Tuesday, April 19, 2016

கிட்டுவின் வார்த்தை வங்கி

jaganathank.blogspot.in

எனக்கு ஒரு கிராமத்து மாமா இருந்தார். கிட்டு என்று அழைப்பார்கள். ஒரு பத்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்து சொந்தம் என சொல்லலாம். ஒருசமயம் பள்ளி விடுமுறையில் அங்கு போகும்போது வித்தியாசமான வேலை ஒன்று கொடுத்தார். மிக இனிமையாக, தந்திரமாக பேசி எப்படியோ என்னை சம்மதிக்கவும் வைத்துவிட்டார்.

'ஏம்பா, நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீ நல்லாப் படிக்கிற பையன்கிறதாலதான் உங்கிட்ட இதைச் சொல்றேன்...'

'ம், சொல்லுங்க'

'ஒரு ரூல்டு நோட் எடுத்துக்கோ. அதில அ - போட்டுட்டு அதுக்கு கீழ அ-வில் தொடங்குகிற 50 வார்த்தைகள்... ஆ போட்டுட்டு அதில ஒரு 50.. இப்படியே உயிரெழுத்து முடிச்சிட்டு அப்புறம் உயிர் மெய்யெழுத்துக்கும் எழுதிடு'

'எல்லா உயிர்மெய்யெழுத்துமா?'

'ச்சே​சே.. எல்லாம் வேண்டாம்பா. க, ச, த, ந, ப, ம, ர, வ இது மட்டும் போதும் ஏதாவது கதைப்புத்தகம், நாவல், நியூஸ் பேப்பர் இதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையா எடுத்து எழுதினா ஈஸியா ஒரு வாரத்தில முடிச்சிடலாம்'

'ஓ!!'

'ஆமா.. க-ன்னா, அப்படியே கா, கி, கு, கெ இப்படி ஒவ்​வொரு வரிசையிலும் ஒரு 50 வார்த்தைகள் இருந்தா போதும்'

'ஆமா, எதுக்கு இதெல்லாம்?'

'நான் சினிமால வசன கர்த்தா ஆகறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு வாய்ப்பு கூட கிடைச்சிருக்கு. என்ன படம்னு உனக்கு அப்புறமா சொல்றேன். நீ எழுதித் தரறது எனக்கு ஒரு வார்த்தை வங்கி மாதிரி பயன்படும். ஏதாவது சீனுக்கு வசனம் எழுதும் போது கி-யில் இல்ல சி-யில் ஆரம்பிக்கிற வார்த்தை வேணுங்கிறப்ப இதை எடுத்து பார்த்துப் பயன்படுத்திப்பேன். மறக்காம எழுதி முடிச்சிடு. என்ன?'

ஆவ் என்று எனக்கு வந்தது.

பிறகு 80 பக்க நோட்டும் பேனாவுமாக சுற்றும் போது, அந்த ஊர் பையன்கள் சிலர் என்னைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது. ம்! கிட்டு இப்படி பல பேரை ஏற்கனவே பணிக்கு அமர்த்தி தன் வார்த்தை வங்கியைப் பலப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது.

அடுத்த வார​மே ​தேடிக்​கொண்டுவந்து ​விசாரிக்கவும்​ செய்தார்.​

'கு-வரைக்கும் வந்துவிட்டேன். இன்னும் ஒரு வாரம் வேணும்'

'குட் குட் வெரிகுட்! நிறைய புக்கெல்லாம் ரெபர் பண்ணு. வேணும்னா நம்ம ஊர் லைப்ரரியில் புக்ஸ் எடுத்துக்கோ. கிட்டு சொன்னார்னு சொல்லு'

அப்படியே கண்களை ஆகாயத்துக்கு செலுத்தி, விரலைச் சொடுக்கி யோசிப்பார்..

'கு, கூ, கெ அதுக்கப்புறம் சு, சூ, செ.. ​ரைட்! முடிச்சிடலாம் முடிச்சிடலாம்'

அப்போது அவர் கண்களில் குத்திப் பார்த்த இட்லி இன்னும் இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும் போன்ற நம்பிக்கைச் சுடரும்.

அப்படியே மேலும் சில விதிகளையும் விளக்கிச் சொன்னார் கிட்டு. அதாவது பெயர்சொல், வினையெச்சம், பெயரெச்சம் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டுமாம். ஆனால் ஒவ்வொரு எழுதுக்கும் 50 வார்த்தைகள் என்பதில் கறாராக​வே இருந்தார்.

இப்படி தினமும் எதிர்படும் போதெல்லாம் நச்சியதில் ஒருவழியாக முடித்து அடுத்த வாரத்தில் கொடுத்தேன். சாயுங்காலத்தில் மங்கலான தெருவிளக்கின் கீழ் அதை ஆர்வமாக வாங்கிக் கொண்டு பக்கம் பக்கமாக புரட்டினார்.
முகத்தில் இட்லி சரியாக​ ​வெந்துவிட்ட​தே ​போன்ற திருப்தி படர்ந்த மாதிரி இருந்தது.

'வெரிகுட் நல்லா செஞ்சிட்டே. எனக்கு இன்னும் கொஞ்சம் வார்த்தை தேவைப்படுது - அதாவது ஜ, ஷ, ஸ இப்படி ஆரம்பிக்கிற வார்த்தைகள். அப்புறம்.. விடுபட்டுபோன சில உயிர்மெய்களிலும் சிலதுகளையும் நீ கவர் செய்யலாம். உதாரமணா கோ, கெள, தோ, தெள இந்தமாதிரி...'

அந்த ஊருக்கு போவதையே விட்டுவிடலாமா அல்லது தமிழிலிருந்து ​வேறு ​மொழிக்கு மாறிவிடலாமா என்றிருந்தது.

சரி - நம் கண்ணெதிரே ஒரு வசனகர்த்தா உருவாகி, நாம் தயாரித்துக் கொடுத்த வார்த்தை வங்கியை பிரித்துப் பார்த்து, அதிலிருந்து ஒரு வசனத்தை உருவாக்கி, அதை திரையில் ஒரு நடிகரோ நடிகையோ பேசிக் கேட்கும் போது நமக்கும் ஒரு பெருமைதானே என்று அடுத்த அ​​ஸைன்​மெண்டுக்கும்  ஒத்துக்கொண்டேன். அவரிடம் இப்படி அஸைன்மெண்ட் வாங்கிய பல சிறுவர்களின் நான்தான் முதன்மை என்று பாராட்டுப் பத்திரம் வேறு.

அதற்கப்புறம் அவர் என்னிடம் எது பேசினாலும், இவர் பேசுகின்ற இந்த வாக்கியத்தை நான் எழுதிக் ​கொடுத்த வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்துக் கொண்டு பேசுகிறாரோ என்று படும். கிட்டு சில காலங்களுக்கு பிறகு என்னிடம் வார்த்தை வங்கி தயாரிக்கப் பணிப்பதில்லை. வேறு யாரிடமும் கேட்டதில்லை. சில பல 80 பக்க நோட்டு வார்த்தை வங்கிகளோடு வசனம் எழுத அமர்கிற நபரைப் பார்த்து தமிழ் சினிமா பயந்து மறுத்திருக்கக் கூடும்.

​மொத்தமாக தமிழ் வார்த்​தைக​ளை மட்டும் பயன்படுத்துகிற வசனகரத்தா​​வே ​தே​வையில்​லை என்றும்கூட தமிழ் சினிமா நி​னைத்திருக்கலாம்.

நான் எழுதிக் கொடுத்த கிட்டுவின் முதல் வார்த்தை வங்கி என்னவாயிற்று என்று அதற்கப்புறம் கேட்டதில்லை. எனக்கும் ஒரு விசனம்தான். பாருங்க​ளேன், தமிழ் பேசும் சினிமா நாயகர்களுக்கோ நாயகிகளுக்கோ என் வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்து வரும் வசனத்தை பேசும் பாக்கியம் இல்லாமலேயே போய்விட்டது!

Friday, April 8, 2016

எட்டாம் எண் செருப்பு


திருமணத்திற்கு முன் மனைவி 'எனக்கு தூசு என்றாலே ஒவ்வாது, டஸ்ட்-அலர்ஜி' என்று அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஆஹா, இவர் வீட்டில் ஒரு மயிரிழை அளவுக்கு ஒட்டடை தெரிந்தாலும் ​பொறுக்காது பாய்ந்து சுத்தம் செய்துவிடுபவர் போல என்று பெருமையாக எண்ணிக்கொள்வேன். தி.பின்தான் தெரிந்தது தூசு என்பது அல்ல அதை சுத்தம் செய்வதுதான் அம்மணியாருக்கு அலர்ஜி என்று. தன் உடலைச் சுற்றி சிலந்தி வலைப் பின்னியிருந்தாலும் அதை தன் சொந்தக் கைகளால் அகற்றமாட்டார் - டஸ்ட் அலர்ஜி!

இதற்கு நேரெதிராக, ஊரில் பெற்றோர்கள் என்ன பண்டிகை வரும் எப்படி வீட்டிற்கு வெள்ளையடிக்கலாம் என்ற கணக்கிலேயே காலண்டரையும் வீட்டின் சுவர்களையும் தடவிக் கொண்டிருப்பார்கள். காலண்டர்கள் இளைக்க இளைக்க வீட்டின் சுவர்கள் சுண்ணாம்புப் பூச்சால் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒருவேளை தங்களின் பலத்தை ஒவ்வொரு வருடமும் சோதித்துக் கொள்ளும் பண்பாக வெள்ளையடித்தல் இருக்குமோ என்னவோ.

சுத்தம் என்பது என்ன?

அழுக்கை அகற்றுதல் - வாழத் தகுதியாக இருப்பிடத்தை பேணிக் கொண்டேயிருத்தல். இப்போது வீட்டில் இருப்பதைவிட இண்டர்நெட்டில் இருப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அங்கும் ஏகப்பட்ட தூசு, குப்பை அப்புறம் தே.இ. ஆணிகள். இன்பாக்ஸில் தேவையில்லாத மின்னஞ்சல்கள் (ஸ்பேம்) ஒட்டடைக் கட்டிக் கொண்டேயிருக்கின்றன. ஏன் இந்த மெயில் தினம்தினம் நமக்கு வருகிறது என்று யோசித்து முடிப்பதற்குள் அடுத்த மெயிலும் வந்துவிடுகிறது. இணைய வேகம்! பொறுப்பாக சென்று இது எனக்கு வேண்டாம் என்று சந்தாவிலக்கம் (unsubscribe) செய்தாலும் அதிலும் ஏதாவது செக்மார்க் வைத்து திரும்பவும் இன்பாக்ஸூக்குள் வந்துவிடுகிறார்கள். இதில் திரும்ப திரும்ப நம் கவனத்தை குவித்து நமக்கு தேவையேப்படாத பொருளை விற்றும் விடுகிறார்கள்.

அப்படி சமீபத்தில் வாங்கிய சப்பாத்து காலணி (shoes) ஒன்று காலைக் கடிக்கிறது. காலை மட்டுமல்ல காசையும். இதில் முதலில் வந்த அளவு பெரிதாக இருந்ததால் திருப்பி அனுப்பி - ஒரு அளவு குறைவாக எட்டு அளவில் வேறு ஜோடி வாங்கினேன். இரண்டே நாளில் அதன் விலையை 200 ரூபாய் கூட்டிவிட்டார்கள். எட்டாம் எண் அளவில் பாதம் வைத்திருப்பதற்கான தண்டனை போலிருக்கிறது!

யாரோ ஒருவருக்கு அல்லது நிறுவனத்துக்கு இத்தனை பலம் இருக்கிறது - தினமும் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப, அதில் உங்கள் கவனத்தைக் கோரும் விதமாக வடிவமைக்க, அயராமல் உங்களைத் தொடர அப்புறம் உங்களை ஒரு பொருள் வாங்க வைக்க என ஒரு பெரும் திட்டமிட்ட அணுகுமுறை இதில் ஒளிந்து இருக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க, இதையேதான் நாம் பிற ஊடகங்களிடமிருந்தும் பெறுகிறோம். தொடர்ச்சியாக நீங்கள் படிக்கும் பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி அல்லது வலைத்தளம் எதுவென்று சொல்லுங்கள் - நீங்கள் யாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு ஊடகதந்திரங்களால் சூழப்பட்டுக்கிடக்கிறோம்.  வாக்களிக்கப் போவதற்கு முன் சில ஒட்டடை வேலைகள் நம் உள்மனதுக்குள்ளும் செய்து கொள்ள வேண்டியிருக்குமோ என்று இந்த தேர்தல் அவசரம் சொல்கிறது.

எட்டாம் எண் செருப்பு சில தினங்களுக்கு காலை உறுத்தும் - பொறுத்துக் கொள்ளலாம் அப்புறம் பழகிவிடும். ஐந்தாண்டுகளும் உறுத்துகிறமாதிரி நம்மை ஏதும் 'ஆர்டர்' செய்ய வைத்துவிடுவார்களோ என்று ஊடகங்கள் மேல் பயமாகவேயிருக்கிறது.

Monday, April 4, 2016

மூன்று தர்பூசணிகள்

தேவைகள் குறையுமளவுக்குத் தெய்வத்தன்மை பெறுகிறோம். யார் சாக்ரடீஸ் சொல்லியதா? மறந்துவிட்டது.

அலுவலக நண்பர்களில் பலர் இப்படித் தெய்வத்தன்மை பெற்றவர்களாய் தெரிகிறார்கள். மதிய உணவு வேளையின் போது நண்பர் ஒருவர் கொஞ்சம் வயிறு சரியில்லை என்று முறையிட்டார். எல்லோரையும் ​போல என் பங்குக்கு ஒரு கைவைத்தியம் சொல்லி​ வைத்​தேன். காலையில் நெல்லிச்சாறு குடித்தால் வயிறு சுத்தமாகும் என்று. வயிற்றுவலிக்காரர் தடக்கென்று நிமிர்ந்து கொண்டார்: 'ஏன் சாறு பிழிய வேண்டும்? அப்படியே கடித்துக் கடித்துத் தின்னவேண்டியதுதானே? தேவையில்லாத மின்விரயம்!' என்றார். அதுவும் சரிதான் - நெல்லியைக் கத்தியால் நறுக்குவது, மிக்ஸியில் அரைப்பது, வடிப்பது அப்புறம் அதன் தோலை உபரியாக்குவது போன்ற கார்பன் காலடிகளைத் (Carbon Footprint) தவிர்த்து விடலாம்தான். வயிற்றுவலியையும் மீறிய நண்பரின் தெய்வத்தன்மை அன்று புலப்பட்டது.

இன்னொருவர் இருக்கிறார். பாசமாக என்னை 'நீ என் நண்பேன்டா' என்று வாரிக்கொண்டாலும். அவர் என்னிலும் மூத்தவர். பணியிலும் இருபடிகள் மேலிருப்பவர் (இதுவே அவரின் தெய்வத்தன்மை எனக்கு உணர்த்த போதுமானதுதான்) அவரின் சிறப்புகளில் ஒன்று: வெறுங்காலில்தான் ஓடுவார் - சாதாரணமாக ஒரு முழு மராத்தான் அளவுக்கு - அதாவது 41 கிலோமீட்டர்கள். காலணிகள் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒருமுறை காலில் உள்ள ஆணிகளை காட்டினார், வெற்று பாதங்களில் ஓடுவதால் ஏற்பட்டனவாம். திருவல்லிகேணியிலிருந்து பெருங்குடியிருக்கும் அலுவலகத்திற்கு தினமும் பறக்கும் ரயிலில் பாதச்சோடுகளோடு வருவார் போவார்.

இதன் காரணமாகவே அவரின் கார் பலமாதங்களாக அசையாமல் திருவல்லிகேணியைத் தாண்டாமல் சென்னை மாநகரின் தூய்மைக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் பாருங்கள், அதை எப்போதாவது இயக்கும் வேளையில் அதன் மின்கலம் தீர்ந்துபோய் கார் அசைய மறுக்கும். இது அடிக்கடி நடப்பதால் 'ஏம்பா வீட்டிலேயே வச்சுக்கிற மாதிரி ஒரு ஜம்ப் ஸ்டார்ட் பாட்டரி கிடைக்குமா?' என்று கேட்டார். அடடே! காரை அசைக்காமல் வைத்திருப்பதற்கு கூலியாக தனியாக ஒரு மின்கலம் தேடுகிறாரே? இவர் தெய்வத்திண்ட தெய்வம் என்று அன்று புரிந்து கொண்டேன்.

தேவைகளைச் சுருக்குவது என்பது கவனம் கூடிய திட்டமிடப்பட வேண்டிய செயலாக இருக்கிறது. சுருக்கிக் கொள்வதின் முதல் அடி என்னவென்றால் உங்களுக்கு அந்த அதிகாரம் இருக்க வேண்டும். சரி நமக்கும் கொஞ்சமாவது தெய்வத்தன்மை அல்லது சிறுதெய்வத்தன்மை அதுவும் கூட இல்லாவிட்டால் ஒரு பூசாரித்தன்மையாவது வாய்க்கட்டுமே என்று குறைக்கும் அந்தஸ்துள்ள என் தேவைகளை நோட்டமிட்டேன். கார் பயன்பாடு கட்டுப்படுத்துவது.. ஆனால் தனியாக மின்கலம் வாங்கி மின்னேற்றும் சக்தி கிடையாததால் கார்-பகிர்வு முறையில் (car pooling) அலுவலகம் சென்று வருகிறேன். ஏஸி, மின்விசிறி, சோப்பு, பவுடர் இதெல்லாம் நமக்கு தேவையே இல்லீங்கோ என்று ஹீலர் பாஸ்கர் சொன்னதைக் கேட்டு அதையும் முயன்று பார்த்தேன். வீட்டில் என்னை ஒரு காட்டேரி அந்தஸ்துக்கு சுருக்கும் நிலை ஏற்பட்டதால் இந்த பூசாரித்தன்மை வாய்ப்பும் பறிபோனது!

இருந்தும் அவரவர் திறமைக்கேற்ப தன்னை ஒரு சாதாரண எளியனாக்கிக் கொள்ளும் முனைப்புகளைப் பார்த்து வியக்கிறேன். தெய்வத்தன்மையை விடுங்கள் உலகத்துக்கு நாமளிக்கும் கார்பன் சதவீதத்தைக் குறைத்துக் கொள்ளும் முனைப்பே இதில் முக்கியம்.

இன்னொரு அலுவலக நண்பர் - வாரக்கடைசியில் விவசாயம் செய்கிறவர். அதுவும் இயற்கைமுறை விவசாயம். வீக்என்ட் விவசாயி என்று சொல்லலாம். இதற்காக அவரும் அவர் நண்பர்களுமாக சென்னையிலிருந்து சுமார் 100கிமீ தொலைவிலுள்ள கிராமத்துத் தோட்டத்துக்கு காரில் பயணித்து, அங்கு சென்று தோட்டப்பணிகளை முடித்துவிட்டு திரும்பவும் 100 கிமீட்டர்களில் சென்னை திரும்புவர். சமீபத்தில் பயிரிட்ட தர்பூசணிகளும் முள்ளங்கிகளும் விளைந்து விட்டன. அவை முறையே இயற்கை-தர்பூசணி மற்றும் இயற்கை-முள்ளங்கிகள் என்று பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப் பட்டன. அதை வாங்குவதற்கான படிவங்களும் கூகிள் Docs மூலம்  பிற நண்பர்களுக்கு வாட்ஸ்ஏப் குறுஞ்செய்தியாக வந்துசேர்ந்தது.
இன்னொரு நண்பர் மூன்று தர்பூசணிகளை கொள்முதல் செய்ய விரும்பினார். இந்த பரிவர்த்தனை அனைத்தும் இணைய வாயிலாகவே முடிந்து விட்டது. அட, உணவு விநியோக சங்கிலியில் கார்பன் காலடிகள் எப்படிக் குறைக்கப்பட்டுவிடுகின்றன என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!

பிறகுதான் தெரிந்து கொண்டேன்: அந்தத் தர்ப்பூசணிகள் கிராமத்து தோட்டத்திலிருந்து முதலில் ஒரு டிரக்கில் சென்னை வந்து இறங்குகின்றன. பிறகு விவசாய-நண்பரின் காரில் 3 தர்பூசணிகள் மட்டும் அலுவலகம் புறப்பட்டுப் போயின. அப்புறமாக வாங்கிய நண்பரின் காரில் ஏறிக்கொண்டு விட்டன. மொத்தமாக தர்பூசணிகள் 150 கிலோமீட்டர்கள் பயணித்துவிட்டிருக்கின்றன. அதே கிராமத்திலுள்ள வேறொரு விவசாயியின் (ஆயுட்கால விவசாயி) தோட்டத்து தர்பூசணிகள் எவ்வளவு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியிருந்திருக்கும்? இவையிரண்டில் எந்த தர்பூசணியின் கார்பன் காலடிகள் குறைவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

தர்பூசணி சாப்பிடும் தேவையைக் குறைத்தாவது தெய்வ அல்லது பூசாரித்தன்மை பெற்றே விடுவது என்று முடிவு செய்துவிட்டேன்!

Tuesday, February 9, 2016

கூரை ஓவியம்


இங்கிலாந்தில் இருந்த ஒரு பேராரசிரியர், பணி முடித்து வீடு திரும்பும்போது சாலையோரத்திலுள்ள மின்கம்பங்கள் ஒன்றுவிடாமல் குடையால் தட்டிக் கொண்டே செல்வாராம். ஏதாவது ஒரு கம்பம் விடுபட்டுவிட்டால், திரும்பவும் வந்து தட்டிவிட்டுதான் வீடு செல்வராம். இது obsessive compulsive disorder எனும் மனப்பித்து. பெரிய மேதைக்குள்ளும் இப்படி ஒரு பித்து இருக்கத்தானே இருக்கும்!

விருந்துகளின் கரண்டி, முள்கரண்டி திருடுபவர்கள் உண்டு. Fight Club படம் பார்த்ததுண்டா? அதில் பிளவுபட்ட மனஆளுமைகள் (split personality) என்ற மனோவியாதியை சிறப்பாக கையாண்டிருப்பார்கள்.

இப்படி தனித்துவமான குணாதிசயம் கொண்ட மக்கள் நம் நினைவில் நிறுத்துவது ஒருவகையில் நம் மனநலத்துக்கு நல்லதுதான். பழனியில் பாலிடெக்னிக் படித்துக்கும் போது மூத்த மாணவர் ஒருவர். இயந்திரம் போன்ற உடலும் குரலும் கொண்டவர். மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்த எங்களை ரேக்கிங் என்ற பெயரில் புதுசு புதுசாக சோதிப்பார்.

முதல்முறை அவரிடம் நான் மாட்டிக்கொண்டது இப்படிதான். அறைக்கு வந்தார்.. எங்களைப் பார்த்து அலட்சியப் புன்னகை உதிர்த்துவிட்டு, இயந்திரக்குரலில் 'டே.. டூத்பேஸ்ட் இருக்கா?' என்றார். அப்பாடா வெறும் பற்பசையோடு சிக்கல் தீர்ந்தது என்று புதிதாக வாங்கிய கோல்கெட் பற்பசையை எடுத்து பவ்யமாக நீட்டினேன். பாவம், மூத்தவர் சாயுங்காலத்தில் பல்துலக்கும் ஒழுக்கங்கள் கொண்டவர் போல - என்ன சொந்தமாக வாங்கிக் கொள்ளத் தெரியவில்லையோ என்று எண்ணிக் கொண்டேன்.

பற்பசையைக் கையில் பெற்றுக் கொண்ட அவர் அடுத்து கேட்டது: 'டே.. தீப்பெட்டி இருக்கா?' பற்பசைக்கும் தீப்பெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. அறை நண்பன், ஒரு தீப்பெட்டி எடுத்து நீட்டினான்.

'அண்ணா, கரண்ட் போயிடுச்சுன்னா, மெழுகுவர்த்தி ஏத்தறதுக்காக வச்சிருந்தேணுங்ணா' என்று பவ்யமாக நீட்டினான்.

ஹேஹே என்று சிரித்தவாறே,..

'டே அந்த டேபிளை எடுத்து கட்டில் மேலே போடுங்கடா' என்றார். இப்போது எங்களுக்கே கொஞ்சம் ஆர்வம் லேசாக தொற்றிக் கொண்டது போலிருந்தது. அண்ணன் ஏதோ வேடிக்கை செய்து காட்டப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு மேஜையை கட்டிலுக்கு ஏற்றினோம். கையில் பற்பசையும் தீப்பெட்டியுமாக இயந்திர மனிதர் மேஜையின் மீதேறினார். அறையின் மேற்கூரை இப்போது அவர் கைக்கெட்டும் தூரம். பற்பசையை பிதுக்கி கூரையில் நான்கைந்து பொட்டுகள் போல வைத்தார். நாங்கள் எல்லோரும் கீழிருந்து கூரையையேப் பார்த்துக் கொண்டிருந்தோம். அநேகமாக அனைவரது வாயும் பிளந்தபடி இருந்திருக்கும் என்று இப்போது கற்பனை செய்து கொள்கிறேன்.

பிறகு ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் ஒரு தீக்குச்சி என சொருகினார். தீக்குச்சியின் மருந்துப் பகுதி கீழ் நோக்கியிருந்தது.
இப்போது, மற்றொரு தீக்குச்சியைப் பற்றினார். தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த தீக்குச்சிகள் ஒவ்வொன்றாகப் பற்றவைத்தார். தீ மேல் நோக்கி எரிந்து ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் கரிப்படலமாய் படர்ந்தது.
கீழிலிருந்து பார்க்கும் போது கூரையில் ஓட்டை விழுந்தது போன்ற கரும்பொட்டுகளாக இருந்தன.

அண்ணனார்  மேஜையிலிருந்து குதித்து இறங்கினார். நாங்கள் அவரையே ஒன்றும் புரியமால் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த விஞ்ஞான செய்முறைக்கு ஏதாவது விளக்கம் கொடுப்பாரோ என்று அனைவரும் அமைதி காத்தோம். ஆனால் அண்ணன் எதுவும் சொல்லாமல் அலங்கார விளக்குகள் அமைத்துமுடித்துவிட்டு பார்வையிடுபவர் போல மேற்கூரையை பார்த்துக் கொண்டார். திருப்திகரமாக முடிந்தது என்பது போன்ற புன்னகையுடன் எங்களைப் பார்த்தார். விளக்கம் ஏதும் கொடுக்காமல், பற்பசையையும் தீப்பெட்டியையும் மட்டும் கொடுத்துவிட்டு அண்ணன் அறையைவிட்டுச் சென்றார்.

நாங்கள் திருதிருவென்று கருகருவென்றிருந்த மேறகூரைப் பொட்டுக்களையேப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
திடீரென்று ஒரு இயந்திரக் குரல்.. அண்ணன்தான்.

'என்னங்கடா மேலேயேப் பார்த்துக்கிட்டிருக்கீங்க? பேஸ்ட் வேஸ்டா போச்சுன்னு வருத்தமா இருக்காடா?'
'........'
'பேசாம பேஸ்ட்டை மேல போயி எடுத்து பல்லு விளக்கிடுங்கடா...'
உபரியாக ஹேஹ்ஹேஹே என்ற அதிரும் இயந்திரச் சிரிப்பையும் உதிர்த்து விட்டுச் சென்றார். எல்லா அகல நீளங்களில் யோசித்தாலும் அந்த அண்ணனின் கூரை ஓவிய விந்தை இன்னும் பிடிபட மாட்டேங்கிறது.

Wednesday, February 3, 2016

நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்


மனைவி அடிக்கடி எனக்கு நினைவூட்டும் வாக்கியம். நடுவில் மின்கம்பம் எப்பவும் ஞாபகம் இருக்கட்டும்! அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்தானே? அதில் அம்பியை அல்லேக்காக இரண்டு ஆட்டோக்களில் வந்து ஹைஜாக் செய்து அப்படியே கொண்டுபோய் ஒரு மின்கம்பத்தில் சாத்துவார்களே நினைவிருக்கிறதா? டொய்ங்ங்ங்-ன்னு ஒரு சத்தம் கூட கேட்கும். அப்புறம் சாக்கில் தொங்கப் போட்டு ரூல்ஸ் ராமானுத்தை பேட்பாய்ஸ் குமுறுகுமுறென்று குமுறுவார்கள். சாக்கிலிருந்து சன்னமாக தக்காளி சாஸ் வரும்வரைக்கும் குமுறுவார்கள்.

இந்த மொத்த ஸீனும் எனக்கு அப்பப்ப நினைவுக்கு வரவைப்பதற்கான மந்திரம்தான் - மனைவி சொல்லும் நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்.
சரி, எனக்கும் அம்பியாகிய ரூல்ஸ் ராமானுஜத்திற்கும் என்ன சம்பந்தம்? தயவுசெய்து படியுங்கள் உங்களுக்கும் உபயோகமாக இருக்கக்கூடும்:

1: வீட்டு குடிநீர் தேவைக்காக தலைகீழ் சவ்வூடுபரவல் தானியங்கி வடிகட்டி வாங்கினேன். அதாவது ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் (RO Water Purifier) என்பதையே தமிழில் சொல்லுகிறேன் (இப்போது உங்களுக்கு கூட என்னை சாக்குக்குள் தொங்கப் போடலாம் என்று தோணும் - தப்பில்லை)

2: இந்தியாவிலேயே ஏன் இந்த ஆசியாவிலேயே நம்பர் ஒன் என்று சொல்லக் கூடிய பிராண்டாக பார்த்து வாங்கினேன். பதினாறாயிரம் ரூபாய் விலை கொடுத்து. அதுவும் நல்ல வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியான வடிவமைப்பில் ஒரு குட்டி வெள்ளை பாண்டா கரடி மரத்தை கவ்வியிருப்பது போல சமையலறையின் சுவரில் பொருந்திக் கொண்டது.

3: சென்னை நிலத்தடி நீரை அதன்மூலம் பரிசுத்தமானதாக்கி குடும்பம் மொத்தமும் அருந்தி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம் சில வருடங்கள். நானும் ஆர்ஓ தண்ணீர் குடித்து நல்ல அம்பியாகவே இருந்து வந்தேன்.

4: ஆனால் பாருங்கள் திடீரென்று ஒருநாள் அது உங்களுக்கு உழைத்தது போதும் என்பது போல் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல்  இயக்கத்தை நிறுத்திக் கொண்டுவிட்டது. எங்களுக்கெல்லாம் நீர் ஆதாரமாக இருந்த அந்த வெண்ணிறப் பெட்டி இப்படியானது எங்கள் அனைவருக்கும் பெரு வருத்தமே.

5: பெட்டியை பழுது நீக்கும் பொருட்டு கம்பெனியிடம் பேசினோம். அடுத்த நாளே ஒரு தேர்ந்த வல்லுநர் வீட்டுக்கு வந்தார். பாவம் வந்தவருக்கு குடிக்க நீர் கூட பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டியிலிருந்து பெறமுடியவில்லை. 30 ரூபாய் கொடுத்து வாங்கிய பாட்டில் நீரையே மொண்டு கொடுத்தோம். குடித்துமுடித்து வாயைத்துடைத்து விட்டு வல்லுநர் பெட்டியை ஆய்வு புரிந்தார்

5.1: அவரது ஆய்வறிக்கை​யைக் கேட்டபின் எங்களுக்கே இயக்கம் நின்று விட்டது போலிருந்தது - ஏனென்றால் ஆர்ஓ பெட்டியின் 80% பாகங்கள் பழுதுதாகி பயனற்றதாகிவிட்டதாம்.

5.2: இந்த கரடியை நீங்கள் காப்பாற்றுவதற்கு பதில் புதுசே வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்துவிட்டு கிளம்பினார் கம்பெனியின் வல்லுநர்.

6: ஆறு மனமே ஆறு என்று கூறிக்கொண்டாலும் எங்களுக்கு நீருக்கு தினமும் 100 ரூபாய் மாதிரி செலவாகிக்கொண்டிருந்தது - கூடவே நீர் கேன்களின் தரம் கேள்விக்குறியதாக இருந்தது. மனைவி ஒருசமயம் கேன் நீருக்குள் சமர்த்தாக நீந்திக் கொண்டிருந்த சில க்க்குட்டிப்புழுக்களை மொபைல் காமிராவில் படமாக்கினார். அவர் இந்த கோணத்தில் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் டிஸ்கவரி அல்லது நேட்ஜியோ போன்ற ஏதாவது சேனலில் பணியமர்த்தப்பட்டிருக்க கூடும்.

7: இங்கேதான்.. அம்பி அந்நியனாக எழுந்தேன் என்று தெரிந்து கொள்க..! ஏன் பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டி ஏன் பொசுக்கென்று நின்றுபோனது? ஏன் ஒரு சின்ன அலாரம் கூட அது கொடுக்கவில்லை? நாங்கள் பயன்படுத்திய விதம் தவறா அல்லது பெட்டி தயாரிக்கப்பட்ட விதம் தவறா? போன்ற பல பல கேள்விகள் என்னைச் சுற்றின.

8: அந்நியனாக ஆவதைவிட ரூல்ஸ் ராமானுஜமாக மாறுவதே உசிதமாகப் பட்டது எனக்கு (உசிதமணி.. உசிதமணீ) கம்பெனி பெற்ற தரச்சான்றிதழ்கள், குடிநீருக்கான அரசு நிர்ணயிக்கும் தரக்கட்டுப்பாட்டுகள், ஆர்ஓ பெட்டிக்கு கம்பெனி அளித்திருந்த உத்திரவாதம், பெட்டி இயங்கும்முறை, நான் வாங்கிய பெட்டி பழுதான விதம் இவைகளை அலசி காயப்போட்டு இஸ்திரியும் போட்டு ஒரு ஈமெயிலை கம்பெனிக்கு அனுப்பினேன்.

9: சில நாட்களிலேயே ஒரு மண்டல மேலாளர் தொடர்பு கொண்டார்.. நான் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புதான் கோளாறு என்பதில் ராமானுஜமாக நின்றேன். நாட்கள் கழித்து வேறொரு மேலாளர் பேசினார்.. அதையே சொன்னேன்.. கூடவே கோளாறு உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதால் எழும் ஆபத்துகளையும் விளக்கினேன் அவருக்கு. அப்படியே அதை ஈமெயிலாக்கியும் அனுப்பினேன்.

10: இன்னும் சில நாட்களில் வேறொரு மேலாளர் பேசினார்.. அம்பி உங்களுக்கு இழப்பீடாக புது ஆர்ஓ பெட்டியே வழங்குகிறோம் என்றார். அதுவும் வந்தது புது பாண்டா கரடி போல சமையலறையில் அதே இடத்தில் ஒட்டிக் கொண்டது. பதினாறாயிரம் மிச்சப்பட்டது அப்புறம் நீர் கேனுக்குள் நெளியும் புழுக்களை படமெடுப்பதிலிருந்து விடுபட்டது போன்றவை மனைவிக்கு ஆறுதலாய் இருந்தாலும் - என்மேல் ஒரு பயம் வந்துவிட்டிருந்தது போல.

