Thursday, April 29, 2010

மருதாணி நிலாக்களும் S-ல் ​தொடங்கும் ஒரு ​பெயரும்

'ஏய் என்னடி பண்றே?'
'ச்சூ.. காலை உதறாம இருங்க'
'என்னது.. மருதாணியா? ​எனக்கெதுக்குடி மருதாணி?'
'ம்.. உடம்பில கொஞ்சமாவது சிவப்பு இருக்கட்டுமேன்னுதான்'
'​ஜோக்கு..?? மருதாணி வச்சா ஜல்ப்பு புடுச்சுக்கும்பா எனக்கு'

வினோத்​சொல்வதைக் கேளாமல் அவன் கால்களுக்கு மருதாணி இடத்​தொடங்கினாள் சுஜாதா. நகங்களின் பச்சையம் நாளை சிவப்பாக விடிந்துவிடும் என்றும் நம்பினாள்.

தலைப்பற்ற கவிதையின் மறந்து​போன ஒரு வரியை நினைவூட்டுவது​போலவே இருக்கின்றன அவர்களின்​பொழுதுகள். வினோத் கட்டிடவியல் ​பொறியாளன். ​பெரிய​அடுக்குமாடிக் கட்டிடங்களின் சுவர்களுக்கு கண்ணாடி​பொருத்துவது. ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் என்பான். கத்தார் கம்பெனி அழைப்பின் பேரில் சுஜாதாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

சுஜாதாவுக்கு வந்த புதிதில் கத்தார் புதிராக இருந்தது. வேறொரு மண்ணிலிருந்த செடியைப் பிடுங்கிப் பாலையில் நட்டுவிட்டாற்​போன்று இருந்தது. காலை அலாரமாக பாங்கொலி, கறுப்பு புர்கா கண்களாகப் பெண்கள், மஞ்சள்​வெயில், நீண்டநிழல்கள், ஈச்சமரங்கள், ஈச்சம்பழங்கள், ஈச்சம், ஈச்சம், ஈச்.... திணை மாறினாலும் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையை தவறவிடுவதில்லை.

பாலை என்பது நிலம் அல்ல.. வாழ்க்கை. ஆரம்ப நாட்களில் ​வினோத்தோடு வெளியே போகும்​போது குழந்தையாக உணர்வாள். எங்கேயாவது-மிஸ்-ஆயிடுவேனோ பயமாக அவனைப் பற்றிக்​கொள்வாள்.

'இந்த பில்டிங்குக்கு நான்தான் ஸ்டரக்சுரல் க்ளேஸீங் டிஸைன் பண்ணினேன்.
அதோ அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அதுக்கு கூட. அப்புறம் இது..' என்று கட்டிடங்களை உயிருள்ள மனிதர்கள் போல் அறிமுகப்படுத்துவான்.

அந்தக் கட்டிடங்களின் புறவெளிக் சதுர கண்ணாடிகளில் சுஜாதா தெரிவாள். தானொரு சதுரங்கக் காய்ப் போல நகர்ந்து கொண்டிருப்பதாகப் படும். நான் ராணி.. நீ ராஜா என்று மனதுக்குள் சிரிப்பாள்.

கத்தார் மணி 8 ஏஎம். இப்போது சுஜாதா வீடு ​பெருக்குகிறாள். டிவியில் ஏ நிலவே நிலவே... என்று அஜீத் மழையில் நனைந்து ​கொண்டிருந்தார். பெருக்கி முடித்து குப்பைக் கூடையில் போடும்​போது கவனிக்க முடிந்தது. சிவப்புத் துணுக்குகள் கீழே கிடந்தன. வினோத் நகம் ​​வெட்டிப்​போட்டிருக்கிறான்.

தினங்கள் முன்பு வைத்த மருதாணிச் சிவப்பு ஒட்டிய நகத்துண்டுகள். குப்பையைப் போட்டுவிட்டு நகத்துணுக்குகளை அள்ளிக் கொண்டாள். உள்ளங்கையில் வைத்துப் பார்த்தாள்... பிறைகள், சிவப்பு பிறைகளாகத் தெரிந்தன.

அப்போது கார்த்திக் நினைவுக்கு வந்தான். கார்த்திக் எட்டாம் வகுப்புத் தோழன். உன் விரல் நகம் கீறு... என் உயிர் தவம் தீரும் என்று முடியுமாறு ரூல்டு பேப்பரில் லவ் லெட்டர் கொடுத்தவன். அதற்கு சுஜாதா முன்னுரை தெளிவுரை முடிவுரை பகுதிகள் உள்ளடக்கியதாக நான்கு பக்க அளவில் பதில் கடிதம் வரைந்து கொடுத்தாள். சுருக்கமாக, படிக்கிற வேலையைப் பாரு.

கார்த்திக் மறுநாள் பள்ளிக்கு வரும்​போது ஒட்டுத்தாடி ஒன்றை ஒட்டிக்​கொண்டு வந்தான். வகுப்பில் யாருக்கும் முதலில் அடையாளம் ​தெரியவில்லை. அப்புறம் புரிந்து​கொண்டு சிரிப்படங்க நிமிடங்களாயிற்று. சுஜாதாவாலும் அடக்க முடியவில்லை.

சாயங்காலம் கார்த்திக்கை தனியே சந்தித்தாள் சுஜாதா.

'ஏன் ரொம்ப அப்ஸெட்டா?'
'ம்' என்று முகத்தைத் தொங்கப்​போட்டுக்​கொண்டான்.
'நான் ஓகே சொல்லாததாலா?'
'நீ ஓகே சொல்லாதது கூட பரவாயில்ல சுஜா.. ஆனா.. ஆனா.. நாலு பக்கத்துக்கு ரிப்ளே எழுதிக் கொடுத்தியே.. அதைப் படி.. படிச்சிட்டு.. என்னால.. என்னா...ல'
என்று நெஞ்சைப் பிடித்துக்​கொண்டு அழுவது​போல நடித்தான்.
சுஜாதா அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தாள்.
'சுஜா.. சுஜா.. சிரிக்கறதானே.. என்னைப் பிடிக்கும்தானே.. ஐ லவ் யூ தானே.. ப்ளீஸ் ​சொல்லுப்பா..'

