Tuesday, April 19, 2016

கிட்டுவின் வார்த்தை வங்கி

jaganathank.blogspot.in

எனக்கு ஒரு கிராமத்து மாமா இருந்தார். கிட்டு என்று அழைப்பார்கள். ஒரு பத்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்து சொந்தம் என சொல்லலாம். ஒருசமயம் பள்ளி விடுமுறையில் அங்கு போகும்போது வித்தியாசமான வேலை ஒன்று கொடுத்தார். மிக இனிமையாக, தந்திரமாக பேசி எப்படியோ என்னை சம்மதிக்கவும் வைத்துவிட்டார்.

'ஏம்பா, நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீ நல்லாப் படிக்கிற பையன்கிறதாலதான் உங்கிட்ட இதைச் சொல்றேன்...'

'ம், சொல்லுங்க'

'ஒரு ரூல்டு நோட் எடுத்துக்கோ. அதில அ - போட்டுட்டு அதுக்கு கீழ அ-வில் தொடங்குகிற 50 வார்த்தைகள்... ஆ போட்டுட்டு அதில ஒரு 50.. இப்படியே உயிரெழுத்து முடிச்சிட்டு அப்புறம் உயிர் மெய்யெழுத்துக்கும் எழுதிடு'

'எல்லா உயிர்மெய்யெழுத்துமா?'

'ச்சே​சே.. எல்லாம் வேண்டாம்பா. க, ச, த, ந, ப, ம, ர, வ இது மட்டும் போதும் ஏதாவது கதைப்புத்தகம், நாவல், நியூஸ் பேப்பர் இதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையா எடுத்து எழுதினா ஈஸியா ஒரு வாரத்தில முடிச்சிடலாம்'

'ஓ!!'

'ஆமா.. க-ன்னா, அப்படியே கா, கி, கு, கெ இப்படி ஒவ்​வொரு வரிசையிலும் ஒரு 50 வார்த்தைகள் இருந்தா போதும்'

'ஆமா, எதுக்கு இதெல்லாம்?'

'நான் சினிமால வசன கர்த்தா ஆகறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு வாய்ப்பு கூட கிடைச்சிருக்கு. என்ன படம்னு உனக்கு அப்புறமா சொல்றேன். நீ எழுதித் தரறது எனக்கு ஒரு வார்த்தை வங்கி மாதிரி பயன்படும். ஏதாவது சீனுக்கு வசனம் எழுதும் போது கி-யில் இல்ல சி-யில் ஆரம்பிக்கிற வார்த்தை வேணுங்கிறப்ப இதை எடுத்து பார்த்துப் பயன்படுத்திப்பேன். மறக்காம எழுதி முடிச்சிடு. என்ன?'

ஆவ் என்று எனக்கு வந்தது.

பிறகு 80 பக்க நோட்டும் பேனாவுமாக சுற்றும் போது, அந்த ஊர் பையன்கள் சிலர் என்னைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது. ம்! கிட்டு இப்படி பல பேரை ஏற்கனவே பணிக்கு அமர்த்தி தன் வார்த்தை வங்கியைப் பலப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது.

அடுத்த வார​மே ​தேடிக்​கொண்டுவந்து ​விசாரிக்கவும்​ செய்தார்.​

'கு-வரைக்கும் வந்துவிட்டேன். இன்னும் ஒரு வாரம் வேணும்'

'குட் குட் வெரிகுட்! நிறைய புக்கெல்லாம் ரெபர் பண்ணு. வேணும்னா நம்ம ஊர் லைப்ரரியில் புக்ஸ் எடுத்துக்கோ. கிட்டு சொன்னார்னு சொல்லு'

அப்படியே கண்களை ஆகாயத்துக்கு செலுத்தி, விரலைச் சொடுக்கி யோசிப்பார்..

'கு, கூ, கெ அதுக்கப்புறம் சு, சூ, செ.. ​ரைட்! முடிச்சிடலாம் முடிச்சிடலாம்'

அப்போது அவர் கண்களில் குத்திப் பார்த்த இட்லி இன்னும் இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும் போன்ற நம்பிக்கைச் சுடரும்.

அப்படியே மேலும் சில விதிகளையும் விளக்கிச் சொன்னார் கிட்டு. அதாவது பெயர்சொல், வினையெச்சம், பெயரெச்சம் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டுமாம். ஆனால் ஒவ்வொரு எழுதுக்கும் 50 வார்த்தைகள் என்பதில் கறாராக​வே இருந்தார்.

இப்படி தினமும் எதிர்படும் போதெல்லாம் நச்சியதில் ஒருவழியாக முடித்து அடுத்த வாரத்தில் கொடுத்தேன். சாயுங்காலத்தில் மங்கலான தெருவிளக்கின் கீழ் அதை ஆர்வமாக வாங்கிக் கொண்டு பக்கம் பக்கமாக புரட்டினார்.
முகத்தில் இட்லி சரியாக​ ​வெந்துவிட்ட​தே ​போன்ற திருப்தி படர்ந்த மாதிரி இருந்தது.

'வெரிகுட் நல்லா செஞ்சிட்டே. எனக்கு இன்னும் கொஞ்சம் வார்த்தை தேவைப்படுது - அதாவது ஜ, ஷ, ஸ இப்படி ஆரம்பிக்கிற வார்த்தைகள். அப்புறம்.. விடுபட்டுபோன சில உயிர்மெய்களிலும் சிலதுகளையும் நீ கவர் செய்யலாம். உதாரமணா கோ, கெள, தோ, தெள இந்தமாதிரி...'

அந்த ஊருக்கு போவதையே விட்டுவிடலாமா அல்லது தமிழிலிருந்து ​வேறு ​மொழிக்கு மாறிவிடலாமா என்றிருந்தது.

சரி - நம் கண்ணெதிரே ஒரு வசனகர்த்தா உருவாகி, நாம் தயாரித்துக் கொடுத்த வார்த்தை வங்கியை பிரித்துப் பார்த்து, அதிலிருந்து ஒரு வசனத்தை உருவாக்கி, அதை திரையில் ஒரு நடிகரோ நடிகையோ பேசிக் கேட்கும் போது நமக்கும் ஒரு பெருமைதானே என்று அடுத்த அ​​ஸைன்​மெண்டுக்கும்  ஒத்துக்கொண்டேன். அவரிடம் இப்படி அஸைன்மெண்ட் வாங்கிய பல சிறுவர்களின் நான்தான் முதன்மை என்று பாராட்டுப் பத்திரம் வேறு.

அதற்கப்புறம் அவர் என்னிடம் எது பேசினாலும், இவர் பேசுகின்ற இந்த வாக்கியத்தை நான் எழுதிக் ​கொடுத்த வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்துக் கொண்டு பேசுகிறாரோ என்று படும். கிட்டு சில காலங்களுக்கு பிறகு என்னிடம் வார்த்தை வங்கி தயாரிக்கப் பணிப்பதில்லை. வேறு யாரிடமும் கேட்டதில்லை. சில பல 80 பக்க நோட்டு வார்த்தை வங்கிகளோடு வசனம் எழுத அமர்கிற நபரைப் பார்த்து தமிழ் சினிமா பயந்து மறுத்திருக்கக் கூடும்.

​மொத்தமாக தமிழ் வார்த்​தைக​ளை மட்டும் பயன்படுத்துகிற வசனகரத்தா​​வே ​தே​வையில்​லை என்றும்கூட தமிழ் சினிமா நி​னைத்திருக்கலாம்.

நான் எழுதிக் கொடுத்த கிட்டுவின் முதல் வார்த்தை வங்கி என்னவாயிற்று என்று அதற்கப்புறம் கேட்டதில்லை. எனக்கும் ஒரு விசனம்தான். பாருங்க​ளேன், தமிழ் பேசும் சினிமா நாயகர்களுக்கோ நாயகிகளுக்கோ என் வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்து வரும் வசனத்தை பேசும் பாக்கியம் இல்லாமலேயே போய்விட்டது!

No comments: