்

யுவான் ருல்​போ - எரியும் சம​வெளி

(.. கனவு காண்ப​தை நிறுத்து - அதுதான் என் ​பெயர்)

​ஜே ​ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

நீல பத்மநாபன் - த​லைமு​றைகள்

​கோடாவிற்காக காத்திருத்தல் - சாமுவேல் பெக்கட்

ஹால (XALA) - ​செம்பான் ஒஸ்மான்

நகரச்சுவர்கள் - எஸ். ​வைத்தீஸ்வரன்

வழித்து​ணைகள் - சுப்ரபாரதிமணியன்

ஆயிரங்கால் மண்டபம் - ​ஜெய​மோகன்

கண்மணி குண​சேகரன் - அஞ்ச​லை

ஆந்​ரே ழீத், பி​ரை​மோ ​​​லெவி, ​ஜேம்ஸ் ஜாய்ஸ்

பாதசாரி (மீனுக்குள் கடல்)

எஸ். ராமகிருஷ்ணன் - உபபாண்டவம்..............



* * *

மியூஸிக்...

... இன்பம் சிலநாள், துன்பம் சிலநாள் என்றவர் யார் ​தோழி..

இன்பம் கனவில், துன்பம் எதிரில் காண்பது ஏன் ​தோழி (பாக்யலட்சுமி)

Michael Bolton - Go the Distance

ABBA - The winter takes its all

LAS KETCHUP

Bombay Vikings

Ellie Cambell - Don't worry you come back

Kylie Minogue........

மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்..

மறுநாள் எழுந்து பார்ப்போம்....

இரவே இரவே விடியாதே, இன்பத்தின் கதையை முடிக்காதே

சேவல் குரலே கூவாதே, சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே.....

(அன்னை இல்லம் - சிவாஜி, ​தேவிகா)

* * *

தத்துவம்

Plants remains always small under a big tree


Women can smile as they do

But they can weep as the will


* * *

தாராபுரம் ​சென்றிருந்த​போது என் ப​ழைய ​டைரி ஒன்று கி​டைத்தது. 2003-2004 ஆண்டுகளுக்கான இலக்கிய குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம் (அட்ரா சக்​கை!) நி​றைய கவி​தைகள், படித்த புத்தகங்களிலிருந்து excerpts, இ​சை, படிக்கப் ​போற புத்தகங்களின் பட்டியல், ம​ன​தை கவர்ந்த சம்பவக்குறிப்புகள், ​கொஞ்சம் ஓவியங்கள் ​என ப​ழைய கிறுக்கல்களில் ​தொகுப்பு!

Tuesday, August 25, 2009

25வது காலடி

அன்பார்ந்த பதிவர்களே, வாசகக்கண்மணிகளே, காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக்கண்மணிகளே!

இது நம் காலடியின் 25-வது பதிவு..!!

இது பதிவுலகத்துக்கு நல்லதில்லை, என்ட் ஆப் டேஸ், ஆர்மகெடான், டல்கோலக்ஸ், விதி வலியது, ப்ச்.., என்று நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு என் நன்றி!


நான் இருபத்தைந்து இடுகைகள் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், அதற்கும் பின்னூஸ் வந்திருக்கின்றன என்பது ஆதுரமாகவும் இருக்கிறது.

பாசமோடு தம்பி, மாப்ள, மாம்ஸ், நண்பா என்று அழைக்கிற முகம் தெரியா பாசக்காரர்களைப் பார்த்தது இல்லை. சங்கா அண்ணன், பெரியண்ணன் ​சென்ஷி, ஸ்டார்ஜன் மாம்ஸ், அக்பர் மாப்ள, மாப்ள ஏனாஓனா, தம்பி ​சேலம் சண்முகம் இப்படி தடாலடியாக பாசமாக அழைப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!

ஆனாலும் இந்த குறுகிய காலத்திலேயே இவர்கள் அன்பைச் சம்பாதித்தது கண்டு இறுமாப்பு அடைகிறேன்!

இடுகைகளின் நீளத்தை விட என் பின்னூஸ்களின் நீளம் அதிகம். அந்த பின்னூஸ்களையும் (பொறுமையாக) படித்துவிட்டு பாராட்டிய அன்பு நெஞ்சகளுக்கு நன்றி! முக்கியமாக அனுஜன்யா, பீர் Peer, ஈரோடு நாகராஜ், வால்பையன் இவர்களுக்கு நன்றிகள்!

முதலில் பதிவு எழுத வரும்போது தீவிரமாக சிறுகதை, கட்டுரை என்றுதான் வந்தேன். அப்புறம்.. ​மொக்கைகள்தான் நம்மை அடையாளப்படுத்தும் என்று.. எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்...!!!

இந்ந மாதிரி என்னை வழிப்படுத்தியது கோவி. கண்ணனின் புதிய பதிவர்களுக்கு சில யோசனைகள் என்ற இடுகைதான். அதற்கு GK-க்கு என் நன்றிகள்!

என்னோட கலை ஆர்வம் (ப்ளீஸ்..) ஓவியத்தில் தொடங்கியது! அப்புறம் மெல்ல மெல்ல கவிதை, கதைன்னு வளர ஆரம்பிச்சிருச்சு! தனியா ரூமில அடைஞ்சு டயரி டயரியா.. கவிதை, டயரியாவே ஆகியிருக்கு!

கவிதை என்றதும் மனங்கவர்ந்த நேசமித்ரன், நந்தா நினைவுக்கு வரும் முன் அவர்கள் கவிதைகள் நினைவுக்கு வந்துவிடுகின்றன.

