நீங்களும் நீயுமாக
ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்!
உங்களுக்குப் பாந்தமாகவே
வழியெங்கும் பூக்களும்
வட்டமாய் நிலவும் கூட.
இலகுவாய் இறங்கும்
பியானோ கட்டைகள் போல
கால்கள் சாலையில்.
அப்புறம் எப்போதும் போல் உங்களை அள்ளித்
தொடரும் என் கயமை நிறைந்த நிழல்
பின்னேயே வேவுபார்த்தும் வருகிறது.
எனைப் பற்றி நீ வாய்த் திறக்க முயலும் போதெல்லாம்
அவன் அதரம் பற்றுகிறான்.
நிழல் இன்னும் நெருக்கமாகிறது..!
நீங்களும் நீயும் துஞ்சிய ஒரு அவகாசம்..
(ஆஹா.. அவகாசம் என்பது எவ்வளவு அழகாக ஒலிக்கிறது...!!!)
நிழலை விடுத்துப் பிரியும் நிழலாக
எனை நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஏனோ தெரியவில்லை....
எனக்கு நானே தோள்த்
தடவி சமாதானம் சொல்லப் பார்க்கிறேன்.
ஹ....!!!
தானே தன்னைத் தழுவும் கைகளின்
தண்மை வேறெங்கும் சிக்காது..!