Tuesday, February 9, 2016

கூரை ஓவியம்


இங்கிலாந்தில் இருந்த ஒரு பேராரசிரியர், பணி முடித்து வீடு திரும்பும்போது சாலையோரத்திலுள்ள மின்கம்பங்கள் ஒன்றுவிடாமல் குடையால் தட்டிக் கொண்டே செல்வாராம். ஏதாவது ஒரு கம்பம் விடுபட்டுவிட்டால், திரும்பவும் வந்து தட்டிவிட்டுதான் வீடு செல்வராம். இது obsessive compulsive disorder எனும் மனப்பித்து. பெரிய மேதைக்குள்ளும் இப்படி ஒரு பித்து இருக்கத்தானே இருக்கும்!

விருந்துகளின் கரண்டி, முள்கரண்டி திருடுபவர்கள் உண்டு. Fight Club படம் பார்த்ததுண்டா? அதில் பிளவுபட்ட மனஆளுமைகள் (split personality) என்ற மனோவியாதியை சிறப்பாக கையாண்டிருப்பார்கள்.

இப்படி தனித்துவமான குணாதிசயம் கொண்ட மக்கள் நம் நினைவில் நிறுத்துவது ஒருவகையில் நம் மனநலத்துக்கு நல்லதுதான். பழனியில் பாலிடெக்னிக் படித்துக்கும் போது மூத்த மாணவர் ஒருவர். இயந்திரம் போன்ற உடலும் குரலும் கொண்டவர். மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்த எங்களை ரேக்கிங் என்ற பெயரில் புதுசு புதுசாக சோதிப்பார்.

முதல்முறை அவரிடம் நான் மாட்டிக்கொண்டது இப்படிதான். அறைக்கு வந்தார்.. எங்களைப் பார்த்து அலட்சியப் புன்னகை உதிர்த்துவிட்டு, இயந்திரக்குரலில் 'டே.. டூத்பேஸ்ட் இருக்கா?' என்றார். அப்பாடா வெறும் பற்பசையோடு சிக்கல் தீர்ந்தது என்று புதிதாக வாங்கிய கோல்கெட் பற்பசையை எடுத்து பவ்யமாக நீட்டினேன். பாவம், மூத்தவர் சாயுங்காலத்தில் பல்துலக்கும் ஒழுக்கங்கள் கொண்டவர் போல - என்ன சொந்தமாக வாங்கிக் கொள்ளத் தெரியவில்லையோ என்று எண்ணிக் கொண்டேன்.

பற்பசையைக் கையில் பெற்றுக் கொண்ட அவர் அடுத்து கேட்டது: 'டே.. தீப்பெட்டி இருக்கா?' பற்பசைக்கும் தீப்பெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. அறை நண்பன், ஒரு தீப்பெட்டி எடுத்து நீட்டினான்.

'அண்ணா, கரண்ட் போயிடுச்சுன்னா, மெழுகுவர்த்தி ஏத்தறதுக்காக வச்சிருந்தேணுங்ணா' என்று பவ்யமாக நீட்டினான்.

ஹேஹே என்று சிரித்தவாறே,..

'டே அந்த டேபிளை எடுத்து கட்டில் மேலே போடுங்கடா' என்றார். இப்போது எங்களுக்கே கொஞ்சம் ஆர்வம் லேசாக தொற்றிக் கொண்டது போலிருந்தது. அண்ணன் ஏதோ வேடிக்கை செய்து காட்டப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு மேஜையை கட்டிலுக்கு ஏற்றினோம். கையில் பற்பசையும் தீப்பெட்டியுமாக இயந்திர மனிதர் மேஜையின் மீதேறினார். அறையின் மேற்கூரை இப்போது அவர் கைக்கெட்டும் தூரம். பற்பசையை பிதுக்கி கூரையில் நான்கைந்து பொட்டுகள் போல வைத்தார். நாங்கள் எல்லோரும் கீழிருந்து கூரையையேப் பார்த்துக் கொண்டிருந்தோம். அநேகமாக அனைவரது வாயும் பிளந்தபடி இருந்திருக்கும் என்று இப்போது கற்பனை செய்து கொள்கிறேன்.

பிறகு ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் ஒரு தீக்குச்சி என சொருகினார். தீக்குச்சியின் மருந்துப் பகுதி கீழ் நோக்கியிருந்தது.
இப்போது, மற்றொரு தீக்குச்சியைப் பற்றினார். தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த தீக்குச்சிகள் ஒவ்வொன்றாகப் பற்றவைத்தார். தீ மேல் நோக்கி எரிந்து ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் கரிப்படலமாய் படர்ந்தது.
கீழிலிருந்து பார்க்கும் போது கூரையில் ஓட்டை விழுந்தது போன்ற கரும்பொட்டுகளாக இருந்தன.

அண்ணனார்  மேஜையிலிருந்து குதித்து இறங்கினார். நாங்கள் அவரையே ஒன்றும் புரியமால் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த விஞ்ஞான செய்முறைக்கு ஏதாவது விளக்கம் கொடுப்பாரோ என்று அனைவரும் அமைதி காத்தோம். ஆனால் அண்ணன் எதுவும் சொல்லாமல் அலங்கார விளக்குகள் அமைத்துமுடித்துவிட்டு பார்வையிடுபவர் போல மேற்கூரையை பார்த்துக் கொண்டார். திருப்திகரமாக முடிந்தது என்பது போன்ற புன்னகையுடன் எங்களைப் பார்த்தார். விளக்கம் ஏதும் கொடுக்காமல், பற்பசையையும் தீப்பெட்டியையும் மட்டும் கொடுத்துவிட்டு அண்ணன் அறையைவிட்டுச் சென்றார்.

நாங்கள் திருதிருவென்று கருகருவென்றிருந்த மேறகூரைப் பொட்டுக்களையேப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
திடீரென்று ஒரு இயந்திரக் குரல்.. அண்ணன்தான்.

'என்னங்கடா மேலேயேப் பார்த்துக்கிட்டிருக்கீங்க? பேஸ்ட் வேஸ்டா போச்சுன்னு வருத்தமா இருக்காடா?'
'........'
'பேசாம பேஸ்ட்டை மேல போயி எடுத்து பல்லு விளக்கிடுங்கடா...'
உபரியாக ஹேஹ்ஹேஹே என்ற அதிரும் இயந்திரச் சிரிப்பையும் உதிர்த்து விட்டுச் சென்றார். எல்லா அகல நீளங்களில் யோசித்தாலும் அந்த அண்ணனின் கூரை ஓவிய விந்தை இன்னும் பிடிபட மாட்டேங்கிறது.