11: இதுபோன்று ஏதாவது தரக்குறைப்பாடுகள் சொன்னாலோ தென்பட்டாலோ உடனடியாக செயலூக்கம் பெற்றவனாகி ஈமெயில் புகார்களை சம்பந்தபட்டவர்களுக்கு அனுப்புகிறவனாகிவிட்டேன்.

12: இது அப்படியே தொடர்ந்தது - கடையில் வாங்கிய சப்பாத்தி மாவில் இருந்த மண்துகளுக்காக, வீடு பக்கத்தில் கழிவு கொட்டும் வீட்டுக்காரருக்காக, குப்பை எரித்துவிட்டுப் போகும் கார்ப்ரேக்ஷன் ஊழியருக்காக, கட்டணம் வசூலிக்கும் சாலையின் குழிகளுக்காக, குறித்த இடத்திற்கு வந்து கூட்டிச்செல்லாத வாடகைக் காருக்காக என ஈமெயில் அனுப்பிக் கொண்டேயிருந்தேன். பாருங்கள், ரூல்ஸ் ராமானுஜம் என்னுள் முழுதாக இறங்கிவிட்டிருந்தான் போலிருக்கிறது!

என்னைக் கட்டுப்படுத்தும் விதமாக மனைவி இந்த நடுவில் மின்கம்பம் இரண்டு ஆட்டோக்கள் சொன்னாலும் ஈமெயில்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன (ஒரு பயத்தோடுதான்). என்னைப் போல் இன்னும் நிறையபேர் இருப்பார்கள். தரத்தை வேண்டுகிற, குறைகளை களைய முயற்சிக்கிற அம்பிகள் எங்கும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

வலுவான மின்கம்பங்கள் நின்றாலும் ராமானுஜர்கள் தேவை நமக்கு அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது, அல்லவா?

Tuesday, February 2, 2016

அந்தப் பறவை எந்த தேசம்?


பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஒரு குறு ஆச்சரியம் எனக்கு. சதுப்புநிலத்தை இரண்டாக பிரித்துக்கொண்டு ஓடும் பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை. சாலையின் ஒருபக்கம் உள்ளூர் போட்ட குப்பை மலை. மறுபக்கம் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம். சாலையால் சதுப்புநிலத்தின் மறுப்பக்கம் காப்பாற்றப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

சென்னை வந்ததிலிருந்து இவ்வழியாகத்தான் அலுவலகம் போய் வருகிறேன். ஆக்ஸிலேட்டரை மட்டுப்படுத்துமாறு பறவைக்கூட்டம் ஆர்ப்பரிக்கும். அதிகம் பார்த்தறியாத வெளிநாட்டுப் பறவைகள். பருவத்துக்கென ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கின்றன. சீக்கிரம் போ இந்தக் கோடைக்குள் சென்னை சேரணும் என்ற திட்டமாக ஏதோவொரு குளிர்தேசத்திலிருந்து கூட்டமாய் வருகின்றன - போகின்றன.

தலைமுறைகளுக்கு தன் பயணக்குறிப்புகளை கடத்தி ஒரு மரபணு பதிவாக ஆகிறது இந்நிலம்!

ஒரு நல்ல சாயுங்காலத்தில் வீடு திரும்பும் போது காணக்கிடைத்தக் காட்சி - குறைந்தது 400 அல்லது அதற்குமேலாக வாட்டசாட்டடமான பறவைகள் நிரையாக சதுப்புநிலத்தின் மேல் நட்டுவைத்திருந்த டிரான்ஸ்பார்மர் கம்பியில் அமர்ந்திருந்தன. நல்ல கனமான மின் கம்பிதான் இருந்தாலும் அத்தனை பறவைகளும் ஒருசேர எழுந்தால் அதன் அதிர்வில் கம்பியே அறுந்துபோய்விடும் போலிருந்தது.

அந்த பறவைகளின் திரள், அதுகாட்டும் பிரம்மாண்டம், ஒருமித்தம் இயற்கையின் பேரியக்கமாக தோன்றியது அன்று. ஒரு பேராற்றலை தாங்கிக் கொண்டு அமைதியாக தவமிருப்பது போல பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன.

சாலையின் மறுப்பக்க குப்பைமலை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டேபோகிறது. மலை சரிந்து சரிந்து தூரமாக தெரிந்தது இப்போது சாலையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. குப்பையில் சதுப்புநிலம் உறிஞ்சியது போக எஞ்சி நிற்கும் பிளாஸ்டிக் மட்டுமே மலையாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நகரும்-பிளாஸ்டிக்-மலையும் கூட இன்னொரு பிரம்மாண்டம்தான். பிளாஸ்டிக் குப்பை பெருக பெருக குளிர்தேசப் பறவைகள் வரத்து குறைந்து போய்கொண்டேயிருக்கிறது.

என்றோ எங்கோ எவரோ வீசிய சின்ன பாலிதீன் பை எவ்வளவோ தூரத்தில் இருந்து பெரும்பிரயாணம் செய்து வரும் பறவை நிற்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்கொண்டேயும் இருக்கிறது. பள்ளிக்கரணையை தென்சென்னையின் சிறுநீரகம் என்று சொல்கிறார்கள். தரைமட்டத்திற்கு கீழ் கடல்நீரை புகவிடாமல் ஒரு தடுப்பு அரணாக நிற்பதால். ஒரு நிலம் தன் மேற்பகுதியில் கோடி உயிர்களின் சரணலாயமாக இருக்கிறது; கீழே ஒரு ஊருக்கே அரணாகவும் இருக்கிறது.

Thursday, October 22, 2015

குட்டிக​ளை காப்பாற்றுங்கள்


அன்புள்ள புளூகிராஸ்,

மடிப்பாக்கத்தில் இருந்து இ​தை எழுதுகி​றேன். நான் வசிக்கும் தெரு​வோரமாக சமீபநாட்களாக 6-8 சின்னஞ்சிறு நாய்குட்டிகள் திரிந்து வருகின்றன. சா​லை​யோரம் என்பதால் அக்குட்டிகள் வாகனங்களில் அடிபடுவதற்கான வாய்ப்புகள் நி​றைய. த​யைகூர்ந்து அங்கிருந்து எடுத்துச் ​சென்று அந்த சிசுக்க​ளை காப்பீர்களாக, இடம் பற்றி அறிய என் ​கை​பேசிக்கு அ​ழைக்கவும் - 99.....84

அன்பாக,
​ஜெகநாதன்
மடிப்பாக்கம்

அன்பு ​ஜெகன்,

தகவலுக்கு நன்றிகள்! புளுகிராஸ் ஒரு அரசு சாரா தன்னார்வ அ​மைப்பாகும். எங்களிடம் மிகக்கு​றைந்த பணியாளர்க​ளே உள்ளனர். தற்சமயம் 4 முதலுதவி வாகன சாரதிக​​​ளே உள்ளனர். அவர்களும் விபத்துக்களுக்கு வி​ரைவதி​லே​யே முழு​மையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக​வே, நீங்க​ளே ஏன் அக்குட்டி நாய்களை தங்கள் ​கைப்பட எடுத்துவந்து எங்கள் காப்பகத்தினிடம் ​ஒப்படைக்கக் கூடாது?

அன்புடன்

புளூக்ராஸ்
​சென்​னை.

புளூகிராஸ்,

வி​ரைவான பதிலுக்கு நன்றி! இருந்தும் உங்கள் ஆ​​லோச​னை​யை ​செயல்படுத்த முடியாதவனாகி​றேன். ​தெரு​வோர நாய்குட்டிக​ளை ​தொடப்​போனால், தாய்நாயிடமிருந்து என்ன கி​டைக்கும் என்று உங்களுக்கு நான் விளக்க ​வேண்டியதில்​லை. அனுபவமுள்ள கரங்களால் மட்டு​மே இ​தை ​​செய்ய இயலும் என நம்பி​யே உங்க​ளைத்​ ​தொடர்பு ​கொள்கி​றேன். ஆக​வே விரைந்து வந்து அக்குட்டிக​ளைக் காப்பாற்றுங்கள். விபத்துக்கு பின் முதலுதவி வண்டி அனுப்புவ​தைக் காட்டிலும் விபத்​தைத் தடுக்க ஒரு காக்கும் கரத்​தை உட​னே அனுப்புவதுதான் சிறந்தது, அல்லவா?

ப்ளூகிராஸ்:
ஓ! தாயும் உடனிருக்கிறதா?

ஜெகன்:
என்​றே நம்புகி​றேன். வி​ரைந்து வர முடியுமா? குட்டிகள் அங்கிங்கு என சாலையில் திரிவதால் விபத்துவாய்ப்பு அதிகமாயிருக்கிறது.

ப்ளூகிராஸ்:
மன்னிக்கவும் ​ஜெகன். தாய் உடனிருப்பதால் குட்டிக​ளை பிரிக்க முடியாது. ஏனென்றால் குட்டிக​ளைப் பிரிந்த தாய் ​நோயுறும் :(
இருந்தும் உங்கள் ​கோரிக்​கை​யை காப்பக ​மேலதிகாரியிடம் ​தெரிவிக்கி​றோம். அவர் தக்க முடி​வெடுப்பார்.

---

இது​வே புளுகிராஸிலிருந்து ​பெற்ற க​டைசி மின்னஞ்சல். அப்புறம் உயிருள்ள நாய்க்குட்டிக​ளை காத்துச் ​செல்ல கரங்க​ளோ, அல்லது சில தினங்களில் அடிப்பட்டு ​செத்த குட்டிக​ளை அள்ளிச் ​செல்ல வாகன​மோ வர​வேயில்​லை!
அ​ரையடி உயர​​மேயிருந்த குட்டி​யொன்று வீட்டுக்கு அருகில் அடிபட்டு ​செத்துக் கிடந்தது. ​​பிற வாகனங்களால் ​மேலும் அரைபடாமல் இருக்க அந்த அரையடி சவத்​தை ஓரமாக தள்ளி​வைக்க மட்டு​மே என்னால் முடிந்தது. எஞ்சிய​ 3 - 4 குட்டிகள் இப்​போது நன்கு வளர்ந்து விட்டன. குறிப்பிட்ட வாகனங்க​ளை மட்டும் கு​ரைத்தும் துரத்தியும் அ​வை இன்னும் உயிர்த்திருக்கின்றன.

Wednesday, October 14, 2015

புலி எனும் மிகையதார்த்த சினிமா


சிம்புதேவன் அருமையான கார்ட்டூனிஸ்ட். ஆனந்தவிகடனில் வந்த அவரது புலிகேசி சித்திரங்கள் மூலம் அறிவேன். தமிழ்-கார்ட்டூன் எல்லைகளை விரித்துச் செல்லும் வன்மை கொண்டவர்கள் பட்டியலில் சிம்புதேவன் பெயரை நிச்சயம் பதிவு செய்யலாம். கிமுவில் சோமு போன்ற காமிக் (Comic)முயற்சிகள் அவரை தனித்து காட்டுகின்றன. இது போன்ற ஆக்கங்கள் தமிழ் இலக்கியத்தில் மிக குறைவாகவே இருக்கின்றன. இதை நான் எப்போதும் சொல்வதுண்டு: சிறுவர்களுக்கான இலக்கிய திறவுகோல் காமிக்ஸ் வசமே இருக்கிறது. ஒரு மொழியின் சித்திரக்கதைகள் குறைந்து போகுமென்றால் அத்தலைமுறையிலிருந்து தாய்மொழி இலக்கிய வாசிப்பு என்ற கதவு அடைக்கப்பட்டு விட்டது என்றே அர்த்தமாகிறது. இவ்வகையில் தமிழில் வரும் காமிக் முயற்சிகள் மற்றும் அதன் இலக்கிய சாத்தியங்கள் கவனத்தில் இருத்த வேண்டியவையாகின்றன.

ஓவியனின் சினிமா எப்போதும் பிற-சாதாரண வணிக சினிமாக்களிலிருந்து தனித்து நிற்கும். சத்யஜித் ரே-யிலிருந்து ஷங்கர் வரை உதாரணம் சொல்லலாம். ஒரு விஷுவல் தேடல் கொண்டதாக ஓவியன் கான்வாஸின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் எடுத்துக் கொள்ளும் கவனமாக திரைக்காட்சிகள் நிறைந்திருக்கும். இதை சிம்புதேவனும் நிரூபிக்கிறார். இவர் காமிக்ஸ் சாத்தியங்கள் கொண்ட ஓவியன் என்பதால் இதை எழுதுகிறேன். ஹாலிவுட்டின் ஏறக்குறைய அனைத்து சூப்பர் ஹீரோக்களும் காமிக்ஸில் இருந்து வந்தவர்களே. டிஸி (DC) மற்றும் மார்வல் (Marvel) காமிக்ஸ்கள் தாரை வார்த்த பாத்திரங்கள்தான் ஹாலிவுட்டின் பெரும்பான்மையான படங்களில் காண்கிறோம். இது தவிர பான்டஸி (Fantasy - கற்பனாவாதம் / மி​கையதார்த்தம்) மற்றும் அனிமேஷன் கதைகளுக்கான மூலங்களும் காமிக்குகளே! சித்திரக்கதைகளுக்கு அதீத வரவேற்பு மேற்கு நாடுகளில் எப்போதும் உண்டு. சிறுவர்களுக்காக படைக்கப்பட்ட காமிக்ஸ் பாத்திரங்கள்தான் இப்போதும் அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஹாலிவுட் படங்களின் கதாநாயகர்கள். சிம்புத்தேவனின் கிமுவில்-சோமு சித்திரக்கதை கூட இது போன்ற திரையுலக விரிதல் சாத்தியம் கொண்ட ஆக்கம்தான். ஆனால் தமிழ் சினிமாவானது, தமிழ் காமிக்ஸ் உலகம் போன்றே புதுமுயற்சிகளுக்கான முனைப்புகள் இன்றி சூம்பிப்போய் கிடக்கிறது.

இன்னமும் சூப்பர்-ஹீரோ அல்லது மாயாஜால கதைகள் என்றால் நமக்கு அது ஹாலிவுட் படங்கள்தான். நம்மூரில் சூப்பர்-ஹீரோ வரக்கூடாது; வரவும்முடியாது - நாம் நிறைய மின்கம்பிகள் கட்டி, ஏராளமாய் சாக்கடைகள் திறந்து வைத்திருக்கிறோம். பறந்து செல்லும் சூப்பர்களுக்கு இவ்விடம் சாத்தியப்படாது.மாயாஜாலம் என்றால் விட்டலாச்சார்யா வகையறாக்கள், அதைவிட்டால் அம்மன்களின் கிராபிக்ஸ் (பி, சி சென்டர்களில் வசூல் அள்ளும் - வேறென்ன வேணும்?) இதுபோன்ற நாமே அறியாமல் வகுத்துவிட்டிருக்கும் சில குறுகிய மனப்பான்மையால்தான் நம் கற்பனைசாத்தியங்கள் சூம்பிபோய் விட்டிருக்கின்றன. கிரிஷ், ரா1, வேலாயுதம், எந்திரன் மற்றும் முகமூடி போன்று சில அபூர்வங்கள் மட்டுமே இந்திய சினிமா வசமுண்டு. முற்றிலும் அரசு அலுவலக குமாஸ்தா ரீதியில் நவீன படைப்பாளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புது வகை கதைசொல்லல் அல்லது ஓவியர்களுடன் இணைந்து கிராபிக்ஸ்-நாவல் போன்ற அம்சங்கள் தமிழில் குறைவு - அல்லது இல்லை என்று கூட சொல்லலாம்.

பான்டஸியில் நம் மரபு சார்ந்த கதைகளையும் கதைக்களங்களையும் இழந்து விட்டு தலைமுறைகளாக மேற்கத்திய கதைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வீடியோ கேம் போன்ற தளங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்திற்கு இதுவே காரணமாக இருக்கமுடியும். தொலைக்காட்சி கார்ட்டூன்களைப் பார்த்து வளரும் சிறுவர்கள் பிறகு அதன் தாக்கத்தில் வெளிவரும் ஹாலிவுட் படங்களையே விரும்ப முடியும். இது இவ்வாறாகவே புரோகிராம் செய்யபட்டு விடுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு ஹாலிவுட் படங்கள் மட்டுமே அளவுகோல். இதனாலேயே தாய்மொழி - தாய்நாட்டு படங்களை அந்த அளவுகோலால் சுலபமாக நிராகரித்து விடுகிறார்கள். சூப்பர்ஸ்டார் என்ற நிழலிருந்தும் கோச்சடையான் போன்ற படங்களின் தோல்விக்கு இதுவே காரணமாய் இருக்க முடியும். தொழில் நுட்ப மற்றும் அபரிமித முதலீட்டில் வெளிவரும் மேற்கத்திய படங்களின் உச்சத்தை எட்ட முடியாததால் நம்மொழிப் படங்கள் இன்னமும் அ.மா.அரைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.

இந்த அவலம் நீடிக்கின்ற தமிழ் சினிமாவில் சிம்புத்தேவனின் திரைப்படைப்புகள் சிறது ஆசுவாசத்தை அளிக்கின்றன. இம்சை அரசனிலிருந்து புலி வரை படைப்புகளில் மிகையதார்த்தம் மற்றும் மாயாவாதம் தொடர்வதை தேர்ந்த சினிமா விமரிசகர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள். புலி போன்ற சிறுவர்-பான்டஸி படத்தில் நடித்த விஜயின் துணிச்சலும் கவனத்தில் கொள்ள வேண்டியதே. இருந்தும் சிம்புத்தேவன் தனது இயல்பான மண்வாசனை கொண்ட கதைக்களத்திலின்று கழன்று ஹாலிவுட் தாக்கத்தில் புலி கதையை வடித்திருப்பதன் காரணம் வணிக ரீதியான அழுத்ததமாக இருக்குமோ? இருந்தும் துவளாத சுவாரஸ்யமாய் திரைக்கதையின் போக்கு இருக்கிறது. வான்-ஹெல்ஸிங்கில் (Van Helsing) வரும் டிராகுலா, பான்ஸ் லேபிரின்த் (Pan's Labyrinth) - தவளை மற்றும் ஒற்றைக் கண், மெலிஃபிஷியன்ட் (Maleficent) இன்னும் ஸிலீப்பிங் ப்யூட்டி Sleeping Beauty போன்ற படங்களின் தாக்கம் தெரிகிறது. இதன் காரணமாகவே நமக்கு ஹாலிவுட் அளவுகோல் நம்மையறிமால் வந்துவிடுகிறது. அசல் நம் மண்வாசனை கொண்ட கதையாக இருக்கும் போது கிராபிக்ஸ் ஒப்பீடு இரண்டாம் பட்சமாக போயிருக்க கூடும். கதையவில் புலி கம்பீரமாக இருந்தாலும் காட்சியமைப்பில் அது குன்றிவிட்டது.

சிம்புத்தேவன் படத்தில் வழக்கமாக ஒரு விமர்சன அரசியல் நையாண்டி வரும். இம்சை அரசனில் கோக் கம்பெனிகளை விமர்சித்திருப்பார். அறைஎண்.. கடவுள் படத்தில் ஸாப்ட்வேரில் வேலை செய்பவர்களை. முரட்டுசிங்கத்தில் புதையல் தேடும் போது வரும் குறிப்புகளில். இதில் சிலது கதைப்போக்குடன் ஒவ்வாமல் போவதை கவனித்திருக்கிறேன். அது திரைக்கதையின் வலுவை குறைக்கும் விதமான நையாண்டியாக மாறிவிடுகிறது. அதுபோன்றே புலியிலும் ஒரு இடத்தில் ஆல்பா-பீட்டா-காமா (நியூட்டன், ஐன்ஸ்டீன்) எல்லாம் வருகிறார்கள். இது கதை மீதான நம்பகத்ததன்மை நீர்த்துப் போக செய்துவிடுகிறது. இனி வருவது அனைத்தும் நையாண்டிவகை சினிமாதான் என்ற எண்ணத்துக்கு உந்தப்பட்டவர்களாகிறோம். இவை தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.

முக்கியமாக பான்டஸி கதை என்பதே ஒவ்வொரு காட்சியிலும் முற்றிலும் மாறுபட்ட கற்பனையை பார்ப்பவர்களின் பிரமிப்பு குறையாமல் நகர்த்திச் செல்வதுதான். இது ஒரு அரைமயக்க ரசனை அனுபவத்தை பார்வையாளனுக்கு கொடுத்து அவர்களின் பால்யத்தை மீட்கும் கவனமான வேலை. அதில் அர்த்தமற்ற நையாண்டி இடைசெருகல்கள் பார்வையாளளின் மயக்கத்தை குலைத்து அவனை ஒரு விமர்சகனான நிமிர்ந்து கொள்ள செய்து விடும். அப்படி விலகியவன் கதையை விமர்சிக்கவே செய்வான்.

கதையோட்டத்திலுள்ள சில தர்க்கரீதியான குறைகளை தவிர்த்து அணுகினால், சிம்புத்தேவனின் புலி தமிழ் சினிமாவில் உள்ள பான்டஸிக்காக வெறுமையை நிரப்பும் முயற்சியாக கொள்ளலாம். இது போன்ற ஆக்கங்கள் திரையுலகிலும் அதனினும் முதன்மையாய் தமிழ் இலக்கியத்திலும் அதிகம் வரவேண்டும். அதுவே வரும் தலைமுறைகளுக்கான தாய்மொழி இலக்கியத்திற்கான வழித்தடம்.

Monday, September 7, 2015

எமனுக்கு எமனும் ஏஞ்சலாவின் காப்பியும்


ஸ்காட்ச் பாட்டில் படம் போட்டு ஒரு வாட்ஸ்ஏப் செய்தி.. அதைத் தொடர்ந்தவாறே முந்தானை முடிச்சு தீபா 'அ' போட சொல்லித்தரும் படம் வருகிறது. பார்த்தால் ஆசிரியர் தின வாழ்த்தாம். ஸ்காட்ச் பாட்டில் டீச்சர்ஸ் பிராண்டு!!

ஆசிரியர் தினத்​தை​யொட்டி அப்படியே சில ஆசிரியர்கள் நினைவில் வந்து போனார்கள்...

அதிகம் நான் படித்த கிராம அரசு பள்ளி ஆசிரியர்கள். ஒரு ராணுவ ஒழுங்குடன் பள்ளிக்கூடத்தை நடத்துபவர்கள். பணிமூப்பு பெறும்வரைக்கும் தன் நடை உடை பாவனை என எதிலும் சிறு மாறுதலைக் கூட சமரசம் செய்து கொள்ளத் தெரியாதவர்கள்.

நானறிந்து ஒரு நடுநிலைப் பள்ளி ஆசான் - மிகுசிக்கனத்திற்கு ஒரு வாழ்வியல் உதாரணம் எனலாம். சைக்கிளில் கேரியர் வைத்துக் கொள்ளமாட்டார் - பிறர் உட்காரும் பாரத்தால் வண்டி கெட்டுவிடுமாம். கேரியர் இல்லாததால் தன் மதிய உணவு பாத்திரத்தை (சாப்பாட்டு கேரியர்) சைக்கிளின் - மைய இணைப்பு கம்பியில் ஒரு மஞ்சள் நிற நைலான் கயிறால் கட்டிக்கொண்டு வருவார். அந்த மஞ்சள் நிற கயிறும் அதை சாப்பாட்டு பாத்திரத்தை சுற்றியிருக்கும் விதமும் ஒரு நாளும் மாறியதில்லை. அவரது பள்ளி கடைசி நாள் வரை அதே மஞ்சள் நிற நைலான் கயிறுதான். கயிறின் ஒரு நூல் கூட பிரிந்து யாரும் பார்த்ததில்லை.

கிராமத்து பள்ளி ஆசிரியர்கள் அப்படிதான். வாழ்நாள் முழுக்க ஒரேவிதமான ஒழுங்கு - அதில் கொஞ்சம் தவறினாலும் தண்டனைதான். வகுப்பில் அவர் நுழையும் போது சாக்பீஸ்கள் வைத்திருக்கும் விதம், கரும்பலகையின் ஓரமூலையில் இருக்கும் தேதி வருகைப் பதிவு, மேசைக்கும் நாற்காலிக்குமான செமீ மிமீ இடைவெளி என அனைத்திலும் தீவிர ஒழுங்கை எதிர்பார்ப்பார்கள்.

அப்போதெல்லாம் ஆசிரிய மக்கள் வகுப்பறைக்கு வெளியேயும் ஆசிரியப் பணியை தொடர்ந்த காலம். நான் படித்த கிராமத்துப் பள்ளியில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு தடைவிதிக்கப் பட்டிருந்தது. கிராமத்தில் மொத்தம் இருந்தது இரண்டோ மூன்றோ டிவிக்கள்தான். அதிலேயேயும் கூட்டம் அதிமாகி விட்டால் வீட்டுக்காரர் அனுமதி மறுத்துவிடுவார். எப்படியிருந்தாலும் சிறுவர்களான எங்களுக்கு ஒளியும் ஒலியும், ஞாயிறு இரவுப்படமும் பார்க்காமல் இருக்க முடியாது. ஒருவழியாக இடம் பிடித்து உட்கார்ந்து கொள்வோம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் ஒரு வில்லன் வருவான் - டிவியில் அல்ல - அதற்கு வெளியே.ஆசிரியரால் பணிக்கப்பட்ட உளவாளி சிறுவன். அவன் பணி யார்யாரெல்லாம் டிவி பார்க்கிறார்கள் என்று பேர் குறித்துச் செல்வதுதான். அவனோ பேர் எழுதுகிறேன் பேர்வழி என கிட்டத்தட்ட முக்கால்படம் பார்த்துவிட்டுத்தான் செல்வான். டிவிக்கள் ஆதிக்கம் எல்லார் வீட்டினுள்ளும் நுழையும் வரை இந்த பேரெழுதும் படலம் தொடர்ந்தது அப்புறம் நின்று போனது.

வகுப்பைத் தாண்டியும் ஒரு ஆசிரியரின் கவனம் இருந்தது என்பதுதான் இதில் முக்கியம். ஆசிரியர் என்பது வெறும் பணி என்பதையும் மீறிய வாழ்க்கை முறையாக இருந்தது அப்போது. அதை தனது முழுமையான ஆளுமையாக கருதுவதால்தான் மாணவனிடமும் பள்ளியிடமும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தனர். அடித்தல் அடித்து துவைத்தல் போன்றவையெல்லாம் இது சார்ந்த வெளிப்பாடுகள்தான் என இப்போது புரிகிறது.

நான் படித்த ஒரு கிராமத்துப் பள்ளியில் பாடத்தைத் தவிர வேறு எது படித்தாலும் அடி உதைதான். அதிகம் போனால் செய்தித்தாளைப் புரட்டலாம். அந்தக் கிராமத்தில் அப்போது நானும் நண்பனும் மட்டும் ரகசியமாக காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி படிப்போம். ஒருமுறை ஆர்வமிகுதியில் நண்பன் இரண்டு காமிக்ஸ்களை நூல் அஞ்சலில் ஆர்டர் செய்து விட்டான் - எனக்கும் சேர்த்து. அந்த குக்கிராமத்திற்குள் முதன்முறையாக பழுப்பு நிற அட்டையால் மூடப்பட்டு இரண்டு காமிக்ஸ்கள் வருகை புரிந்தன. நண்பன் கவனமாக வீட்டு முகவரி எழுதியிருந்தும், அஞ்சல் நிலைய அதிகாரி சந்தேகத்தின் பேரில் பள்ளி தலைமையாசிரியருக்கு அதை சேர்ப்பித்துவிட்டார்.

கிராமத்தில் இணையான ரேங்கில் இருக்கும் தலைமையாசிரிருக்கும் அஞ்சல்அதிகாரிக்கும் இதுபோன்ற பரிவர்த்தனைகள் சாதாரணம். எப்படியாயினும் மாணவ ஒழுக்கமே முக்கியம் அவர்களுக்கு. தலைமையாசிரியர் பழுப்புநிற அட்டைகளைப் பிரித்தார். உள்ளே 'எமனுக்கு எமன்' என்ற தலைப்பிலான புத்தம்புதிய லயன் காமிக்ஸ் எனக்கும் நண்பனுக்குமாக சிவகாசியிலிருந்து வந்திருக்கிறது. முழுதையும் படித்துப் பார்க்கிறார். அது முழுக்க முழுக்க போர்ப் பின்னணி கொண்ட படக்கதை. அதில் பெண்களே கிடையாது - மொத்தமும் (ஆண்) ராணுவ வீரர்கள்தான். இப்படியொரு வீரமும் சாகசமும் கொண்ட ராணுவக் கதையென்பதால் நாங்கள் அடியிலிருந்து தப்பித்தோம் என்று நம்பியிருந்தோம். ஆனால் பாருங்கள் ராணுவம் எங்களிருவரையும் ஏமாற்றி விட்டது - ஒரேயொரு இடத்தில் ஒரு பெண்மணி ராணுவ வீரர்களுக்கு காப்பி பரிமாறுவார். காமிக்ஸின் அந்த சிறிய படத்தில் அப்பெண்ணின் படமும் அருகே ஒரு வசனமும் இருக்கும்: 'என் மனைவி ஏஞ்சலா உங்களுக்கு காப்பி பரிமாறுவார்' அவ்வளவுதான். அதற்கப்புறம் காப்பி குடித்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு சுடப் போய்விடுவார்கள்.

தலைமையாசிரியர் எங்கள் இருவரையும் அவர் அலுவலகத்திற்கு அழைத்தார். போனோம். 'வாங்க எமனுக்கு எமன்களா' என அழைத்து புத்தகங்களை கொடுத்துவிட்டார். அப்பாடா என்றிருந்தது. இருந்தும் கைகளை நீட்டச் சொல்லி பிரம்பால் ஆளுக்கொரு அடி கொடுத்தார். 'எமன்களா! பாடப்புத்தகம் படிக்காம என்ன காமிக்ஸ் வேண்டி கிடக்குது..? இதில மனைவி ஏஞ்சலா காப்பி பரிமாறுவாராம் காப்பி..' அப்போதிலிருந்து காமிக்ஸின் ராணுவ தோட்டாக்களையும் மீறி ஏஞ்சலாவின் காப்பியே இன்னும் நினைவிலேயே நிற்கிறது.

காமிஸ் புத்தகங்களை வாங்கிக் கொண்டுபின் அதை முழுதும் படித்தபின் நண்பன் சொன்னான். 'நல்லவேளை! எமனுக்கு எமனை ஆர்டர் பண்ணினோம்.. இதுவே புரட்சிப் பெண் ஷீலாவா இருந்திருந்தா நம்ம கதி என்னாயிருக்கும்?'

அவன் சந்தேகம் சரிதான். புரட்சிப்பெண் ஷீலாவில் முழுக்க முழுக்க ஷீலா கையில் வாளுடன் வருவார். அவரின் வாளை விட மிகவும் சிறிய மார்க்கச்சையும் அரைக்கச்சையும் அணிந்து புரட்சிகரமாக போர் புரிவார். அந்த காமிக்ஸ் மட்டும் தலைமையாசிரியர் வசம் சிக்கியிருந்தால் அவர் எங்க​ளை அடிக்கிற அடியில் காமிக்ஸின் புரட்சிப்பெண் ஷீலா சேலைக்கு மாறியிருப்பார்.

புன்னகையுடன் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Wednesday, September 2, 2015

காடு அ​டைதல்

அன்று பெளர்ணமி. அது யாத்ரிகர்கள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற சமயம். இருந்தும் மறிக்கப்பட்டிருந்த நுழைவாயிலின் சிறிய இடைவெளியினூடே மலை ஏற்றத்தை ஆரம்பித்தோம். பலதரப்பட்ட ஆளுமைகள் அடங்கிய அலுவலக நண்பர்கள் குழுவாக அது இருந்தது. அதிகம் பேர் மலையேறிமுடிக்கணும் என்ற பூரணத்துவத்துவையே முதன்மையாக கொண்டு ஏறியதாக தோன்றியது. வேறுசிலருக்கு ஆன்மீகம்-சிவனடைதல் போன்ற எதிர்பார்ப்புகள்.  நானோ இப்பயணத்தை என் உடல்திராணியை அளவிடும் ஒரு செயலாகவே எடுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கோ மலையின் மூர்க்க வசீகரம் என் உடல்திராணி அளவிடும் நோக்கைத்தை நொறுக்கிவிட்டு என்னை கண்டு களித்து முடி என்றது. காட்டின் ஒவ்வொரு சப்தமும் உள்ளுக்குள் இறங்க ஆரம்பித்து விட்டது போலிருந்தது.

நெடுந்துயர்ந்த மூங்கில் புதருள் மோதி அலறும் காற்றின் ஒலி அளவிடமுடியாததாக இருக்கிறது. எல்லா மலைகளும், முகிலுரசும் ஏழாம் மலையுமாக நிலக்காட்சிகள் இயல்பு வாழ்க்கையிலிருந்து நம்மை பிய்த்து பிய்த்து எடுக்கிறது.

மலைவிட்டு இறங்கும்போது இருட்டிவிட்டது. பெளர்ணமி வெளிச்சத்தையும் அனுமதிக்காத காட்டு மரங்கள். காடு கண்விழிப்பது எப்போதும் இரவில்தான் போல - தன் ஒவ்வொரு தசையையும் புரட்டிப் போட்டு திமிறி எழுகிறது இரவில். வலுவுள்ள உயிர்கள் அவர்களுக்கு மட்டுமே புலனாகும் வழிகளில் உலாவ தயாராகின்றன. காட்டின் பாதைகள் எப்போதும் கட்புலனால் அடைய முடிவதில்லை; அவை எல்லா புலன்களாலும் அல்லது ஆறாவது புலனால் அடையக்கூடியதாகவே இருக்கிறது. பாதையறிவது என்பது காட்டின் சமிக்ஞைகளை புரிந்துணரும் செயலாகவே உணர்கிறேன்.

பசித்த வேட்டை மிருகம் கூட காட்டின் சமிக்ஞை இல்லாவிட்டால் பக்கத்திலிருக்கும்  உணவு உயிரை திரும்பிக்கூடப் பார்க்காது. அந்த சமிக்ஞை ஒரு சில்வண்டு சப்தமாகவோ தூரத்து நரியின் ஊளையாகவோ அல்லது ஒரு சிலந்தி வலையில் இருந்து சரியும் மழைத்துளியாவோ இருக்கலாம்.  ஒரு வேட்டை முதல் முளைவிடும் தாவரம் வரை, தானே சுரக்கும் ஊற்று அதனனின்று ஓடை பிறகு ஓடை அருவியாதல் வரை அனைத்தும் காட்டின் இயக்கமாவே இருக்கிறது. இவையனைத்தின் ஒருமித்த தொகுப்பாகவே காட்டை உணர்கிறேன்.