புலிப் பிடியிலிருக்கும் முயலின் நடுக்கம் கொண்டதாக இருந்தது அக்கோரிக்கை.

'போடா லூஸு' என்று எள்ளிவிட்டு சிரிப்பொலி சுடர விலகி ஓடினாள் சுஜாதா.

கையிலிருக்கும் மருதாணி நகத்துணக்குகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு சிறு நகத்துணுக்கு பள்ளித் தோழனை நினைவூட்டப் போதுமானதாக இருக்கிறது. இதழோரம் சிக்கனமாய் ஒரு புன்னகை. சுஜாதாவின் ஒரு பாலைப் பகலை நிரப்ப அது போதுமானது.

- 2 -
கனடா. டொரண்டோ. இரவு 12 மணி. கருஊதா புகையாக மாறிவிட்ட வானம். பனி பெருகும் மாலை. கார்த்திக் இரண்டாவது பெக் விஸ்கியை இறக்கிக் கொண்டிருந்தான். அறையின் ஹீட்டர் ரீங்காரத்தைவிட படுக்கையறையிலிருந்து வரும் மனைவி அனுவின் குறட்டை ​போஷக்கான டெஸிபல்களில் இருந்தது.

இப்போது மனைவியும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். தினமும் அலுவகத்திலிருந்து இவனைத் திட்டுவதற்காக புது வார்த்தைகளையும் உபரியாக சம்பாதித்துக் கொண்டு வருகிறாள்.

'இந்த மாதிரியான இடைவெளி எனக்குப் பிடிக்கலே அனு. லெட்ஸ் ஸால்வ் இட்..'


'ஸால்வ் பண்றதா? எப்படி கார்த்தி?'

'ஏதாவது அவுட்டிங், பிக்னிக், இல்லே ட்ரிப் டு இண்டியா அல்லது கவுன்ஸலிங்.. மென் ப்ரம் மார்ஸ் வுமன் ப்ரம் வீனஸ்ல சொல்ற...'

'கட் த க்ராப் கார்த்தி.. நமக்கான ஸொல்யூஷன் இன்னும் கண்டுபிடிக்கப் படலே. அவர் ப்ராப்ளம் ஈஸ் எக்ஸ்க்ளூஸிவ்.. நீயோ நானோ அதைக் கண்டுபிடிச்சாத்தான் உண்டு.'

'Let's find it then....'

'ஓ! இன்ட்ரஸ்டிங். ​ஸொல்யூஷன் - உனக்கு கண்டுபிடிக்க வக்கில்லை.. எனக்கு கண்டுபடிக்க இஷ்டமில்லை. காலையில் நான் நேரத்திலேயே கிளம்பணும். இப்ப குட்​ நைட்'

'டின்னர்???'

'ஐ ஹேட். நீ ப்ரிஜ்ஜில் ஏதாவது இருக்கான்னு மோப்பம் பிடி. பை'

இப்படி கனடா பனிக்கு கதகதப்பாக இருக்கும் இவர்கள் உரையாடல்.

மூன்றாவது லார்ஜ் உள்ளே இறங்கியிருந்தது. இரண்டாவது பெக்கிற்கு மேல் நீ குடிக்கும் அளவை பெக் என்றே சொல்வாயானால் நீ குடிப்பது வெறும் தண்ணீர் என்பது கார்த்திக் அனுமானம். அனுவின் குறட்டை இன்னும் பெரிதாக இருந்தது.

எரிச்சல் எரிச்சலாய் வந்தது. தாடையைச் சொரிந்துக் கொண்டான். Marriage postpones suicide. And, suicide postpones marriage என்று நினைத்துக் கொண்டான். தாடியைச் சொரிந்தால் எல்லாரும் அறிவாளிகள்தான். அதனால்தான் பெண்கள் முட்டாள்களாயிருக்கிறார்கள் என்பது கார்த்தியின் உபரித் தத்துவம். இதற்கும் மூன்றாவது ​லார்ஜ்ஜுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்!

என்ன சொன்னாலும் சரிக்குசரி நிற்கிறாள். அனுவைப் பொறுத்தவரையில் கார்த்திக் ஒரு காஸனோவா. பெண்பித்தன். நம்பிக்கைத் துரோகி.

'கார்த்திக்.. நீ மற்ற பெண்களை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு உன்னை ஒரு இலவச விளையாட்டு மைதானமாக்கி விட்டாய். உன்னுடன் பேசும் பெண்கள் எல்லோரையும் காதலிகளாக்கி விடலாம் என்ற தன்னம்பிக்கை ஆச்சரியமூட்டுகிறது'

'ஏன் இப்படியெல்லாம் பேசறே அனு.. நான் அந்தமாதிரி இல்லே'

'ஹும்.. உன்னை நான் உளவு பார்ப்பேன் என்ற எண்ணமே உனக்குப் புளங்காகிதத்தை தரும் என்று அறிவேன். உனக்கு அந்த சிறு மகிழ்ச்சிக் கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் இப்போ உறுதியா இருக்கேன். ஐ வோன்ட் ஃபோலோ யூ எனி​மோர் டியர்'

'நீ என்னை அலட்சியப்படுத்தறே. இப்பெல்லாம் உன்னைப் பார்த்தாலே பதட்டமாயிடறேன். ​ உண்மையா சொல்றேன்.. நான் உனக்குப் பயப்படறேன் அனு'

'கார்த்திக், மனைவியை அடித்து துவம்சம் செய்யும் மூன்றாந்தரக் கணவர்களைக் கூட நம்பலாம். ஆனால், மனைவிக்குப் பயப்படுகிறேன் என்று புளுகிற கணவர்கள்தான் உலகிலேயே மிகமிக மோசமானவர்கள்'

அதற்கு மேல் பேச வலுவற்றவனாக விலகிவிடுவான்.

கார்த்திக் நான்காவது லார்ஜ்ஜை கிளாஸில் நிரப்பிக்​கொண்டான்.

நான் பெண்பித்தனா, காஸனோவா-ஆ கேள்விகள் அவனைச் சூழ்ந்து​கொள்கின்றன. தனிமையின் சுழற்படி மதுவில் மத்தாகிச் சுழல்கிறது... ​நுரைகள் நூதனமானவை. நுண்ணியவை. நுரைகள் எப்போதும் பேசுவதில்லை. நுரைகள் பேசுவதைக் காட்டிலும் வாழ்ந்து விடுகின்றன.

மது நிரம்பியக் கோப்பையைக் குடிக்காமல் பார்த்துக்​கொண்டு இருக்கிற போதை நிதானமானது. நினைவுகளைப் விசிறிவிடும் உன்னதமான நிலை அது.

அலுவலகத் தோழி ஸெலினா, கனடாவில் வசிக்கும் கல்லூரித் தோழி உஷா, அவ்வப்போது சாட்டுக்கு வரும் சவீதா, பழைய கம்பெனி நண்பி ரேஷ்மா, கல்லூரிக் காதலி பிருந்தா இப்படி ​பலமுகங்கள் விழுந்த குளமாக தளும்புகிறான். எட்டாம் வகுப்பு படிக்கும்​போது ஒருவளிடம் காதல் கடிதம் கொடுத்தது நினைவுக்கு வந்தது. மது வாழ்க. ஆனால் கார்த்திக்கு அவள் பெயர் நினைவுக்கு வரவில்லை.

நான்காம் லார்ஜ்ஜை குடித்து முடித்தான். இந்த நிரப்பல் அவள் பெயரை மீட்டுவிடும் என்று நம்பினான். சுனிதா, சுசீலா, சங்கீதா, S-ல் தொடங்கும் ஒரு பெயர் என்ற மட்டில் மது அவனுக்கு உதவியது.

எஸ்ஸில் தொடங்கும் ஏதோவொரு பெயர் என்று நினைத்துக்​கொண்டான். அப்போது கார்த்திக்கு விக்கலெடுத்தது. அடித்த விஸ்கியால் இருக்கும் என்று எண்ணிக்​கொண்டான்.

48 comments:

கபீஷ் said...

செம! நல்லாருக்கு கதை

கபீஷ் said...

படம் அருமை. முதல் கமெண்ட்ல சொல்ல மறந்துட்டேன்.:-):-)

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ஜெகா.

ஆனால் உங்க பிராண்ட் இல்லை.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

//த​லைப்பற்ற கவி​தையின் மறந்து ​போன ஒரு வரி​யை நினைவூட்டுவது ​போலவே//
//கருப்பு புர்க்கா கண்களாக பெண்கள்//
// தானொரு சதுரங்கக் காய்ப்போல நகர்ந்துக்கொண்டிருப்பதாகப்படும் //

ஜெகநாதன் டச்!

// இரண்டாவது பெக்கிற்கு மேல் நீ குடிக்கும் அளவை, பெக் என்றே சொல்வாயானால்,நீ குடிப்பது வேறு தண்ணீர்//
அட ஆமா....!

Nathanjagk said...

மிக்க நன்றி கபீஷ் :))

அன்பு பாரா.. அ​ழைத்தீர்கள்.. பதில் ​கொடுக்கமுடியாததற்கு மிக வருந்துகி​றேன். உண்​மைதான் ​கொஞ்சநாளாக ​வேறு பிராண்ட் அடித்து வருகி​றேன். ப்ளஸ் பல்​வேறு குழழழப்பங்கள்... அடுத்து அடி சர​வெடிதான் :)) நன்றி ராஜா!

Nathanjagk said...

ப்ரபஞ்சப்பரியன்.. உரிய ​நேரத்தில் தவறைச் சுட்டிக்காட்டி என் புவியியல் மயக்கத்​தைத் தீர்த்ததுக்கு மிக்க நன்றி. வழக்கம்​போல தூண்டிலில் நான் விரும்பிய மீன்க​ளை கச்சிதமாப் பிடித்து விட்டீர்கள்.
​பெக்கலிருந்து லார்ஜ்ஜுக்கு ​போல்வால்ட் ​போவது​போல நாமும் ஒருநாள் அமர்​வோம்!

நேசமித்ரன் said...

ஜெகன்

கதை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு விதம் ஆனால் உள்ளடுக்குகளில் ஒளித்திருக்கும் கண்ணிகள் பின் சென்றால் விரியும் வெளி ...

தொடர்ந்து எழுதுங்க ஜெகன்
நஷ்டம் உங்களுக்கு இல்ல

பத்மா said...

பா​லை என்பது நிலம் அல்ல.. வாழ்க்​கை'
இது ஒரு சோத்துப்பானையின் பருக்கை

நினைவுகளூடே ஓடும் வாழ்க்கை .
புதிதாய் போடப்பட்ட தாரோடில் வழுக்கும் காராய் நடை .
ரொம்ப enjoy பண்ணி படிச்சேன் ஜெகன்.

Raju said...

அடிச்சு ஆடுறீங்கண்ணே..!
அடிக்கடி ஆடுங்கண்ணே..!

பனித்துளி சங்கர் said...