அப்பா குமுதம், மாலைமதி, முத்தாரம், கல்கண்டு, ஆவி, ஜுவி, நக்கீரன் இப்படி குவியலா வாங்கித் தள்ளுபவர். அப்பா இதுவரைக்கும் குமுதம் ஒரு இதழ் கூட வாங்க மிஸ் பண்ணுனதேயில்லை! நான் 9வது படிச்சிட்டிருக்கும் போது நீல. பத்மனாபனின் தேரோடும் வீதியில்.. கொடுத்து படிச்சிப் பாருன்னாரு! அவர் அதைப் படிக்கலேன்னு நினைக்கிறேன். ஒரே நாள்ல முழுசும் படிச்சிட்டு, நல்லாயிருக்கு இன்னொரு தரம் வாசிக்கணும் என்று மறுவாசிப்பும் செய்தேன். அப்புறம் வீட்டில் ரஷ்ய எழுத்தாளர் + சினிமா இயக்குநர் வசீலி ஷுக்சீனின் வாழ விருப்பம் சிறுகதைகள் தொகுப்பு இருக்கும். அது என்னோட பேவரிட். குறைஞ்சது 100 தடவை படிச்சிருப்பேன். இந்த மாதிரியான வாசிப்புகள் கொடுத்த சுவையில் லயிச்சு, இந்தியா டுடேவில் (அப்பா கொஞ்ச காலம் அதுக்கும் சந்தாதாராகியிருந்தார்) வந்த சிறுகதைகள், ஓவியங்களை ரசிக்க ஆரம்பித்தேன். அது புது மாதிரியான அனுபவமாக இருந்தது.

அதற்கப்புறம் ரசனையே வேறு மாதிரி ஆகிவிட்டதாக உணர்ந்தேன்.

கன்னிவாடியில் இருந்த போது அறிமுகமான க.சீ.சிவக்குமார் அண்ணன். அவர் அறிமுகப்படுத்திய இலக்கியங்கள், இலக்கியவாதிகள் (என். ஸ்ரீராம், யூமா. வாசுகி, சுப்ரபாரதிமணியன், பாஸ்கர் சக்தி, குன்னாங்குர் செல்வம், ரமேஷ் வைத்யா, இன்னும் குடியில் பழகி பெயர் தொலைந்த நண்பர்கள்..) என ஒரு உற்சாக துணையாயிருந்தார்.

இப்ப இந்த மாதிரி பதிவு எழுதுவது ஒரு இளைப்பாறுதலாக உணர்கிறேன்.

ஆனால் எதிலும் அபரிமிதமாக உள்ளிறங்கி, பின் மூச்சுத்திணறி வெளியே வருவதாக இருக்கிறது என் பிழைப்பு. இதே போல் இங்கும், பதிவுலகத்தில் அபரிமிதமாய் இறங்கி விடுவோனோ என்று பயமாயிருக்கிறது. ஏனென்றால், இதன் வசீகரம் அப்படி!

எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பதிவு எழுத முடிகிறது. தீவிரமான பதிவுகளில் பின்னூஸ் வாயிலாக பங்கேற்க முடிகிறது. அதி முக்கியமாக வாய்விட்டு சிரிக்க முடிகிறது!

Al though the ceiling strikes my forehead, I could fly between floor to ceiling!

பதிவுலகத்தில் நான் அறிந்த வலைபதிவுகள் மிகவும் சொற்பம். அதில் என்னைக் கவர்ந்த சிலதை பட்டியலிடுவது என் நுனிபுல் அறிவை மட்டும் காட்டும். இருந்தும் என் நன்றியை அவர்களுக்கு வேறெப்படி உணர்த்துவேன்.
கவிதை, சிறுகதை, மற்றும் ப்ரியத்தால் என்னை வசீகரிக்கும் பா.ராஜாராம், தீவிரமான சிந்தனைகளைக் காட்டும் சந்ரு, இரும்புத்திரை அரவிந்தன், மதுரை டக்ளஸ், தல SUREஷ், டெக்னாலஜி புலி டவுசர் பாண்டி, சிந்தனி - தங்கமணி பிரபு, சமரன், குடுகுடுப்பை, நான் ஆதவன், வினோத்கெளதம், முரளிகுமார் பத்மநாபன், RAMYA, எம்.பி.உதயசூரியன், வண்ணத்துபூச்சியார், கடைக்குட்டி, கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், ப்ரபஞ்சப்ரியன், ப்ரியமுடன் வசந்த், சிக்கன இடுகை கவி டோமி, ஜவஹர், .. இன்னும் நிறைய பேர்!
அனைவருக்கும் நன்றிகள்!

Never I forget you - it could be merely the names sometimes!