காட்டிருட்டில் திரும்பும் போது வழிகாட்டியாக வேறொரு நபர் சேர்ந்து கொண்டார். அடிக்கடி வெள்ளியங்கிரி வருபவர். அவருடன் வந்த சிலர் இரவை இரண்டாம் மலையிலேயே கழிப்பதாகவும் தான் மட்டும் அடிவாரம் சென்று காலை திரும்புவதாக கூறினார்.  அவருடன் வந்தவர்களை நான் கவனித்திருந்தேன். சடை விழுந்த சிகை மற்றும் தாடியுடன் கூடிய காவி ஆசாமிகள். வயது அதிகம் போனால் நாற்பதுக்குள். விட்டேத்தியான எங்கோ வெறிக்கும் கூர் விழிகள். இரவு முழுதும் சிவபானம், கதை, பாட்டு மற்றும் நெருப்பைச் சுற்றி ஆட்டம் என போகுமாம். காட்டு விலங்கு, காற்று-மழை என எதற்கும் அஞ்சாது விடியும் வரை நடக்குமாம். அப்படியொரு இரவை தவிர்த்து விட்டு இறங்குகிறோமே என்ற விசனம் கூட எனக்கிருந்தது. ஏன் இவர்களை காடு அப்படி இழுத்துப் போட்டுக் கொண்டிக்கிறது என்று யோசித்தவாறே நடையைத் தொடர்ந்தேன்...

என்றோ நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த காட்டு-மனிதன் தனக்கான வெளியான காட்டை விட்டு முதலடி எடுத்து வைத்தான். உலகின் மொத்த தசைகளையும் திருப்பி போடுவதாக அது இருந்தது. அதற்கப்புறம் தனக்கான வெளியை அவனே கட்டமைத்துக் கொண்டான். பிறகு காட்டுக்கு அவன் திரும்பவே இல்லை - அல்லது திரும்ப முடியவில்லை. காடு குறுக்கே வந்தால் அதை சிதைத்து தனக்கான வெளியாகவே கட்டமைத்துக் கொள்ள ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக காடு அவனுக்கு அந்நியமாகியது. காடு ஒரு ஆழ் நினைவாக அவனுள் மீட்க முடியாத ஆழத்தில் புதைந்து விட்டது. ஆனால் ஏதோ ஒரு இரவு அல்லது கனவு அல்லது பறவையின் ஒலி காட்டை அவனுள் எழுப்பிவிடுகிறது. எழுந்து கொண்ட மனிதனால் உறங்கமுடிவதில்லை. அவன் நடக்க ஆரம்பிக்கிறான். தனக்கான வெளியைவிட்டு காட்டை நோக்கி முதலடி வைப்பவன் பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அவனை மீண்டும் காடு எடுத்துக் கொண்டு விடுகிறது. காட்டின் ஒரு தசையாக இன்னுமொரு சமிக்ஞை அவனாகிறான்.

இப்படி ஒரு சிந்தை குறுக்கே ஓடியது. இதற்கு முன்தான் சித்த வைத்தியம் பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தேன். அதையொட்டி ஏன் மலைகள் பொதுவாக சித்தர்களின் கூடாரமாகவே காட்டப் படுகிறது என்றொரு யோசனை. காட்டுச் செடிகள் மற்றும் காட்டு மூலிகைகள்தான் சித்த வைத்தியத்தின் மூலம். பறிக்கிற ஒவ்வொரு காட்டு தாவரமும் காடு-மனிதன் என்ற சங்கிலியமைப்பையே பூடகமாக உணரத்துவதாக இருந்திருக்குமோ? இந்த இணைப்பை,ஆதித்தொடர்பை அதன் சூட்சுமத்தை உணர்ந்தவனே சித்தனாகிறானோ? தனக்கான சரியான, ஆதியான மற்றும் மரபான வெளி காடுதான் என்று கண்டுணர்ந்தவனே காட்டை நோக்கி முதலடி எடுத்து வைக்கிறான். அவனே சித்தனாகிறான். அவனால் காட்டை தாண்டி வரமுடிவதில்லை.

இரவு ஒன்பது மணிபோல அடிவாரம் சேர்ந்துவிட்டோம்.. இருந்தும் காட்டின் சில்வண்டின் ரீங்காரம் இறுக்கமாவே கேட்டுக் கொண்டிருக்கிறது. மலையை காட்டைத் திரும்பிப் பார்த்தேன். பெளர்ணமி நிலவு மேலெழும்பிவிட்டது. எத்தனையோ கண்களால் காடு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. விடைதெரியாத கேள்விக்கு பின்னான அமைதியாக அது இருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்தேன் - நகரங்களை நோக்கி. காடு அங்கேயே இன்னும் இருக்கிறது.

நம் எல்லோருக்குள்ளும் ஒரு காடு தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது. கூடவே சமிக்ஞையால் உணரப்படும் காட்டின் வழித்தடமும் நினைவில் எங்கோ ஒளிந்திருக்கலாம்.

Tuesday, August 25, 2015

சித்த வைத்தியம் - சில குறிப்புகள்


சித்த வைத்தியம் - சில குறிப்புகள் (அவசியம் படிக்கணும் அருமை நேயர்களே!)

1. சித்த வைத்தியர்களை இருவகைகளாக பிரிக்கிறார் மேலமலை காட்டுச்செடி சாறுபிழிந்த ஓலைச் சித்தர். முதல்வகை முழுக்க நரைத்த தாடி கொண்ட வகுடுமுனி வகையறாக்கள். மிகவும் பொறுமைசாலிகள். உதாரணமாக வல்லாரைக் கீரையைப் பறித்து லேகியப் பக்குவம் சொல்லி முடிப்பதற்குள் கீரை பொடித்துவிடும். இரண்டாம் வகை வல்லக்கோட்டை பகட முனி வகையறாக்கள். தாடியின் நீளத்தை பொறுத்து பொறுமை குணம் கொண்டவர்கள். சீராக ஆங்கிலமும் பிற மருத்துவ தத்துவங்களும் கூட கைவரும்.

2. உங்களுக்கே தெரியும்: தமிழின் அ​னைத்து முன்னணி ​தொ​லைகாட்சிக​ளெங்கும் வலப்பக்கம் ஒரு தாடியும் இடப்பக்கம் ஒரு லேடியுமாக சித்த மருத்துவம் விளம்பர இடைவெளிகளிடையே காலையில் ஒளிபரப்பாவது. இதில் விசேஷம் என்னவென்றால் நீங்கள் ரசத்திற்கு பூண்டு தட்டுவதை வாயை மூடிக்கொண்டு செய்தால் அது சாதாரண சமையல் ஆகிறது (அதுக்கு டிவியில் வேற டிபார்ட்மெண்ட்டு உண்டு)..அதையே பூண்டின் தாவரவியல், உயிரியல் மற்றும் பொறியியல் பெயர்களை சொல்லிக் கொண்டே கல் குழவியில் பொறுமையாக இடித்தால் அது சித்த மருத்துவமாகிறது.

3. தமிழர்களின் தலைமைப் பண்புகளில் முக்கியமானது ஒன்று: பாட்டி மடியில் போட்டுக் கொண்டு சொன்ன கதையை அப்படியே பாஹுபலி என்ற பெயரில் சினிமாவாகப் பார்த்துவிட்டு 'ச்சே ச்சான்ஸே இல்லப்பா! இங்கிலீஷ்காரன் பிச்சை வாங்கணும்' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான். சித்த வைத்தியத்திற்கும் இது கச்சிதமாகப் பொருந்தும். நாமறிந்த பாட்டி வைத்தியத்தையும் ஒரு தாடிக்காரர் தவணை முறையில் வார்த்தை-வார்த்தையாக தொலைக்காட்சியில் சொன்னால்தான் நாம் கவனித்து குறிப்பெழுதுவோம். நெஞ்சு விடைக்க 'முடக்கத்தான் கீரை ஒரு பார்ஸேல்ல்' என்று கீரைக்காரம்மாவிடம் சொல்லி வைப்போம்.

4. ஒரே சித்த மருந்திற்கு ஒரு வைத்தியக்காரர் சொன்ன அதே பக்குவத்தை பிற வைத்தியரிடம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. எவ்வளவு ஆத்திரமான சண்டையென்றாலும், கராத்தே வீரர்கள் சண்டைக்கு முன் உன்னோட ஸ்கூல் என்ன? ஸ்டைல் என்ன? என்பனவற்றை விசாரித்துவிட்டுதான் வீடு கட்டவே தொடங்குவார்கள். அது போலவே சித்த சிலபஸும் பல பல வகைகள் உண்டு. கிள்ளி எடுத்தல், வேரோடு பிடுங்குதல் என தாவரக் கொலையிலேயே  வைத்தியருக்கு வைத்தியர் வேறுபாடுகள் உண்டு. எல்லாம் சித்தமயம்.

5. புரிந்து கொள்ளுங்கள் அரு​மை ​நேயர்க​ளே.. நம் உடலின் வாதம் - பித்தம் - கபம் இதை சரியான விகிதத்தில் வைக்கவே வைத்தியர்கள் பெரும்பாடு படுகிறார்கள். பசுநெய்யில் புளிவிடுவது, இஞ்சியை தேனில் உரைப்பது, வெள்ளை வெங்காயத்துடன் மாதுளஞ்சாறு பிழிவது, விளாம்பழத்துடன் வெல்லம்இடிப்பது என இதெல்லாம் நம் வா-பி-க கட்டுப்பாடுக்காக வைத்தியர்கள் தங்கள் உடலையும் ஆன்மாவையும் பரிசோதனையாக்கி நமக்குத் தந்தவையாகும். ஆகவே, எந்த வைத்தியர் என்ன எப்படி எவ்வளவு சாப்பிடச் சொன்னாலும், நம் இன்னபிற நோய்த்தன்மைகளையோ அல்ல பிற மருத்துவ காரணிகளையோ கண்டுகொள்ளாமல் ஒரு விழுது வாய்க்குள் விட்டுக்கொள்ளவும்.

6. சித்த வைத்திய முறையில் சாதிக்க முடியாதது அல்லது குணமாக்க முடியாது என்று ஒன்று இல்லவே இல்லை. எளிமையாக சொல்லவேண்டுமென்றால் கொசகொச கூந்தல் முதல் இந்திரிய நஷ்டத்தை சரிகட்டும் லேகியம் வரை அனைத்தும் இங்குண்டு. நீங்கள் எத்தனை மண்டலங்கள் மருந்து உட்கொண்டும் கொசகொச கூந்தலோ அல்லது இந்திரிய நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை என்றாலும் அகத்தியர் அருளிய சித்தத்தை குறை கூறலாகாது. உங்கள் உடலமைப்பு அல்லது நரம்பு மண்டலம் இந்த வைத்திய முறைக்கு உகந்தாக இல்லையென்று நீங்களே உங்களை சமாதானம் செய்து கொள்ளவேண்டும்.

7. அலோபதியில் தீராத நோய்கள் கூட இங்கு தீர்த்து வைக்கப்படும். எதுவாயினும் உங்களின் மனம் தளராத நம்பிக்கையும் தொடர்ச்சியாக மருத்துவரை சென்று பார்ப்பதுமே முக்கியம். மருத்துவர் அநேகமாக  சிசிஆர்எஸ் அல்லது சிசிஆர்ஐ மூலம் சித்த வைத்தியமும் கூடவே வர்மக்கலை, யுனானி, சேற்று தெரபி அல்லது மாற்று மருத்துவத்தில் டிப்ளமோவும் வாங்கியிருக்கக் கூடும். ஏதோவொரு கலவையான அணுகுமுறையில் ஏதாவது ஒரு சுபதினத்தில் உங்கள் நோய்க்கான சிகிழ்ச்சை​யை அவர் கண்டறியக் கூடும். ஆகவே பொறுத்திருங்கள்; பொறுமைதான் சித்த-நோயாளியின் முக்கிய பண்பாகும்.

Wednesday, July 22, 2015

ஒரு நிலக்காட்சி ​செத்துப்​போனது

Kaladi Jagan

தெண்டபாணி மாமா இறந்து விட்ட தகவல் அப்பாவிடமிருந்து கிடைத்தது. மாமா எனக்கு 5 வருடங்கள் மூத்தவர். இந்த வருட இடைவெளியோடு அவரது மரணத்தை நினைத்துப் பார்க்கும் போது வித்யாசமான துயரம் தாக்குகிறது. கூடவே, குடியால் செத்தவர்கள் நிறைய பேர் நினைவுக்கு வருகிறார்கள்.
மாமா இப்போது இறந்திருக்க வேண்டியதில்லை. மனைவி, 7 மற்றும் 5 வயதுகளில் இரு மகன்கள் என வாழ நிறைய சங்கதிகள் அவருக்காக காத்திருந்தன.

எக்கணமும் தெண்டபாணி செத்துப் போகலாம் என்ற தகவலையே சொந்தங்களும் நண்பர்களும் தெரிவித்தவாறு இருந்தன. அவரிடம் பேசவும் கேட்கவும் என நிறையவுண்டு; நெடிய ஒற்றையடிப் பாதையும் உடன் வரும் வாய்க்காலும் என தேங்கி விட்ட நிலக்காட்சிப் போன்ற உரையாடல். தமது உரையாடலை ஒரு நிலக்காட்சியாக நினைவூட்டும் நபர்களில் மாமாவுக்கும் ஒரு இடமுண்டு. அவர்கள் உயிருடன் இருக்கும் வரை ஓவியத் தெளிவாகவும் செத்தபிறகு மனதை பிசையும் இசையுமாக ஆகிறார்கள்.

சாவதற்கு சில தினங்கள் முன்பு சென்று பார்த்து விட்டு வந்த அம்மா சொன்னது: அவன் உருவம் ஒரு குழந்தை அளவுக்காக சிதைந்து விட்டிருக்கிறதாம். வெறும் பழச்சாறு மட்டும் உட்செல்கிறதாம். அதுவும் பெரிய பாட்டிலாயிருந்தால் தூக்கிக் குடிக்க முடியாது என சிறு பாட்டில்களாய் வாங்கி கொடுக்கப்படுகிறதாம்.

எப்போதோ மாமா சொன்னது: கிராமத்தில் அரசு மருத்துவ குழாம் ஆரோக்கிய குழந்தைகளுக்காக நடத்திய போட்டியில் பரிசு வென்ற கொழுகொழு கிராமத்துக் குழந்தையாம் அவர். வருடங்களுக்கு முன்பு பார்த்தவரை அதற்கான அடையாளங்கள் கொண்டவராகவே இருந்தார். ஆல்கஹாலில் உருகும் வரை அப்படித்தான் இருந்தார்.

திருமணம் எப்போதும் சில கதவுகளைத் திறக்கவும் பல ஜன்னல்களை மூடவும் வைக்கிறது. மாமாவுக்கு அப்படி மூடிய அல்லது மூடப்பட்ட ஜன்னல்களில் நண்பர்கள் மற்றும் சில சொந்தங்களும் மறைய வேண்டியதாயிற்று. அரசு வேலையும் ஆல்கஹாலுமாக புதுக் கதவுகள் தாமே திறந்து கொண்டன.

குடிப்பார்.. குடிப்பதால் எழும் சிந்தனையூக்கங்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார்.அதன் பிறது பேசுவதெல்லாம் தத்வார்த்தமாக, தன்னை மீறி கொப்பளிக்கும் பேரறிவு ஆளு​மையாக உருவகித்துக் கொண்டார். அந்த சிந்தனைகளை எழுப்பும் திறன் இத்திரவத்திற்கு மட்டுமே உண்டு என்றும் நம்பத்தொடங்கினார். படிப்படியாக தன் இயல்புகளிலிருந்து கழன்று நிற்கும் தனது குடி-மனிதன்தான் தன்னினும் சிறந்த அறிவாளி என அதை தீவிரப்படுத்த முனைந்தார். ஆனால் அவரே அறியாமல் குடி-அறிவாளி பிம்பத்தை அடித்து நொறுக்கி பிறர் புகழ்ச்சிக்கும் பிறகு இரக்கத்திற்கும் ஏங்கும் குடி-உத்தமன் முன் வந்து நின்றான்.

சுயஇரக்கத்தை விட நேசிப்புக்குரிய புண் வேறு எதுவும் இருக்கமுடியாது. ஒரு நோய்த்தன்மையுடன் மாமா தன்னை ஒரு குடி-உத்தமனாக உலகத்தின் முன் நிறுவிக் கொண்டார் எனப்படுகிறது. முழுச்சம்பளத்தையும் டாஸ்மாக்கில் கரைப்பது; தனியாளாக கடைக்குள் சென்று புதுப்புது நண்பர்களை உற்பத்தி செய்து கொள்ளவதும் சாத்தியமாயிற்று. யாருக்கும் சாத்தியப்படாத இரவும் நட்பும் செலவும் அவருக்கு இயல்பாகின.

குடியர்களுக்கு காலை வெளிச்சம் எப்போதும் பதட்டமானது. தான் போதையில் செய்த ஆட்டங்களை பிறர் சொல்ல கேட்க மனம் நொறுங்கிப் போகும். தம் போதை தவறுகளை களைவதற்காகவே சிலர் முழு நேரக் குடிக்கு அடிமையாகிறார்கள். மாமாவை எது ஆட்கொண்டது என தெரியவில்லை.. அதை தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

கடைசியாக அவரிடம் பேசியது நினைவுக்கு வருகிறது:

நான் ஊர் சென்றிருந்த ஒருநாள். காலை 7 மணியளவில், ஒரு ஷட்டர் மூடப்பட்ட கடை வாசலில் அமர்ந்து பேசினோம்.. அப்போதே குடித்திருந்தார். மீதி சரக்கு தன் யமஹா வண்டியில் இருக்கிறது என்றார். கைகளில் கன்னங்களில் சிராய்ப்புகள். புதுக்காயங்கள் போல - ஏறு​வெயிலில் ரத்தம் மினுங்கியது. ஏன் என்று கேட்டதற்கு அதற்கு முந்திய இரவு குடியில் வீடு திரும்பும்போது சறுக்கியிருக்கிறார். அருகிலிருந்த யமஹா உண்மையென்றது.
'நான் சாப்பிடறதே இல்லடா.. காலையிலிலேயே குடிக்க ஆரம்பிச்சிரதுதான்.. என்ன பண்ண?'
'ஏன் இப்படியிருக்கீங்க.. குழந்தைகளை நினைச்சுப்...'
உக்கிரமாக சிகரெட்டை இழுத்தவாறு
'எங்கே? எல்லாம் அவ்வளவுதான்.. என் வேலை அவங்களைக் காப்பாத்திரும்டா.. பதினெட்டு லட்சத்து வீடு கட்டியாச்சு.. அதவிடுடா..'
'ஆபிஸ்ஸாவது போறிங்களா?'
'என்ன எவண்டா கேள்வி கேட்பான்? டியிஓ-விலிருந்து ட்ரெஷ்ஷரி வரைக்கும் நான் சொன்னா எது வேணாலும் செய்வாங்க. தெண்டபாணி பைல் வொர்க் பர்பெக்ட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆபிஸ் ஒரு மேட்டரேயில்ல'
சட்டென்று எழும்பி வண்டி முன் சீட் கவரிலிருந்த சிறு புட்டியை உருவினார்.
'மாமா.. வேணாம் இப்பவே குடிச்சிருக்கீங்க.. வைங்க'
'ம்.. அப்படிங்கிறியா? ரைட்டு. சரி வா போவோம்'
'ஆமா காலையில எதுவும் சாப்பிடலியா?'
ஒரு மாதிரியாக ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்.  அதுதான் மாமாவுடனான க​டைசி உ​ரையாடல் என நி​னைக்கி​றேன்.
அதற்கப்புறம் தெளிந்த நிலைக்கு வரவே கூடாது என்பது போல குடித்துக் கொண்டேயிருந்தார். ஊர் சென்ற போதேல்லாம் அவரைப் பார்க்க முடியவில்லை அல்லது பார்க்க எனக்குப் பதற்றமாயிருந்த​தோ?

எனக்கு வந்து சேர்ந்த செய்திகள் எல்லாவற்றிலும் அவர் குடித்துக் கொண்டேயிருந்தார்.. காயங்கள் சம்பாதித்துக் கொள்பவராக இருந்தார். குடும்ப அமைப்பிலிருந்து விலகியவராக, பணியிலிருந்து நீண்ட விடுப்பு, பணமுடை, குடிக்காக மற்றவரிடம் கையேந்துபவராக இப்படிப்பட்ட மாமாவைத்தான் அனைவரும் முன்வைத்தனர்.

அப்போதெல்லாம் நீண்ட நிழலாக ஒற்றையடிப் பாதையும் உடன் வரும் வாய்க்கால் என்ற நிலக்காட்சியை நினைவிலிருத்தப் பாடுபடுவேன். மீண்டும் மாமாவுடனான ஒரு உரையாடல் அதை மீட்டுக் கொடுக்கும் என நம்பினேன்.

அந்த உரையாடல் நடைபெறவேயில்லை.

இப்போது மாமா குடிக்கும் சிந்தனைக்குமான தொடர்பை தப்பர்த்தம் செய்து கொண்டு செத்தவர்கள் பட்டியலில் ஒருவராக சேர்ந்தும் கொண்டார்.

Tuesday, March 31, 2015

​மைக் என்ற மந்திரக்​கோல்



மகளுக்கு ப்ரிகேஜி கொஞ்சம் சீக்கிரமே தொடங்குவதாக பள்ளி அறிவித்துவிட்டது. இரண்டு வயது முடிந்து 2 மாதம் 24 நாட்கள் 7 மணி நேரம் மட்டுமே ஆகியிருக்கிறது மகளுக்கு! நாம் சொல்லும் அனைத்து வாக்கியங்களையும் அப்படியே உள்வாங்கி, அதன் முதன் அட்சரத்தை மட்டும் பேசும் அளவுக்கு நாவன்மை வந்துவிட்டது. 'அதற்குள் எப்படிய்யா ப்ரிகேஜி?' என்று யோசிப்பதற்குள், பள்ளியில் இருந்து தபால். 'ஓரியண்டேஷன் ஸெஸன் வாங்கோ' என்று கூவியது. அதிலும் ஒரு டிஸ்கி வேறு: குழந்தையைக் கூட்டிக்கொண்டு வரக்கூடாதாம்.. ஒன்லி பேரண்ட்ஸ் மாத்திரம்!

மாமியார் வசம் மகளையும் மகனையும் ஒப்படைத்துவிட்டு கிளம்பினோம். பச்சையம் சுருக்கும் சென்னை வெயிலில் பள்ளிக்கூடம் அடைந்தோம். ஏற்பாடெல்லாம் பிரமாதமாகவேயிருந்தது. மேடையிலிருந்து குத்துப்பாட்டு ரம்மியமாக ஒலித்துக் கொண்டிருந்தது. இதே பள்ளியின் பிரதான வளாகம் நகரின் வேறு பகுதியில் இருக்கிறது. இது புதிதாக அமைக்கப்பட்ட சுட்டி வளாகம். ப்ரிகேஜி டு யுகேஜி வரை மட்டும். அருமையான இரண்டு மாமரங்கள் மற்றும் இதர மரங்கள் சூழ்ந்த குளுகுளு வளாகம்.. பிள்ளைக்களுக்கேற்ப பெரிய திடல் அதில் விளையாட்டு அம்சங்களும் நிறையவுண்டு. ஜீன்ஸ் மற்றும் ரோஜாப்பூ வண்ண டாப்ஸ் சீருடையாக கொண்ட ஆசிரியைகள். பிள்ளைகளுக்கும் ரோஜாப்பூ வண்ண சீருடை என பிங்க் பிராந்தியமாக மினுங்கியது. ஸ்கூல் ஃபீஸ் உங்கள் யூகத்திற்கு விடப்படுகிறது.

மேடை களைகட்ட ஆரம்பித்தது. பள்ளியின் டீன், பிரின்ஸி, கோஆர்டினேட்டர் (இப்படி பல பதவிகள் தற்போதைய பள்ளிகளில் உண்டு) என ஒவ்வொருத்தரும் மைக்கைப் பிடித்து அதிகம் ஆங்கிலம் கொஞ்சம் தமிழ் என உரை முடித்தனர்.

நாம் தடுத்தும் நம் காதுகளில் சில காமடி வெடிகளை கொளுத்திப் போட்டு விடுகிறார்கள். ம்.. உங்களுக்கும் வைத்துக் கொள்ளவும்.. மகள் படிக்கும் பள்ளி.. பீஸ் வேறு கட்டியாகி விட்டது!

1. கார்ப்பரேட்டுகளில் வேலை செய்பவர்களை பொதுக் கூட்டங்களில் சுலபமாக கண்டு கொள்ள முடிகிறது. மைக் வைத்திருப்பவர் குட்மார்னிங் சொன்னதும் கூட்டத்திலிருந்து ரிப்பீட்டாக குட்மார்னிங் சொல்லுவார்கள் பாருங்கள்.. அவர்கள் எல்லாமே ஏதோவொரு கார்ப்பரேட்டாக இருப்பார்கள்!

2. கூட்டத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டே ஏதாவது காமடி நம்மால் செய்ய முடிகிறது எனலாம். யார் எது பேசி முடித்தாலும் கைத்தட்டல்தான். டீன் சொன்ன (ஊர் உலகமெல்லாம் மேய்ந்து வந்த) வாட்ஸ்ஏப் ஜோக்காகட்டும், பின் பேசியவர்களுக்காகட்டும் கேரண்டியாக கைத்தடல்கள்தான். அது போகட்டும் அதற்கப்புறம் வந்த பெரிய தொந்தி டாக்டர் ஒருவர் சீரியஸாக ஆரோக்கிய வாழ்வு, சமச்சீர் உணவு, குழந்தைகளுக்கு உகந்த உணவு என மருத்துவ தகவல்கள் சொல்லி முடித்தார். வாட்ஸ்ஏப் ஜோக்குக்கு தட்டிய மாதிரியே இதற்கும் கைத்தட்டல்கள்!

3. நிகழ்ச்சி வந்திருந்த சில பெற்றோர்களை மேடைக்கழைத்து பேசச்சொன்னார்கள். ஃபீட் பேக் போலிருக்கிறது. நிறைய பேர் பேச தயாரித்துக் கொண்டு வந்திருந்தார்கள். நல்ல நகைச்சுவையாக இருந்தது. ஒருவர் வணக்கம் சொல்லியதும் முதல் காரியமாக அவர் கஷ்டப்பட்டு பெற்ற பட்டங்களின் வரிசையை விளக்கினார். அக்கல்விமான் தினமும் பள்ளியொட்டிய சாலையில் நடை உலா போவார் போலிருக்கிறது. அவர் கண்களில் இப்பள்ளியின் பசுமை தென்பட்டு விட்டது போல.. அதை மெச்சும் பொருட்டாக அவர் இயம்பியது: நான் இப்பள்ளியை ஒட்டிய சாலையில் தான் தினமும் மாலையில் நடந்து வாக்கிங் செல்வது வழக்கம்...

4. மேடைப் பேச்சு ஒரு தனி இலாகா.. அதை அனைவரும் ரசிக்கும் படி செய்வதில் 50 சதவீதம் மட்டுமே பேச்சாளரிடம் இருக்கிறது. பேசும் பொருள், நேரம், மேடை, சுற்றுவெளி மற்றும் கூட்ட மனப்பான்மை இப்படி இதர காரணிகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே, ஒரு சிறந்த பேச்சு கிடைக்கப் பெறுகிறது. நம்மில் நிறைய பேருக்கு மேடை வறட்சியுண்டு. ம்..  மைக் எனக்கு வராதா என்ற ஏக்கத்துடனே நிறைய உன்னத கருத்துக்களும் சொற்பொழிவுகளும் நம் தொண்டைக்குழிக்குள்ளே புதைந்து கிடக்கின்றன போலும். மைக்கைப் பெற்ற மதர்களும் சரி பாதர்களும் சரி கிராண்ட் பாதர்களும் சரி.. மடைதிறந்து பாயும் நதியாகவே இருக்கிறார்கள்! மேடைப் பேச்சு பல தலைமுறைகளாக தொடரும் ஏக்கம் எனப் புரிகிறது.

5. கட்டிடங்கள் அல்லது ப்ராண்ட் வேல்யூ போன்ற அம்சங்களாலேயே பள்ளியின் தரம் நிர்ணயிக்கப் படுவது போல ஒரு மயக்கம் நிலவுகிறது. ஆசிரியர்களை மறந்து விடுகிறோம் போல. அரசு பள்ளி ஆசிரியர்கள் தரமுணர்த்த விருதுகள் உண்டு. தனியார் பள்ளிகளில் இது போல ஏதாவது உண்டா, தெரியவில்லை. மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பு தாண்டும் போதும் ஆசிரியர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். எனக்கு என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வருவதுண்டு. அவருக்கும் என்னை நினைவில் கொள்ள வாய்ப்புண்டுதான் - நல்ல மாணவனாகத்தான்.

6. ​டெட்சுகோ குரோநாயகி-யின் (Tetsuko Kuroyanagi) டோட்டா சான் - ஜன்னலில் ஒரு சிறுமி என்று ஒரு ஜப்பானிய நாவல் உண்டு. அதில் பள்ளியே கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள்தான். ஆனால் மனதில் இன்னும் பயணித்துக் கொண்டேயிருக்கும் பள்ளி. நல்ல பள்ளிகள் அடையாளப்படுவது கட்டிடங்களால் அல்ல என்று தோன்றுகிறது.

Wednesday, March 11, 2015

சிவாவை அறிந்து கொள்ளுதல்


அன்பிற்குரிய நீங்கள் சிவா பற்றி தெரிந்து கொள்ளுதல் முக்கியம் என்று தோன்றியதால் இதை எழுதப் பணித்தவனாகிறேன். காற்று என்பது தென்றல், வாடை, புயல், சூறாவளி என்று பல வடிவங்களில் வரும் போகும் என்று மட்டும் நம்பி இருந்தவனிடம், 'இல்லே ஜெகா.. இப்பெல்லாம் காற்று இன்கம்மிங் கால், அவுட்கோயிங் கால் அப்புறம் குறுஞ்செய்தி சிலசமயம் எம்எம்எஸ் போன்ற வடிவங்களிலும் வ. போகும்' என்று சொன்னவ.... னகரமா இல்லை ரகரமா என்று புரியவில்லை. வயதில் என்னை விட 10 கூடுதலாகவும் மனதில் 15 பருவங்கள் குறைவாகவும் இருப்பவரை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை.

சிவா தான் பிறந்து வளர்ந்த ஊரில் மிகு குடிபோதையில் மிதந்து சென்றாலும் யாருக்கும் எந்த வித்யாசமும் தெரியாது. ஏனென்றால் மிக நிதானந்தில் சாதாரணமாய் நடந்த வரும் சிவாவே ஊர்க்காரர்களுக்கு மப்பும் மந்தாரமுமாய் தெரிந்ததே காரணம். இதையொட்டி நீங்கள் சிவாவை ஒரு குடிகாரன் என்று தப்பர்த்தம் புரிந்து கொள்ள வேண்டாம். சிவா எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா ஜனங்களிடமும் ஒரே மாதிரியாக கால் பின்னப் பின்ன நடந்து திரிகிறான்.

நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப் போகும் நண்பருக்காக கைக்காசுக் கொடுத்து ரோஜாப் பூ வாங்கி அதை புது நண்பனிடம் 'பாஸ்.. உங்களப் பத்தி ஜெகா நிறைய சொல்லியிருக்கான்..' என்று பணிந்து மலர் கொடுத்து அறிமுகமாகிக் கொள்வான். நண்பர் கையில் பூவோடு நம்மை திகிலாய் பார்ப்பார்.

இரைச்சலான பேருந்துப் பயணத்தில் ஒருமுறை, யப்பா, பின்சீட்டு பெண்கள் பேச்சு எவ்வளவு தாள நயத்தோடு இருக்கு, கேட்டியா? நிச்சயம் தஞ்சாவூர்காரர்கள்தான் என்றான்.

ஒருமுறை இவன் கதையைப் படித்துப் பாராட்டி கடிதம் எழுதிய ஒருவரை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தோம். தமிழ் வாசக மனங்களின் போக்குக்கு அவரும் விதிவிலக்கல்ல.. தினசரி வாராந்தரிகளுக்கு வாசக கடிதம் எழுதுபவர்.. பிரசுரமானதை வெட்டி ஒட்டி பாதுகாத்துக் கொள்ளுமம் வாசகர் அவர். காபி டீ உபசரிப்பெல்லாம் முடிந்த பின், விடையனுப்பும் போது காசு ஏதும் வேண்டுமா என்று கேட்டார். திக்கித்து சார் அப்படி எதுவும் வேண்டாம்.. உங்கள் வாசக கடிதத்துக்காகதான் பார்க்க வந்தேன் என்ற எளிய உண்மையை குரல் கம்ம விளக்கி விடைபெற்றான் ஒரு படியேறிய படைப்பாளியாக.

ஆசைக்கடலில் தேடிய முத்து என்று பாடல் முணுமுணுத்தால், ஏன் கடலில் அமுத்துறதிலதும் தேடி அமுத்துற என்பான்!

எழுதும் கதையில் இடையிட்டு நாமாக ஏதாவது திருத்தம் சொன்னால், அட பிரமாதமாயிருக்கேப்பா.. அப்படியே எழுதுவோம் எனும் எளிய படைப்புக் கடவுள்!

செம்புலப் பெயநீராக பழகும் நண்பர் குழாமுக்கு ஏற்ப பேசும் திறனாளி..

எதிர்வரும் பெண்ணை, அவள் கையுளுள்ள நோட்டை, நோட்டின் அட்டையிலுள்ள டெண்டுல்கரை என அனைத்தையும் நொடியில் உள்வாங்கி, சப்தமாக, டெண்டுல்கர்கள் வாழ்க என்பான். அப்பெண் குறுநகைப் பூத்து நகர்வாள் உடன்வரும் நமக்கு எதுவும் புரியாது - சிவா விளக்காமல்.

உலகின் எல்லா கணங்களையும் எல்லா நிறங்களையும் பேதமற காதலிக்கும் பித்தன்.

Tuesday, March 10, 2015

ஜிம் - சில குறிப்புகள்


மனித உடல்கள் நிலத்தொடர்பு கொண்டவை. காக்காஸியன் உடலமைப்பு, மங்கோலிய, ஆப்பிரிக்க அல்லது இந்திய உடலமைப்புகள் வெவ்வேறு விதமாக நிலத்தைக் கொண்டு பாகுபடுத்த முடிகிறது. ஆனால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நடைமுறைகள் காக்காஸியன் (அமெரிக்க அல்லது ஐரோப்பிய) அளவுகோல்களையே முன்வைக்கின்றன.

நெடுந்துயர்ந்த அல்லது நோஞ்சான உடலே ஆரோக்கியமானது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன. உடல் பருமனைக் குறைக்க, ஜிம்முக்குப் போகமலேயே என்று பல சுதிகளில் மொத்தமாய் நம்மை குறிவைத்து பாய்ந்து கொண்டேயிருக்கிறது வணிக உலகம்.

ஸிக்ஸ் பேக், லீன் மஸில் கொண்ட உடலமைப்புகளே ஆரோக்கியமானவை என்று அதைசார்ந்த தொழில்கள் வலுவடைகின்றன. விதவிதமான வீட்டிலேயே பயன்படுத்தக் கூடிய உடற்பயிற்சிக் கருவிகளின் அபரிமிதத்தை பார்க்க முடிகிறது.

கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் இயல்பாகவே அறுமடிப்பு வயிறு உடையவர்களாக இருக்கிறார்கள். அதை மட்டும் கொண்டு ஒருவரின் முழுமையான ஆரோக்கியத்தை கணித்திட முடியுமா? சாப்ட்வேர் தொழிலில் இருப்பவர்கள் ஸிக்ஸ் பேக்கை சம்பளத்தால் மூடி வைத்திருக்கிறார்கள். உடல் எடை குறைப்பு வியாபார உலகின் முதல் தேடலே இவர்கள்தான். அப்புறம் பெண்கள். அதிலும் இல்லத்தரசிகள் -  ட்ரட் மில், எலிப்பிடிகல் சைக்கிள் போன்றவற்றை அவசரமாக வாங்கி துணி காயப்போடப் பயன்படுத்துபவர்கள்.

எனக்கு சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மேல் உசிர் - என்றெல்லாம் சொல்ல இயலாது. தயிர்சாதம் (எருமைத்தயிர்) விரும்பி விரும்பி சாப்பிடுவதால் சிறுவயதிலிருந்தே நான் கொஞ்சம் பப்ளிதான். அம்மாக்களுக்கு மகன்கள் கொழுகொழுவென்று இருக்க வேண்டும். அதற்காக வறுத்தல் பொரித்தல் அவித்தல் என சமையல் கடவுள்களாக இருக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் என்னவோ கொழுக்மொழுக் பையன்களையே சேர்கிறது. கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங்கோ அல்லது பந்து வீசுவதோ ஏன் பர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்று பிச்சைக் கூட எடுக்க விடமாட்டார்கள். அதிகம் போனால் டாஸ் போடுவது அல்லது அம்பயரிங் செய்வது இதுமாதிரி ஏதாவது கொடுப்பார்கள்.

ஜிம் ஏதுமில்லாத சிறுகிராமங்களில்தான் என் சிறுவயதும் தயிர்சாதங்களும் நகர்ந்தன. நகர்விட்டு கிராமத்திற்கு நாங்கள் குடியேறிய போது நான் இரண்டாம் வகுப்பு. உன்னோடது நீர் உடம்புடா.. சத்தே கிடையாதுங்கிறேன் என்பான் ஒருத்தன். அதென்னடா ஊதுகாமலை வந்தவனாட்டம் இருக்கு கன்னம் என்பான் இன்னொருத்தன். இளம்பிராயத்து நண்பர்களில் யாரும் சட்டைப் போட்டு திரிவதில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. எலும்புகளை எண்ணிவிடலாம்; நரம்புகள் புடைத்த வலுவான வேகமான கிராமத்துச் சிறுவர்கள். சுட்டெரிக்கும் வெயிலில் கூட சட்டையில்லாமல்தான் சுற்றுவார்கள். என் வீட்டிலோ படுக்கும்போதுகூட சட்டையோடுதான் கிடப்பேன். அணைக்கட்டின் சாய்வில் ஓடிவந்து ஏறி உச்சியடைவது, பனையேறி கிளி பிடிப்பது, தோட்டத்து டீஸல் என்ஜினை இயக்குவது மாட்டைப் பிடித்துக் கட்டுவது எல்லாம் எனக்கு வேடிக்கைப் பரிச்சயம் மட்டும்தான்.

அவ்வூரில், வீட்டுப் புறக்கடையிலேயே யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிம்மை நிறுவியிருந்தேன். பழைய அம்மி, விறகு தரிக்கப் பயன்பட்ட மரத்துண்டு, சைக்கிளில் குடங்களை சுமக்கப் பயன்படுத்தும் கயிறு (அதனுள் ஒரு கம்பி - pull ups செய்ய) இப்படியாக வீட்டிலிருந்த உபரிகளைக் கொண்டு அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. மாலை பள்ளிதிரும்பியதும் நேரே புறக்கடைதான். வேர்க்க விறுவிறுக்க என்று எழுத ஆசைதான்.. இருந்தாலும் பாலகன் அளவில் சிறப்பாகவே செய்தேன் என நம்புகிறேன். அம்மாவுக்கு நான் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தால் உடனே புளங்காகிதத்தின் உச்சியை எட்டிப்பிடித்து விடுவார்கள். மீண்டும் சமையல் கடவுள் அவதாரம்தான்.. பொரித்தல் அவித்தல் வறுத்தல் என அம்மி குளவிகளைத் தூக்கி களைத்து வரும் மகனுக்காக தயார் நிலையில் இருப்பார். உண்மையில் சிறப்பாக தேகப்பயிற்சி செய்தவர் அம்மாதான்.

உடலில் உறைந்துள்ள நிலத்தன்மை, மரபுத்தன்மை, உணவுக் கலாச்சாரம், தொழில்முறை மற்றும் உறவுகள் அடிப்படையிலேயே நமக்கான ஆரோக்கிய உடலமைப்பை நாம் தேர்ந்து கொள்ள வேண்டும் எனப்படுகிறது.

ஜிம் மெம்பர்ஷிப் எக்ஸ்பைரியாகப்போவுது.. அதனாலதான் கபாலத்தைத் தாண்டி இப்படிக் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய் விழுகின்றன!

Tuesday, February 25, 2014

ஸென்-னும் கூட இரு ஜென்மங்களும்


முதலில் ஒரு உண்மையான ஸென் (ZEN):

தொழிற்சாலையின் ஒரு முக்கியமான இயந்திரம் இயங்க மறுத்துவிட்டதாம். அதைப் பழுதுபார்க்க ஒரு வல்லுநரை வரவழைக்கப்பட்டார். மேம்பட்ட ஆடைகளும் சிறப்பானதொரு பெட்டியுமாக வந்திறங்கினார் வல்லுநர். ஆலையினுள் உருட்டிவிடப்பட்ட எலுமிச்சம்பழம் போல் சென்றார். ஒரு சிறு சுத்தியை எடுத்துக் கொண்டார். பழுதுப்பட்ட இயந்திரத்தின் மேல் லேசாக ஒரு தட்டுத் தட்டி, 'ம்.. இப்ப இயக்குங்கள்' என ஏவினார். சுவிட்ச் தட்டப்பட்டதும் இயந்திரம் ஜோராக இயங்கித் தொடங்கிவிட்டது. நிறுவனத்தினருக்கு மெத்த மகிழ்ச்சி. வேலை சுலபமாக ஒரே நொடியில் முடிந்து விட்டதே என்று.

வேலைக்கான கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்கு.. ஒரு லட்சம் என்றாராம் வல்லுநர். நிர்வாகத்தினருக்கு வயிற்றுக்குள் எலுமிச்சம்பழம் உருட்டிவிட்டது போலாகி விட்டது. 'சுத்தியலை எடுத்து சும்மா ஒரு தட்டு தட்டியதற்கு ஒரு லட்சமா' என்றதற்கு,

அவர் சொன்னது: 'தட்டியதற்கு இல்லை.. எந்த இடத்தில் தட்ட வேண்டுமோ அங்கு தட்டியதற்குதான் ஒரு லட்சம்'

இப்போது ஒரு வெண்மையான ஸென்:

சிவாவுக்கு கார் வாங்க ஆசை வந்தது. பெங்களூரின் அதிமுக்கிய சாலையோரத்தின் ஸிடி கடைக்குச் சொந்தக்காரர். அரைவட்டமாக அமைக்கப்பட்ட ஒரு லிப்ட் போன்ற அமைப்புள்ள மரத்தினாலான சுவருகளுடைய சிறு அறையது. அனைத்து இந்திய மொழிகளும், ஆங்கில மொழியும் அவரது கடையின் அலமாரியில் வட்ட சதுரமாக மினுக்கும். வீட்டில் டிவி-இருப்பதாலும், டிவிடி-கள் அத்தியாவசியமாக இருப்பதாலும் சிவாவும் நம் வாழ்வில் அத்தியாவசியமாகிறார்.

ஸிடிக்களால் பழக்கமாகிவிட்டிருந்த என்னை கார் வாங்க அழைத்துக் கொண்டார். கார் என்றால் பழைய கார் அல்லது ஏற்கனவே பக்குவப்படுத்தப் பட்ட வாகனம்.

என்னிடம் ஓட்டுநர் உரிமம் மட்டுமே உண்டு.. 1998ல் ஸ்டீரிங்-க்கு கீழேயே கியர் மாற்றி உள்ள (column mounted gear shift) அம்பாஸிடரை கடினப்பட்டு இயக்கி உரிமச் சான்றிதழைப் சம்பாதித்திருந்​தேன்.அன்று விட்ட ஸ்டீரிங் அதற்கப்புறம் கைப்பற்றும் வாய்ப்பு வரவேயில்லை. மேற்படி சம்பவம் நடைபெற்றதோ கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து. கியர் மாற்றிகள் வேறு வடிவங்கள் பெற்றுவிட்டன. நானும் கம்ப்யூட்டரில் வீடியோ கேம்களில் மட்டும் கார் ஓட்டுபவனாக உலகையும் மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். இப்பின்னணியை முழுமையாக சொல்லியும் சிவா நான் உடன் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

'பாஸ்.. நீங்க சும்மா வாங்க. நானே ஓட்டிக்கிறேன். என்ன? எனக்கு லைஸன்ஸ் கிடையாது.. அதுதான் உங்களது இருக்கே!'

என்னே சாமார்த்தியம்! சிவா காட்டிய அவசரத்தைப் பார்த்தால் நாளை முதல் கார் உற்பத்தியே நின்று விடுவதுபோல இருந்தது. நம்மை நம்பியும் ஒரு மனுஷன் எனத் தெம்பாகவும் இதமாகவும் இருந்தது. மறுநாள் - சனிக்கிழமை. தேர்ந்தெடுத்த நல்ல உடுப்புகளாகப் பார்த்து அணிந்து கொண்டு ஓட்டுநர் உரிமத்தையும் எடுத்துக் கொண்டு ஸிடி கடைக்கு சென்றேன். பின் வாகனம் வாங்குமிடத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்கினோம்.

அதுவொரு ஊர்திப் பணிமனையாக இருந்தது. பல வண்ணங்களின் பழைய வாகனங்கள் தூய்மையாக நின்று கொண்டிருந்தன. இதில் ஏதோவொன்றில் சிவா என்னை ஏற்றிச் செல்வார் என்ற நம்பிக்கைப் பூண்டேன். சட்டைப் பையிலிருந்த உரிமத்தை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டேன். வாகன விற்பனையாளர் எங்களை அங்கிருந்த மாருதி ஸென்னிடம் (Maruti ZEN) இட்டுச் சென்றார்.

'இதுதான் சிவா.. உங்களோட கார்'

சிவா முகத்தில் புன்னகை பூத்தது. நான் ஜன்னல் வழியே காரின் ஸ்டீரிங்கை பார்த்தேன் - கியர் மாற்றி கீழே இருந்தது. சிவா சாவியைப் பெற்றுக் கொண்டார்.. பக்கத்தில் நான் அமர சிவா அந்த வெண்மை நிற ஸென்னை இயக்கினார். இயக்கினார் என்றால்.. சாவியால் வாகனத்தை இரண்டு மூன்று முறை இரும வைத்தார் எனலாம். பிறகு ஒரு மாதிரியான நகர்த்தலில் வண்டி சாலைக்கு வந்துவிட்டது. இன்னமும் முதல் கியர்தான் விழுந்திருந்தது. சிவா முகத்தில் வேர்வை கொட்டத் துவங்கியிருந்தது. குளிரூட்டியை இயக்கக் கூட மறந்தவராய் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ஸென்னில் இன்னும் மூன்று கியர்கள் இருந்தன. பாவம் எவ்வளவு வேர்க்குமோ?

வண்டியின் இன்ஜின் சத்தம் மாறத்துவங்கியது.

'சிவா.. போதும்! இரண்டாவது கியருக்கு மாத்துங்க'

'ஓ..! அப்படியா... இதோ' என்று இரண்டாவதுக்கு மாற்ற முயற்சித்தார்.. இந்த மாற்றம் நடந்துக் கொண்டிருக்கையில் பாருங்கள், வாகனம் அப்படியே சாலையிலிருந்து நழுவி ஓரமாக செல்லத்துவங்கியது. இப்படி கியர் மாற்றினால் வண்டி சாலையிலிருந்து கீழிறங்குகிறது.. கீழிறக்காமல் நேராக வண்டியை ஓட்டினாலோ வண்டியே நின்று போகிறது. ஆகவே, முடிந்த மட்டும் வாகனத்தை சாலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம் என்று முடிவெடுத்து இரண்டாவது கியரிலேயே பெங்களூர் சாலையில் ஜென் உருண்டது.

வண்டி இப்படியே உருண்டு கொண்டிருக்க.. இரண்டு இடையூறுகள் எங்களுக்காக காத்திருந்தன.

இடையூறு எண் 1:

சரியாக ஃப்ரேஸர் டவுன் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு முன்னால் அது நிகழ்ந்தது.

அங்கொரு ரயில் பாலம் உண்டு. அதனடியில் இதர வாகனங்கள் கடந்து பின் கொஞ்சம் ஏற்றமான சாலை​​யைக் கடக்க வேண்டும். இதர வாகனவோட்டிகளுக்கு இது குமிழ் உறையின் (bubble wrap) குமிழை உடைப்பது போல எளிதானதுதான்.. சிவாவுக்கு மட்டும் அது சிக்கலாக அமைந்து விட்டது. கார் ஏற்றத்தில் ஏறுவதற்குள் நின்று போனது. நின்றது மட்டுமல்லாமல் பின்னோக்கி ​வேறு சென்றது.. சென்றது மட்டுமில்லாம் பின்னால் வந்த வாகனத்தின் மீது உரசியும்விட்டது. இரண்டு கார்களுக்கும் நடுவில் குமிழ் உறை இருந்திருந்தால் சில குமிழ்கள் உடைப்பட்டு போகுமளவுக்கான மீச்சிறு விபத்து.. அவ்வளவுதான்.

பின்னாலிருந்த வாகனத்திலிருந்து ஓட்டுநர் வேகமாக இறங்கி வந்தார். மீண்டுமொருமுறை ஓட்டுநர் உரிமத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். எதற்கென்றுதான் தெரியவில்லை.

'என்ன மாதிரி வண்டி ஓட்டுகிறீர்கள்'

சிவாவிடம் ஆங்கிலத்தில் கோபமாகக் கேட்டார். அநேகமாக சிவாவின் வியர்த்துக் கொட்டிய பரிதாப முகம் அவர் கோபத்தை மாற்றியிருக்க வேண்டும். எப்படியோ போங்கள் என்று சென்று விட்டார். பிறகு ஒருவாறு ஆசுவாசமாகி வண்டியை இயக்கி அடுத்த இடையூறை நோக்கி உருண்டோம்.

இடையூறு எண் 2:

நெரிசலான போக்குவரத்துள்ள நாற்சந்திப்புச் சாலையின் சமிக்ஞை விளக்குக்கு கொஞ்சம் முன்னே ஸென் திரும்பவும் இயக்கமிழந்து நின்றுபோனது! பலமுறை சாவியால் உசுப்பியும் அதனால் இரும மட்டுமே முடிந்தது. பச்சை விளக்கு வேறு விழுந்துவிட்டது. பின்னாலிருந்த வாகனங்கள் ஒலிப்பானை (horn) அலறவிட்டன. ஏதோ காரில் வேறு எந்த பாகங்களும் இல்லாமல் ஒலிப்பான் மட்டுமே இருப்பது போல் விடாமல் இரைய ஆரம்பித்து விட்டனர். சிவா என்னிடம் திரும்பினார். என் ஓட்டுநர் உரிமத்தை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

'பாஸ்...'

'ம்??'

'வண்டியில் பெட்ரோல் இல்ல போலிருக்கு. கொஞ்சம் இறங்கித் தள்ளறீங்களா? தப்பா நெனச்சுக்காதீங்கோ'

எதுவும் பேசாமல் வண்டியிலிருந்து இறங்கி பின்புறம் சென்றேன். இன்னும் பின் வரி​சை வாகனங்கள் ஒலிப்பானை முழக்கிக் கொண்டிருந்தன. சிவப்பு விளக்கு இன்னும் சில நொடிகளில் விழக்கூடும். ஸென் என்று நேர்த்தியாக பொறிக்கப் பட்ட எழுத்துக்கள் வெயிலில் மினுங்கின. அருகாக உள்ளங்கைகளை வைத்து பலம் கொண்ட மட்டும் உந்தித் தள்ளிளேன். வாகனம் உருள ஆரம்பித்தது. சமிக்ஞை விளக்கைப் பார்த்தவாறே வாகனத்தைத் இன்னும் வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன். சிவா சிறப்பாக ஸ்டீரியங்கைப் பற்றிக் கொள்ள, நான் தள்ள ஒருவாறு வாகனத்தை ஓரங்கட்டினோம்.

