Tuesday, February 11, 2014

But Where's My Pumps?

கிரிலோஸ்கர்வாடி. மஹாராஷ்ட்ராவிலுள்ள ஒரு தொழில்நகரம். இதை கிரிலோஸ்கர் பம்புகளின் தாய்வீடு எனலாம். இந்த பிரம்மாண்டமான பம்பு தொழிற்சாலையில் கல்லூரி இறுதியாண்டு பிராஜக்ட் செய்தால் சீறும் சிறப்புமாக இருக்குமே என்ற எண்ணம் முதலில் எனக்கே உதித்தது.

வாரம் முழுதும் சாம்பல் நிற சீருடையில் திரிய விதிக்கப் பட்ட மெக்கானிக்கல் பிரிவு. பிராஜெக்ட் நண்பர்கள் என நாங்கள் நால்வர். கல்லூரியிலிருந்து அவ்வளவு தொலைவு பயணித்து பிராஜெக்ட் செய்த பெருமை பெற்ற குழு எங்களுடையது. யாருக்கும் ஹிந்தி தெரியாது.. தெரிந்திருந்தாலும் பிரயோசனப் பட்டிருக்கிறாது என்றே நினைக்கிறேன். கிரிலோஸ்கர்வாடியில் மேலதிகம் பேசப்பட்டதெல்லாம் மராத்தியும் பான்பீடாவும்தான்.

முன்னேற்பாடாக, நண்பனின் உறவினர் ஒருவர் சிபாரிசு செய்ய சம்மதத்திருந்தார். இருந்தும் சிபாரிசு முழுமையாக கிரிலோஸ்கரை வந்தடையாததால் எங்களை ஒரு சந்தேகத்தோடுதான் உள்ளனுமதித்தார்கள்.

வாடியின் வளாகத்துக்குள் ஓர் ஊரே அடைப்பட்டு இருந்தது. தொழிற்சாலை, குடியிருப்புகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, அங்காடி, நீச்சல்குளம், பூங்கா.. இப்படி! அங்கு அருமையாக பேணப்பட்டு வந்த பயணியர் விடுதி ஒன்றிருந்தது. அது தொழிற்சாலைக்கு வரும் விருந்தினர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் பிற கிளைகளிலிருந்து வரும் அலுவலர்கள் போன்றோர் தங்குமிடமாக இருந்தது. கல்லூரி மாணவர்களாயிருந்த எங்களை எப்படி வகைப்படுத்துவது என்ற குழப்பம் கிரிலோஸ்கர் இருந்திருக்கும் போல. போகட்டும் என்று பயணியர் விடுதியில் தங்க அனுமதித்தார்கள்.

விடுதியில் ஒரு உணவகம் உண்டு. இழைத்து இழைத்து பராமரிக்கப்பட்ட உணவகம். உணவின் நுண்கூறுகளும் ஆரோக்கியத்தின் அனைத்து நுணுக்கங்களும் கடைத்தேறிய ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட உணவுகள் மட்டுமே அங்கு பரிமாறப்பட்டன. காலையுணவென்றால் ரொட்டியும் வெண்ணையும் அல்லது ஆம்லெட், கூட சுடச்சுட தேநீர். மதியம் உணவு ரொட்டி, சாதம், பலவகை பயறுகள் அடங்கிய சாலட்.. இப்படி! கிரிலோஸ்கர்வாடி-பிராஜெக்ட்டுக்கு யோசனை கூறிய என்னை, இந்த ஒரே காரணத்திற்காக நண்பர்கள் மன்னித்தனர்.

உணவத்தில் சிலசமயங்களில் எங்களுடன் வேறு சிலரும் உணவருந்த வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும் விற்பனைப் பிரதிநிதிகள் அல்லது உயர் அலுவலர்களாயிருப்பார்கள். அதிகம் போனால் ஒரு நாள் அல்லது கூட சிலநாட்கள் தங்கியிருப்பதுண்டு. நாங்களோ பலவாரங்களாகவே விடுதியின் காலை ரொட்டி முதல் இரவுச் சப்பாத்தி வரை உண்டு ஒரு நிரந்தர வாடிக்கையாளர் தொனியில் உலாவி வந்தோம்.

பிராஜெக்ட் என்ன செய்வது என்று இன்னும் ஒரு பிடி கிடைக்கவில்லை. காலையுணவு ஆனதும் பம்பு தொழிற்சாலையில் இடது வலது என்று வெளிநாட்டுப் பயணிகள் போல சுற்றிவருவோம். சிறிது நேரத்தில் பசிக்கவேறு ஆரம்பித்து விடும். பிறகென்ன.. நேராக உணவுவிடுதிதான். உணவகத்தில் வேலைப் பார்த்த பரிமாறுவோர், சமையல்காரர், காவல்காரர் என அனைவருக்கும் பழகிய முகங்களாயிருந்தோம். சைகையாலேயே இது ரொம்ப நல்லாயிருக்கு.. இன்னொரு ப்ளேட் வேணும் இதுதான் அந்த வீர மராத்தியர்களிடம் நாங்கள் அதிகம் மேற்கொண்ட சம்பாஷணை.

ஒரு இரவு நேரம். உண்டு முடித்திருந்தோம். உணவகத்தில் இருந்த விருந்தினர் புத்தகத்தை பொழுது போக்காக எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தோம். தங்கிய பயணிகள் விடைபெற்றுச் செல்லும் போது விடுதியின் தரத்தைப் பற்றிய கருத்துக்களைப் பதிந்திருந்தார்கள். ரொட்டி அற்புதம், சாலட் பிரமாதம், சமையல்காரர் கில்லாடி, பரிமாறுவோரின் பாசம் என பலவாறான பாராட்டுகளாய் நிறைந்திருந்தது புத்தகம்.

அப்புத்தகத்தில்தான் வாழ்வின் உன்னதமான ஒரு தத்துவத்தை ஒருவர் எழுதி விட்டுச் சென்றிருந்தார். அவர் அநேகம் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்திருக்கக் கூடும். பம்புகள் வாங்க வந்துவிட்டு அவை தயாரித்து ஒப்படைக்கும் வரை விடுதியில் தங்க நேர்ந்திருக்கக் கூடும். அவர் விருந்தினர் புத்தகத்தில் எழுதியிருந்தது இதுதான்:

'Food is good.. but where is My Pumps???' 

அவர் ஒரு காரியப் புலியாகவும் இருந்திருக்கக் கூடும்! ஒரு வழியாக பிராஜெக்ட் முடித்து விட்டு ஊருக்குக் கிளம்பும் போதுதான் தெரிந்தது. நாங்கள் உண்ட காலைரொட்டி முதல் இரவு சப்பாத்தி வரைக்கும் ஒன்று விடாமல் குறித்து ஒரு பில்லை நீட்டினார்கள். அப்போதுதான் புரிந்தது அசல் காரியப் புலி யாரென்று!

டிஸ்கி:
இப்பதிவுக்கு தமிழில் தலைப்பிட முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன்!

6 comments:

யாத்ரீகன் said...

:))))

கடைசியா என்னதான் செஞ்சீங்க ? பில்லை மட்டும் கட்டீட்டு வந்துட்டீங்களா ?

Unknown said...

பில்லை பார்த்ததும் 'நொந்து நூடுல்ஸ்' ஆகி .அங்கே சாப்பிட்டது நினைவுக்கு வந்து இருக்குமே ?

Nathanjagk said...

பில்லைக் கட்டு பெட்டியைக் கட்டு மாதிரியான சூழ்நிலை... கட்டினோம்.. கிளம்பினோம்.. நன்றி யாத்ரீகன்.

Nathanjagk said...

உண்மைதான்.. பாஷை தெரியாத ஊரில் ஃப்ரீயாக பினாயில் கொடுத்தால் கூட குடிக்கக் கூடாது என்ற படிப்பினை கிடைத்தது. நன்றி பஹவான்ஜி!

சுசி said...

அடப்பாவமே! பில் ரொம்ப அதிகமோ? ஆனால் அந்தவயதில் இதெல்லாம் ஒரு அனுபவம் தான். Food is good ! o.k where is the project? என்று உங்களை யாரும் கேட்கவில்லையா? :))

Nathanjagk said...

கேட்டார்கள் .. தானைத் தலைவராக பொறுப்பை நானே ஏற்று எல்லோருக்கும் பிடிக்கிறது மாதிரியும் ஆனால் யாருக்கும் புரியாத மாதிரியான புரியாஜக்ட் செய்தேன்...பாருங்கள் அந்த அறிவுதான் இப்பவும் கைக்கொடுக்கிறது.