Tuesday, May 11, 2010

குரல்களின் வேட்டை

ஏன் பாடகர்கள் துதிக்கப்படுகிறார்கள்?

ஏன் பாடகர்கள் பிரபலங்களாக இருக்கிறார்கள்?

உங்களுக்குத் எவ்வளவு புல்லாங்குழல் / வயலின் / மிருதங்க / பிற வாத்திய இசைக் கலைஞர்கள் பெயர்கள் தெரியும்?

இசையில் குரல் என்பதும் ஒரு கருவியே (instrument) என்ற எண்ணத்தை சிலகாலங்களுக்கு முன்னேதான் பெற்றேன். இசைக்கோர்வையில் பாடகர் தன் குரல் எப்படி பங்காற்றுகிறதோ அதேயளவுக்கு அல்லது அதையும் விட அதிகமாக வாத்தியங்களின் இசையும் பங்காற்றுகின்றன.

ஆனால் பாடல் முன்னிறுத்தப்படுவது குரலிசைக் கலைஞர்களால்; பாடகர்களால்; இசையமைப்பாளரால்.

முகம் தெரியாத, அடையாளங்கள் தொலைந்த பின்னணி வாத்திய இசைக்கலைஞர்கள் மற்றும் இசைசேர்க்கை வல்லுநர்கள் அனைவரையும் சோகமும் இயலாமையும் சேர நினைத்துக் கொள்கிறேன். என்னால் ஒரு புல்லாங்குழல் கலைஞரை, வயலின் வித்வானை எப்படி வியக்க முடிகிறதோ அவ்வளவே குரலிசைக் கலைஞரையும் (பாடகர்கள்) ரசிக்க முடிகிறது.

ஏன் பாடகர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரபலமாகிறார்கள்? அல்லது பிரபலமாக்கப்படுகிறார்கள்?

0. இயல்பிலேயே நாம் அனைவரும் பாடகர்களாக இருக்கிறோம்.
1. குரல் என்பது இயற்கையான இசைக்கருவி. தொண்டை மட்டும்தான் மூலதனம்.
2. யார்​வேண்டுமானாலும் இந்த இசைக்கருவியை எங்கு​வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு பான்ஸுரி 'F' புல்லாங்குழலுக்கு நீங்கள் குறைந்தது ரூ.500/-வது ​செலவு செய்ய வேண்டும். அப்புறம் வெறும் ஓசை வரவைக்கவே மணி/நாள்/மாதக் கணக்கில் பயிற்சி எடுக்க வேண்டும்.
3. குரல் நம் ஆத்மாவுக்கு, கற்பனைக்கு, படைப்பாற்றலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. ஒரு ட்யூனை 'ஹம்' செய்துவிடல் சுகமானது. அதையே ஒரு கிதாரின் நரம்புகளுக்கோ, பியானோவின் கட்டைகளுக்கோ மாற்றுவது கிட்டத்தட்ட அல்கெமிஸ்ட் வேலை மாதிரி.
4. இந்த குரல் இசைக்கருவியை (?!) யாருக்கும் தெரியாமல் சுலபமாக எடுத்துச்​செல்லமுடியும். டூர் கிளம்பும்​போது உதாராக கிதாரை எடுத்துக் கொண்டு வரும் பயபுள்ளைக அதை தோளில் சுமந்து கொண்டு (கிதார் ஒரு தோளிசைக் கருவியா??) முழி பிதுங்குவதே மேஜராக இருக்கும்.
5. .......... ஸ்டாப்பிட்!! நாம் ஏன் இப்படி டிஎன்பிஎஸ்ஸி, குரூப்-2 வினாத்தாள் போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் போய்க்​கொண்டிருக்கிறோம்..??

சொல்றேன்.

அநன்யா மஹாதேவன் நம்மிடம் பிடித்த பாடகர்கள் ஐவரை எழுதப்பணித்திருக்கிறார். அதுதான் நாம், நம் ஸ்ஸ்டைலில் கிர்ர்ரடித்துக் கொண்டிருக்கிறோம். போதும் வெளாட்டு; ஆளைக் காமி, நாங்க கிளம்பணும் என்பவர்களுக்காக...

எனக்குப் பிடித்த பாடகர்கள்:

1. கீதா தத்:

ஒரு பெங்காலி. இவரது அசாதாரண வாழ்க்கை முறையே என்னை ஈர்த்தது எனலாம். 1930ல் கிழக்கு வங்காளத்தில் பிறந்த கீதா ராய், பம்பாய்க்கு குடிபெயர்ந்து பின் எஸ்.டி.பர்மன் மூலம் இந்தி திரையிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். பின்னர் புகழ்பெற்ற இயக்குனர்-நடிகர் குரு தத் படத்தில் (Baazi) பாடும் போது இருவருக்கும் காதல் மலர்ந்து கல்யாணமும் ஆனது.

