மாட்டுவண்டியின் பருண்மையில் நெகிழ்ந்த மண்தடம் போல மனம் அப்பாவின் கையெழுத்தைப் பற்றிக் கொண்டு நினைவுகளைப் புரட்டிப் போடுகிறது.
த.நா.மி.வா (தமிழ் நாடு மின்சார வாரியம்) ஊழியருக்கு அதிகப்படியான அழகான கையெழுத்து அப்பாவுக்கு. தநாமிவா என்பதின் இருப்பு எங்கள் வீட்டில் ஒரு திடப்பொருள் போல உணரமுடிந்திருக்கிறது. இப்போதும் தநாமிவா என்று காதில்விழுவது என்னை அழைப்பது போலவே ஒலிக்கிறது.
அப்பா இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். மின்பாதை வரைபடங்கள், அலுவல் குறிப்புகள், நழுவல் குறிப்புகள்(லீவ் லெட்டர்) எழுதுவதற்காக மை அவர் பேனாவிலிருந்து ஆவியாகிவிட்டது.
முன்பு பொங்கல் மற்றும் புத்தாண்டு விழாக்களுக்கு வருடம் தவறாமல் நண்பர்கள், உறவினர்கள் என குறைந்தது 50 வாழ்த்து அட்டைகளாவது எழுதி அனுப்பிவிடுவார். வாழ்த்து அட்டைப் பரிமாற்றம் காதலர்களுக்கு மட்டும் போதும் என்று அச்சுக்கடவுள் நினைத்துவிட்டார் போல. இப்போது பொங்கல், புத்தாண்டு, தீபாவளி வாழ்த்து அட்டைகள் பார்க்க கிடைப்பதில்லை. செல்போன்களால் வாழ்த்து அட்டைகள் தங்கள் தொடர்பு எல்லைகளை இழந்துவிட்டன. செல்போன் குறுஞ்செய்திகளாக வாழ்த்துகள் பைனரி வடிவத்தில் ஸ்டாம்ப் ஒட்டப்படாமலேயே கிடைக்கிற இந்நிலையில் அப்பா கொஞ்சம் கையறு நிலையில்தான் இருக்கிறார். தற்சமயம் கிடைக்கிற பேப்பர்கள், பத்திரிக்கையில் அரிதாக கிடைக்கிற சில வெண் தீவுப்பரப்புகள், அழைப்பிதழ்களின் பின்னட்டைகள், கோவில் கணக்கு, தகவல் கோரும் விண்ணப்பங்கள் என்று கையெழுத்தைப் பதியம் செய்யவேண்டியதாயிருந்தது.
நான் பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு பார்வர்ட்டாக அனுப்புகிற கடிதங்களின் உறையில் மீண்டும் அப்பா எனக்குக் கிடைக்கிறார். குறைந்தது இரு வர்ண எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது அதில். பெறுநர், அனுப்புநர் முகவரியும் அதற்கு இடையில் சாய்த்து விழுகிற இரட்டைக் கோடுகளையும். இவற்றைத் தவிர வரையவோ எழுதவோ சாத்தியமற்ற கடித உறைகளை அப்பா ஒருகணம் நொந்திருக்கக் கூடும். ஆடிய பாதம் எழுதிய விரல்கள்!
அப்பா திருமண விழாக்களில் உணவுக்குக் கூட செல்லாமல் மெய் வருத்தி மொய் எழுதிக் கொண்டிருப்பது அநேக தடவைகள் பார்த்ததுண்டு. செய்நேர்த்தி கூடிய வைபவமாக மொய் எழுதிக்கொண்டிருக்கும் சமயங்களில் அப்பா எனக்கு வேறு நபராகத் தோன்றுவார். வேகமாகப் பதியப்படும் எழுத்துகள் உறவுச்சங்கிலியின் நிழற்படம் போலவும் தோன்றுகிறது.
அப்பாவின் கையெழுத்து அழகுதான். எத்தனை வேகமாக எழுதினாலும் அதன் சீர் குலைவதில்லை. மொய் மொய்ச்சீர் ஆவது இப்படித்தானோ?
விழா மண்டபத்துக்கு வரும் கடைசிச் சொந்தம் வரைக்கும் காத்திருந்து மொய் எழுதும்பணி கால உத்தேசமற்றதுதான். அப்படியொரு கூட்டம் தளும்பி வழிந்து தீர்ந்த பொழுதில் அப்பா எழுதி முடித்த மொய்ப்பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். பக்கத்தில் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த சுந்தரம் மாமா அப்பாவிடம்,
"மாமா, பணம் குறைவா இருக்கும் போலிருக்குதே" என்கிறார்.
நோட்டுகளை எண்ணிக்கொண்டே அப்பா,
"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது" என்று பதிலுரைத்தார். அப்போது அப்பாவும் அழகாகத் தெரிந்தார்.