Wednesday, February 3, 2016

நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்


மனைவி அடிக்கடி எனக்கு நினைவூட்டும் வாக்கியம். நடுவில் மின்கம்பம் எப்பவும் ஞாபகம் இருக்கட்டும்! அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்தானே? அதில் அம்பியை அல்லேக்காக இரண்டு ஆட்டோக்களில் வந்து ஹைஜாக் செய்து அப்படியே கொண்டுபோய் ஒரு மின்கம்பத்தில் சாத்துவார்களே நினைவிருக்கிறதா? டொய்ங்ங்ங்-ன்னு ஒரு சத்தம் கூட கேட்கும். அப்புறம் சாக்கில் தொங்கப் போட்டு ரூல்ஸ் ராமானுத்தை பேட்பாய்ஸ் குமுறுகுமுறென்று குமுறுவார்கள். சாக்கிலிருந்து சன்னமாக தக்காளி சாஸ் வரும்வரைக்கும் குமுறுவார்கள்.

இந்த மொத்த ஸீனும் எனக்கு அப்பப்ப நினைவுக்கு வரவைப்பதற்கான மந்திரம்தான் - மனைவி சொல்லும் நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்.
சரி, எனக்கும் அம்பியாகிய ரூல்ஸ் ராமானுஜத்திற்கும் என்ன சம்பந்தம்? தயவுசெய்து படியுங்கள் உங்களுக்கும் உபயோகமாக இருக்கக்கூடும்:

1: வீட்டு குடிநீர் தேவைக்காக தலைகீழ் சவ்வூடுபரவல் தானியங்கி வடிகட்டி வாங்கினேன். அதாவது ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் (RO Water Purifier) என்பதையே தமிழில் சொல்லுகிறேன் (இப்போது உங்களுக்கு கூட என்னை சாக்குக்குள் தொங்கப் போடலாம் என்று தோணும் - தப்பில்லை)

2: இந்தியாவிலேயே ஏன் இந்த ஆசியாவிலேயே நம்பர் ஒன் என்று சொல்லக் கூடிய பிராண்டாக பார்த்து வாங்கினேன். பதினாறாயிரம் ரூபாய் விலை கொடுத்து. அதுவும் நல்ல வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியான வடிவமைப்பில் ஒரு குட்டி வெள்ளை பாண்டா கரடி மரத்தை கவ்வியிருப்பது போல சமையலறையின் சுவரில் பொருந்திக் கொண்டது.

3: சென்னை நிலத்தடி நீரை அதன்மூலம் பரிசுத்தமானதாக்கி குடும்பம் மொத்தமும் அருந்தி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம் சில வருடங்கள். நானும் ஆர்ஓ தண்ணீர் குடித்து நல்ல அம்பியாகவே இருந்து வந்தேன்.

4: ஆனால் பாருங்கள் திடீரென்று ஒருநாள் அது உங்களுக்கு உழைத்தது போதும் என்பது போல் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல்  இயக்கத்தை நிறுத்திக் கொண்டுவிட்டது. எங்களுக்கெல்லாம் நீர் ஆதாரமாக இருந்த அந்த வெண்ணிறப் பெட்டி இப்படியானது எங்கள் அனைவருக்கும் பெரு வருத்தமே.

5: பெட்டியை பழுது நீக்கும் பொருட்டு கம்பெனியிடம் பேசினோம். அடுத்த நாளே ஒரு தேர்ந்த வல்லுநர் வீட்டுக்கு வந்தார். பாவம் வந்தவருக்கு குடிக்க நீர் கூட பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டியிலிருந்து பெறமுடியவில்லை. 30 ரூபாய் கொடுத்து வாங்கிய பாட்டில் நீரையே மொண்டு கொடுத்தோம். குடித்துமுடித்து வாயைத்துடைத்து விட்டு வல்லுநர் பெட்டியை ஆய்வு புரிந்தார்

5.1: அவரது ஆய்வறிக்கை​யைக் கேட்டபின் எங்களுக்கே இயக்கம் நின்று விட்டது போலிருந்தது - ஏனென்றால் ஆர்ஓ பெட்டியின் 80% பாகங்கள் பழுதுதாகி பயனற்றதாகிவிட்டதாம்.

5.2: இந்த கரடியை நீங்கள் காப்பாற்றுவதற்கு பதில் புதுசே வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்துவிட்டு கிளம்பினார் கம்பெனியின் வல்லுநர்.

6: ஆறு மனமே ஆறு என்று கூறிக்கொண்டாலும் எங்களுக்கு நீருக்கு தினமும் 100 ரூபாய் மாதிரி செலவாகிக்கொண்டிருந்தது - கூடவே நீர் கேன்களின் தரம் கேள்விக்குறியதாக இருந்தது. மனைவி ஒருசமயம் கேன் நீருக்குள் சமர்த்தாக நீந்திக் கொண்டிருந்த சில க்க்குட்டிப்புழுக்களை மொபைல் காமிராவில் படமாக்கினார். அவர் இந்த கோணத்தில் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் டிஸ்கவரி அல்லது நேட்ஜியோ போன்ற ஏதாவது சேனலில் பணியமர்த்தப்பட்டிருக்க கூடும்.

