Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Wednesday, July 28, 2010

கிளஸ்டர்-நோவா (மாறுதிசை)

2011 ஜுலை - கென்னடி விண்வெளி மையம், ப்ளோரிடா:

பின்னணியில் எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருக்க, கைகளை விஸ்தாரமாக விரித்தபடி விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கிளஸ்டர்-நோவா பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இஸ்ரோவிலிருந்து நாஸாவிற்கு சிறப்பு பரிந்துரையின் பேரில் வந்தவர். அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு ராமகிருஷ்ணனின் கிளஸ்டர்-நோவா திட்டம் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.

ஹே, ராம்.. யு நோ.. என்று ஆரம்பித்து 5 நிமிட அடர்த்தியில் கேள்விகளும் கேட்க ஆரம்பித்தார்கள். அதற்கு ராமகிருஷ்ணனின் பதில்கள் அடர்த்தியாகவும் திடமாகவும் இருந்தன. ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், அமெரிக்க ராணுவத் தளபதி ஒருவர் ராமகிருஷ்ணனை தனியாக அழைத்துக் கொண்டுபோனார் - அவசரமாக.

2013 ஜுன் - மார்க்கம்பட்டி, அரசினர் நடுநிலைப்பள்ளி:

புதுவகுப்பில் இருக்கை பிடிக்கும் அவசரத்தில் மாணவர்கள் வகுப்பறைக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். அது ஆறாம் வகுப்பு. முன்வரிசையில் எப்போதும் போல் பெண்கள் எடுத்துக்கொண்டார்கள். அமர்ந்த கொஞ்ச நேரத்தில் நிர்மலா ஆசிரியை வந்தார். வணக்க்க்கம்ம்ம் டீச்சர்ர்ர் முடிந்ததும், ஆசிரியை பாடம் நடத்த ஆரம்பித்தார். அறிவியல்.

'எல்லாரும் போன வருஷமே பூகோள திசைமாற்ற இயக்கம் படிக்க ஆரம்பிச்சிருப்பீங்களே..?'

'ஆம்ம்மாம்ம் டீச்சர்ர்ர்'

'யாருக்கெல்லாம் அது புரியலே..?'

'...........'

'சரி.. இந்த வருஷ சிலபஸ்ல நிறைய மாத்தியிருக்காங்க. அறிவியல் முழுதும் பூகோள திசைமாற்றம் பற்றிதான் வரும்'

மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

'சரி இப்ப கொஞ்சம் படித்ததிலிருந்து கேள்வி கேட்கலாமா?'
'...'
'எங்கே.. சிவக்குமார், நீ சொல்லு.. பூமியின் சுற்றுவேகம் குறையத் துவங்கும் நாள் எது?'

'14ந் தேதி ஜுலை 2018'

'வெரிகுட்.. அடுத்து.. கவிதா பூமிச்சுற்றுவேகம் பூஜ்யம் ஆக எத்தனை நாட்களாகும்?'

'108 நாட்கள்'

'சபாஷ்.. எல்லாரும் படிச்சதை மறக்காம வச்சிருக்கீங்க. அடுத்த கேள்வி விண்கப்பல் அடர்தொகுதி என்பது என்ன? இக்பால் நீ விளக்கமா சொல்லு பாப்போம்..?'

'பூமி சுற்றுவேகம் குறையத்துவங்குவதற்கு 7 நாட்கள் முன்பே, மனிதர்களை ஏற்றிச்செல்லும் விமானம்......'

'மனிதர்களை ஏத்திக்கிட்டு மாட்டுச் சந்தைக்கா போறாங்க? சரியா சொல்லுடா'

வகுப்பின் கொல்சிரிப்பும், மற்றவர்கள் எடுத்துக் கொடுக்கும் முதல்வரியுமாக இக்பால் பதில் சொல்கிறான்..

'மனிதர்களை ஏற்றிக் கொண்டு இந்த விமானம்.. இல்லே இல்லே... இந்த விண்கப்பல்கள் பூமியின்...'

என இக்பால் தொடர, புதுவகுப்பு இனி​தே ஆரம்பித்தது!

2018 ஜுலை 14 - திபெத், கோகனார் ஏரிக்கரை அருகாமை புத்த மடாலயம்:

இரவு குளிராக அரும்ப துவங்கிய பொழுது. மரங்களால் அமைந்த அந்த உயர்ந்த மடாலயத்திலிருந்து யாங் உச்சாடனம் மெலிதாக காற்றில் கலந்து கொண்டிருந்தது.

நியங்மா, போதிசத்வர் மரபு சார்ந்த மடாலயம் அது. மடத்திலிருந்து வெளிவந்தார் முதிய புத்த பிஷு சியூடென். தர்மசக்கரங்களை சுற்றியவாறே வானை அண்ணாந்து பார்த்தார். வானம் ரகளையான ஆரஞ்சு நிறக் கீறல்களாய் இருந்தது. முழுநிலா எழும்ப ஆரம்பித்துவிட்டது. தூய மஞ்சளொளி இனி பனிநிலத்தில் ஒளிர ஆரம்பித்துவிடும். அப்போது ஏரிக்கரையை பார்ப்பது அருமையானது. மடத்திற்கு புதிதாக இன்று யாருமே வரவில்லை. கோகனார் மொத்தமுமே அமைதியில் விழுந்து விட்டது போலிருந்தது. சில நாட்கள் முன்பு அந்த இடமே வெகு பதற்றமாக இருந்தது. அப்போது மனிதர்கள் பதைபதைப்போடு மழைக்கால எறும்புகள் போல திரிந்து கொண்டிருந்தார்கள்.

எனக்குத் தேவையானது எல்லாம் ஏற்கனவே போதிக்கப்பட்டு விட்டது. ஆகவே எனக்கு பதற்றமில்லை - என்று சொல்லிக் கொண்டார் பிஷு. ஏரியை நோக்கி மெதுவாக நடக்கத் துவங்கினார் சியூடென்.

2018 ஜுலை 14 - கிளெஸ்டர்-நோவா, Node:58 @ 12th Array:

கண்ணாடி தடுப்புகளால் ஆன பாதை வழியாக மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு ஆட்கள் ஒவ்வொருவரையும் கவனமாக பரிசோதித்து அனுப்பினார்கள். அந்த வெளி முழுவதும் குளிரூட்டப்பட்ட பரிசுத்தமாக விளங்கியது. மெலிதாக ஒரு ரிதம் கூட காற்றில் தவழ்ந்தது. மனிதர்களை நான்கு விதமான சீருடைகளால் பகுத்திருந்தனர். வெள்ளை, சாம்பல், அடர்சாம்பல் மற்றும் கருப்பு. சாதாரணர்கள் - வெள்ளை; காவலர்கள் - கருப்பு சீருடை.

கண்ணாடித் தடுப்பு சுவர் முழுக்க நோடு 58 அமைப்பு, கிளெஸ்டர் நோவா-வின் தன்மை மற்றும் விதிகள் பற்றிய படங்களாக இருந்தன.
வரிசையில் நின்றிருந்தவர்களில் ஒரு வயதான தம்பதியினரும் இருந்தனர்.

'ரோஹிணி.. ரொம்ப நேரம் நிக்கறோமே? கால் வலிக்கலியா உனக்கு?'

அந்த தளர்ந்த வயதான அம்மா கணவரிடம் திரும்பினார்.

'ப்ச்.. பரவால்லேங்க. டாப்லெட் போட்டுட்டுத்தான் வந்தேன்'

'கொஞ்ச நேரம்தான். அப்புறம் நமக்கு ஹவுஸ் அலாட் பண்ணிடுவாங்க'

'உங்களுக்குதான் ரொம்ப சிரமம் இதில.. இல்லியா?'

'சிரமம் என்னயிருக்கு..? தினேஷ் நமக்காக பணம் கட்டியிருக்கான். நாம ஹாயா இங்க வந்துட்டோம்'

'எனக்கு என்னவோ இதெல்லாம் பார்க்க ஒரே உதறலா இருக்குங்க'

'அட போடி.. இதுக்கு முன்னாடி இருந்த அப்பார்ட்மண்டை விட இன்ன்னும் உயரமான வீட்டில வாழப்போறோம்னு நினைச்சுக்கோ. இதெல்லாம் ஸயன்ஸ். எ குட் டெக்னிகல் அட்வான்ஸ்மண்ட். மனுஷனோட எக்ஸிஸ்டன்ஸ் எவ்ளோ முக்கியம்னு காட்டப் போறது. இந்த கிளஸ்டர் நோவாவில...'

'ஐயோ.. போதும் நிறுத்துங்க உங்க நோவா புராணத்தை. கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு'

'உன்கிட்ட சொன்னேன் பாரு' என்றவர் திரும்பி பின்னால் நின்றவரிடம்,

'இன்னும் எவ்ளோ நேரம்தான் க்யூவிலேயே நிக்கறதாம்? க்யூ நகர்றதா என்ன?'

பின்னால் நின்றவர்,

'மைட் பி. பட், கவுண்டர்ல ஏதோ ப்ராப்ளம் போல. அதுதான் க்யூ ஸ்டரக் ஆயிடுச்சு'

வயதான கணவர் அலுத்துக் கொண்டார்.

