Tuesday, August 4, 2009

டெக்ஸ்வில்லர் சுவர்

மூன்று பஸ்கள் வரும் போகும் ஊர். பாலு செருப்புகளற்ற பாதங்களாய் அணைக்கட்டு, வாதநாராயணன் மரம், தோட்டம் என்று சுற்றி வருவான். நான்காம் வகுப்பிலிருந்தே காமிக்ஸ் என்றால் ரொம்ப இஷ்டம். ராணி காமிக்ஸ், லயன், முத்து காமிக்ஸ்கள் வரைந்து காட்டிய டெக்ஸ்வில்லர், ஸ்பைடர், மாயாவி, இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரேக், ஆர்ச்சி, ஜானி, 007, மாடஸ்டி, புரட்சிப்​பெண் ஷீலா, லக்கி லூக், லாரன்ஸ்-டேவிட், டேஞ்சர் டயபாலிக், பிலிப் காரிகன்.. இப்படி படங்களும் சாகசங்களுமாய் தன் சின்னஞ்சிறு உலகை விரித்துக் கொண்டான் பாலு. அந்தச் சிற்றூரில் காமிக் புத்தகங்கள் பாலுவுக்கு அரிய பொக்கிஷமாய் ஆகிவிட்டன. வறட்சியான பாடப் புத்தகங்களுக்கு மத்தியில் காமிக் நாயகர்கள் சாகசங்கள் அவனை கிளர்ச்சியுற செய்தன.
அம்மா பாலுவை திட்டுவாள்,
"பொஸ்தவமாவே படிச்சிட்டு இருக்கானே, மாட்டுக்கு தண்ணி காட்டுவோம், இல்ல தோட்டத்து ஒரு எட்டு​போயிட்டு வருவோம்னு​தோணுதா நாயிக்கு"
இதுக்கெல்லாம் அஞ்சுகிறவன் இல்லை பாலு. எப்படியிருந்தாலும் நன்றாக படித்து ரேங்க் வாங்கிவிடுவான். ஊருக்குள் அனைவரிடம் நல்ல பையன் பேரு வேறு! சிகப்பாய், அமைதியாய் ஒரு சிறுவனை யாருக்கு பிடிக்காமல் போகும்? ரேடியோ, டார்ச், வாட்ச் போன்றவற்றை இலகுவில் கழட்டி மாட்டிவிடுவான். அழகாய் ஓவியமும் வரைவான். பாலு அம்மா இதில் ஒருவகை புளங்காங்கிதம் இருந்திருக்க வேண்டும். அதிகம் அவனை வையமாட்டாள்.
காமிக்ஸ் படித்ததோடு மட்டுமில்லாமல் நண்பர்கள் மத்தியில் அவர்களை அறிமுகப்படுத்தி உயிருள்ள மனிதர்களாய் உலவவிட்டவனும் பாலுவே. அப்போதே நண்பர்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம், சிஐஏ, எஸ்ஓஎஸ், அகொதீக, கேபிஜி போன்ற இயக்கங்கள் எல்லாம் சாதாரணமாய் பேசிக்​கொள்வார்கள். அது ஒரு மாதிரியான மயக்கமாக இருந்தது.
திடீரென்று ஒருநாள்.. என்ன நினைத்தானோ, இரவோடு இரவாக வீட்டு இளமஞ்சள் வெளிச்சுவரில் அவன் மனங்கவர்ந்த டெக்ஸ்வில்லர் படத்தை கரித்துண்டால் வரைந்துவிட்டான். அம்மா எப்படி அனுமதித்தாளோ? சுமார் 10 அடி உயரமாக கரித்துண்டு ஓவியத்தில் கம்பீரமாக டெக்ஸ்வில்லர் நின்றிருந்தார். எப்படி அவ்வளவு உயரத்திற்கு சென்று வரைந்தான் என்று நண்பர்களுக்குப் புலப்படவில்லை. ஆனால் டெக்ஸ்வில்லர் கையில் ரைபிளுடன், ஒரு பாறையில் காலை ஊன்றிக் கொண்டு, தொப்பியுடன் நிற்கிற காட்சி அட்டகாசமாய் வரைந்திருந்தான். கண்கள் வரைவது சாதாரண காரியமல்லவே? பாலு புத்திசாலித்தனமாய் டெக்ஸ்வில்லருக்கு கூலிங்கிளாஸ் வரைந்துவிட்டான்.

