Tuesday, February 11, 2014

But Where's My Pumps?

கிரிலோஸ்கர்வாடி. மஹாராஷ்ட்ராவிலுள்ள ஒரு தொழில்நகரம். இதை கிரிலோஸ்கர் பம்புகளின் தாய்வீடு எனலாம். இந்த பிரம்மாண்டமான பம்பு தொழிற்சாலையில் கல்லூரி இறுதியாண்டு பிராஜக்ட் செய்தால் சீறும் சிறப்புமாக இருக்குமே என்ற எண்ணம் முதலில் எனக்கே உதித்தது.

வாரம் முழுதும் சாம்பல் நிற சீருடையில் திரிய விதிக்கப் பட்ட மெக்கானிக்கல் பிரிவு. பிராஜெக்ட் நண்பர்கள் என நாங்கள் நால்வர். கல்லூரியிலிருந்து அவ்வளவு தொலைவு பயணித்து பிராஜெக்ட் செய்த பெருமை பெற்ற குழு எங்களுடையது. யாருக்கும் ஹிந்தி தெரியாது.. தெரிந்திருந்தாலும் பிரயோசனப் பட்டிருக்கிறாது என்றே நினைக்கிறேன். கிரிலோஸ்கர்வாடியில் மேலதிகம் பேசப்பட்டதெல்லாம் மராத்தியும் பான்பீடாவும்தான்.

முன்னேற்பாடாக, நண்பனின் உறவினர் ஒருவர் சிபாரிசு செய்ய சம்மதத்திருந்தார். இருந்தும் சிபாரிசு முழுமையாக கிரிலோஸ்கரை வந்தடையாததால் எங்களை ஒரு சந்தேகத்தோடுதான் உள்ளனுமதித்தார்கள்.

வாடியின் வளாகத்துக்குள் ஓர் ஊரே அடைப்பட்டு இருந்தது. தொழிற்சாலை, குடியிருப்புகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, அங்காடி, நீச்சல்குளம், பூங்கா.. இப்படி! அங்கு அருமையாக பேணப்பட்டு வந்த பயணியர் விடுதி ஒன்றிருந்தது. அது தொழிற்சாலைக்கு வரும் விருந்தினர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் பிற கிளைகளிலிருந்து வரும் அலுவலர்கள் போன்றோர் தங்குமிடமாக இருந்தது. கல்லூரி மாணவர்களாயிருந்த எங்களை எப்படி வகைப்படுத்துவது என்ற குழப்பம் கிரிலோஸ்கர் இருந்திருக்கும் போல. போகட்டும் என்று பயணியர் விடுதியில் தங்க அனுமதித்தார்கள்.

விடுதியில் ஒரு உணவகம் உண்டு. இழைத்து இழைத்து பராமரிக்கப்பட்ட உணவகம். உணவின் நுண்கூறுகளும் ஆரோக்கியத்தின் அனைத்து நுணுக்கங்களும் கடைத்தேறிய ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட உணவுகள் மட்டுமே அங்கு பரிமாறப்பட்டன. காலையுணவென்றால் ரொட்டியும் வெண்ணையும் அல்லது ஆம்லெட், கூட சுடச்சுட தேநீர். மதியம் உணவு ரொட்டி, சாதம், பலவகை பயறுகள் அடங்கிய சாலட்.. இப்படி! கிரிலோஸ்கர்வாடி-பிராஜெக்ட்டுக்கு யோசனை கூறிய என்னை, இந்த ஒரே காரணத்திற்காக நண்பர்கள் மன்னித்தனர்.

உணவத்தில் சிலசமயங்களில் எங்களுடன் வேறு சிலரும் உணவருந்த வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும் விற்பனைப் பிரதிநிதிகள் அல்லது உயர் அலுவலர்களாயிருப்பார்கள். அதிகம் போனால் ஒரு நாள் அல்லது கூட சிலநாட்கள் தங்கியிருப்பதுண்டு. நாங்களோ பலவாரங்களாகவே விடுதியின் காலை ரொட்டி முதல் இரவுச் சப்பாத்தி வரை உண்டு ஒரு நிரந்தர வாடிக்கையாளர் தொனியில் உலாவி வந்தோம்.

பிராஜெக்ட் என்ன செய்வது என்று இன்னும் ஒரு பிடி கிடைக்கவில்லை. காலையுணவு ஆனதும் பம்பு தொழிற்சாலையில் இடது வலது என்று வெளிநாட்டுப் பயணிகள் போல சுற்றிவருவோம். சிறிது நேரத்தில் பசிக்கவேறு ஆரம்பித்து விடும். பிறகென்ன.. நேராக உணவுவிடுதிதான். உணவகத்தில் வேலைப் பார்த்த பரிமாறுவோர், சமையல்காரர், காவல்காரர் என அனைவருக்கும் பழகிய முகங்களாயிருந்தோம். சைகையாலேயே இது ரொம்ப நல்லாயிருக்கு.. இன்னொரு ப்ளேட் வேணும் இதுதான் அந்த வீர மராத்தியர்களிடம் நாங்கள் அதிகம் மேற்கொண்ட சம்பாஷணை.

ஒரு இரவு நேரம். உண்டு முடித்திருந்தோம். உணவகத்தில் இருந்த விருந்தினர் புத்தகத்தை பொழுது போக்காக எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தோம். தங்கிய பயணிகள் விடைபெற்றுச் செல்லும் போது விடுதியின் தரத்தைப் பற்றிய கருத்துக்களைப் பதிந்திருந்தார்கள். ரொட்டி அற்புதம், சாலட் பிரமாதம், சமையல்காரர் கில்லாடி, பரிமாறுவோரின் பாசம் என பலவாறான பாராட்டுகளாய் நிறைந்திருந்தது புத்தகம்.

அப்புத்தகத்தில்தான் வாழ்வின் உன்னதமான ஒரு தத்துவத்தை ஒருவர் எழுதி விட்டுச் சென்றிருந்தார். அவர் அநேகம் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்திருக்கக் கூடும். பம்புகள் வாங்க வந்துவிட்டு அவை தயாரித்து ஒப்படைக்கும் வரை விடுதியில் தங்க நேர்ந்திருக்கக் கூடும். அவர் விருந்தினர் புத்தகத்தில் எழுதியிருந்தது இதுதான்:

'Food is good.. but where is My Pumps???' 

அவர் ஒரு காரியப் புலியாகவும் இருந்திருக்கக் கூடும்! ஒரு வழியாக பிராஜெக்ட் முடித்து விட்டு ஊருக்குக் கிளம்பும் போதுதான் தெரிந்தது. நாங்கள் உண்ட காலைரொட்டி முதல் இரவு சப்பாத்தி வரைக்கும் ஒன்று விடாமல் குறித்து ஒரு பில்லை நீட்டினார்கள். அப்போதுதான் புரிந்தது அசல் காரியப் புலி யாரென்று!

டிஸ்கி:
இப்பதிவுக்கு தமிழில் தலைப்பிட முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன்!

Monday, January 27, 2014

ஒள்​ளே உடுகரு..!

பெங்களூரில் சேக்ஷாத்ரிபுரத்தின் முதல் பிரதான வீதியின் ஒரு சிறு அறையில் தனியனாக வாழ்ந்து வந்தேன். வீட்டுச் சொந்தக்காரர் கன்னடத்தினர். மேல்மாடியில் அவர்கள் குடியிருப்பு. எனது பிழையான கன்னடத்தை நான் கொடுக்கும் வாடகையின் பொருட்டுப் பொறுத்தருளி வந்தனர். வீட்டுக்காரம்மாளிடம் நல்ல பையன் என்ற பேர் கூட வாங்கியிருந்தேன்
ஒரு சமயம் சொந்தவூர் சென்று திரும்பினேன். இடைப்பட்ட நாளில் வீட்டுக்காரம்மாளின் கணவர் அகால மரணமடைந்திருந்தார். வயது அறுபதுக்கு மேலிருக்கும். நான் வாடகை கொடுக்கப் போகும் சாக்கில் துக்கம் விசாரித்து விட்டு வரலாம் என்றத் திட்டத்தோடு மாடிக்கு சென்றேன். வீட்டுக்காரம்மாள், என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டாள்.
நென் எஜமானரு செத்ததோகிதாரெ...’
என்று வாயில் சேலைத் தலைப்பைக் கதக்கிக் கொண்டு தேம்பினார். திருத்தமான பொட்டோடு இருந்த நெற்றியின் வெறுமையைப் பார்க்க எனக்கும் என்னவோ போலிருந்தது. அதுவரை அச்சுப்பிச்சு வார்த்தைகளை மட்டும் கொண்டு வளர்ந்து (வளர்த்து) வந்த என் கன்னடத்துக்கு ஒரு சோதனை எனலாம். கன்னடத்தில் துக்கம் விசாரிக்க வேண்டிய நிலைமை. நினைவிலிருந்த எல்லா கன்னட வார்த்தைகளிலிருந்து நல்லதாகப் பொறுக்கி, அழுது கொண்டிருந்த அம்மாளைத் தேற்றும் பொருட்டு நான் சொன்னது இது:
ப்ச்ச்.. பிடிறி.. ஒள்ளே உடுகரு செத்தோகிப் பிட்டிதாரே..!!’
வாயில் துணியைக் கதக்கி தேம்பிக் கொண்டிருந்தவர் அழுகை சட்டென்று நின்று போனது போலிருந்தது. ஒரு மாதிரி மர்மான புன்னகை குடிவந்தது போலிருந்தது அம்மாளின் முகம். அதற்கு மேலும் துக்கம் விசாரிக்க வேண்டாமென்று அமைதியாக வாடகையைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இருந்தும் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நண்பரிடம் நடந்ததைச் சொன்னார். வஞ்சகமில்லாமல் சிரித்துவிட்டு அவர் சொன்னது:
நீங்கள் துக்கம் விசாரித்து எல்லாம் சரிதான்.. ஆனால் நல்ல மனுஷன் என்பதற்கு பதிலாக...... நல்ல பையன் செத்துப் போயிட்டாரே-ன்னு சொல்லியிருக்கிறீர்கள்!’
உண்மையிலேயே எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.


Wednesday, January 22, 2014

காமிக்ஸ் இல்லாத தமிழ் இலக்கிய உலகம்..!


37வது சென்னை புத்தக கண்காட்சி.. ஒரு சனிக்கிழமை சென்று 20 புத்தகங்கள் போல அள்ளிவந்தேன். இலக்கியம், எலக்கியம், தீவிர இலக்கியம், பிக்ஷன், நான்-பிக்ஷன், நீயும் பிக்ஷன் என ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் போல.

ஆண்களைவிட பெண்கள், குழந்தைகள் அதிகம் வந்திருந்தது போலிருந்தது. எனக்கு இதுவே முதல் செ.பு.க விஜயம். மொத்தம் 777 கடைகள்... அதைவிடுங்கள்.. இத்தனை புத்தக சங்கமத்தில் ஒரேயொரு தமிழ் காமிக்ஸ் கடை மட்டுமே இருந்தது.. முத்து காமிக்ஸ். பால்யத்தை மீட்கும் செயலாக சில காமிக்ஸ்கள் வாங்கினேன். முன்னை விட அழகான வடிவமைப்பில், பெரிய அளவில் அச்சிடப்பட்ட படக்கதைகள். முத்து-லயன் காமிக்ஸுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. இன்னும் 80களில் வந்த அதே ஹீரோக்கள் இன்றைய மறுபதிப்பிலும். அங்கங்கு கடைகளில் அமர் சித்திர கதா நூல்கள் இருந்தாலும் அவைகள் கதை மற்றும் தொழில்நுட்ப அளவில் ஈர்க்கவில்லை.

மேலும் இன்னும் நம் சித்திரக்கதை உலகம் வெளிநாட்டுகளிலிருந்துதான் சரக்கை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. நமக்கென தனி ