Wednesday, January 22, 2014

காமிக்ஸ் இல்லாத தமிழ் இலக்கிய உலகம்..!


37வது சென்னை புத்தக கண்காட்சி.. ஒரு சனிக்கிழமை சென்று 20 புத்தகங்கள் போல அள்ளிவந்தேன். இலக்கியம், எலக்கியம், தீவிர இலக்கியம், பிக்ஷன், நான்-பிக்ஷன், நீயும் பிக்ஷன் என ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் போல.

ஆண்களைவிட பெண்கள், குழந்தைகள் அதிகம் வந்திருந்தது போலிருந்தது. எனக்கு இதுவே முதல் செ.பு.க விஜயம். மொத்தம் 777 கடைகள்... அதைவிடுங்கள்.. இத்தனை புத்தக சங்கமத்தில் ஒரேயொரு தமிழ் காமிக்ஸ் கடை மட்டுமே இருந்தது.. முத்து காமிக்ஸ். பால்யத்தை மீட்கும் செயலாக சில காமிக்ஸ்கள் வாங்கினேன். முன்னை விட அழகான வடிவமைப்பில், பெரிய அளவில் அச்சிடப்பட்ட படக்கதைகள். முத்து-லயன் காமிக்ஸுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. இன்னும் 80களில் வந்த அதே ஹீரோக்கள் இன்றைய மறுபதிப்பிலும். அங்கங்கு கடைகளில் அமர் சித்திர கதா நூல்கள் இருந்தாலும் அவைகள் கதை மற்றும் தொழில்நுட்ப அளவில் ஈர்க்கவில்லை.

மேலும் இன்னும் நம் சித்திரக்கதை உலகம் வெளிநாட்டுகளிலிருந்துதான் சரக்கை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. நமக்கென தனி ஹீரோ, கதை சொல்லும் பாணி, ஓவியம் மற்றும் தொழில்நுட்பம் இல்லை எனலாம். அமர் சித்திர கதா இந்த அளவில் நன்கு செயல்பட்டு வருகிறது.. பிரதாப முதலியார் சரிதம், சீவக சிந்தாமணி போன்ற இலக்கிய வகைகளை பிரசுரித்திருக்கிறார்கள்.

தமிழ் காமிக் உலகம் மிகவும் பின்தள்ளியிருக்கிறதோ என தோன்றுகிறது.. சிறுவர்களிடம் இலக்கிய வாசிப்பை அறிமுகப்படுத்தும் மிக முக்கிய கருவியாக காமிக்ஸ் இருக்கின்றன. காமிக்ஸ்கள் சீரான கதியில் ஒரு வாசகனை தேர்ந்த இலக்கிய வாசிப்புக்கு நகர்த்துகிறது.

மார்வல் மற்றும் டிஸி காமிக்குளின் ஆதிக்கம் ஹாலிவுட்டில் மிக அதிகம். காமிக் ஹீரோக்களின் மிகச்சிறந்த இரசிகன் ஹாலிவுட் எனலாம்.சூப்பர் மேன் முதல் பார்ப் வயர் வரை.. தமிழில் பிதிக்கப்படும் காமிக்ஸ்கள் மிகச் சொற்பம். நம் பாடத்திட்டங்களிலும் படக்கதைகளுக்கு இடமில்லை. பத்திரிக்கைளிலோ அல்லது வாராந்திர இதழ்களிலோ மிகக் குறைந்த சதவீதத்தில் தான் - அதுவும் துணுக்குகளாக மட்டுமே - பிரசுரிக்கப் படுகின்றன. சித்திரக்கதைகள் என்ற உலகம் பற்றி அறியாமலேயே ஒரு தலைமுறை மெதுவாக தாய்மொழி இலக்கியத்தை வாசிக்கும் பழக்கத்தை இழக்கிறதோ?

சிறுவர்கள் ஹாலிவுட் படங்களிலும் கார்ட்டூன் சேனல்களில் மட்டுமே தங்கள் சாகஸ ஹீரோக்களை கண்டு ஆறுதலடைகிறார்கள் என தோன்றுகிறது.

Saturday, March 5, 2011

பின்பனிக் கால்கள்


நீங்களும் நீயுமாக
ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்!

உங்களுக்குப் பாந்தமாகவே
வழியெங்கும் பூக்களும்
வட்டமாய் நிலவும் கூட.

இலகுவாய் இறங்கும்
பியானோ கட்டைகள் போல
கால்கள் சாலையில்.

அப்புறம் எப்போதும் போல் உங்களை அள்ளித்
தொடரும் என் கயமை நிறைந்த நிழல்
பின்னேயே வேவுபார்த்தும் வருகிறது.

எனைப் பற்றி நீ வாய்த் திறக்க முயலும் போதெல்லாம்
அவன் அதரம் பற்றுகிறான்.

நிழல் இன்னும் நெருக்கமாகிறது..!

நீங்களும் நீயும் துஞ்சிய ஒரு அவகாசம்..
(ஆஹா.. அவகாசம் என்பது எவ்வளவு அழகாக ஒலிக்கிறது...!!!)
நிழலை விடுத்துப் பிரியும் நிழலாக
எனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஏனோ தெரியவில்லை....
எனக்கு நானே தோள்த்
தடவி சமாதானம் சொல்லப் பார்க்கிறேன்.

ஹ....!!!
தானே தன்னைத் தழுவும் கைகளின்
தண்மை வேறெங்கும் சிக்காது..!

Wednesday, December 29, 2010

ஆதாம் கடந்த தோட்டம்!


எனது கண்கள் ஒரு ஆப்பிள் போல
மாறிவிட்டது பாரேன்.

அறுத்துப் பார்த்தால் விதைகள் சிலது இருக்கலாம்
அதை வீசி எறிந்துவிடுதல் உனக்கு நலம்!
பழத்தின் பளபளப்பான வெண்பரப்பு ஏகாந்தமானது.

சுழித்தோடும் நதியில் நனைந்து நிற்கும் மரநிழல்
ஒரு பெரிய பகற்பொழுதை மறக்கடித்துவிடக் கூடியது.

எல்லா காரியங்களுக்கும் கால்கள் முளைத்துவிட்ட இவ்வேளையில்
எனக்குரிய கண்களை ஆப்பிள்களாக்கி விடுவதில்
ஒரு ஆறுதல் உணர்கிறேன்.

தோல் சிவப்பானாலும் ஆப்பிள் வெள்ளைதான் - இன்னும்!