கீதா ராய், கீதா தத் ஆனார்.

கீதா தத் பாடலை நீங்கள் முதலில் கேட்கும்​போது அது உங்களைப் பெரிதும் கவரவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கீதாவின் குரல் கவர்ச்சி மிக்கதாக தோணாது. ஆனால், பாடலுடன் அந்தக் குரல் பயணிக்கும் விதம் நம்மை கொள்ளைக் கொள்ளும். நம் காதுகளுக்கு கீதாவின் பிளாக்-அன்ட்-ஒயிட் குரல் தொன்மையானதாகத் தோன்றும். அதில் ஒரு அமானுட வசீகரம் அக்குரலின் பயணத்தில் சிக்கும். Babuji dheere chalna என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு இப்பாடலில் ஏதாவது வித்யாசம் நிரடினால் உங்களுக்கு கீதாவைப் பிடிக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் Pyaasa படத்தில் வரும் Jane Kya Tune Kahi பாடலைக் கேளுங்கள்.

பொதுவாக 1950-களில் ஹிந்தி சினிமாவில் பிரபலாமான சிஜடி வகைப் படங்களின் Jazzy வகை பாடல்கள் (Ankhon Mein Tum Dil Mein Tum Ho ஒரு உதாரணம்), பஜன்கள், விரகதாபப் பாடல்கள் மற்றும் சோகமயப் பாடல்கள் (விசும்பி விசும்பி அழுது​கொண்டே பாடுவது) இவற்றுக்குப் பொருத்தமாக இருந்தது கீதாவின் குரல்.

லதா மங்கேஷ்கரின் வருகைக்குப் பிறகு கீதா 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். லதா தேர்ந்த சாஸ்திரீய ஞானமும், பலதரப்பட்ட பயிற்சியும் கொண்டவர். சிறுவயதிலிருந்தே பாடகியாக இசைக்காகவே வளர்க்கப்பட்டவர். சாதாரண குடும்பத்தில் எவ்வித இசைப் பின்புலமும் பயிற்சியும் இல்லாமல் வளர்ந்த கீதா 2ம் இடத்துக்கு வந்ததும் நியாயமே. இருந்தும் லதா மங்கேஷ்கருக்கு கீதா மேல் ஒரு பயம் இருந்து​கொண்டே இருந்தது.

கீதாவின் குரலின் இழுவிசை சாஸ்திரீய ஜாலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இருந்தும் இசையமைப்பாளர்களால் சோகப்பாடல்கள் பாடுவதற்காக விதிக்கப் பட்ட குரலாக அது மாற்றப்பட்டது. Aayega aanewala பாடல் இவ்வகையே. சோகப்பாடல்கள் கீதாவை முழுமையாக எடுத்துக் கொண்டுவிட்டன எனலாம். ​சோகமயமாக அவரின் இயல்பு வாழ்க்கையும் மாறியது.

கீதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை - வஹீதா ரஹ்மானால். புகழ்பெற்ற ஹிந்தி நடிகை (செங்கல்பட்டுக்காரர்). வஹீதாவுக்கும் குரு தத்-க்கும் காதல் மலர்ந்தது. கீதாவைப் புறக்கணிக்க ஆரம்பித்தார் குரு. குருவின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் வஹீதா. பாருங்கள்.. திரையில் வஹீதா வாயசைக்கும் பாடல்களை கீதாவே பின்னணியில் பாட​வேண்டியிருந்தது. காகஸ் கீ பூல் இந்த பின்னணி நாடகத்திற்கு ஒரு உதாரணம்.
இரு பெண்களின் காதல்களுக்கிடையே ஊசலாடிய குருதத் பின் தற்கொலை செய்து கொண்டார். கீதா குடிக்கு அடிமையானார். மீளாப்பயணமாக அது அமைந்தது. பணச்சிக்கல்​பொருட்டு ஒரு பெங்காலிப் படத்தில் கதாநாயகியாகக் கூட நடித்தார். எதுவும் குருதத் இழப்பை ஈடுகட்ட முடியவில்லை. சிந்து பைரவி சிவக்குமார் மாதிரி மிதமிஞ்சிய குடிபோதையில்​மேடையிலேயே ஆர்மோனியப் பெட்டி மீது சரிந்தும் விழுந்திருக்கிறார். தன்னை அழித்துக்​கொள்ளும் முனைப்பு கொண்டவர் போல் குடிக்க ஆரம்பித்தார். ஈரல் பாதிக்கப்பட்டு, 1972 ஜூலை 20 அன்று கீதா தத் மறைந்தார்.