7: இங்கேதான்.. அம்பி அந்நியனாக எழுந்தேன் என்று தெரிந்து கொள்க..! ஏன் பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டி ஏன் பொசுக்கென்று நின்றுபோனது? ஏன் ஒரு சின்ன அலாரம் கூட அது கொடுக்கவில்லை? நாங்கள் பயன்படுத்திய விதம் தவறா அல்லது பெட்டி தயாரிக்கப்பட்ட விதம் தவறா? போன்ற பல பல கேள்விகள் என்னைச் சுற்றின.

8: அந்நியனாக ஆவதைவிட ரூல்ஸ் ராமானுஜமாக மாறுவதே உசிதமாகப் பட்டது எனக்கு (உசிதமணி.. உசிதமணீ) கம்பெனி பெற்ற தரச்சான்றிதழ்கள், குடிநீருக்கான அரசு நிர்ணயிக்கும் தரக்கட்டுப்பாட்டுகள், ஆர்ஓ பெட்டிக்கு கம்பெனி அளித்திருந்த உத்திரவாதம், பெட்டி இயங்கும்முறை, நான் வாங்கிய பெட்டி பழுதான விதம் இவைகளை அலசி காயப்போட்டு இஸ்திரியும் போட்டு ஒரு ஈமெயிலை கம்பெனிக்கு அனுப்பினேன்.

9: சில நாட்களிலேயே ஒரு மண்டல மேலாளர் தொடர்பு கொண்டார்.. நான் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புதான் கோளாறு என்பதில் ராமானுஜமாக நின்றேன். நாட்கள் கழித்து வேறொரு மேலாளர் பேசினார்.. அதையே சொன்னேன்.. கூடவே கோளாறு உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதால் எழும் ஆபத்துகளையும் விளக்கினேன் அவருக்கு. அப்படியே அதை ஈமெயிலாக்கியும் அனுப்பினேன்.

10: இன்னும் சில நாட்களில் வேறொரு மேலாளர் பேசினார்.. அம்பி உங்களுக்கு இழப்பீடாக புது ஆர்ஓ பெட்டியே வழங்குகிறோம் என்றார். அதுவும் வந்தது புது பாண்டா கரடி போல சமையலறையில் அதே இடத்தில் ஒட்டிக் கொண்டது. பதினாறாயிரம் மிச்சப்பட்டது அப்புறம் நீர் கேனுக்குள் நெளியும் புழுக்களை படமெடுப்பதிலிருந்து விடுபட்டது போன்றவை மனைவிக்கு ஆறுதலாய் இருந்தாலும் - என்மேல் ஒரு பயம் வந்துவிட்டிருந்தது போல.

11: இதுபோன்று ஏதாவது தரக்குறைப்பாடுகள் சொன்னாலோ தென்பட்டாலோ உடனடியாக செயலூக்கம் பெற்றவனாகி ஈமெயில் புகார்களை சம்பந்தபட்டவர்களுக்கு அனுப்புகிறவனாகிவிட்டேன்.

12: இது அப்படியே தொடர்ந்தது - கடையில் வாங்கிய சப்பாத்தி மாவில் இருந்த மண்துகளுக்காக, வீடு பக்கத்தில் கழிவு கொட்டும் வீட்டுக்காரருக்காக, குப்பை எரித்துவிட்டுப் போகும் கார்ப்ரேக்ஷன் ஊழியருக்காக, கட்டணம் வசூலிக்கும் சாலையின் குழிகளுக்காக, குறித்த இடத்திற்கு வந்து கூட்டிச்செல்லாத வாடகைக் காருக்காக என ஈமெயில் அனுப்பிக் கொண்டேயிருந்தேன். பாருங்கள், ரூல்ஸ் ராமானுஜம் என்னுள் முழுதாக இறங்கிவிட்டிருந்தான் போலிருக்கிறது!

என்னைக் கட்டுப்படுத்தும் விதமாக மனைவி இந்த நடுவில் மின்கம்பம் இரண்டு ஆட்டோக்கள் சொன்னாலும் ஈமெயில்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன (ஒரு பயத்தோடுதான்). என்னைப் போல் இன்னும் நிறையபேர் இருப்பார்கள். தரத்தை வேண்டுகிற, குறைகளை களைய முயற்சிக்கிற அம்பிகள் எங்கும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

வலுவான மின்கம்பங்கள் நின்றாலும் ராமானுஜர்கள் தேவை நமக்கு அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது, அல்லவா?

No comments: