Tuesday, August 25, 2015

சித்த வைத்தியம் - சில குறிப்புகள்


சித்த வைத்தியம் - சில குறிப்புகள் (அவசியம் படிக்கணும் அருமை நேயர்களே!)

1. சித்த வைத்தியர்களை இருவகைகளாக பிரிக்கிறார் மேலமலை காட்டுச்செடி சாறுபிழிந்த ஓலைச் சித்தர். முதல்வகை முழுக்க நரைத்த தாடி கொண்ட வகுடுமுனி வகையறாக்கள். மிகவும் பொறுமைசாலிகள். உதாரணமாக வல்லாரைக் கீரையைப் பறித்து லேகியப் பக்குவம் சொல்லி முடிப்பதற்குள் கீரை பொடித்துவிடும். இரண்டாம் வகை வல்லக்கோட்டை பகட முனி வகையறாக்கள். தாடியின் நீளத்தை பொறுத்து பொறுமை குணம் கொண்டவர்கள். சீராக ஆங்கிலமும் பிற மருத்துவ தத்துவங்களும் கூட கைவரும்.

2. உங்களுக்கே தெரியும்: தமிழின் அ​னைத்து முன்னணி ​தொ​லைகாட்சிக​ளெங்கும் வலப்பக்கம் ஒரு தாடியும் இடப்பக்கம் ஒரு லேடியுமாக சித்த மருத்துவம் விளம்பர இடைவெளிகளிடையே காலையில் ஒளிபரப்பாவது. இதில் விசேஷம் என்னவென்றால் நீங்கள் ரசத்திற்கு பூண்டு தட்டுவதை வாயை மூடிக்கொண்டு செய்தால் அது சாதாரண சமையல் ஆகிறது (அதுக்கு டிவியில் வேற டிபார்ட்மெண்ட்டு உண்டு)..அதையே பூண்டின் தாவரவியல், உயிரியல் மற்றும் பொறியியல் பெயர்களை சொல்லிக் கொண்டே கல் குழவியில் பொறுமையாக இடித்தால் அது சித்த மருத்துவமாகிறது.

3. தமிழர்களின் தலைமைப் பண்புகளில் முக்கியமானது ஒன்று: பாட்டி மடியில் போட்டுக் கொண்டு சொன்ன கதையை அப்படியே பாஹுபலி என்ற பெயரில் சினிமாவாகப் பார்த்துவிட்டு 'ச்சே ச்சான்ஸே இல்லப்பா! இங்கிலீஷ்காரன் பிச்சை வாங்கணும்' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான். சித்த வைத்தியத்திற்கும் இது கச்சிதமாகப் பொருந்தும். நாமறிந்த பாட்டி வைத்தியத்தையும் ஒரு தாடிக்காரர் தவணை முறையில் வார்த்தை-வார்த்தையாக தொலைக்காட்சியில் சொன்னால்தான் நாம் கவனித்து குறிப்பெழுதுவோம். நெஞ்சு விடைக்க 'முடக்கத்தான் கீரை ஒரு பார்ஸேல்ல்' என்று கீரைக்காரம்மாவிடம் சொல்லி வைப்போம்.

4. ஒரே சித்த மருந்திற்கு ஒரு வைத்தியக்காரர் சொன்ன அதே பக்குவத்தை பிற வைத்தியரிடம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. எவ்வளவு ஆத்திரமான சண்டையென்றாலும், கராத்தே வீரர்கள் சண்டைக்கு முன் உன்னோட ஸ்கூல் என்ன? ஸ்டைல் என்ன? என்பனவற்றை விசாரித்துவிட்டுதான் வீடு கட்டவே தொடங்குவார்கள். அது போலவே சித்த சிலபஸும் பல பல வகைகள் உண்டு. கிள்ளி எடுத்தல், வேரோடு பிடுங்குதல் என தாவரக் கொலையிலேயே  வைத்தியருக்கு வைத்தியர் வேறுபாடுகள் உண்டு. எல்லாம் சித்தமயம்.

5. புரிந்து கொள்ளுங்கள் அரு​மை ​நேயர்க​ளே.. நம் உடலின் வாதம் - பித்தம் - கபம் இதை சரியான விகிதத்தில் வைக்கவே வைத்தியர்கள் பெரும்பாடு படுகிறார்கள். பசுநெய்யில் புளிவிடுவது, இஞ்சியை தேனில் உரைப்பது, வெள்ளை வெங்காயத்துடன் மாதுளஞ்சாறு பிழிவது, விளாம்பழத்துடன் வெல்லம்இடிப்பது என இதெல்லாம் நம் வா-பி-க கட்டுப்பாடுக்காக வைத்தியர்கள் தங்கள் உடலையும் ஆன்மாவையும் பரிசோதனையாக்கி நமக்குத் தந்தவையாகும். ஆகவே, எந்த வைத்தியர் என்ன எப்படி எவ்வளவு சாப்பிடச் சொன்னாலும், நம் இன்னபிற நோய்த்தன்மைகளையோ அல்ல பிற மருத்துவ காரணிகளையோ கண்டுகொள்ளாமல் ஒரு விழுது வாய்க்குள் விட்டுக்கொள்ளவும்.

6. சித்த வைத்திய முறையில் சாதிக்க முடியாதது அல்லது குணமாக்க முடியாது என்று ஒன்று இல்லவே இல்லை. எளிமையாக சொல்லவேண்டுமென்றால் கொசகொச கூந்தல் முதல் இந்திரிய நஷ்டத்தை சரிகட்டும் லேகியம் வரை அனைத்தும் இங்குண்டு. நீங்கள் எத்தனை மண்டலங்கள் மருந்து உட்கொண்டும் கொசகொச கூந்தலோ அல்லது இந்திரிய நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை என்றாலும் அகத்தியர் அருளிய சித்தத்தை குறை கூறலாகாது. உங்கள் உடலமைப்பு அல்லது நரம்பு மண்டலம் இந்த வைத்திய முறைக்கு உகந்தாக இல்லையென்று நீங்களே உங்களை சமாதானம் செய்து கொள்ளவேண்டும்.

7. அலோபதியில் தீராத நோய்கள் கூட இங்கு தீர்த்து வைக்கப்படும். எதுவாயினும் உங்களின் மனம் தளராத நம்பிக்கையும் தொடர்ச்சியாக மருத்துவரை சென்று பார்ப்பதுமே முக்கியம். மருத்துவர் அநேகமாக  சிசிஆர்எஸ் அல்லது சிசிஆர்ஐ மூலம் சித்த வைத்தியமும் கூடவே வர்மக்கலை, யுனானி, சேற்று தெரபி அல்லது மாற்று மருத்துவத்தில் டிப்ளமோவும் வாங்கியிருக்கக் கூடும். ஏதோவொரு கலவையான அணுகுமுறையில் ஏதாவது ஒரு சுபதினத்தில் உங்கள் நோய்க்கான சிகிழ்ச்சை​யை அவர் கண்டறியக் கூடும். ஆகவே பொறுத்திருங்கள்; பொறுமைதான் சித்த-நோயாளியின் முக்கிய பண்பாகும்.