'இட்ஸ் ரிடிக்குலஸ். எவ்ளோ அட்வான்ஸ்ட்டு டெக்னாலஜி இது. இங்க போயி க்யூ, வெயிட்டிங், பக்ஸ்-ன்னு இருக்கலாமா? ஒவ்வொருத்தனும் எவ்ளோ பாடுபட்டு இங்க இடம் பிடிக்க வேண்டியதா இருக்கு. ஏதோ சீனியர் ஸிட்டிஸன்கிறதால பர்ஸ்ட் ஸ்டேஜ்லயே ஷிப்ல அட்மிஷன் கொடுத்துட்டான்'

'ஆமாமா.. இன்னும் பூமியிலிருந்து 400 கோடி ஜனங்களை ஸ்டேஜ்-பை-ஸ்டேஜாத்தான் நோவாவுக்கு கொண்டு வருவாங்களாம்'

'அதுக்கு இன்னும் 3 மாசம் ஆயிடாது?'

'மைட் பி. என் தம்பி பேமிலிக்கு கூட அடுத்த மாசம்தான் அட்மிஷன் போட்டிருக்காங்க. என் மகள் இங்க வர இன்னும் 47 நாள் இருக்கு'

'கரெக்ட்.. இந்த அலாட்மண்ட்டே ஒரு பெரும் இம்சை. வயசை வச்சு ஸார்ட் பண்றாங்களா இல்லே இடத்தை வச்சான்னு தெரிய மாட்டேங்குது. இருந்தாலும் இட்ஸ் எ நைஸ் இன்னோவேஷன்! இந்த க்ளெஸ்டர்-நோவாங்கிறது...'

ரோஹிணி என்ற அந்த வயதான அம்மாள், கணவரைத் தொட்டு,

'சும்மா தொணதொணன்னு பினாத்தாம அமைதியா வாங்க. அப்புறம் பிரஷர் ஏறிக்கப் போறது'

'சும்மா இருடி. ஐ நோ ஆல்'

என்று மனைவியை அதட்டிவிட்டு பின்னால் நின்றவிடம் பேச்சைத் தொடர ஆரம்பித்தார்..

'ஸார்.. அலாட்மண்ட் கூட வாங்கிடலாம். ஆனா இந்த கம்யூனிகேஷன் இருக்கே அதுதான் பெருந்தொல்லை. பாருங்களேன், வந்து 2 நாளாயிடுச்சு.. இன்னும் பையன்னு ஒரு ஃபோன் போட முடியலே'

'அட சும்மாயிருங்க ஸார்.. போன் கம்யூனிக்கேஷனுக்கு சொல்றீங்களே.. நாங்க நேத்து பூரா ஒரு ஹிந்தி க்ரூப் கூட மாட்டிக்கிட்டேன். ஒரு வழியா கருப்புச் சட்டைக்காரங்களப் பிடிச்சு தமிழ் க்ரூப் மாத்திக்கிட்டு வந்தோம்'

'ஓ.. இந்த ப்ராப்ளம் வேற இருக்கா? நான் லாங்குவேஜ் பாத்துத்தான் மனுஷங்களை பிரிக்கறாங்கன்னு நெனச்சுக்...'

வயதான கணவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முன்வரிசைக் கூட்டத்தில் சலசலப்புக் கேட்டது. என்ன என்று திரும்பும் முன் சடாரென ஒரு உருவம் இவர்கள் அருகில் வந்து விழுந்தது. வேகமாக ஓடிவந்த கறுப்புச் சீருடை பாதுகாவலர்கள் கீழே விழுந்தவரை எழுப்பி இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

இழுத்துச் செல்லப்பட்டவர் அடர்சாம்பல் சீருடை கொண்டிருந்தார். பாதுகாவர்கள் பிடியிலிருந்து திமிறியவராக,

'ஸ்டாப்பிட்.. இடியட்ஸ்.. என்னால இங்க இருக்க முடியாது.. கொலைகாரங்களா.. இது என்ன ஜெயிலா? என்ன மாதிரியான அபத்தம் இது..'

பாதுகாவலர்கள் அவரை இறுக்கமாக பிடித்து இழுக்க முயன்றனர். இன்னொரு பாதுகாவலர் மயக்க மருந்து துப்பாக்கியை அவர் மீது பிரயோகிக்க முயன்றார். பிடியிலிருந்தவர் திமிறிக்கொண்டேயிருந்தார்..


'இடியட்ஸ்... முட்டாள்தனமான டிஸைன் இது. நான் சொன்னது இது இல்லே. இது எல்லாமே தப்பு...'

என்றவராய் கூட்டத்தைப் பார்த்து,

'எதுவும் உங்களுக்குப் புரியலியா? ஏன் இங்க வந்து மாட்டிக்கறீங்க? இது உங்களை காப்பாத்தப் போறதில்ல.. நீங்க பேசாம பூமியிலேயே.....'