மிகவும் நன்றாக இருந்தது . அருமை . இடை இடையே சில கட்டங்கள் வைத்து எழுதி இருப்பது சற்று வாசிப்பதற்கு சிரமமாக இருந்தது . சற்று கவனிக்கவும் . புரிதலுக்கும் , பகிர்வுக்கும் நன்றி !

விஜய் said...

புரியாமல் எடுக்கும் விக்கல்களுக்கு விளக்கங்கள் புரிந்தது.

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

Vidhoosh said...

ஒரு பாக்கெட் நிறையா பட்டர் பாப்கார்ன் சாப்டா மாதிரியே இருக்கு...

பல்லிடுக்கில் சோளத் துணுக்கும் கல்யாணமும் ஒண்ணுதான்...

அந்தப் பொண்ணு பேரு "சம்ஜௌதா" (समझौता) அப்டீன்னு வைச்சுக்கலாம் . :-))

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே படிக்க ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும் உங்க வார்த்தை பிரயோகங்களும் வசனங்களும் ரொம்ப ஷார்ப். சாதாரண கதையை பச்சக்குன்னு ஒட்டிக்கிற மாதிரி பண்ணிட்டீங்க.

☀நான் ஆதவன்☀ said...

//தொடர்ந்து எழுதுங்க ஜெகன்
நஷ்டம் உங்களுக்கு இல்ல//

அதே அதே

Ananya Mahadevan said...

அந்தப் பொண்ணு பேரு "சம்ஜௌதா" (समझौता) அப்டீன்னு வைச்சுக்கலாம் //
சூப்பர் விதூஷ்!!
ஜகன்
வழக்கம் போல அருமையான ப்ரெஸெண்டேஷன். படத்தை கொஞ்ச நேரம் ரசிச்சு பார்த்துண்டு இருந்தேன். அருமை!

சிநேகிதன் அக்பர் said...

//ரண்டாவது ​பெக்கிற்கு ​மேல் நீ ​குடிக்கும் அளவை ​பெக் என்​றே ​சொல்வாயானால் நீ குடிப்பது ​வெறும் தண்ணீர் என்பது கார்த்திக் அனுமானம்.//

இது கார்த்திக்கோட அனுமானம் மாதிரி தெரியலை.

//அப்போது கார்த்திக்கு விக்க​லெடுத்தது. அடித்த விஸ்கியால் இருக்கும் என்று எண்ணிக்​கொண்டான்.//

அவ்வளவு வேகமாகவா போகுது.

மாம்ஸ் ஒரே வரியில் சொல்வதானால் டிபிக்கல் ஜெகா பதிவு.

கலக்கல்.

Mythees said...

:))

Vidhoosh said...

பா.ராஜாராமும் நீங்களும் பக்கத்து வீடா? :))

- விதூஷ்.

Anonymous said...

சூப்பரா இருக்கு.

Menaga Sathia said...

ம்ம்ம் கலக்கல்...

Raju said...

விதூஷ் பின்னூட்டமும் அநன்யா வழிமொழிவதும் குழப்புது. மரமண்டை ஒளிச்சேர்க்கை செய்ய மறுக்கிறது.

Baski.. said...

கலக்கல்

க. சீ. சிவக்குமார் said...

அட ! நல்லா அதி நவீனமா இருக்குப்பா கதை. - சிவகுமார்.

ஸ்ரீராம். said...

பிரமாதமான வார்த்தைப் பிரயோகங்கள் ஜெகன். கதை என்பதை விட இடையில் வந்த அந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன்...

க ரா said...

கதை ரொம்ப நல்லாருக்குங்க.

ஹேமா said...

பெக் அடிச்சது "ஜே"யா இல்ல நானான்னு தெரில.அவ்ளோ மதுவாடை - மயக்கம்.

கதையைவிட இடையிடை உங்கள் மதுத்துவம் அருமையிலும் அருமை.

அப்போ...சும்மா விக்கல் வராது.
இனி விக்கல் வரும்போதெல்லாம் நினைச்சுக்கணும்ன்னு சொல்றீங்க ஜே!

adhiran said...

good one jegan. sema flow.

Aathira mullai said...

ஒரு சிறுகதையில் இரு சிறுகதை... அங்கங்கே தத்துவங்கள் அருமை ஜெகன்...
Marriage postpones suicide. And, suicide postpones

மென் ப்ரம் மார்ஸ் வுமன் ப்ரம் வீனஸ்ல

இரண்டாவது பெக்கிற்கு மேல் நீ குடிக்கும் அளவை, பெக் என்றே சொல்வாயானால்,நீ குடிப்பது வேறு தண்ணீர்
ஆமா எப்படி இதுபோன்ற த்துவங்கள் எல்லாம் உதிக்கிறது தங்களுக்கு? நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல சிறுகதை படித்தேன்..பாராட்ட வார்த்தைகள் இன்றி மெளனமாக....

Sai Ram said...

அவளை பொறுத்தவரை அவன் பெயர் மட்டுமல்ல ஒவ்வொரு நினைவும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அவனுக்கோ எல்லாமே கலங்கலாய் தெளிவின்றி மறந்து போக கிடக்கின்றன. மிலன் குண்டேராவின் ஒரு நாவலில் இப்படி சந்திக்கும் இருவர் இதே சூழலில் குழம்புவார்கள். ஆண் அவளை தெரிந்ததை போலவே நடித்து கொண்டிருப்பான் கடைசிப்பக்கத்திற்கு ஒரு பக்கம் முன்னர் வரை.

ஒரு சிறு விஷயம் ஒரு பெரும் நினைவை இழுத்து வரும் அதிசயம் நம் மனது.

எதை எதையோ மனதினில் கிளறி விடுகிறது உங்கள் கதை. நல்லா இருக்கு.

கலா said...