ஷாஜி எழுதிய​சொல்லில் அடங்காத இசை புத்தகம் கீதா தத்தை அறிமுகப்படுத்தியது. காதில் விழும் கீதாவின் குரல் கறுப்பு-வெள்ளைப் பின்னணியில் பழைய காலத்துத் தெரு, பூங்கா, மாதர்கள், மெளனமாக ஊறும் மங்கலான மாலைப் பொழுது என என்னை காலங் கடத்துகிறது.

2. மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்

எம். எஸ். விஸ்வநாதன் படைப்பாற்றல் மிக்க பாடகராக எனக்குத் தோன்றுகிறார். நல்ல பாடகரின் தரம் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் புதிதாக பாடி உருவாக்க வேண்டும். சமரசம் அற்ற தனித்த குரலாக இருக்க வேண்டும். எம்எஸ்வி அப்படித்தான். அவரின் பாடகர் அவதாரம் மிகத்தனித்துவமானது. பிரம்மாண்டமானது.

எனக்கொரு காதலி இருக்கின்றாள் (முத்தான முத்தல்லவோ) என்ற படப்பாடலில் எஸ். பி. பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடியிருப்பார். ஒரே வரிகளை பாடுவதில் எம்எஸ்விக்கும் பாலாவுக்கும் உள்ள வித்யாசத்தை கவனிக்கலாம். இயக்குநர் சரணின் முதல்படமான 'காதல் மன்னனில்' எம்எஸ்வி நடித்திருப்பார். அதில் இதேப் பாடலை அவர் ஒரு காட்சியில் பாடும் போது அசாதாரண மாற்றங்களோடு இருக்கும். ஏனென்றால் எம்எஸ்வி ஒரு படைப்பாளி. ஒரு மெட்டை உருவாக்கும் படைப்பூக்கம் அப்படியே பாடலைப் பாடுவதிலும் கொண்டுவருகிறார்.

பார் மகளே பார் (பார் மகளே பார்), ஜகமே மந்திரம்.. சிவசம்போ (நினைத்தாலே இனிக்கும்)
யார் அந்த நிலவு (சாந்தி), நீ நினைத்தால் இந்நேரத்திலே (நிலவே நீ சாட்சி), சொல்லத்தான் நினைக்கிறேன் (சொல்லத்தான் நினைக்கிறேன்) , கண்டதைச் சொல்கிறேன் (சில நேரங்களில் சில மனிதர்கள்) போன்ற பழைய பாடல்களில் அவரின் பாடு-வளமை வேறு யாராலும் தொடரமுடியாத ஒன்று.

டி.எம். செளந்தர்ராஜன் 'யார் அந்த நிலவு' பாடலை எம்எஸ்வி பாடிக்காட்டியபோது பயந்துவிட்டேன் என்றிருக்கிறார்... பி.பி.ஸ்ரீனிவாஸ் - அவர் பாடியதில் பத்து சதவீதத்தை மட்டும் தன்னால் குரலில் கொண்டுவர முடிந்துள்ளது... பி. சுசீலா - எந்த ஒரு பாடகருமே எம்எஸ்வி பாடிக்காட்டிய அளவுக்கு அவருடைய மெட்டுக்களை உயிரோட்டத்துடன் பாடியதில்லை. எம்எஸ்வி பாடிக் காட்டியதுபோல மெட்டுக்களைப் பாட முடியாமல் அவர் ஒலிப்பதிவகத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறியிருக்கிறார்... வாணி ஜெயராம் - எம்எஸ்வி பாடும்போது வரும் எண்ணற்ற நுண்ணிய மாற்றங்களை எந்தப் பாடகராலும் மீண்டும் பாடிவிட முடியாது... என்கிறது ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை.

ஆலால கண்டா (சங்கமம் - ஏ. ஆர். ரஹ்மான்) என் விருப்பப் பாடல்களில் ஒன்று. அதன் உச்ச ஸ்தாயி ஆலாபனைகளும் ஜதியும் அம்மெட்டை பிரம்மாண்டமாக ஆக்கிக் காட்டுக்கின்றன.

மெட்டுத்தேடி தவிக்குது ஒரு பாட்டு (காதல் மன்னன் - பரத்வாஜ்), விடைகொடு எங்கள் நாடே கன்னத்தில் முத்தமிட்டால் - ஏ. ஆர். ரஹ்மான்) என அவரின் சமீபத்திய பாடல்களும் வேறொருவர் இசையமைத்த பாடல்களையும் தன் சொந்த படைப்பாற்றலால் வேறு பரிமாணத்தில் அளித்திருப்பார் எம்எஸ்வி.

எம். எஸ். வி முடிவில்லாத படைப்பாற்றல் மிக்க பாடகர்.

....
அநன்யா ஐம்பாடகர்களைக் குறிப்பிட வேண்டும் என்றிருக்கிறார். மேற்கத்திய இசையில், நம் மரபிசையில் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆளுமைகள் நிறையபேர் உள்ளனர். ஆனால் அது எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் ஒரு பட்டியலாகத் தோன்றுகிறது. எல்லாக் காலத்திலும் நிலையாக மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் அல்லது பாடல் என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. நித்யஸ்ரீ-யின் செளக்யமா கண்ணே செளக்யமா-வை 4 மணிநேரங்கள் தொடர்ச்சியாகக் கேட்டதுண்டு. ஆனால் அவர் பெயரை இங்கு சொல்ல முடியவில்லை. இசை, பாடகர்களைப் பற்றி எழுதுவது சாதாரணமல்ல என்றிருக்கிறது.
இப்போதைக்கு, கீதா தத் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இவர்கள் இருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. என் குரல்களின் வேட்டையில் சிக்கியது இவ்வளவுதான். எனக்கு இசை ஞானம் கம்மி அல்லது கணக்கில் வீக் என்று நினைத்துக் கொள்ளுங்களேன் :))

Friday, May 7, 2010

வைரமுத்துவை வாசிக்கும் காலம்


மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
- ​வைரமுத்து.
அன்பு அண்ணன் க.சீ.சிவக்குமார் தன் வலைத்தளமான நள்ளென் யாமத்தில் கசடதபற என்று இடுகையிட்டிருக்கிறார். அதற்கு அண்ணனுக்கு நான் தீட்டிய ப்ப்பின்னூட்டத்தை இங்கு பதிவாக்கியிருக்கிறேன். காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக் கண்மணிகளுக்கும் இது போன்ற சிந்தனாசிந்தனைகள் வந்து சேரவேண்டுமென்பதே நம் அவா.. பேரவா!

அன்பு சிவா,

நர்சிம்-இன்
பிறந்த நாள்-கவிஞர் வைரமுத்து... பதிவைப் பார்த்தேன்.

நமக்கு வைரமுத்துவை இப்போது பிடிக்காமல் போவதற்கு பொங்கி வளர்ந்த அறிவும் மடை திறந்து பாயும் இலக்கிய பிரவாகமும் காரணமாக இருக்கலாம்.

பால்யம் எப்போதும் தார்ரோட்டில் டயர் உருட்டிவிட்டுக்​கொண்டிருக்கிறது. நாம் வளர்ந்து விட்டாலும், பால்யம் யாரோ ஒரு சிறுவனாக இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறது.

வாழ்வின் பருவங்கள் அப்படித்தான். அலங்கியம் தண்ட்ஸ் மாமாதான் மு.​மேத்தா கவிதைகளை முதலில் அறிமுகப்படுத்தியது. அப்போது அதே போல கவிதைகள் படைக்க​வேண்டும் என்று முனைப்பு இருவருக்கும் இருந்தது. அது ஒரு பருவம். ஞாபங்களை மீட்டெடுக்கும்​போது ஆசுவாசமாக இருக்கிறது.

உங்களின் ஒரு பழைய காதலை, பழகிய தோழனை, நெருக்கமாயிருந்த மரத்தை, வீட்டு சன்னலுக்கு அப்பாலான தேசத்தை, மழை நனைத்த வீட்டுக்கூரையை, ஒரு பூனையின் தூக்கத்தை, காதலியின் நகங்களை என நம் ஆல்பத்தின் ஏதோவொரு புகைப்படம் ​வைரமுத்துவின் கவிதையால் எடுக்கப்பட்டதாய் இருக்கக்கூடும்.

என் பதின்ம வயதுகளில் வைரமுத்து என்னை எடுத்துக்​கொண்டார். வாங்கிப் படிக்காமல் நம்மிடம் சேரும் கவிதைகள் வரிசையில் வைரமுத்துவிற்கும் இடமுண்டு. அலங்கியம் மாமா அல்லது அரிக்காரன்வலசு பாலா அல்லது அப்பா எடுத்து வரும் நூலக நூல் இப்படி.

பிடித்த ஆளுமைகளை வரைந்து விடும் நோய் கொண்டிருந்தேன். கமல், பீட்டில்ஸ், அப்பாசி இண்டியன், இளையராஜா,​வைரமுத்து இப்படி (சமீபமாக வரைந்த ஆளுமையைப் பற்றிச் சொன்னால் நீங்கள் என்னை மொத்தக் கூடும்)

குமுதத்தில் ஒருமுறை பேராசிரியர் (கவிஞர்) பழமலய்,வைரமுத்து காசுக்காக தன் ஆன்மா​விற்றிவிட்டார் என்று விமர்சித்திருந்தார். அதற்கு வைரமுத்துவும் பதில் (கவிதைதான்) கோபமாக எழுதியிருந்தார்.

அப்போது வைரமுத்துவுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். என்னுடைய டைரியில் பப்ளிஷ்ஷும் பண்ணினேன். அச்சமயங்களில் கல்லூரியில் நண்பர்களிடையே கவிஞன் என்றே அடையாளப்பட்டிருந்தேன். வைரமுத்து பாணியில் நான் எழுதும் கவிதைகளுக்கு ஒரு ரசிகக் கூட்டமும் உண்டு. கல்லூரி விடுமுறையில் ஊர் திரும்பிவிட்டாலும், கடிதங்கள் வாயிலாக கவிப்போக்குவரத்து நடந்த காலக்கட்டம்.

அப்புறம் ஒருகணம் வைரமுத்து போரடித்து விட்டார். என் கவிதைகள் வைரமுத்து சாயல் ஒட்டிக்​கொண்டதாக அல்லது தாக்கம் நிறைந்ததாக உணர்ந்த சமயம் அது.

வைரமுத்துவையும் தாண்டிச்​சென்றால் நாம்தான் அறிவாளி.. அட்லீஸ்ட் கல்லூரி நண்பர்கள் மத்தியிலாவது வித்யாசப்பட்டுத் திரியலாம் என்ற தன்மதியில் வேகவேகமாக வைத்தீஸ்வரன், நா.விச்வநாதன், வ.ஐ.ச. ஜெயபாலன், பாலா, இன்குலாப், இந்திரன், யூமா.வாஸுகி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை வாசிக்க ஆரம்பித்தது. இருந்தும் வைரமுத்துவின் வரிகள் இப்போது கேட்கும்​போதும் / வாசிக்கும்​போதும் நினைவுகளின் சாலையில் டயர் வண்டியை உருட்டிவிடுகிறது.

கோவை ஞானியை ஒருமுறைப் பார்..... ஸாரி, தொட்டிருக்கிறேன் - உங்களுடன் இருந்ததால். ஞானி அப்போது நம்மிடம் பேசியதா அல்லது கனவு இதழில் படித்ததா என்று ​தெரியவில்லை.

ஞானி வைரமுத்துவின் விஷயஞானம் பற்றி குறிப்பிட்ட நினைவுண்டு. ஒரு சர்ச்சைக்குள்ளான புத்தகம் பற்றி ஞானி கேட்ட​போது அதற்கு வைரமுத்து தெரியாது என்று சொன்னாராம். வைரமுத்து போன்ற தேடலும் உழைப்பும் கொண்ட மனிதர் அந்தப் புத்தகத்தை வாசிக்காமல் இருந்திருக்க முடியாது. வைரமுத்து நழுவுகிறார் என்பது ஞானியின் கருத்து.

இப்படி ஒரு வாசிப்பு - புள்ளிவிபரம், பூகோள அறிவு, வரலாற்றுக் குறிப்புகள் இப்படி இருந்தாலும் - கொண்ட வைரமுத்து எளிதாக தன் ஞானத்தை வேறுவகையான படைப்புகள் மூலம் மெய்ப்பிப்பது எளிது. அவரால் யாரையும் தாண்டிவிட முடியும் என்பது என் அனுமானம்.

ஆனால், தனக்கென ஒரு வாசகர்க் கூட்டம் இருப்பதால் அதே தரத்தில் தொடர்ந்து படைக்க வேண்டிய நிலைமையில் இருப்பதாகப் படுகிறது. அதுவே வைரமுத்துவிற்கான அடையாளமும் கூட.

நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..

வைரமுத்து கவிதைகள் அப்படித்தான்!

Thursday, April 29, 2010

மருதாணி நிலாக்களும் S-ல் ​தொடங்கும் ஒரு ​பெயரும்

'ஏய் என்னடி பண்றே?'
'ச்சூ.. காலை உதறாம இருங்க'
'என்னது.. மருதாணியா? ​எனக்கெதுக்குடி மருதாணி?'
'ம்.. உடம்பில கொஞ்சமாவது சிவப்பு இருக்கட்டுமேன்னுதான்'
'​ஜோக்கு..?? மருதாணி வச்சா ஜல்ப்பு புடுச்சுக்கும்பா எனக்கு'

வினோத்​சொல்வதைக் கேளாமல் அவன் கால்களுக்கு மருதாணி இடத்​தொடங்கினாள் சுஜாதா. நகங்களின் பச்சையம் நாளை சிவப்பாக விடிந்துவிடும் என்றும் நம்பினாள்.

தலைப்பற்ற கவிதையின் மறந்து​போன ஒரு வரியை நினைவூட்டுவது​போலவே இருக்கின்றன அவர்களின்​பொழுதுகள். வினோத் கட்டிடவியல் ​பொறியாளன். ​பெரிய​அடுக்குமாடிக் கட்டிடங்களின் சுவர்களுக்கு கண்ணாடி​பொருத்துவது. ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் என்பான். கத்தார் கம்பெனி அழைப்பின் பேரில் சுஜாதாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

சுஜாதாவுக்கு வந்த புதிதில் கத்தார் புதிராக இருந்தது. வேறொரு மண்ணிலிருந்த செடியைப் பிடுங்கிப் பாலையில் நட்டுவிட்டாற்​போன்று இருந்தது. காலை அலாரமாக பாங்கொலி, கறுப்பு புர்கா கண்களாகப் பெண்கள், மஞ்சள்​வெயில், நீண்டநிழல்கள், ஈச்சமரங்கள், ஈச்சம்பழங்கள், ஈச்சம், ஈச்சம், ஈச்.... திணை மாறினாலும் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையை தவறவிடுவதில்லை.

பாலை என்பது நிலம் அல்ல.. வாழ்க்கை. ஆரம்ப நாட்களில் ​வினோத்தோடு வெளியே போகும்​போது குழந்தையாக உணர்வாள். எங்கேயாவது-மிஸ்-ஆயிடுவேனோ பயமாக அவனைப் பற்றிக்​கொள்வாள்.

'இந்த பில்டிங்குக்கு நான்தான் ஸ்டரக்சுரல் க்ளேஸீங் டிஸைன் பண்ணினேன்.
அதோ அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அதுக்கு கூட. அப்புறம் இது..' என்று கட்டிடங்களை உயிருள்ள மனிதர்கள் போல் அறிமுகப்படுத்துவான்.

அந்தக் கட்டிடங்களின் புறவெளிக் சதுர கண்ணாடிகளில் சுஜாதா தெரிவாள். தானொரு சதுரங்கக் காய்ப் போல நகர்ந்து கொண்டிருப்பதாகப் படும். நான் ராணி.. நீ ராஜா என்று மனதுக்குள் சிரிப்பாள்.

கத்தார் மணி 8 ஏஎம். இப்போது சுஜாதா வீடு ​பெருக்குகிறாள். டிவியில் ஏ நிலவே நிலவே... என்று அஜீத் மழையில் நனைந்து ​கொண்டிருந்தார். பெருக்கி முடித்து குப்பைக் கூடையில் போடும்​போது கவனிக்க முடிந்தது. சிவப்புத் துணுக்குகள் கீழே கிடந்தன. வினோத் நகம் ​​வெட்டிப்​போட்டிருக்கிறான்.

தினங்கள் முன்பு வைத்த மருதாணிச் சிவப்பு ஒட்டிய நகத்துண்டுகள். குப்பையைப் போட்டுவிட்டு நகத்துணுக்குகளை அள்ளிக் கொண்டாள். உள்ளங்கையில் வைத்துப் பார்த்தாள்... பிறைகள், சிவப்பு பிறைகளாகத் தெரிந்தன.

அப்போது கார்த்திக் நினைவுக்கு வந்தான். கார்த்திக் எட்டாம் வகுப்புத் தோழன். உன் விரல் நகம் கீறு... என் உயிர் தவம் தீரும் என்று முடியுமாறு ரூல்டு பேப்பரில் லவ் லெட்டர் கொடுத்தவன். அதற்கு சுஜாதா முன்னுரை தெளிவுரை முடிவுரை பகுதிகள் உள்ளடக்கியதாக நான்கு பக்க அளவில் பதில் கடிதம் வரைந்து கொடுத்தாள். சுருக்கமாக, படிக்கிற வேலையைப் பாரு.

கார்த்திக் மறுநாள் பள்ளிக்கு வரும்​போது ஒட்டுத்தாடி ஒன்றை ஒட்டிக்​கொண்டு வந்தான். வகுப்பில் யாருக்கும் முதலில் அடையாளம் ​தெரியவில்லை. அப்புறம் புரிந்து​கொண்டு சிரிப்படங்க நிமிடங்களாயிற்று. சுஜாதாவாலும் அடக்க முடியவில்லை.