Tuesday, August 18, 2009

மனதில் அலறும் பாடல்

தலைப்பைப் பாத்துட்டு நீங்க அலறாதீங்க. முக்கியமா - இது கவி-இடுகை இல்லை. சொன்னதும் சிரிப்பைப் பாரு - சின்னப் புள்ளயாட்டம்! அப்புறம் என்னடா மனசு, அலறல், பாட்டுன்னு பிட்டு போடறேன்னு கேக்கறீங்களா??
சொல்றேன். அதுக்கு, ஒரு மூணு 'அதாவது' போட அனுமதி கொடுங்க..
அதாவது, திடீரென்று ஒரு பாட்டின் ஏதாவது வரி நினைவில் வந்து முதல் வரி என்னடான்னு மனசு கட்டான பல்லி வால் கணக்கா துள்ளுமில்ல..
அதாவது, ஒரு பாட்டோட மியூஜிக்கி மட்டும் ஞாபகத்து வந்து பாட்டு வரி நினைப்பில்லாம, நைட்டு பூரா தூங்காம தலையணையை கடிச்சுக்கிட்டு இருப்போம்ல...
அதாவது, இனி தாங்க முடியாதுடா சாமி, எவனுக்கு எஸ்எம்எஸ் போடலாம், யாருக்கு 'மிஸ்டு-கால்' போடலாம்னு மனசு கம்பத்தைத் தேடற நாய் கணக்கா திரியும்ல....
அதாவது.. ஓ! ஸாரி.. கோட்டா முடிஞ்சி போச்சில்ல? (இதுதான் நம்மகிட்ட இருக்கிற ப்ராப்ளம்-ங்ணா!) சரி, மேட்டருக்கு வாடா குவாட்டர் மண்டையான்னு கேக்காதவங்க கூட நான் டூ..!
சஸ்பென்ஸ் போதும்.. சொல்லிறேன் (ரெகுலரா.. திருமதி செல்வம் சீரியல் பாக்கிறதோட எபெக்ட்!)
பெங்களூரு-டு-ஈரோடு, பஸ்ல போகும்​போது கிருஷ்ணகிரிக்கு இத்துணூண்டு முந்துனாப்ல ஒரு ஸ்டாப் போட்டுட்டு.. டிரைவர் மாமா இடுப்பை ஆட்டி ஆட்டி பேண்டை மேல இழுத்து உட்டுகிட்டு இறங்கி போயிடுவாரு. அது ஒரு ஓட்டல், இளநி கடை, பீடிக்கடை, டீக்கடை, சாக்கடை, போண்டா கடை எல்லாம் அடங்கிய மைதானம்.
நாமளும் இறங்கி மோப்பம் பிடிச்சிக்கிட்டே போனோம்னா ஒண்ணுக்கு அடிக்கிற இடம் வந்துரும் (ஒண்ணுக்கும் வந்துரும்ல!) ஓப்பன்ல சர்ன்னு அடிச்சிட்டு, சிர்ன்னு சிப்பைப் போட்டுட்டு (இல்ல தளதளன்னு வேட்டிய ஆட்டிக்கிட்டு) வந்துடலாம். லேடீஸ்க்கு கட்டண கழிப்பிட வசதி. வண்டி பத்து நிமிஷம் நிக்கும்.. டீ, காபி, டிபன் சாப்பிடவறங்க எல்லாரும் (மரியாதையா) இறங்குங்கன்னு ஒருத்தர் மப்புல இருக்கிற போலீஸ் மாதிரி ஒவ்வொரு வண்டியா தட்டி அலறிட்டிருப்பாரு..
நிறைய வண்டிகள் அந்த இடத்தில பார்க்கலாம். நல்ல ப்பிசினெஸ்ஸு!
அம்மா சொன்னதால நான் வெளிய டீ, காப்பித்தண்ணி குடிக்கிறதில்லைன்னு உங்களுக்கே (!?) நல்லாத் தெரியும். அதனால, கம்முனு ஒரு கிங்ஸ் வாங்கி பத்த வச்சுக்கிட்டு, நாம இறங்கி வந்த பஸ்ஸை​ஒரு கண்ணுலயும், வண்டியிலிருந்து இறங்கி வர்ற பசுகளை இன்னொரு கண்ணுலயும் (பராக்கு) பாத்துக்கிட்டு நிப்பேன்.
அப்போ மியுசிக்கி கடை புண்ணியத்துல காதுல விழுந்ததுதான்.. ஏக்சுவலா ​பொடனியில விழுந்ததுதான்.. இந்த பாட்டு...
"ஓல்ட் மங்கை குடிச்சிட்டான் பொண்டாட்டிய அடிச்சிட்டான், ராத்திரிக்கு ஆயிப்போச்சு சண்டை..."
அப்படியே சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா மெட்டுல வாய்விட்டு பாடிப்பாருங்க தீஅதீ ரசிகர்களே!! சூப்பரா இல்லை? இந்த பாட்டு வரியோட ஒவ்வொரு வரியையும் உன்னிப்பா கவனிங்க. ஏகப்பட்ட விஷயம் சிக்கும்..
எக்குத்தப்பா சிந்திச்சு, நீங்க பின்நவீனத்துவத்தில போயி முட்டி நிக்கவோ, இல்லை டாஸ்மாக்ல ஓல்ட் மங்க் கேட்டு நிக்கவோ கூட நேரலாம்!! (அவ்வ்..)
இந்த ரேஞ்சுக்கு பாட்டு எழுதுன அந்தப் புலவன் யாரு? அவன்(ர்)(ள்) எந்தளவுக்கு சமுதாயத்தை உத்து, உத்து கவனிச்சிருக்கான்(ர்)(ள்)? அதுவும் அந்த ஆண்குரல் நல்ல நாட்டுப்புறக் குரல். நல்ல ஏழு கட்டை, எட்டு கட்டையில அலறலா பாடியிருப்பாரு! சுருக்கமா, சொல்லணும்னா செம நாட்டுக்கட்டைக் குரல்!
அந்த​பொட்டல்ல இறங்கிய, இறங்காத ஒவ்வொரு பயணியும் இந்த 'ஓல்ட் மங்கை குடிச்சிட்டான் பொண்டாட்டிய அடிச்சிட்டானுக்கு' காதை திருப்பியே ஆகணும்! சிலர் கேசட் கூட வாங்கியிருக்கலாம். அப்படியிருந்தா, அந்த பாட்டோட முழு வரிகளையும் தயவுசெஞ்சு டைப்பித் தாங்களேன்! தமிழ் இசையின், நாட்டுப்பாடல் மரபின், ஒரு நிலத்தின் இசையை, ஒரு முக்கியமான பதிவை நான் இழக்க விரும்பலே!
ப்ளீஸ், தெரிஞ்சா சொல்லுங்க.
பி.ந.கு:
முக்கியமா, நம்ம 'காலடி'யின் 25 பதிவைக் கொண்டாடி சிறப்பிக்கும் விழாவுக்கு வரவேற்பு பாடலாக இந்த 'ஓல்ட் மங்க் குடி - பொண்டாட்டிய அடி' ஒலிப்பரப்பலாம்னு காலடியின் காரிய கமிட்டி, கரகாட்டக் குழுவுடன் டிஸ்கிஸ் பண்ணி வருகிறது.

Friday, August 14, 2009

வாய்க்கொழுப்பு - A Health Check!

உங்கள் ஆரோக்கியம் மேல் கவனம் எடுத்துக்கிட்டு போட்ட பதிவு இது. எல்லா கேள்விக்கும் வள் வள்ன்னு (எவ்வளவு நாளைக்கு தான் டாண் டாண்ணு பதில் சொல்றது) பதில் சொல்லிட்டு, நெஞ்சை நீவிக் கொண்டே போய் தொங்கவும்.. ச்சீ... தூங்கவும்!
அ) நீங்கள் இந்த உலகத்திலேயே மிகவும் வெறுக்கும் நபர்
1. மானேஜர்
2. மனைவி
3. மாமியார்
4. மாமியார் மட்டும்
ஆ) மனைவி கையில் காபி சாப்பிடுவது..
1. சயனைட்
2. வாய் கொப்பளிக்கலாம்
3. மனைவிக்கே கொடுக்கலாம்
4. மாமியாருக்கு கொடுக்கலாம்

இ) டிவி என்பது யாதெனில்

1. சீரியல் காட்டும் செவ்வகம்
2. சொன்ன ​பேச்சைக் கேட்கும் ஒரே ஜந்து
3. இடத்தை அடைத்துக் கொள்ளும் பிசாசு
4. கீ​போர்ட் இல்லாத கம்ப்யூட்டர்!
ஈ) ​நீங்கள் மேக்கப்புக்கு எடுத்துக் கொள்ளும் நேரம்
1. 0.005 மில்லி செகண்ட்ஸ்
2. பான்ட்ஸ் பவுடர்
3. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ​பேர் & லவ்லி
4. வழுக்கைக்கு(ம் சேர்த்தி) பான்ட்ஸ் பவுடர்
உ) நீங்கள் யார்?
1. மனைவியின் புருஷன்
2. மாடு
3. மாடு மாதிரி
4. மாடேதான்
ஊ) தண்ணியடிக்கும் பழக்கம்..?
1. உண்டு
2. 24 X 7
3. எப்போதாவது வாரத்துக்கு 7 நாள் (அல்லது) பாயிண்ட் நிர். 2
4. மனைவி அனுமதிக்காத​போது மட்டும் (அல்லது) பாயிண்ட் நிர். 3
எ) நல்லவன் என்பவன்?
1. சத்தியமா நானில்லை
2. நான் அவனில்லை
3. பப்ளிக் டாய்லட்டில் ப்ளஷ் செய்பவன்
4. கல்யாணம் ஆகி(யும்) பிட்டு படம் பார்க்காதவன்
ஏ) ​கெட்டவன் என்பவன்?
1. மாமியார் சொல் பேச்சு கேட்பவன்
2. மாமியார் சொன்னதை மட்டும் கேட்பவன்
3. மாமியார் சொல்லாததையும் கேட்பவன்
4. மாமியாருக்கு மிஸ்டு கால் கொடுப்பவன்
ஐ) நான் என்பது?
1. நான் மட்டும்
2. நான் + மனைவி
3. மனைவி + மனைவி
4. கண்ட இடுகையையும் கண் சிமிட்டாம படிப்பவன்
ஒ) சுதந்திரம் என்பது என்ன​வென்றால்...?

1. வாய மூடு
2. ப்ளாக் எழுதுவது
3. பிளாக் எழுதியதை படிங்க என்று மற்றவரை துன்புறுத்துவது
4. இந்த இடுகைக்கு கூட பின்னூஸ் போடுவது
ஓ) இந்திய அரசியலில் பிடிக்காத விஷயம்
1. இந்திய அரசியல்
2. வாக்கு கொடுத்த மாதிரி ரூ1000 / ஓட்டு பட்டுவாடா செய்யாதது
3. டூமீல்களுக்கு மத்தியிலும் தைரியமாக சபை கூட்டுவது
4. ஓட்டு கேட்க வரும் நடிகைகள் குத்தாட்டம் போடாதது
ஒள) நீங்க சொன்ன பயங்கர பொய்(கள்)?
1. எனக்கு இந்த பொண்ண (ரொம்ப) பிடிச்சிருக்கு
2. சத்தியமா இதுக்கு முன்னாடி யாரையும் லவ் பண்ணுனதே இல்லை
3. உங்க அம்மா தங்கமானவங்க
4. காபி நல்லாயிருக்கு (தினசரி)
ஃ) விதி என்பது உங்களைப் பொறுத்தவரையில்..
1. இந்த இடுகையை படிப்பது
2. உனக்கு கூட பின்னூஸ் போடுற நிலையில் இருப்பது
3. இதைப் படிச்சிட்டு விரக்தியா சிரிக்கிறது
4. இவன் அடுத்த இடுகை எப்ப போடுவான்னு ஏங்கறது(!!?)
இந்த பன்னிரெண்டு கேள்விக்கும் உங்க பதில்களை அதன் எண்களுடன் கூட்டி எனக்கு அனுப்பவும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் உங்கள் வாய்க்கொழுப்பின் அளவு கண்டுபிடித்துத் தரப்படும். இது ஒரு இலவச சேவை! பணம் எதுவும் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது!

Wednesday, August 12, 2009

தலைமுறையாய் தொடரும் கனவு


சேந்தன் திரும்பவும் ஒருமுறை தன் வீட்டைத் திரும்பிப் பார்த்துக் கொண்டான்.உறுதியான நடையாய் வெடுவெடுவென நடக்க ஆரம்பித்தான். தேசிக ஆச்சாரியார் வீடு வந்துவிட்டது.​பொழுது சாயத்​தொடங்கியிருந்தது. அங்கங்கே வீட்டில் தீபங்கள் சிறிய நாணத்துடன் சிணங்கி சுடர் விட ஆரம்பித்து விட்டன.
"பட்டாபி.. பட்டாபி.."

வெளி முற்றத்தில் நின்று குரல் கொடுத்தான். சாளரம் வழியே இரு ஜோடி கண்கள் எட்டி பார்த்துவிட்டு மறைந்தன. பட்டாபி வெளியே வந்தான். அங்கவஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
"சேந்தா.. முடிவு செய்து விட்டாயா?"
சேந்தன் ஏதும் பேசாமல் தலையை மட்டும் அசைத்து விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான். பட்டாபி அவனைப் பின்​தொடரலானான். மெல்லியதாக வானம் தூற ஆரம்பித்திருந்தது.
2

கி.பி. 1890. திருச்சிராப்பள்ளி. காவேரிப் படுகைக்கு முன்பாக இருந்த கூடாரம் செவ்வொளியாய் நின்றது. உள்ளே இரு ஆங்கிலக் குரல்கள்.

"இன்னும் ஒன்று அதே போன்று வேண்டுமாம்"

"தானப்பன் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்"

"தானப்பன்.. இன்னும் ஒன்று நீ முன்பு கொடுத்தது போன்றே வேண்டும்"

"..... மன்னிக்க வேண்டும் துரை"

"ஏன்?"
"அவ்வளவுதான் துரை. வேறு எதுவும் இல்லை. அத்தனையும் எடுத்துக் கொடுத்தாயிற்று. இது காவிரியம்மன் மேல் சத்தியம்"
"இல்லை தானப்பன். இது பெரிய இடத்திலிருந்து வந்த வேண்டுகோள். நாம் செய்தே ஆக​வேண்டும்"

"ஆனால் துரை.... எங்கு தேடினாலும் கிடைக்காது துரை"

"நீ இப்படி சொல்லக்கூடாது. இதைப் பற்றி நன்கு அறிந்தவன் நீ. வேறு எங்கு இருந்தாலும் தேடி கொண்டு வர​வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் கப்பல் லண்டன் புறப்படுகிறது. அதற்குள் வேண்டும். உன்னால் முடியும். இப்போது நீ போகலாம்"

பணிந்து விலகியது உருவம். வெளியில் காவேரி ஆறு சலசலத்துக் கொண்டிருந்தது. ஆற்றில் விழுந்த கூடார செவ்வொளி தூரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

3

மழை வலுக்கத் தொடங்கி விட்டது. உபரியாக மின்னலும் இடியும் கூட சேர்ந்து கொண்டுவிட்டன.

கோயில் வந்துவிட்டிருந்தது. மின்னல் வெட்டில் கருங்கோபுரமாய் பெரியதாய் சிரித்தது ரங்கன் கோயில். ஆளரவமற்ற கோயில். கருவறையில் ரங்கநாதர் அகல் விளக்கு வெளிச்சத்தில் சாய்ந்திந்தார். கருவறை பக்கமாய் ராமானுஜ ஆச்சாரியார் அமர்ந்திருந்தார். இவர்கள் இருவரையும் பார்த்து அமைதியாக சிரித்தார். தலை ஈரம் துடைப்பவர்களாய் வடக்கு மடப்பள்ளி பக்கமாய் ஒதுங்கி விட்டார்கள்.

"பட்டாபி.. குருக்களுக்கு தெரியாமல் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு வா" பட்டாபி அவ்வாறே செய்தான். இருவரும் கோயிலின் வடக்கு மூலை இருள் நோக்கி சிறு வெளிச்சப் புள்ளியாய் நகரலாயினர்.

4

வையாபுரி திரும்ப ஒருமுறை வாசல் வரை வந்துவிட்டு வீட்டுக்குள் திரும்பி நடந்தார்.

"ஏனுங்க.."

என்ன என்பதாய் மனைவி செங்கமலத்தை நோக்கினார்

"உள்ள வந்து கொஞ்சம் உக்காருங்களேன். அவன் வந்துடுவான்"

எதுவும் பேசாதவராய் நாற்காலியில் அமர்ந்தார் வையாபுரி. சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் மூதாதையர்களின் ஓவியங்களையும், புகைப்படங்களையும் உற்று நோக்க ஆரம்பித்தார். தாத்தா, முப்பாட்டானார், அவரது சகோதரர், அவர்களின் பாட்டனார்.. என்று குடும்பத்தில் இருந்து எந்த சுவடும் இல்லாமல் திடீரென்று காணாமல் போய்விட்டவர்கள். யாருக்கும் பிடிபடாத மர்மம் வெவ்வேறு சட்டங்களில் தொங்கிக் கொண்டு இருப்பது போல் இருந்தது வையாபுரிக்கு.

"நேற்று கூட என்னிடம் கனாவைப் பத்தி சொன்னான்"

"என்னங்க?"

"அடிக்கடி வர்ற கனவு. கனவில காணாமல் போன அவன் தாத்தா பேசியதா சொன்னான். அதுதான் பயமாயிருக்கு"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது. சேந்தனுக்கு ஒரு கல்யாணம் ஆயிடுச்சுன்னா எல்லாம் சரியாயிடும்"

"பருவம் பதினாறுதானே என்று யோசித்தேன்..."

"நீங்க கவலைப்படாதீங்க. . மழை விட்டதும் வீடு வந்து சேருவான் பாருங்கள்"

காணாமல் போனவர்கள் சட்டங்களில் வழியே இவர்களை பார்ப்பது போலிருந்து.

5

கோயில் வடமூலையில் இருந்த மடப்பள்ளிக்கு பின்புறமாக விரிந்திருந்த விகாரத்தில் வெளிச்சப்புள்ளி நகர்ந்து கொண்டிருந்தது. தூண்கள் அடர்ந்த மண்டபம்.. எந்த சப்தம் எண்ணிலடங்கா முறை எதிரொலிக்கும் வெளி. பட்டாபி பயந்தான்.

குறிப்பிட்ட தூண் வந்ததும் மடியில் இருந்த ஓலைச்சுவடியை எடுத்து, "பட்டாபி, விளக்கைக் கொண்டு வா..." என்றான் சேந்தன்வெளிச்சத்தில் கொஞ்ச நேரம் ஓலையை உறுத்துவிட்டு, "இங்கிருந்து தெற்காக இரண்டாவது தூண்" என்று நகர்ந்தான் சேந்தன். தூணுக்கு அடியில் அமர்ந்து வெளிச்சத்தில் தரையை உற்று நோக்கியவனாய், அதன் தளத்திலிருந்த கல்லை தட்ட ஆரம்பித்தான். வித்தியாசமான ஒலி கிளம்பி பன்மடங்காய் எதிரொலித்தது.