கையிலிருக்கும் மருதாணி
நகத்துணக்குகளைப் பார்த்துக்
கொண்டே இருந்தாள். ஒரு
சிறு நகத்துணுக்கு பள்ளித்
தோழனை நினைவூட்டப்
போதுமானதாக இருக்கிறது.
இதழோரம் சிக்கனமாய் ஒரு
புன்னகை. சுஜாதாவின் ஒரு
பாலைப் பகலை நிரப்ப அது
போதுமானது.\\\\\\\\\

கார்த்திக்கை தோழனாய் நினைத்த..
சுஜாத்தா
சுஜாத்தாவைக் காதலியாய் நினைத்த..
கார்த்திக்....
வாழ்க்கைச் சுழச்சியில் தோழனும்,காதலியும்
பிரிந்து.வெவ்வேறவர்களுக்கு கணவனும்,
மனைவியும் இப்போது!!

சுஜாத்தாவின் “பகலை” மட்டும் நிரப்பப்
போதுமான கார்த்திக்கின் நினைவு.{அப்போது மட்டும்}
தன்
கணவன் மாலையில் வீடு திரும்பினால்....
விடுபட்டுப் போகும் அவள் நினைவு.
அவள் {கார்த்திக்கை} காதலிக்கவும் இல்லை,
ஏமாறவும் இல்லை,வெறும் தோழமைதான்
அதனால் ...அவளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை
கணவனுடன் மகிழ்சியான வாழ்க்கை அவளுக்கு!!

கலா said...

படுக்கையறையிலிருந்து வரும்
மனைவி அனுவின் குறட்டை
போஷக்கான டெஸிபல்களில்
இருந்தது.\\\\\

திட்டுவதற்காக புது வார்த்தைகளையும்
உபரியாக சம்பாதித்துக்
கொண்டு வருகிறாள்.\\\\

'ஓ! இன்ட்ரஸ்டிங். ஸொல்யூஷன் –
உனக்கு கண்டுபிடிக்க வக்கில்லை.
. எனக்கு கண்டுபடிக்க இஷ்டமில்லை
. காலையில் நான் நேரத்திலேயே
கிளம்பணும். இப்ப குட் நைட்'\\\\\

அனுவின் குறட்டை இன்னும்
பெரிதாக இருந்தது.

எரிச்சல் எரிச்சலாய் வந்தது\\\\\

இப் பூசல்கள் நிறைந்த வாழ்க்கைதான் கார்திக் உடையது
தன் துணைக்கு ஒத்துப் போகாத மனைவி அனு.

கார்த்திக் பெண்ணை,பெண்மையை மதிக்கத் தெரிந்த
ஒரு கணவன். புரிந்து கொள்ளாத ஒரு மனைவியால்....
தனிமை,கவலை,மனப் பாரங்களின் தள்ளலில் மதுவை
நாடும் ஒரு பாத்திரமாகிறானே தவிர.... அதற்கு அனுதான்
பாத்திரம்.
அனுவுடன் கூடிய வாழ்க்கை ஓட்டத்தில்..
பழைய பெண் சிநேகிதிகளை நினைக்க வைத்தது

இருந்தும் எஸ் மட்டும் வந்து.. சுஜாத்தா வர மறுத்ததா? மறந்ததா?

இதனால்,....எப்படி ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தால் வாழ்கை
நன்றாக அமையும் என்று சுஜாத்தாவும்,வினோத்தும் காட்டினார்கள்
இப்படிக் கிடைத்தால்.. வாழ்க்கைத் துணை வாழ்க்கை நரகந்தானென..
கார்த்திக்கும் ,அனு மூலமாக புரிந்து கொள்ளலாம் என்பது என் கருத்து.

Nathanjagk said...

இனிய நேசா மிக்க நன்றி!
//கண்ணிகள் பின் சென்றால் விரியும் வெளி// கன்னிகள் பின் ​சென்றால் விரியும் வெளிதான் எல்லாவுமே :))

*

அன்பு padma, தாமரை ​நெஞ்சத்தின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

*

அன்பு ராஜு.. எதை அடிச்சு எதை ஆடணும்னு சொல்லவேயில்லியே :)))

Nathanjagk said...

அன்பு பனித்துளி சங்கர்,
இந்த பெட்டிகள் இடைச்​செருகல் என் நீண்டகால தொல்லையாக இருக்கிறது.
நான் அழகி மென்பொருள் உபயோகித்து வருகிறேன்.
2. தமிழ் டைப்ரைட்டர் முறையில் தட்டச்சு செய்வது வழக்கம்
3. சில எழுத்துக்கள் டைப் செய்யும் ​போது நடுநடுவே இடைவெளி (unwanted space characters) புகுந்துவிடுகிறது.
4. விண்டோஸ் xp version 2003-க்கு முந்தைய வெர்ஷன்களில் மட்டும் இந்த பிரச்சினை (பெட்டிகள் தோன்றுதல்) இருக்கலாம் என்று நினைக்கிறேன்
5. என் அனுமானம்: பனித்துளி சங்கர் பயன்படுத்துவது Windows XP Version 2003-ன் முந்தைய வெர்ஷன்
6. சிலரிடம் இதற்குத் தீர்வு என்ன என்று கேட்டால், NHM பயன்படுத்து என்று மாற்றுவழியைத்தான் காண்பிக்கிறார்கள். என் தேவை: ஏன் அழகி பெட்டிப் போடுகிறாள்? அதை எப்படித் தவிர்ப்பது என்பதே

யாராவது உதவினால் புண்ணியம்.
வின்டோஸ் எக்ஸ்பி 2003க்கு ​மேற்பட்ட வெர்ஷன் வைத்திருப்பவர் கண்களுக்குப் பெட்டிகள் தெரியாது.

இப்போது சங்கர் கேட்டுக்​கொண்டதின்​பேரில் தேவையற்றப் பெட்டிகளை (unwanted spaces) இடுகையின் HTML Views கொண்டு திருத்தியிருக்கிறேன்.
நன்றி சங்கர்!

Nathanjagk said...

அன்பு விஜய்,
விக்கல் பற்றி திருவள்ளுவரின் இரு குறள்கள் நினைவில் உரசுகின்றன. ​தொடர்ச்சியாக வாசிக்கும்​போது அபாரமான நையாண்டியைத் தரும் இரு குறள்கள் அவை. நன்றி!

*

அன்பு Vidhoosh (விதூஷ்)
//பொண்ணு பேரு "சம்ஜௌதா" (समझौता) அப்டீன்னு வைச்சுக்கலாம்//
சம்​ஜெளதா என்றால் சமாதானம் (compromise) என்ற அர்த்தத்தில் ​சொல்கிறீர்க​ளேயானால், நான் சுஜாதாவைச் சரியாக வாசகர்களுக்கு உணர​வைக்கவில்லை என்று ​பொருள். காம்பரமைஸ் ​தேவைப்படாத ஒரு உன்னதமும் யதார்த்தமும் கலந்த வாழ்க்கையை வாழுபவள் சுஜாதா. அவளுக்கு கார்த்திக் நினைப்பு கால்நகத்துணுக்கு அளவே. ஒரு குறுநகையை ஏற்படுத்துகிறது அவன் ஞாபகம். உண்மையான அன்பு மனமுடையவர்கள் பழகியவர்கள் பெயர்களை எப்போதும் மறப்பதில்லை. பாசாங்குக்காரர்கள் அன்பை எப்போதும் யாரிடமும் எங்கேயும் பெறமுடியாது - இதுவே கதையின் மைய இழை.
மிக்க நன்றி விதூஷ் - நாமகரணத்திற்கும் சேர்த்தி :))

*

அன்புத்தம்பி ஆது,
//பச்சக்குன்னு ஒட்டிக்கிற மாதிரி பண்ணிட்டீங்க//
அன்பின் முத்தம்​போல பதிந்துவிட்ட வரிகள்!!! ​ரொம்ப நன்றி ஆது!

*

அன்பு அநன்யா
உங்கள் பிளாக் 'அநன்யாவின் எண்ண அலைகள்' (http://ananyathinks.blogspot.com) வாசித்தது பாலையைப் பற்றி எழுத பிரயோஜனமாக இருந்தது. ​ரொம்ப நன்றி!

*

மாப்ள அக்பர்,
கொஞ்சநாளா பிஸி.. அலுவலகமும் வீடும். அதனால்தான் அடிக்கடி நம் ​ரெகுலர் நண்பர்கள் / உறவினர்கள் பிளாக் பக்கம் காலடி எடுத்து​வைக்க முடியறதில்லே. இப்போ அப்ரைஸல் ​டைம் வேற. மானிட்டரைப் பார்த்து தலை ஆட்டி விரல் மடக்கி-விரித்துப் ​பேசியவாறு, மானேஜரை நான் இந்த கம்பெனியின் ஒரு தலைசி(தி)றந்த சிந்தனாவாதி அல்லது இன்ட​லெக்சுவல் என்று புரிய​வைக்கு முயன்று​கொண்டிருக்கிறேன் :))
தங்கள் வாசிப்பும் ஊக்கமும் எனக்கான இலக்கிய அப்ரைஸல். இதற்கு நான் மானிட்டர் முன்பு நடிக்க வேண்டியதில்லை என்பதில் திருப்தியாக புன்னகைத்துக் கொள்கிறேன். நன்றி மாப்ஜி!

*

அன்பு mythees நன்றி :))

*

Vidhoosh(விதூஷ்)
//பா.ராஜாராமும் நீங்களும் பக்கத்து வீடா? :))//
பக்கம் தூரம் தெரியாது!
பார்த்துப் பேச முடியாது!
அங்கும் போக முடியாது!
இங்கும் வர முடியாது!
கூகிள்-டாக்கில் பேசுவோமே!
கூடிக்குழாவி மகிழ்வோமே!
நீங்களும் இங்கு சேருங்கள்!
நெஞ்சம் நிறையும் பாருங்கள்!
....... ஹிஹிஹீ. நாற்றங்கால் (http://nattrangaal.blogspot.com/)​ரெகுலரா வாசிக்கிறோம்ல.. அதான் :))))

*

சின்ன அம்மிணி
//சூப்பரா இருக்கு// அட... ஆமா! நன்றி :))))

*

அன்பு சஷிகா, //ம்ம்ம் கலக்கல்...// ஏன் சமையல்குறிப்பை பாதியிலேயே நிறுத்தீட்டீங்க :))

♠ ராஜு ♠ said...
//விதூஷ் பின்னூட்டமும் அநன்யா வழிமொழிவதும் குழப்புது//
அட சம்ஜெளதா என்றால் காம்பரமைஸ் என்றும் ஒரு பொருள் உண்டு. பட் அவிக என்ன ​நெனச்சாங்கன்னு எனக்கும் ​தெரியலப்பு:))
//மரமண்டை ஒளிச்சேர்க்கை செய்ய மறுக்கிறது.//
கவிதை!! ​​அப்ப ஹேர்கட்டிங் எப்படி? க்ரைண்டரை சுத்தவிட்டு தலைய உள்ள விட்டுடறதா:))

*

நன்றி Baski..

Nathanjagk said...

அன்பு இராமசாமி கண்ணண்
வாசிப்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

*

அன்பு ஹேமா
//அப்போ...சும்மா விக்கல் வராது.
இனி விக்கல் வரும்போதெல்லாம் நினைச்சுக்கணும்ன்னு சொல்றீங்க ஜே!//
ச்சீர்ஸ் சொல்கிறது பின்னூட்டம்.
விக்கல்கள் சும்மா வராது.. வந்தால் ஒரு வாய்த் தண்ணி குடிக்காமல் ​​போகாது:))
சில விக்கல்கள் வருவது தண்ணியால்; சில விக்கல்கள் போவது தண்ணியால்
சில விக்கல்கள் சாமார்த்தியமானவை. என்ன செய்தாலும் தீராது.
வள்ளுவர் தும்மலை விக்கல் அணுக்கத்துடன் சில குறள்களில் எடுத்து விளையாடியிருக்கிறார்:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. (1317)
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. (1318)
புலவி நுணுக்கம் என்ற அதிகாரத்தில் வரும் இவ்விரு குறள்களும் ஒன்றின் மீது ஒன்று தும்மிக் கொள்கின்றன. அதாவது ஒன்றை​யொன்று நினைத்துக் ​கொள்கின்றன.
1317 ​சொல்வது..
தலைவனும் தலைவியும் கூடியிருக்கும் ஒரு மாலைப் பொழுது. தலைவனுக்கு தும்மல் வருகிறது. தலைவி அவனை 100 வயது சொல்லி வாழ்த்துகிறாள்.
சொல்லிவிட்டு "யோவ். நான் இங்க உங்கூடயே குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கேன். அப்புறம் எப்படி தும்மல் வருது.? மருவாதியாச் சொல்லு எந்தக் கள்ளி உன்னை இப்ப நினைக்கிறா?" என்று தலைவன் தலை​முடியைப் பிடிக்கிறாள்.
1318 ​சொல்வது..
அதே தலைவன்:தலைவி. தலைவனுக்கு இப்பவும் தும்மல் வருது. இருந்தாலும் எதுக்குடா வம்புன்னு அடக்கிட்டு உட்கார்ந்திருக்கிறான். திரும்பவும் தலைவன் தலையைப் பற்றுகிறாள் தலைவி. "ஏலேய்.. நான் உன்னை இப்ப நினைக்கிறேன்ய்யா. ஆனா உனக்கு தும்மல் வரமாட்டீங்குதே? ம். என்னா வில்லத்தனம்?" என்கிறாள். தலைவன் அப்படியே பின்னங்கால் தலையில் அடிக்க தெறித்து ஓடுகிறான்.
- ஆக, விக்கலும் தும்மலும் வந்தால் சும்மா வராது என்பதற்கு வள்ளுவமே சாட்சி!

*
அன்பு adhiran மிக்க நன்றி மகி!

*

அன்பு ஆதிரா
ஆதிரனுக்கு அடுத்தே ஆதிராவுமா?? ​பேஷ்!
//ஆமா எப்படி இதுபோன்ற த்துவங்கள் எல்லாம் உதிக்கிறது தங்களுக்கு?//
அதுதான் எனக்கே ​தெரியமாட்டீங்குது. 'வளர்ப்பு' சரியில்லே என்று மனைவி ​சொல்கிறாள். '​சேர்க்கை' சரியில்​லை என்று அம்மா சொல்கிறாள் :))
//நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல சிறுகதை படித்தேன்..பாராட்ட வார்த்தைகள் இன்றி மெளனமாக....//
மிக்க நன்றி ஆதிரா. இந்த ​மெளன பாராட்டில் ​மெத்த மகிழ்ச்சியடைகிறேன்!!!

Nathanjagk said...

Sai Ram said...
//மிலன் குண்டேராவின் ஒரு நாவலில் இப்படி சந்திக்கும் இருவர் இதே சூழலில் குழம்புவார்கள். ஆண் அவளை தெரிந்ததை போலவே நடித்து கொண்டிருப்பான் கடைசிப்பக்கத்திற்கு ஒரு பக்கம் முன்னர் வரை. //
ஒரு முக்கிய விஷயத்தை / தருணத்தை இங்கு பகிர்ந்து ​கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி சாய்!

*

அன்பு கலா said...

/அவள் {கார்த்திக்கை} காதலிக்கவும் இல்லை,
ஏமாறவும் இல்லை,வெறும் தோழமைதான்
அதனால் ...அவளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை
கணவனுடன் மகிழ்சியான வாழ்க்கை அவளுக்கு!!//
ரொம்ப சரி :)) வழக்கம்​போல் மின்னூட்டம்தான் உங்கள் பின்னூட்டம்!

//கார்த்திக் பெண்ணை,பெண்மையை மதிக்கத் தெரிந்த
ஒரு கணவன். புரிந்து கொள்ளாத ஒரு மனைவியால்....
தனிமை,கவலை,மனப் பாரங்களின் தள்ளலில் மதுவை
நாடும் ஒரு பாத்திரமாகிறானே தவிர.... அதற்கு அனுதான்
பாத்திரம்.
//
ஆனால், நான் கார்த்திக்கின் வலிகளுக்கு அவனே காரணம் என்று நினைக்கிறேன்.
எங்கும் எவரையும் எப்போதும் கார்த்திக்கால் முழுமையாக ​நேசிக்கமுடியவில்லை.
காரணம் அவனால் ஒருவர் மேல் முழு​மையாக அன்பு செலுத்தமுடியவில்லை - யார் மேலும்!
சுஜாதா - யதார்த்தமான அன்புள்ளம் ​கொண்டவள். அவள் வாழ்க்கையும் அன்புள்ளதாக அ​மைகிறது.
கார்த்திக் - அவசரகதியில் அன்பை ​வெளிப்பத்துபவன். அதே​போல நிதானமில்லாத பதட்டமான வாழ்க்கையைப் பெறுகிறான்.
அவ்வளவே!
தங்களின் புரிந்துணர்வுக்கும் ​அதன் வெளிப்படுதலுக்கும் மிக்க நன்றி கலா!

Vidhoosh said...

/./அதுதான் எனக்கே ​தெரியமாட்டீங்குது. 'வளர்ப்பு' சரியில்லே என்று மனைவி ​சொல்கிறாள். '​சேர்க்கை' சரியில்​லை என்று அம்மா சொல்கிறாள் :))///

:)) ரொம்ப ரசித்தேன்... இதை..

பின்னூட்டத்தை ஈமெயில் சப்ஸ்க்ரைப் செய்யாததால் உடனே வர முடில.

சுஜாதாவை எனக்குத்தான் பார்க்கத் தெரியலைன்னு நினைக்கிறேன். தெரில!! இப்போ படிக்கும் போது வேறமாதிரி இருக்காள் அவள். :))

மனம் ஒரு குரங்கு
தினம் ஒரு சிரங்கு

நாங்களும் படிக்கிறோமில்ல ஜெகன் பதிவுகளை :)) --- ஒன்லி ஹ்யூமர் இன்டன்டட்

ஹேமா said...

இப்பவும் தும்மிச்சு.ஒரு தும்மலுக்கு இவ்ளோ இருக்கா !இதுதான் கடைசித் தும்மலா இருக்கட்டும்.அழகா ஒரு குழந்தைக்குச் சொல்றமாதிரி பவ்யமா சொல்லித் தந்திருக்கீங்க ஜே.
நன்றி தும்மலுக்கும் உங்களுக்கும்.

Nathanjagk said...

அன்பு விதூஷ்,
பெண்ணை மையப்படுத்தி எழுதுவது அவ்வளவு எளிதாக இல்லை. சரியான வார்த்தை, சம்பவங்களின் விகிதம் என்று ஏகத்துக்கும் அலசினாலும் கடைசிவரை ஒரு திருப்தியின்மையே நிலவுகிறது.
கதையின் ஒரு கதாபாத்திரத்தை பலமுனைப்புகளில் புரிந்து​கொள்வதும் இயல்பானதே. சுஜாதா-வை நீங்கள் அணுகும் பார்வையும் சிறப்பானதே!
//மனம் ஒரு குரங்கு
தினம் ஒரு சிரங்கு//
விதூஷ்-ஆச்சே..!!!

Nathanjagk said...

அன்பு ஹேமா,
வள்ளுவத்தில் வருகிற ஒரு நகைச்சுவையான பகுதி அது. எப்போதும் மறக்காதது. அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.. குறள்களுக்கு விக்கலெடுக்குமான்னு தெரியலே :))

இரசிகை said...

//
ஒரு சிறு நகத்துணுக்கு பள்ளித் தோழனை நினைவூட்டப் போதுமானதாக இருக்கிறது. இதழோரம் சிக்கனமாய் ஒரு புன்னகை. சுஜாதாவின் ஒரு பாலைப் பகலை நிரப்ப அது போதுமானது.
//

//தனிமையின் சுழற்படி மதுவில் மத்தாகிச் சுழல்கிறது... ​நுரைகள் நூதனமானவை. நுண்ணியவை. நுரைகள் எப்போதும் பேசுவதில்லை. நுரைகள் பேசுவதைக் காட்டிலும் வாழ்ந்து விடுகின்றன.
//


remba pidiththathu...

kathaiyum:)

vaazhththukal jeganaathan sir!

இரசிகை said...

kathai vaasiththuvittu paarththa padam innum azhagaa theriyuthu:)

ஷங்கி said...

ஆனந்த விகடன் டைப் கதையாயிருந்தாலும் தம்பி ஜெகன் கதையெங்கும் விரவிக் கிடக்கிறார். படிக்க வைக்கிறார். நல்ல விறுவிறுப்பு! வழக்கம்போல உம் உவமைகள். வேறென்ன சொல்ல?!

Nathanjagk said...

அன்பு இரசிகை,
அன்பின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி! கதைக்குத் தக்க மாதிரி படங்களை நாமே தயாரித்துக் ​கொள்வதால் படங்கள் சுலபமாக இடுகையோடு கைக்கோர்த்துக் ​கொள்கின்றன. அஷ்டே :)

*

சங்காண்ணா,
ஆவி டைப் கதைதான்! இப்படி குடும்பத்தை ​மையமா வச்சே எழுதிக்கிட்டிருக்கேன். விமலா ரமணி, ஆண்டாள் பிரியதர்ஷன் லிஸ்ட்டில் ​சேர்ந்துடுவேனோன்னு பயம்மா கீது. அடுத்து ரோசாமகனை தட்தட்டி எழுப்பிடலாம்.

முனியாண்டி பெ. said...

அருமை. மிகவும் பாதித்தது.

சரவணன் said...

அந்த s -இல் ஆரம்பிக்கும் பெயர் "சம்ஜௌதா" வாக இல்லாமல் "சம்ஜாதா" (some-ஜாதா) என்று கார்த்திக் கடைசியில் compromise ஆகி கவிழ்ந்துவிடுவான் என்று நான் நினைத்துக்கொண்டால் எனக்கு கதை புரிந்தது தானே?

சரவணன் said...

அந்த s -இல் ஆரம்பிக்கும் பெயர் "சம்ஜௌதா" வாக இல்லாமல் "சம்ஜாதா" (some-ஜாதா) என்று கார்த்திக் கடைசியில் compromise ஆகி கவிழ்ந்துவிடுவான் என்று நான் நினைத்துக்கொண்டால் எனக்கு கதை புரிந்தது தானே?

Nathanjagk said...

அன்பு சரவணன்,
ஆர்குட்டில் சந்தித்தது. நீண்ட நாட்களாச்சு. நலமா?
கணக்கு தேற்றம், அறிவியல் சமன்பாடுகள், ஃபார்முலாக்களைப் போல இச்சிறுகதையும் புரிதல் நிமித்தங்கள் கொண்டிருப்பது எனக்கே இப்போதுதான் புரிகிறது.
நன்றி!