'உஸ்ஸ்.. ஸப்பாடா'

வாகனத்திலிருந்து சிவா இறங்கி வியர்வையைத் துடைத்தெறிந்தார். தேர்ந்தெடுத்துப் போட்டுக் கொண்டு வந்து ஆடைகளுக்கும், ஓட்டுநர் உரிமத்துக்கும் ​சொந்தக்காரனான நான் அவரை விட அப்போது வேர்த்திருந்தேன்.

தட்ட வேண்டிய இடம்:

சிவா அருகிலிருந்தது பெட்ரோல் கிடங்குக்குச் சென்று பெட்ரோல் தருவித்துக் கொண்டு வந்தார். இப்போது அப்பெட்ரோலை ஸென்னுக்குள் ஊற்றினால் மட்டும் போதும். வாகனத்துக்குள் அமரும் பாக்கியம் பெற்றவனாக வீடு திரும்பிவிடுவேன். ஆனால் பாருங்கள், இருவருக்கும் ஸென்னின் பெட்ரோல் மூடியை எப்படித் திறப்பது என்று தெரியவில்லை. வாகனத்தின் உள், வெளி, மேல், கீழ் எங்கு தேடியும் பெட்ரோல் மூடியைத் திறப்பதற்கான பொறியைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பின் சிவா வேறு நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்க, பொறி சிக்கிவிட்டது - ஓட்டுநர் இருக்கைக்கு கீழே. இலேசாக அதை மேலேத் தட்ட, புத்தகம் போல் அழகாக மூடி திறந்து கொண்டது.

ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதை ஒருபோதும் யாரிடமும் சொல்வதில்லை என்று அன்று சபதமிட்டுக் கொண்டேன்.

Tuesday, February 11, 2014

But Where's My Pumps?

கிரிலோஸ்கர்வாடி. மஹாராஷ்ட்ராவிலுள்ள ஒரு தொழில்நகரம். இதை கிரிலோஸ்கர் பம்புகளின் தாய்வீடு எனலாம். இந்த பிரம்மாண்டமான பம்பு தொழிற்சாலையில் கல்லூரி இறுதியாண்டு பிராஜக்ட் செய்தால் சீறும் சிறப்புமாக இருக்குமே என்ற எண்ணம் முதலில் எனக்கே உதித்தது.

வாரம் முழுதும் சாம்பல் நிற சீருடையில் திரிய விதிக்கப் பட்ட மெக்கானிக்கல் பிரிவு. பிராஜெக்ட் நண்பர்கள் என நாங்கள் நால்வர். கல்லூரியிலிருந்து அவ்வளவு தொலைவு பயணித்து பிராஜெக்ட் செய்த பெருமை பெற்ற குழு எங்களுடையது. யாருக்கும் ஹிந்தி தெரியாது.. தெரிந்திருந்தாலும் பிரயோசனப் பட்டிருக்கிறாது என்றே நினைக்கிறேன். கிரிலோஸ்கர்வாடியில் மேலதிகம் பேசப்பட்டதெல்லாம் மராத்தியும் பான்பீடாவும்தான்.

முன்னேற்பாடாக, நண்பனின் உறவினர் ஒருவர் சிபாரிசு செய்ய சம்மதத்திருந்தார். இருந்தும் சிபாரிசு முழுமையாக கிரிலோஸ்கரை வந்தடையாததால் எங்களை ஒரு சந்தேகத்தோடுதான் உள்ளனுமதித்தார்கள்.

வாடியின் வளாகத்துக்குள் ஓர் ஊரே அடைப்பட்டு இருந்தது. தொழிற்சாலை, குடியிருப்புகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, அங்காடி, நீச்சல்குளம், பூங்கா.. இப்படி! அங்கு அருமையாக பேணப்பட்டு வந்த பயணியர் விடுதி ஒன்றிருந்தது. அது தொழிற்சாலைக்கு வரும் விருந்தினர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் பிற கிளைகளிலிருந்து வரும் அலுவலர்கள் போன்றோர் தங்குமிடமாக இருந்தது. கல்லூரி மாணவர்களாயிருந்த எங்களை எப்படி வகைப்படுத்துவது என்ற குழப்பம் கிரிலோஸ்கர் இருந்திருக்கும் போல. போகட்டும் என்று பயணியர் விடுதியில் தங்க அனுமதித்தார்கள்.

விடுதியில் ஒரு உணவகம் உண்டு. இழைத்து இழைத்து பராமரிக்கப்பட்ட உணவகம். உணவின் நுண்கூறுகளும் ஆரோக்கியத்தின் அனைத்து நுணுக்கங்களும் கடைத்தேறிய ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட உணவுகள் மட்டுமே அங்கு பரிமாறப்பட்டன. காலையுணவென்றால் ரொட்டியும் வெண்ணையும் அல்லது ஆம்லெட், கூட சுடச்சுட தேநீர். மதியம் உணவு ரொட்டி, சாதம், பலவகை பயறுகள் அடங்கிய சாலட்.. இப்படி! கிரிலோஸ்கர்வாடி-பிராஜெக்ட்டுக்கு யோசனை கூறிய என்னை, இந்த ஒரே காரணத்திற்காக நண்பர்கள் மன்னித்தனர்.

உணவத்தில் சிலசமயங்களில் எங்களுடன் வேறு சிலரும் உணவருந்த வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும் விற்பனைப் பிரதிநிதிகள் அல்லது உயர் அலுவலர்களாயிருப்பார்கள். அதிகம் போனால் ஒரு நாள் அல்லது கூட சிலநாட்கள் தங்கியிருப்பதுண்டு. நாங்களோ பலவாரங்களாகவே விடுதியின் காலை ரொட்டி முதல் இரவுச் சப்பாத்தி வரை உண்டு ஒரு நிரந்தர வாடிக்கையாளர் தொனியில் உலாவி வந்தோம்.

பிராஜெக்ட் என்ன செய்வது என்று இன்னும் ஒரு பிடி கிடைக்கவில்லை. காலையுணவு ஆனதும் பம்பு தொழிற்சாலையில் இடது வலது என்று வெளிநாட்டுப் பயணிகள் போல சுற்றிவருவோம். சிறிது நேரத்தில் பசிக்கவேறு ஆரம்பித்து விடும். பிறகென்ன.. நேராக உணவுவிடுதிதான். உணவகத்தில் வேலைப் பார்த்த பரிமாறுவோர், சமையல்காரர், காவல்காரர் என அனைவருக்கும் பழகிய முகங்களாயிருந்தோம். சைகையாலேயே இது ரொம்ப நல்லாயிருக்கு.. இன்னொரு ப்ளேட் வேணும் இதுதான் அந்த வீர மராத்தியர்களிடம் நாங்கள் அதிகம் மேற்கொண்ட சம்பாஷணை.

ஒரு இரவு நேரம். உண்டு முடித்திருந்தோம். உணவகத்தில் இருந்த விருந்தினர் புத்தகத்தை பொழுது போக்காக எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தோம். தங்கிய பயணிகள் விடைபெற்றுச் செல்லும் போது விடுதியின் தரத்தைப் பற்றிய கருத்துக்களைப் பதிந்திருந்தார்கள். ரொட்டி அற்புதம், சாலட் பிரமாதம், சமையல்காரர் கில்லாடி, பரிமாறுவோரின் பாசம் என பலவாறான பாராட்டுகளாய் நிறைந்திருந்தது புத்தகம்.

அப்புத்தகத்தில்தான் வாழ்வின் உன்னதமான ஒரு தத்துவத்தை ஒருவர் எழுதி விட்டுச் சென்றிருந்தார். அவர் அநேகம் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்திருக்கக் கூடும். பம்புகள் வாங்க வந்துவிட்டு அவை தயாரித்து ஒப்படைக்கும் வரை விடுதியில் தங்க நேர்ந்திருக்கக் கூடும். அவர் விருந்தினர் புத்தகத்தில் எழுதியிருந்தது இதுதான்:

'Food is good.. but where is My Pumps???' 

அவர் ஒரு காரியப் புலியாகவும் இருந்திருக்கக் கூடும்! ஒரு வழியாக பிராஜெக்ட் முடித்து விட்டு ஊருக்குக் கிளம்பும் போதுதான் தெரிந்தது. நாங்கள் உண்ட காலைரொட்டி முதல் இரவு சப்பாத்தி வரைக்கும் ஒன்று விடாமல் குறித்து ஒரு பில்லை நீட்டினார்கள். அப்போதுதான் புரிந்தது அசல் காரியப் புலி யாரென்று!

டிஸ்கி:
இப்பதிவுக்கு தமிழில் தலைப்பிட முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன்!

Monday, January 27, 2014

ஒள்​ளே உடுகரு..!

பெங்களூரில் சேக்ஷாத்ரிபுரத்தின் முதல் பிரதான வீதியின் ஒரு சிறு அறையில் தனியனாக வாழ்ந்து வந்தேன். வீட்டுச் சொந்தக்காரர் கன்னடத்தினர். மேல்மாடியில் அவர்கள் குடியிருப்பு. எனது பிழையான கன்னடத்தை நான் கொடுக்கும் வாடகையின் பொருட்டுப் பொறுத்தருளி வந்தனர். வீட்டுக்காரம்மாளிடம் நல்ல பையன் என்ற பேர் கூட வாங்கியிருந்தேன்
ஒரு சமயம் சொந்தவூர் சென்று திரும்பினேன். இடைப்பட்ட நாளில் வீட்டுக்காரம்மாளின் கணவர் அகால மரணமடைந்திருந்தார். வயது அறுபதுக்கு மேலிருக்கும். நான் வாடகை கொடுக்கப் போகும் சாக்கில் துக்கம் விசாரித்து விட்டு வரலாம் என்றத் திட்டத்தோடு மாடிக்கு சென்றேன். வீட்டுக்காரம்மாள், என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டாள்.
நென் எஜமானரு செத்ததோகிதாரெ...’
என்று வாயில் சேலைத் தலைப்பைக் கதக்கிக் கொண்டு தேம்பினார். திருத்தமான பொட்டோடு இருந்த நெற்றியின் வெறுமையைப் பார்க்க எனக்கும் என்னவோ போலிருந்தது. அதுவரை அச்சுப்பிச்சு வார்த்தைகளை மட்டும் கொண்டு வளர்ந்து (வளர்த்து) வந்த என் கன்னடத்துக்கு ஒரு சோதனை எனலாம். கன்னடத்தில் துக்கம் விசாரிக்க வேண்டிய நிலைமை. நினைவிலிருந்த எல்லா கன்னட வார்த்தைகளிலிருந்து நல்லதாகப் பொறுக்கி, அழுது கொண்டிருந்த அம்மாளைத் தேற்றும் பொருட்டு நான் சொன்னது இது:
ப்ச்ச்.. பிடிறி.. ஒள்ளே உடுகரு செத்தோகிப் பிட்டிதாரே..!!’
வாயில் துணியைக் கதக்கி தேம்பிக் கொண்டிருந்தவர் அழுகை சட்டென்று நின்று போனது போலிருந்தது. ஒரு மாதிரி மர்மான புன்னகை குடிவந்தது போலிருந்தது அம்மாளின் முகம். அதற்கு மேலும் துக்கம் விசாரிக்க வேண்டாமென்று அமைதியாக வாடகையைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இருந்தும் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நண்பரிடம் நடந்ததைச் சொன்னார். வஞ்சகமில்லாமல் சிரித்துவிட்டு அவர் சொன்னது:
நீங்கள் துக்கம் விசாரித்து எல்லாம் சரிதான்.. ஆனால் நல்ல மனுஷன் என்பதற்கு பதிலாக...... நல்ல பையன் செத்துப் போயிட்டாரே-ன்னு சொல்லியிருக்கிறீர்கள்!’
உண்மையிலேயே எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.


Wednesday, January 22, 2014

காமிக்ஸ் இல்லாத தமிழ் இலக்கிய உலகம்..!


37வது சென்னை புத்தக கண்காட்சி.. ஒரு சனிக்கிழமை சென்று 20 புத்தகங்கள் போல அள்ளிவந்தேன். இலக்கியம், எலக்கியம், தீவிர இலக்கியம், பிக்ஷன், நான்-பிக்ஷன், நீயும் பிக்ஷன் என ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் போல.

ஆண்களைவிட பெண்கள், குழந்தைகள் அதிகம் வந்திருந்தது போலிருந்தது. எனக்கு இதுவே முதல் செ.பு.க விஜயம். மொத்தம் 777 கடைகள்... அதைவிடுங்கள்.. இத்தனை புத்தக சங்கமத்தில் ஒரேயொரு தமிழ் காமிக்ஸ் கடை மட்டுமே இருந்தது.. முத்து காமிக்ஸ். பால்யத்தை மீட்கும் செயலாக சில காமிக்ஸ்கள் வாங்கினேன். முன்னை விட அழகான வடிவமைப்பில், பெரிய அளவில் அச்சிடப்பட்ட படக்கதைகள். முத்து-லயன் காமிக்ஸுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. இன்னும் 80களில் வந்த அதே ஹீரோக்கள் இன்றைய மறுபதிப்பிலும். அங்கங்கு கடைகளில் அமர் சித்திர கதா நூல்கள் இருந்தாலும் அவைகள் கதை மற்றும் தொழில்நுட்ப அளவில் ஈர்க்கவில்லை.

மேலும் இன்னும் நம் சித்திரக்கதை உலகம் வெளிநாட்டுகளிலிருந்துதான் சரக்கை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. நமக்கென தனி ஹீரோ, கதை சொல்லும் பாணி, ஓவியம் மற்றும் தொழில்நுட்பம் இல்லை எனலாம். அமர் சித்திர கதா இந்த அளவில் நன்கு செயல்பட்டு வருகிறது.. பிரதாப முதலியார் சரிதம், சீவக சிந்தாமணி போன்ற இலக்கிய வகைகளை பிரசுரித்திருக்கிறார்கள்.

தமிழ் காமிக் உலகம் மிகவும் பின்தள்ளியிருக்கிறதோ என தோன்றுகிறது.. சிறுவர்களிடம் இலக்கிய வாசிப்பை அறிமுகப்படுத்தும் மிக முக்கிய கருவியாக காமிக்ஸ் இருக்கின்றன. காமிக்ஸ்கள் சீரான கதியில் ஒரு வாசகனை தேர்ந்த இலக்கிய வாசிப்புக்கு நகர்த்துகிறது.

மார்வல் மற்றும் டிஸி காமிக்குளின் ஆதிக்கம் ஹாலிவுட்டில் மிக அதிகம். காமிக் ஹீரோக்களின் மிகச்சிறந்த இரசிகன் ஹாலிவுட் எனலாம்.சூப்பர் மேன் முதல் பார்ப் வயர் வரை.. தமிழில் பிதிக்கப்படும் காமிக்ஸ்கள் மிகச் சொற்பம். நம் பாடத்திட்டங்களிலும் படக்கதைகளுக்கு இடமில்லை. பத்திரிக்கைளிலோ அல்லது வாராந்திர இதழ்களிலோ மிகக் குறைந்த சதவீதத்தில் தான் - அதுவும் துணுக்குகளாக மட்டுமே - பிரசுரிக்கப் படுகின்றன. சித்திரக்கதைகள் என்ற உலகம் பற்றி அறியாமலேயே ஒரு தலைமுறை மெதுவாக தாய்மொழி இலக்கியத்தை வாசிக்கும் பழக்கத்தை இழக்கிறதோ?

சிறுவர்கள் ஹாலிவுட் படங்களிலும் கார்ட்டூன் சேனல்களில் மட்டுமே தங்கள் சாகஸ ஹீரோக்களை கண்டு ஆறுதலடைகிறார்கள் என தோன்றுகிறது.

Saturday, March 5, 2011

பின்பனிக் கால்கள்


நீங்களும் நீயுமாக
ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்!

உங்களுக்குப் பாந்தமாகவே
வழியெங்கும் பூக்களும்
வட்டமாய் நிலவும் கூட.

இலகுவாய் இறங்கும்
பியானோ கட்டைகள் போல
கால்கள் சாலையில்.

அப்புறம் எப்போதும் போல் உங்களை அள்ளித்
தொடரும் என் கயமை நிறைந்த நிழல்
பின்னேயே வேவுபார்த்தும் வருகிறது.

எனைப் பற்றி நீ வாய்த் திறக்க முயலும் போதெல்லாம்
அவன் அதரம் பற்றுகிறான்.

நிழல் இன்னும் நெருக்கமாகிறது..!

நீங்களும் நீயும் துஞ்சிய ஒரு அவகாசம்..
(ஆஹா.. அவகாசம் என்பது எவ்வளவு அழகாக ஒலிக்கிறது...!!!)
நிழலை விடுத்துப் பிரியும் நிழலாக
எனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஏனோ தெரியவில்லை....
எனக்கு நானே தோள்த்
தடவி சமாதானம் சொல்லப் பார்க்கிறேன்.

ஹ....!!!
தானே தன்னைத் தழுவும் கைகளின்
தண்மை வேறெங்கும் சிக்காது..!