சாயங்காலம் கார்த்திக்கை தனியே சந்தித்தாள் சுஜாதா.

'ஏன் ரொம்ப அப்ஸெட்டா?'
'ம்' என்று முகத்தைத் தொங்கப்​போட்டுக்​கொண்டான்.
'நான் ஓகே சொல்லாததாலா?'
'நீ ஓகே சொல்லாதது கூட பரவாயில்ல சுஜா.. ஆனா.. ஆனா.. நாலு பக்கத்துக்கு ரிப்ளே எழுதிக் கொடுத்தியே.. அதைப் படி.. படிச்சிட்டு.. என்னால.. என்னா...ல'
என்று நெஞ்சைப் பிடித்துக்​கொண்டு அழுவது​போல நடித்தான்.
சுஜாதா அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தாள்.
'சுஜா.. சுஜா.. சிரிக்கறதானே.. என்னைப் பிடிக்கும்தானே.. ஐ லவ் யூ தானே.. ப்ளீஸ் ​சொல்லுப்பா..'

புலிப் பிடியிலிருக்கும் முயலின் நடுக்கம் கொண்டதாக இருந்தது அக்கோரிக்கை.

'போடா லூஸு' என்று எள்ளிவிட்டு சிரிப்பொலி சுடர விலகி ஓடினாள் சுஜாதா.

கையிலிருக்கும் மருதாணி நகத்துணக்குகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு சிறு நகத்துணுக்கு பள்ளித் தோழனை நினைவூட்டப் போதுமானதாக இருக்கிறது. இதழோரம் சிக்கனமாய் ஒரு புன்னகை. சுஜாதாவின் ஒரு பாலைப் பகலை நிரப்ப அது போதுமானது.

- 2 -
கனடா. டொரண்டோ. இரவு 12 மணி. கருஊதா புகையாக மாறிவிட்ட வானம். பனி பெருகும் மாலை. கார்த்திக் இரண்டாவது பெக் விஸ்கியை இறக்கிக் கொண்டிருந்தான். அறையின் ஹீட்டர் ரீங்காரத்தைவிட படுக்கையறையிலிருந்து வரும் மனைவி அனுவின் குறட்டை ​போஷக்கான டெஸிபல்களில் இருந்தது.

இப்போது மனைவியும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். தினமும் அலுவகத்திலிருந்து இவனைத் திட்டுவதற்காக புது வார்த்தைகளையும் உபரியாக சம்பாதித்துக் கொண்டு வருகிறாள்.

'இந்த மாதிரியான இடைவெளி எனக்குப் பிடிக்கலே அனு. லெட்ஸ் ஸால்வ் இட்..'


'ஸால்வ் பண்றதா? எப்படி கார்த்தி?'

'ஏதாவது அவுட்டிங், பிக்னிக், இல்லே ட்ரிப் டு இண்டியா அல்லது கவுன்ஸலிங்.. மென் ப்ரம் மார்ஸ் வுமன் ப்ரம் வீனஸ்ல சொல்ற...'

'கட் த க்ராப் கார்த்தி.. நமக்கான ஸொல்யூஷன் இன்னும் கண்டுபிடிக்கப் படலே. அவர் ப்ராப்ளம் ஈஸ் எக்ஸ்க்ளூஸிவ்.. நீயோ நானோ அதைக் கண்டுபிடிச்சாத்தான் உண்டு.'

'Let's find it then....'

'ஓ! இன்ட்ரஸ்டிங். ​ஸொல்யூஷன் - உனக்கு கண்டுபிடிக்க வக்கில்லை.. எனக்கு கண்டுபடிக்க இஷ்டமில்லை. காலையில் நான் நேரத்திலேயே கிளம்பணும். இப்ப குட்​ நைட்'

'டின்னர்???'

'ஐ ஹேட். நீ ப்ரிஜ்ஜில் ஏதாவது இருக்கான்னு மோப்பம் பிடி. பை'

இப்படி கனடா பனிக்கு கதகதப்பாக இருக்கும் இவர்கள் உரையாடல்.

மூன்றாவது லார்ஜ் உள்ளே இறங்கியிருந்தது. இரண்டாவது பெக்கிற்கு மேல் நீ குடிக்கும் அளவை பெக் என்றே சொல்வாயானால் நீ குடிப்பது வெறும் தண்ணீர் என்பது கார்த்திக் அனுமானம். அனுவின் குறட்டை இன்னும் பெரிதாக இருந்தது.

எரிச்சல் எரிச்சலாய் வந்தது. தாடையைச் சொரிந்துக் கொண்டான். Marriage postpones suicide. And, suicide postpones marriage என்று நினைத்துக் கொண்டான். தாடியைச் சொரிந்தால் எல்லாரும் அறிவாளிகள்தான். அதனால்தான் பெண்கள் முட்டாள்களாயிருக்கிறார்கள் என்பது கார்த்தியின் உபரித் தத்துவம். இதற்கும் மூன்றாவது ​லார்ஜ்ஜுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்!

என்ன சொன்னாலும் சரிக்குசரி நிற்கிறாள். அனுவைப் பொறுத்தவரையில் கார்த்திக் ஒரு காஸனோவா. பெண்பித்தன். நம்பிக்கைத் துரோகி.

'கார்த்திக்.. நீ மற்ற பெண்களை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு உன்னை ஒரு இலவச விளையாட்டு மைதானமாக்கி விட்டாய். உன்னுடன் பேசும் பெண்கள் எல்லோரையும் காதலிகளாக்கி விடலாம் என்ற தன்னம்பிக்கை ஆச்சரியமூட்டுகிறது'

'ஏன் இப்படியெல்லாம் பேசறே அனு.. நான் அந்தமாதிரி இல்லே'

'ஹும்.. உன்னை நான் உளவு பார்ப்பேன் என்ற எண்ணமே உனக்குப் புளங்காகிதத்தை தரும் என்று அறிவேன். உனக்கு அந்த சிறு மகிழ்ச்சிக் கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் இப்போ உறுதியா இருக்கேன். ஐ வோன்ட் ஃபோலோ யூ எனி​மோர் டியர்'

'நீ என்னை அலட்சியப்படுத்தறே. இப்பெல்லாம் உன்னைப் பார்த்தாலே பதட்டமாயிடறேன். ​ உண்மையா சொல்றேன்.. நான் உனக்குப் பயப்படறேன் அனு'

'கார்த்திக், மனைவியை அடித்து துவம்சம் செய்யும் மூன்றாந்தரக் கணவர்களைக் கூட நம்பலாம். ஆனால், மனைவிக்குப் பயப்படுகிறேன் என்று புளுகிற கணவர்கள்தான் உலகிலேயே மிகமிக மோசமானவர்கள்'

அதற்கு மேல் பேச வலுவற்றவனாக விலகிவிடுவான்.

கார்த்திக் நான்காவது லார்ஜ்ஜை கிளாஸில் நிரப்பிக்​கொண்டான்.

நான் பெண்பித்தனா, காஸனோவா-ஆ கேள்விகள் அவனைச் சூழ்ந்து​கொள்கின்றன. தனிமையின் சுழற்படி மதுவில் மத்தாகிச் சுழல்கிறது... ​நுரைகள் நூதனமானவை. நுண்ணியவை. நுரைகள் எப்போதும் பேசுவதில்லை. நுரைகள் பேசுவதைக் காட்டிலும் வாழ்ந்து விடுகின்றன.

மது நிரம்பியக் கோப்பையைக் குடிக்காமல் பார்த்துக்​கொண்டு இருக்கிற போதை நிதானமானது. நினைவுகளைப் விசிறிவிடும் உன்னதமான நிலை அது.

அலுவலகத் தோழி ஸெலினா, கனடாவில் வசிக்கும் கல்லூரித் தோழி உஷா, அவ்வப்போது சாட்டுக்கு வரும் சவீதா, பழைய கம்பெனி நண்பி ரேஷ்மா, கல்லூரிக் காதலி பிருந்தா இப்படி ​பலமுகங்கள் விழுந்த குளமாக தளும்புகிறான். எட்டாம் வகுப்பு படிக்கும்​போது ஒருவளிடம் காதல் கடிதம் கொடுத்தது நினைவுக்கு வந்தது. மது வாழ்க. ஆனால் கார்த்திக்கு அவள் பெயர் நினைவுக்கு வரவில்லை.

நான்காம் லார்ஜ்ஜை குடித்து முடித்தான். இந்த நிரப்பல் அவள் பெயரை மீட்டுவிடும் என்று நம்பினான். சுனிதா, சுசீலா, சங்கீதா, S-ல் தொடங்கும் ஒரு பெயர் என்ற மட்டில் மது அவனுக்கு உதவியது.

எஸ்ஸில் தொடங்கும் ஏதோவொரு பெயர் என்று நினைத்துக்​கொண்டான். அப்போது கார்த்திக்கு விக்கலெடுத்தது. அடித்த விஸ்கியால் இருக்கும் என்று எண்ணிக்​கொண்டான்.