பரவசமாய் "இந்த கல்தான். இதை பெயர்த்தோமானால் போதும்" என்று இருவருமாய் கல்லை பெயர்க்கலாயினர். சிறிது நேரத்தில் தளத்திலிருந்து கல் அழகாக அகன்று விட்டது. நான்கு சதுரடியில் ஒரு துளை தென்பட்டது. பட்டாபி ஆச்சரியத்தில் ஆவென்றான்.

6

யார் இந்த கனமழை நேரத்தில் இப்படி கதவைத் தட்டுவது என்று குழப்பமாய் வந்து பார்த்தார். குதிரை​சாரட் வண்டியைக் கண்டதும் புரிந்து விட்டது தேசிக ஆச்சாரியாருக்கு. வந்திருப்பது தானப்பர்(ன்) என்று.

"வாரும். வண்டியில் வந்து உக்காரும்"

"இந்த நேரத்தில்..." என்று யோசித்தார் ஆச்சாரியர்.

"அவசரம். கோயில் வரை போய்விட்டு வருவோம்"

ஆச்சாரியர் உட்கார்ந்ததும் மழையை ஊருடுவிக் கொண்டு சாரட் விரையலாயிற்று.

7

"போதும் சேந்தா. பயமாயிருக்கிறது. கிளம்பிவிடலாம்"

"பயப்படாதே. உள்ளே இறங்கிப் பார்த்துவிடலாம். விளக்கை எடு"

பட்டாபி பயத்துடன் விளக்கை எடுத்தான். துளையின் உள்ளே படிகள் இல்லாமல் ஒரு ஆள் நுழைவதற்கான அகலம் கொண்டிருந்தது. சேந்தன் முதலில் உள்ளே இறங்கினான். பின்பு பட்டாபியும். ஒரு ஆள் நிற்கும் அளவிற்கான உயரம் கொண்ட சுரங்கம். வெளிச்சம் போனவரைக்கும் சுரங்கம் நீண்டிருந்தது. அசதியான வாசமும் குளிர்ப்பும் நிறைந்திருந்தது. பத்தடி நடந்திருப்பார்கள்.

பட்டாபி,"சேந்தா, பயமாயிருக்கிறது, மேலே ஏறிவிடலாம்" என்றான்.சேந்தன் மறுமொழி கொடுக்காமல் மேலும் முன்னேறினான்.​கொஞ்ச தூரத்தில் ஒரு சிலை தெரிவது போலிருந்தது.. சிற்பமா.. தூணா? மசமச வெளிச்சத்தில் சரியாகத் தெரியவில்லை. சுரங்கம் இன்னும் நீண்டு கொண்டே போகும் போலிருந்தது.

"சரி வா. போகலாம். நாளை வந்து வெளிச்சத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று திரும்பி நடந்தார்கள். இரண்டடி நடந்திருப்பார்கள்.

"சேந்தா........"

குளிர்ச்சியாய் நெஞ்சைக் கிழிக்கும் குரல் ஒன்று பின்புறத்திலிருந்து கேட்டது. சேந்தன் உந்துதலில் சட்டென்று திரும்பிப் பார்த்தான். பயத்தில் பட்டாபி அகல் விளக்கை எறிந்து விட்டு தெறித்து ஓடினான்... இருளில் எதுவும் தெரியவில்லை. "பட்டாபி ஓடாதே நில்லு.." பட்டாபி மேல் துவாரத்தின் வழி ஏற முயற்சித்துக் கொண்டிருந்தான்.

"பட்டாபி" சத்தமாக கூப்பிட்டான் சேந்தன். மேலே பாதி ஏறிவிட்ட பட்டாபி அலறினான்,

"மாட்டேன்.. திரும்பிப் பார்த்தா சிலையாயிடுவோம்ன்னு அப்பா சொன்னாரு" பட்டாபி அவன் அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பான் போல என்று கோபம் வந்தது. சேந்தன் திரும்ப யத்தனித்தான். கால்கள் நகர்த்த முடியவில்லை. குனிந்து கால்களைப் பார்த்தான். கால்கள் இறுகி தரையில் ஊன்ற ஆரம்பித்திருந்தன. உடம்பு முழுவதும் ஒரு குளிர்ச்சி பரவுவதை உணர்ந்தான் சேந்தன்.

8

ஆகஸ்ட் 2009, ஒரு நண்பகல். லண்டன். ரஸ்ஸல் ஸ்கொயரில் உள்ள பிரிட்டிஷ் மியூஸியம். காலரி எண் 33க்குள் நுழைந்த மெய்ஸி வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த சிற்பங்கள் பக்கம் ஈர்க்கப்பட்டவளாய் அந்தப்பக்கம் போனாள். எல்லாம் ஒரே அளவில், ஒரே அமைப்பில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தாக உணர்ந்தாள். எத்தனை சிலைகள் என்று எண்ணிக் கொண்டே வந்தவள். மொத்தம் ஒன்பது சிலைகள்.

எல்லா சிலைகளையும் விட ஒன்பதாவது சிலை மிகவும் இளமையாக இருப்பதாகப் பட்டது மெய்ஸிக்கு.


Saturday, August 8, 2009

(கள்ளக்) காதல் கவிதை!



முன் குறிப்பு: சத்தம் போட்டு படிக்க வேண்டிய கவிதை


டண் டணக்கா - அவன்
ஜின் ஜினுக்கா - அவள்

டண் டணக்கா, டண் டணக்கா
ஜின் ஜினுக்கா, ஜின் ஜினுக்கா
டண் டணக்கா ஜின் ஜினுக்கா - காதல்!

ஜின் ஜினுக்கா, டண் டணக்கா, ஜின்
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா, டண்
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா - கல்யாணம்!!

இணைப்பு:

ரண் டணக்கா - இன்னொருவன்

ஜின் ஜினுக்கா, ரண் டணக்கா
ஜின் ஜினுக்கா, டண் டணக்கா,
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா, ரண் டணக்கா
ரண் டணக்கா, ஜின் ஜினுக்கா, டண் டணக்கா - கள்ளக்காதல்!!!

பின்குறிப்பு:

நாமும் கவிதை எழுதுவோம் என்று இந்த மாதிரி (ஒரு மாதிரி??) எழுதியாகிவிட்டது.

இனி​மேல் இந்த மாதிரி தப்பெல்லாம் நடக்காது என்று உறுதி கொடுக்கிறோம்.

நம்புங்கள் ப்ளீஸ்!

Wednesday, August 5, 2009

புதுசாய் வரயிருக்கும் வலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்!



சொம்பு: இதுதான் வலைப்பதிவு பேரு. பஞ்சாயத்து பண்ணி​வைக்கிறதுதான் மெயின் பிஸினஸ். (சைபர்-க்ரைம் டிபார்ட்மெண்ட் இதற்கு ஒரு தூண்டுதல் என்று வதந்தி) நிறுவப்போறவர் எட்டுபட்டிக்கும் நாட்டாமைன்னு பேசிக்கறாங்க. அடிச்சு ஓட்றா சம்முவம் என்று அடிக்கடி வண்டி மாடுகளை ரொம்ப சோதிக்கின்றதாகச் சொல்லி, இப்ப ப்ளூ க்ராஸ் அரெஸ்ட் பண்ணீட்டாங்களாம்! சொம்புநக்கிகளுக்கு ஏற்ற வலைப்பதிவு.

கண்ணாம்பா.காம்: ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, இடுகை எழுதும்போதே கீ​போர்ட் கண்ணீரில் நனைத்துவிடுகிறாராம். பின்னூட்டம் பாத்து போடவும். இல்லையென்றால், உங்கள் கம்ப்யூட்டரே வெடித்து சிதறட்டும் என்று ​வைரஸ் சாபம் விட்டுவிடுவாராம்

மைனர் குஞ்சு:
அஜால்குஜால் இடுகை எழுதும் போதே எக்ஸ்யூஸ்மீ, தப்பா நெனச்சுக்க படாது, யார் மனசயும் புண்படுத்தவில்லை என்று ​சொல்லி ​சொல்லியே மேட்டரை முடித்துவிடுபவராம். ஏற்கனவே வெவ்வேறு பெயர்களில் உலாவுகிற மைனர்குஞ்சுகள் இந்த குழுவலைப்பதிவில் இருப்பார்களாம்.

பாண்டிமடம்:
இது ஒரு முக்கியமான வலைப்பதிவு. அனேகமா வலைப்பதிவர் என்று ஆகிவிட்ட யாரும் இங்கே ஒரு விஸிட் அடித்தே ஆக வேண்டும்; யாரும் எஸ்ஸாக முடியாது என்று சவால் விடுகின்றனர்! போய்தான் பாப்போமே?

ஆபுவே:
சீரியஸாகப் போய் கொண்டிருக்கும் அக்கப்போர் விவாதங்கள், கும்மியடி, குழாயடிச் சண்டைகளை முடித்து வைத்துத் தரப்படும் என்று சொல்லுகிறார்கள். நம் பதிவுலகத்து அவசியம் என்றே தோன்றுகிறது. ஆபுவே..? அதாங்க.. ஆணியே புடுங்க வேண்டாமாம்!


கவிப்பின்லாடன்:
கவியரசு, கவிப்பேரரசு, வெறும் பேரரசு வரிசையில் தானும் வருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். இவரது கவிதைகள் நெய்க்குண்டா, மாறிமாறிசொறி, மசநாய்கடி (ருவாண்டா நாட்டில் 7 மாதத்திற்கு ஒருமுறை பிரசுரம்) ​போன்ற இதழ்களில் வெளி வந்திருக்கிறதாம். சாம்பிளுக்கு ஒரு கவிதை.. வேணாம் பயந்துருவீங்க...


மூத்திரசந்து:
வெளிப்படையான ஆக்கங்களுக்கு இங்கே நம்பி விஸிட் அடிக்கலாம். அர்ஜென்ட்டா ஒரு மொக்கை வேணுங்கிறவங்க எப்ப வேண்டுமானாலும் இங்கே போயி ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். இந்த வலைப்பதிவுல பின்னூட்டம் மட்டறுக்கப்படுகிறதாம். ஒன்லி முன்னூட்டம்தானாம்.

இதுமட்டுமில்லாம,

தர்மக்குத்து, எங்கோமணம்
போன்ற திரட்டிகளும் புதுசாய் வெளிவரயிருப்பாதாய் நம்பத்தகுந்த முக்கோணங்கள் முனகுகின்றன.

தர்மக்குத்துவின்
சிறப்பம்சம், அவர்களே ஸ்பெஷல் ஸ்குவாடு வைத்து ஓட்டுக்களாய் ​குத்து குத்தென்று குத்தித் தள்ளி விடுவார்களாம். உங்கள் வலைப்பதிவில் ஒரு விளம்பரம், ஸ்பெஷல் ஸ்குவாட் டீ செலவுக்கு பணம் இவை மட்டும் போதுமாம்.

எங்கோமணம்,
சிறந்த வலைப்பதிவர்களை அடையாளம் காணும் முயற்சியாம். எப்படிப்பட்ட மொக்கைப் பதிவென்றாலும் தம்கட்டி படித்துவிடுவார்களாம் இதன் தேர்வுக்குழு உறுப்பினர்கள்.
சரி இதோட (இப்போதைக்கு) நிப்பாட்டிக்குவோம்..

பி.கு.:

1. காலடியின் தீவிர அதி தீவிர வாசகக்கண்மணிகளில் ஒருவரான சம்முவம் விரும்பிக் கேட்டதால இப்படியொரு வலைப்பதிவு. இது சம்முவத்துக்கே சமர்ப்பணம்!