அவர் சொல்லி முடிக்கும் முன் கைகளை முதுகு பக்கமாக முறுக்கி எலிபோல தரையில் படுக்க வைத்தனர். ப்ஸக்க்....மயக்க மருந்து பிரயோகிக்கப் பட்டு விட்டது. அவருக்கு கண்கள் சொருக ஆரம்பித்தன.குழறலான குரலில் இங்க வராதீங்க.. தப்பிச்சுப் போயிடுங்க.. ப்ளீஸ்.. என்றவாறே.... பின் சில நொடிகளில் மயங்கிவிட்டார்.

வரிசையில் நின்ற அனைவரும் திக்கித்துப் போயிருந்தனர். வயதான தம்பதியினர் எதுவும் பேசத் தோன்றாமல் உறைந்து போயிருந்தனர். மயங்கிக் கிடந்தவரை லாவகமாக பாதுகாவலர்கள் தூக்கிக் கொண்டுப் போனார்கள்.

வரிசையில் நின்றிருந்தவர்கள் கொஞ்ச நேரம் பரபரப்பாக பேசிக்கொண்டனர். அப்புறம் சிறிது நேரத்திலேயே சகஜமாகிவிட்டார்கள். பின் மொத்த வரிசையும் கெளண்டர் இருக்கும் பக்கமாக திரும்பிக் கொண்டது இயல்பாக. முதிர் தம்பதிகள் ஒருவரையொருவர் கலவரமாகப் பார்த்துக் கொண்டனர்.

மனைவி கணவரிடம் திரும்பி,

'உங்க கால்கிட்ட ஏதோ கிடக்குது பாருங்க..'

கணவர் குனிந்து காலருகே கிடந்த அதை எடுத்தார்.

'ஏதோ பேட்ஜ் போலிருக்குடி! அந்த தள்ளுமுள்ளுல கீழே விழுந்திருக்குமோ??'

பேட்ஜ்தான் அது. அடர்சாம்பல் நிறம் கொண்ட பேட்ஜ். இழுத்துச் ​செல்லப்பட்டவரின் சீருடை நிறம் ​கொண்ட ​பேட்ஜ்.

'என்ன பேரு போட்டிருக்குங்க?' என்றார் மனைவி.

'ராமகிருஷ்ணன்..' என்றார் கணவர்.

க்யூ மெதுவாக நகர ஆரம்பித்தது.

*
(மாறுதி​சை பற்றி ​தொடர்பதிவு எழுதப் பணித்த நண்பர் விஜய்-க்கு (அகசூல்) நன்றி)

Tuesday, May 11, 2010

குரல்களின் வேட்டை

ஏன் பாடகர்கள் துதிக்கப்படுகிறார்கள்?

ஏன் பாடகர்கள் பிரபலங்களாக இருக்கிறார்கள்?

உங்களுக்குத் எவ்வளவு புல்லாங்குழல் / வயலின் / மிருதங்க / பிற வாத்திய இசைக் கலைஞர்கள் பெயர்கள் தெரியும்?

இசையில் குரல் என்பதும் ஒரு கருவியே (instrument) என்ற எண்ணத்தை சிலகாலங்களுக்கு முன்னேதான் பெற்றேன். இசைக்கோர்வையில் பாடகர் தன் குரல் எப்படி பங்காற்றுகிறதோ அதேயளவுக்கு அல்லது அதையும் விட அதிகமாக வாத்தியங்களின் இசையும் பங்காற்றுகின்றன.

ஆனால் பாடல் முன்னிறுத்தப்படுவது குரலிசைக் கலைஞர்களால்; பாடகர்களால்; இசையமைப்பாளரால்.

முகம் தெரியாத, அடையாளங்கள் தொலைந்த பின்னணி வாத்திய இசைக்கலைஞர்கள் மற்றும் இசைசேர்க்கை வல்லுநர்கள் அனைவரையும் சோகமும் இயலாமையும் சேர நினைத்துக் கொள்கிறேன். என்னால் ஒரு புல்லாங்குழல் கலைஞரை, வயலின் வித்வானை எப்படி வியக்க முடிகிறதோ அவ்வளவே குரலிசைக் கலைஞரையும் (பாடகர்கள்) ரசிக்க முடிகிறது.

ஏன் பாடகர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரபலமாகிறார்கள்? அல்லது பிரபலமாக்கப்படுகிறார்கள்?

0. இயல்பிலேயே நாம் அனைவரும் பாடகர்களாக இருக்கிறோம்.
1. குரல் என்பது இயற்கையான இசைக்கருவி. தொண்டை மட்டும்தான் மூலதனம்.
2. யார்​வேண்டுமானாலும் இந்த இசைக்கருவியை எங்கு​வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு பான்ஸுரி 'F' புல்லாங்குழலுக்கு நீங்கள் குறைந்தது ரூ.500/-வது ​செலவு செய்ய வேண்டும். அப்புறம் வெறும் ஓசை வரவைக்கவே மணி/நாள்/மாதக் கணக்கில் பயிற்சி எடுக்க வேண்டும்.
3. குரல் நம் ஆத்மாவுக்கு, கற்பனைக்கு, படைப்பாற்றலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. ஒரு ட்யூனை 'ஹம்' செய்துவிடல் சுகமானது. அதையே ஒரு கிதாரின் நரம்புகளுக்கோ, பியானோவின் கட்டைகளுக்கோ மாற்றுவது கிட்டத்தட்ட அல்கெமிஸ்ட் வேலை மாதிரி.
4. இந்த குரல் இசைக்கருவியை (?!) யாருக்கும் தெரியாமல் சுலபமாக எடுத்துச்​செல்லமுடியும். டூர் கிளம்பும்​போது உதாராக கிதாரை எடுத்துக் கொண்டு வரும் பயபுள்ளைக அதை தோளில் சுமந்து கொண்டு (கிதார் ஒரு தோளிசைக் கருவியா??) முழி பிதுங்குவதே மேஜராக இருக்கும்.
5. .......... ஸ்டாப்பிட்!! நாம் ஏன் இப்படி டிஎன்பிஎஸ்ஸி, குரூப்-2 வினாத்தாள் போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் போய்க்​கொண்டிருக்கிறோம்..??

சொல்றேன்.

அநன்யா மஹாதேவன் நம்மிடம் பிடித்த பாடகர்கள் ஐவரை எழுதப்பணித்திருக்கிறார். அதுதான் நாம், நம் ஸ்ஸ்டைலில் கிர்ர்ரடித்துக் கொண்டிருக்கிறோம். போதும் வெளாட்டு; ஆளைக் காமி, நாங்க கிளம்பணும் என்பவர்களுக்காக...

எனக்குப் பிடித்த பாடகர்கள்:

1. கீதா தத்:

ஒரு பெங்காலி. இவரது அசாதாரண வாழ்க்கை முறையே என்னை ஈர்த்தது எனலாம். 1930ல் கிழக்கு வங்காளத்தில் பிறந்த கீதா ராய், பம்பாய்க்கு குடிபெயர்ந்து பின் எஸ்.டி.பர்மன் மூலம் இந்தி திரையிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். பின்னர் புகழ்பெற்ற இயக்குனர்-நடிகர் குரு தத் படத்தில் (Baazi) பாடும் போது இருவருக்கும் காதல் மலர்ந்து கல்யாணமும் ஆனது.

கீதா ராய், கீதா தத் ஆனார்.

கீதா தத் பாடலை நீங்கள் முதலில் கேட்கும்​போது அது உங்களைப் பெரிதும் கவரவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கீதாவின் குரல் கவர்ச்சி மிக்கதாக தோணாது. ஆனால், பாடலுடன் அந்தக் குரல் பயணிக்கும் விதம் நம்மை கொள்ளைக் கொள்ளும். நம் காதுகளுக்கு கீதாவின் பிளாக்-அன்ட்-ஒயிட் குரல் தொன்மையானதாகத் தோன்றும். அதில் ஒரு அமானுட வசீகரம் அக்குரலின் பயணத்தில் சிக்கும். Babuji dheere chalna என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு இப்பாடலில் ஏதாவது வித்யாசம் நிரடினால் உங்களுக்கு கீதாவைப் பிடிக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் Pyaasa படத்தில் வரும் Jane Kya Tune Kahi பாடலைக் கேளுங்கள்.

பொதுவாக 1950-களில் ஹிந்தி சினிமாவில் பிரபலாமான சிஜடி வகைப் படங்களின் Jazzy வகை பாடல்கள் (Ankhon Mein Tum Dil Mein Tum Ho ஒரு உதாரணம்), பஜன்கள், விரகதாபப் பாடல்கள் மற்றும் சோகமயப் பாடல்கள் (விசும்பி விசும்பி அழுது​கொண்டே பாடுவது) இவற்றுக்குப் பொருத்தமாக இருந்தது கீதாவின் குரல்.

லதா மங்கேஷ்கரின் வருகைக்குப் பிறகு கீதா 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். லதா தேர்ந்த சாஸ்திரீய ஞானமும், பலதரப்பட்ட பயிற்சியும் கொண்டவர். சிறுவயதிலிருந்தே பாடகியாக இசைக்காகவே வளர்க்கப்பட்டவர். சாதாரண குடும்பத்தில் எவ்வித இசைப் பின்புலமும் பயிற்சியும் இல்லாமல் வளர்ந்த கீதா 2ம் இடத்துக்கு வந்ததும் நியாயமே. இருந்தும் லதா மங்கேஷ்கருக்கு கீதா மேல் ஒரு பயம் இருந்து​கொண்டே இருந்தது.