கதைப்படியும் தர்க்கப்படியும் அவர் கூலிங்கிளாஸ் அணிய முடியாது. ஆனால் சுவர் பாலுவுடையது, ​டெக்ஸ்வில்லரும் ஒன்றும் சொல்லமாட்டார். வேறு யார் என்ன செய்துவிட முடியும்?

டெக்ஸ்வில்லர் சுவர் ரொம்ப நாள் அப்படியே இருந்தது. பின்னொருநாளில் ஏதாவது மழையோ, சுண்ணாம்பு அமிலப் பூச்சோ அதை துடைத்தெறிந்திருந்திருக்கும். கட்சி சின்னத்துக்கும் சோப்பு விளம்பரத்துக்கும் இல்லாமல் ஒரு காமிக் கதாபாத்திரத்துக்கு இடங்கொடுத்த சுவர் அப்புறம் எல்லோருக்கும் மறந்துவிட்டது. பாலுவுக்கும்!


பி.கு:

நண்பன் பாலு என்னைவிட 2 வகுப்புகள் மூத்தவன். இருந்தும் டா-ப்ரண்ட்ஸ் நாங்கள்.காமிக்ஸ், கவிதை, ஓவியம், ராஜேஷ்குமார், பாலகுமாரன், ஏ-ஜோக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஹிப்னாடிசம், காதல், காதல்-தோல்வி, இன்னும் நிறைய.. என எனக்கு அறிமுகப்படுத்திய பாலு +2க்கு​மேல் படிக்காமல் இப்போது சின்ன தாராபுரத்தில் டிவி ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறான். பார்த்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. எப்போதாவது இதைப் படிப்பான் என்று நம்பிக்கையோடு, பாலுவுக்கு, நட்புநாள் வாழ்த்துகள்!

13 comments:

Anonymous said...

சுவர் இடிந்தாலும், நட்பு மனதில் மறையாது...
நொஞ்சை தொட்டு(நக்கி)ட்டீங்க....
காலடியின் தீவிர அதிதீவிர ரசிகனின் வேண்டுகோள். காமெடி இடுகை ஒன்னு எழுதுங்க பிளிஸ்.
இந்த இடுகையும் அருமைதான்... [அ(எ)ருமை அல்ல]

சிநேகிதன் அக்பர் said...

மாம்ஸு அழ‌கா எழுதி இருக்கீங்க‌. நீங்க‌ளும் காமிக்ஸ் ப‌டிப்பிங்க‌ளா. அதுல‌ க‌டைசில 4 பக்கத்துக்கு கபீஷ் போட்டுயிருப்பானே.

நல்லஎழுத்து நடை வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னைப் போல் ஒருவன் நீங்க

ஏன்னா நானும் காமிக்ஸ்

சேம் சேம் பப்பிசேம்

Unknown said...

கொஞ்சம் jokeகா இடுகை போடலாமே

ஷங்கி said...

நல்லா வந்திருக்கு ஜெகநாதன்! பாலுவின் நட்பு புதுப் பொலிவு பெற வாழ்த்துகள். பலவிதமா பொளந்து கட்டுறீங்க. சந்ரு தளத்தில் உங்கள் கேள்விகளைப் படித்தேன். மலைத்தேன்! நீங்கள் சொல்லிய காலச்சுவடு கதைகளில் இன்னும் ஒன்று பாக்கியிருக்கிறது. மீண்டும் நட்பு வாழ்த்துகள்!

Nathanjagk said...

தம்பிரி சம்முவம்... சட்டைப் பித்தானை இப்படி தொறந்தாப்ல விட்டிருந்தா (வெ.ஆ மூர்த்தி ஸ்டைலில் படிக்கவும்) கண்ட நாயும் வந்து ​நெஞ்ச நக்கத்தான் செய்யும்.. ப்ப்ப்ர்ர்ர்..! காமெடி இடுகை.. ​போட்ருவோம்..!!

மாப்பு அக்பர், கபீஷ் படிக்காம இருக்க முடியுமா? அது என் ஃபேவரைட் ஆச்..... ஏய்.... என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே?????

ஸ்டார்ஜன் மாம்ஸ், பாருங்க உங்கள வாயார மாம்ஸுன்னு சொன்ன புண்ணியம், ஒரே உறவுமழையா ​பொழியுது! நன்றி!

நன்றி நித்யா, jokeகாவே எழுதிடுவோம்!

அண்ணா! சங்காண்ணா! வாழ்த்துக்கு நன்றிங்ணா! சந்ருக்கு ​போட்ட பின்னூட்டம் ​கொஞ்சம் ஓவரோன்னு ஃபீல் பண்றேன். சும்மாயிருந்தவனை பின்னூட்டப்புயல்ன்னு உசுப்பேத்திவிட்டது யாரு..???

நந்தாகுமாரன் said...

லயன் காமிக்ஸ் வெளியிட்ட டெக்ஸ்வில்லர் தோன்றும் “டிராகன் நகரம்” எனக்கு மிகப் பிடித்த சாகசக் கதை ... சும்மா வேட்டையாடு விளையாடு என்று இருக்கும் ...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இன்னொரு காமிக்ஸ் பிரியர்... ம்ம்ம்.. காமிக்கஸால நண்பர்களாகி வாழ்ந்த அந்தக் காலம் என்றுமே நிழலாடுகிறது...

Admin said...

என்ன நண்பா மற்றவங்களைவிட வித்தியாசமா யோசிக்கிறிங்க உங்களால மட்டும எப்படி முடியிது...

Nathanjagk said...

அன்பு Nundhaa, ​டெக்ஸ்வில்லர் எனக்கு ரொம்ப படித்த காமிக் பாத்திரம். காமிக் ​பேர ​கேட்டதும் பால்யம் துளிர் விடுதே? டிராகன் நகரம் படித்த ஞாபகம். பாலுவைக் ​கேட்டா பளிச்சினு ​சொல்லிடுவான்!

அன்பு மதுவதனன் மௌ. / cowboymathu, இப்படியொருநி​னைவூட்டுதலாக இடுகை அமைந்தது மகிழ்ச்சியாயிருக்கு! நன்றி நண்பரே!

ப்ரிய சந்ரு, //உங்களால மட்டும் எப்படி முடியிது...// அதுதான் எனக்கே புரிய மாட்டேங்குது! எத்தனை அடி..? எத்தனை உதை..? அப்படியும் எழுதியே ஆவணும்னு அடம்புடிக்கிறேனே?? எப்படி முடியிது...??
நன்றி சந்ரு!

ஷங்கி said...

நீங்கதான் ஒரிஜினல் பின்னூட்டப் புயல், பின்னூட்டச் சூறாவளி, பின்னூட்டச் சுனாமி எல்லாம். யாரும் அடிச்சுக்க முடியாது!

நேசமித்ரன் said...

அது ஒருக் காலம் னே சிறுவர் மலர் உயிரைத்தேடி
பான்தோம் தி மேனாஸ்
எம்புட்டு கதை

Unknown said...

நேச மித்ரன் கூறியது //அது ஒருக் காலம் னே சிறுவர் மலர் உயிரைத்தேடி
பான்தோம் தி மேனாஸ்
எம்புட்டு கதை//
அன்பு ​நேசா, அது ரத்தத்தை தேடி கதையல்லவா?? பீட்டர் என்று ஒரு சிறுவன் வருவானே? அதுதானே நீங்கள் குறிப்பிடுவது?