2. இந்த இடுகையை காமடியாக எடுத்துக்​​கொள்ளப்பட வேண்டியது. அன்புடன், மைனர்குஞ்சு

Tuesday, August 4, 2009

டெக்ஸ்வில்லர் சுவர்

மூன்று பஸ்கள் வரும் போகும் ஊர். பாலு செருப்புகளற்ற பாதங்களாய் அணைக்கட்டு, வாதநாராயணன் மரம், தோட்டம் என்று சுற்றி வருவான். நான்காம் வகுப்பிலிருந்தே காமிக்ஸ் என்றால் ரொம்ப இஷ்டம். ராணி காமிக்ஸ், லயன், முத்து காமிக்ஸ்கள் வரைந்து காட்டிய டெக்ஸ்வில்லர், ஸ்பைடர், மாயாவி, இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரேக், ஆர்ச்சி, ஜானி, 007, மாடஸ்டி, புரட்சிப்​பெண் ஷீலா, லக்கி லூக், லாரன்ஸ்-டேவிட், டேஞ்சர் டயபாலிக், பிலிப் காரிகன்.. இப்படி படங்களும் சாகசங்களுமாய் தன் சின்னஞ்சிறு உலகை விரித்துக் கொண்டான் பாலு. அந்தச் சிற்றூரில் காமிக் புத்தகங்கள் பாலுவுக்கு அரிய பொக்கிஷமாய் ஆகிவிட்டன. வறட்சியான பாடப் புத்தகங்களுக்கு மத்தியில் காமிக் நாயகர்கள் சாகசங்கள் அவனை கிளர்ச்சியுற செய்தன.
அம்மா பாலுவை திட்டுவாள்,
"பொஸ்தவமாவே படிச்சிட்டு இருக்கானே, மாட்டுக்கு தண்ணி காட்டுவோம், இல்ல தோட்டத்து ஒரு எட்டு​போயிட்டு வருவோம்னு​தோணுதா நாயிக்கு"
இதுக்கெல்லாம் அஞ்சுகிறவன் இல்லை பாலு. எப்படியிருந்தாலும் நன்றாக படித்து ரேங்க் வாங்கிவிடுவான். ஊருக்குள் அனைவரிடம் நல்ல பையன் பேரு வேறு! சிகப்பாய், அமைதியாய் ஒரு சிறுவனை யாருக்கு பிடிக்காமல் போகும்? ரேடியோ, டார்ச், வாட்ச் போன்றவற்றை இலகுவில் கழட்டி மாட்டிவிடுவான். அழகாய் ஓவியமும் வரைவான். பாலு அம்மா இதில் ஒருவகை புளங்காங்கிதம் இருந்திருக்க வேண்டும். அதிகம் அவனை வையமாட்டாள்.
காமிக்ஸ் படித்ததோடு மட்டுமில்லாமல் நண்பர்கள் மத்தியில் அவர்களை அறிமுகப்படுத்தி உயிருள்ள மனிதர்களாய் உலவவிட்டவனும் பாலுவே. அப்போதே நண்பர்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம், சிஐஏ, எஸ்ஓஎஸ், அகொதீக, கேபிஜி போன்ற இயக்கங்கள் எல்லாம் சாதாரணமாய் பேசிக்​கொள்வார்கள். அது ஒரு மாதிரியான மயக்கமாக இருந்தது.
திடீரென்று ஒருநாள்.. என்ன நினைத்தானோ, இரவோடு இரவாக வீட்டு இளமஞ்சள் வெளிச்சுவரில் அவன் மனங்கவர்ந்த டெக்ஸ்வில்லர் படத்தை கரித்துண்டால் வரைந்துவிட்டான். அம்மா எப்படி அனுமதித்தாளோ? சுமார் 10 அடி உயரமாக கரித்துண்டு ஓவியத்தில் கம்பீரமாக டெக்ஸ்வில்லர் நின்றிருந்தார். எப்படி அவ்வளவு உயரத்திற்கு சென்று வரைந்தான் என்று நண்பர்களுக்குப் புலப்படவில்லை. ஆனால் டெக்ஸ்வில்லர் கையில் ரைபிளுடன், ஒரு பாறையில் காலை ஊன்றிக் கொண்டு, தொப்பியுடன் நிற்கிற காட்சி அட்டகாசமாய் வரைந்திருந்தான். கண்கள் வரைவது சாதாரண காரியமல்லவே? பாலு புத்திசாலித்தனமாய் டெக்ஸ்வில்லருக்கு கூலிங்கிளாஸ் வரைந்துவிட்டான்.

கதைப்படியும் தர்க்கப்படியும் அவர் கூலிங்கிளாஸ் அணிய முடியாது. ஆனால் சுவர் பாலுவுடையது, ​டெக்ஸ்வில்லரும் ஒன்றும் சொல்லமாட்டார். வேறு யார் என்ன செய்துவிட முடியும்?

டெக்ஸ்வில்லர் சுவர் ரொம்ப நாள் அப்படியே இருந்தது. பின்னொருநாளில் ஏதாவது மழையோ, சுண்ணாம்பு அமிலப் பூச்சோ அதை துடைத்தெறிந்திருந்திருக்கும். கட்சி சின்னத்துக்கும் சோப்பு விளம்பரத்துக்கும் இல்லாமல் ஒரு காமிக் கதாபாத்திரத்துக்கு இடங்கொடுத்த சுவர் அப்புறம் எல்லோருக்கும் மறந்துவிட்டது. பாலுவுக்கும்!


பி.கு:

நண்பன் பாலு என்னைவிட 2 வகுப்புகள் மூத்தவன். இருந்தும் டா-ப்ரண்ட்ஸ் நாங்கள்.காமிக்ஸ், கவிதை, ஓவியம், ராஜேஷ்குமார், பாலகுமாரன், ஏ-ஜோக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஹிப்னாடிசம், காதல், காதல்-தோல்வி, இன்னும் நிறைய.. என எனக்கு அறிமுகப்படுத்திய பாலு +2க்கு​மேல் படிக்காமல் இப்போது சின்ன தாராபுரத்தில் டிவி ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறான். பார்த்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. எப்போதாவது இதைப் படிப்பான் என்று நம்பிக்கையோடு, பாலுவுக்கு, நட்புநாள் வாழ்த்துகள்!