கீதாவின் குரலின் இழுவிசை சாஸ்திரீய ஜாலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இருந்தும் இசையமைப்பாளர்களால் சோகப்பாடல்கள் பாடுவதற்காக விதிக்கப் பட்ட குரலாக அது மாற்றப்பட்டது. Aayega aanewala பாடல் இவ்வகையே. சோகப்பாடல்கள் கீதாவை முழுமையாக எடுத்துக் கொண்டுவிட்டன எனலாம். ​சோகமயமாக அவரின் இயல்பு வாழ்க்கையும் மாறியது.

கீதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை - வஹீதா ரஹ்மானால். புகழ்பெற்ற ஹிந்தி நடிகை (செங்கல்பட்டுக்காரர்). வஹீதாவுக்கும் குரு தத்-க்கும் காதல் மலர்ந்தது. கீதாவைப் புறக்கணிக்க ஆரம்பித்தார் குரு. குருவின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் வஹீதா. பாருங்கள்.. திரையில் வஹீதா வாயசைக்கும் பாடல்களை கீதாவே பின்னணியில் பாட​வேண்டியிருந்தது. காகஸ் கீ பூல் இந்த பின்னணி நாடகத்திற்கு ஒரு உதாரணம்.
இரு பெண்களின் காதல்களுக்கிடையே ஊசலாடிய குருதத் பின் தற்கொலை செய்து கொண்டார். கீதா குடிக்கு அடிமையானார். மீளாப்பயணமாக அது அமைந்தது. பணச்சிக்கல்​பொருட்டு ஒரு பெங்காலிப் படத்தில் கதாநாயகியாகக் கூட நடித்தார். எதுவும் குருதத் இழப்பை ஈடுகட்ட முடியவில்லை. சிந்து பைரவி சிவக்குமார் மாதிரி மிதமிஞ்சிய குடிபோதையில்​மேடையிலேயே ஆர்மோனியப் பெட்டி மீது சரிந்தும் விழுந்திருக்கிறார். தன்னை அழித்துக்​கொள்ளும் முனைப்பு கொண்டவர் போல் குடிக்க ஆரம்பித்தார். ஈரல் பாதிக்கப்பட்டு, 1972 ஜூலை 20 அன்று கீதா தத் மறைந்தார்.


ஷாஜி எழுதிய​சொல்லில் அடங்காத இசை புத்தகம் கீதா தத்தை அறிமுகப்படுத்தியது. காதில் விழும் கீதாவின் குரல் கறுப்பு-வெள்ளைப் பின்னணியில் பழைய காலத்துத் தெரு, பூங்கா, மாதர்கள், மெளனமாக ஊறும் மங்கலான மாலைப் பொழுது என என்னை காலங் கடத்துகிறது.

2. மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்

எம். எஸ். விஸ்வநாதன் படைப்பாற்றல் மிக்க பாடகராக எனக்குத் தோன்றுகிறார். நல்ல பாடகரின் தரம் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் புதிதாக பாடி உருவாக்க வேண்டும். சமரசம் அற்ற தனித்த குரலாக இருக்க வேண்டும். எம்எஸ்வி அப்படித்தான். அவரின் பாடகர் அவதாரம் மிகத்தனித்துவமானது. பிரம்மாண்டமானது.

எனக்கொரு காதலி இருக்கின்றாள் (முத்தான முத்தல்லவோ) என்ற படப்பாடலில் எஸ். பி. பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடியிருப்பார். ஒரே வரிகளை பாடுவதில் எம்எஸ்விக்கும் பாலாவுக்கும் உள்ள வித்யாசத்தை கவனிக்கலாம். இயக்குநர் சரணின் முதல்படமான 'காதல் மன்னனில்' எம்எஸ்வி நடித்திருப்பார். அதில் இதேப் பாடலை அவர் ஒரு காட்சியில் பாடும் போது அசாதாரண மாற்றங்களோடு இருக்கும். ஏனென்றால் எம்எஸ்வி ஒரு படைப்பாளி. ஒரு மெட்டை உருவாக்கும் படைப்பூக்கம் அப்படியே பாடலைப் பாடுவதிலும் கொண்டுவருகிறார்.

பார் மகளே பார் (பார் மகளே பார்), ஜகமே மந்திரம்.. சிவசம்போ (நினைத்தாலே இனிக்கும்)
யார் அந்த நிலவு (சாந்தி), நீ நினைத்தால் இந்நேரத்திலே (நிலவே நீ சாட்சி), சொல்லத்தான் நினைக்கிறேன் (சொல்லத்தான் நினைக்கிறேன்) , கண்டதைச் சொல்கிறேன் (சில நேரங்களில் சில மனிதர்கள்) போன்ற பழைய பாடல்களில் அவரின் பாடு-வளமை வேறு யாராலும் தொடரமுடியாத ஒன்று.

டி.எம். செளந்தர்ராஜன் 'யார் அந்த நிலவு' பாடலை எம்எஸ்வி பாடிக்காட்டியபோது பயந்துவிட்டேன் என்றிருக்கிறார்... பி.பி.ஸ்ரீனிவாஸ் - அவர் பாடியதில் பத்து சதவீதத்தை மட்டும் தன்னால் குரலில் கொண்டுவர முடிந்துள்ளது... பி. சுசீலா - எந்த ஒரு பாடகருமே எம்எஸ்வி பாடிக்காட்டிய அளவுக்கு அவருடைய மெட்டுக்களை உயிரோட்டத்துடன் பாடியதில்லை. எம்எஸ்வி பாடிக் காட்டியதுபோல மெட்டுக்களைப் பாட முடியாமல் அவர் ஒலிப்பதிவகத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறியிருக்கிறார்... வாணி ஜெயராம் - எம்எஸ்வி பாடும்போது வரும் எண்ணற்ற நுண்ணிய மாற்றங்களை எந்தப் பாடகராலும் மீண்டும் பாடிவிட முடியாது... என்கிறது ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை.

ஆலால கண்டா (சங்கமம் - ஏ. ஆர். ரஹ்மான்) என் விருப்பப் பாடல்களில் ஒன்று. அதன் உச்ச ஸ்தாயி ஆலாபனைகளும் ஜதியும் அம்மெட்டை பிரம்மாண்டமாக ஆக்கிக் காட்டுக்கின்றன.

மெட்டுத்தேடி தவிக்குது ஒரு பாட்டு (காதல் மன்னன் - பரத்வாஜ்), விடைகொடு எங்கள் நாடே கன்னத்தில் முத்தமிட்டால் - ஏ. ஆர். ரஹ்மான்) என அவரின் சமீபத்திய பாடல்களும் வேறொருவர் இசையமைத்த பாடல்களையும் தன் சொந்த படைப்பாற்றலால் வேறு பரிமாணத்தில் அளித்திருப்பார் எம்எஸ்வி.

எம். எஸ். வி முடிவில்லாத படைப்பாற்றல் மிக்க பாடகர்.

....
அநன்யா ஐம்பாடகர்களைக் குறிப்பிட வேண்டும் என்றிருக்கிறார். மேற்கத்திய இசையில், நம் மரபிசையில் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆளுமைகள் நிறையபேர் உள்ளனர். ஆனால் அது எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் ஒரு பட்டியலாகத் தோன்றுகிறது. எல்லாக் காலத்திலும் நிலையாக மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் அல்லது பாடல் என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. நித்யஸ்ரீ-யின் செளக்யமா கண்ணே செளக்யமா-வை 4 மணிநேரங்கள் தொடர்ச்சியாகக் கேட்டதுண்டு. ஆனால் அவர் பெயரை இங்கு சொல்ல முடியவில்லை. இசை, பாடகர்களைப் பற்றி எழுதுவது சாதாரணமல்ல என்றிருக்கிறது.
இப்போதைக்கு, கீதா தத் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இவர்கள் இருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. என் குரல்களின் வேட்டையில் சிக்கியது இவ்வளவுதான். எனக்கு இசை ஞானம் கம்மி அல்லது கணக்கில் வீக் என்று நினைத்துக் கொள்ளுங்களேன் :))

Monday, March 22, 2010

தசா மாதுக்கள்


அவள் ஒரு மலையோரச் சிறுமி:
கல்லூரி படிக்கும்​போது குதிரையாறு அணையில் மாணவர்கள் ​சேவை முகாமிட்டிருந்தோம்​. மலையும் காடுகளும் அணைந்த சில்வண்டு வெளி. ஊரின் ஒற்றை டீக்கடை ஓனரம்மாளின் ஒரே மகள். ​பெயர் ஸ்ரீதேவி. மயில் என்ற ​பெயர் கூட அவளுக்குப் ​பொருத்தமாகத்தான் இருக்கும். 10 வயது சிறுமி. ​வியப்பு தடவிய பெரிய விழிகளால் என்​னைப் பார்த்தது இன்றும் நினைவிலுண்டு. ​நெல்லிக்கனி, டீக்கடை ரொட்டி, டீ என்று எனக்களிக்க எப்பவும் கைவசம் ஏதாவதுண்டு அவளுக்கு. 10 நாள் கேம்ப் முடிந்து கல்லூரி வந்தாயிற்று. ஒருவாரம் கழித்து குதிரையாறிலிருந்து கல்லூரிக்கு வரும் நண்பன் என்னிடம் ஒரு கடிதம் நீட்டினான். ஸ்ரீதேவி என்ற மலையோரச் சிறுமி ரூல்டு பேப்பரில் எழுதிய ஒரு கடிதம். அவள் கண்களை ஒத்த குண்டு குண்டான கையெழுத்தில் மலை எல்லைகளைத் தாண்டி வந்திருக்கிறது. அணைகள் தடுப்பதில்லை என்று உணர்த்தினாள் அன்று.

பாம்புகளைப் பின்​தொடருபவள்:
கேட் ஜாக்ஸன் (Kate Jackson) என்ற விலங்கியல் பேராசிரியை Passion for Snakes என்ற ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரையில் படித்தது. கேட்டின் நேர்மையும் தைரியமும் நிரம்பிய ஆப்பிரிக்க பாம்பு வேட்டை அனுபவங்களுக்காக ரொம்ப பிடித்திருந்தது.

அவர் பற்றி அறிய: http://people.whitman.edu/~jacksok/ தற்போது Assistant Professor Department of Biology ஆக Whitman College யில் பணிபுரிகிறார்.

நீங்கள் விரும்பினால் கட்டுரையை தட்டச்சி அனுப்புகிறேன்.


செம்மாம்பழம் போலே..:
பழைய கருப்பு-​வெள்ளைப் பட நாயகிகள் அனைவரும் அலாதி ப்ரியத்துக்குரியவர்கள்தான். மடி மீது தலை​வைத்து விடியும் வரை தூங்குவோம் என்ற பாடலின் இசையும், பொங்கும் நிலா பின்புலமும் தேவிகாவை அமர நாயகியாக்கிவிட்டன. நான் என்ன சொல்லிவிட்டேன் (பலே பாண்டியா) பாட்டில் ஒரு வரி: செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி. தேவிகா கறுப்பு. ஆனால் இந்த வரிகளுக்கான அவரின் அபிநயம்... Fair & Lovely! ​

ஙப் போல் வளை:
நண்பர்கள் எழுதிய பிடித்த 10 ​பெண்களில் சாதாரணமாய் கா​ரைக்கால் அம்மையார், மூவலூர் ராமமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி எல்லாம் பார்க்க முடிகிறது. நமக்கு அந்தளவுக்கு சத்து காணாது. ஆகவே ஒளவை​!

பிடித்த மூதுரை வரிகள்:

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
-
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.


ஆத்திசூடி நீதிக்கதைகள் என்று மீனாமுத்து என்பவர் எழுதிவருகிறார். சீரிய முயற்சி!


கிட்டத்தட்ட ஒண்டிக்கட்டை:

அத்​வைதா கலா (Advaita Kala) இந்திய சிக்-லிட் ப​டைப்பாளி. ஆங்கில எழுத்தாளினி. அவரின் Almost Single நாவலின் துணிச்சலான ந​டை, மிடுக்கான நகைச்சுவை, புத்திசாலித்தனம் நிரம்பிய உ​ரையாடல் மிகப்பிடிக்கும்.


மிக்கி மவுஸ் தேவதை:
பிரார்த்தனா. இவள் ஒரு விளம்பர மாடல். ​சில வருடங்கள் முன்பு சென்னை சில்க்ஸ், லயன் ​டேட்ஸ் இத்யாதி விளம்பரங்களில் கண்ணுக்குச் சிக்கிய ​சென்​னைப் ​பொண்ணு. மிக்கி மவுஸ் காதுகள் ​கொண்ட சிறு ​தேவதை. இப்ப கா​ணோம். தற்சமயம் திவ்யா பர​மேஸ்வர் என்ற விளம்பர ​தேவதை - த்ரீ ​ரோஸஸ், ப்ரீத்தி மிக்ஸி, சாம்ஸங், ஹமாம் ​சோப் இத்யாதி - ​ அந்த இடத்தைப் பிடித்துக் ​கொண்டுள்ளார்.

பாலகுமாரன் எழுத்து அவளுக்குப் பிடிக்கும்:

காயத்ரி. கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட் பழக்கம். க்ரீஸ் தடவிய ​வேகத்தில் விழும் ஆங்கிலம். ​பெரிய வசீகரங்கள் இல்​​லை. ஆனால் அவளின் கம்பீரம், ​நடை, கட்​டைக்குரல் ​பேச்சு, ​கர்வம், அறிவு எனக்கு ​ரொம்பப் பிடிக்கும். பாலக்குமாரன் எழுத்து, மம்தா பானர்ஜி, உலக அரசியல், சினிமா என எல்லாவற்றையும் பற்றி தீர்க்கமாக விவாதிப்பவள். 'உன்​னை சிலசமயம் நி​னைத்துக் ​கொள்வதுண்டு. அன்று நீ குளிர்கண்ணாடி (எனக்கு அப்ப ​மெட்ராஸ் ஐ) அணிந்து வந்திருந்தது அழகாயிருந்தது. உன்னை அப்​போது பிடித்திருந்தது. இதனால் நான் உன்​னைக் காதலிக்கி​றேன் என்று எண்ணிவிடா​தே' என்று என் ​கண்களைப் பார்த்துக் கூறியவள். ​பார்த்து 10 வருடங்கள் இருக்கும். அவ​ளைவிட நான் 2 வயது சின்னவன் என்பது இன்று வ​ரை அவளுக்குத் ​தெரியாது.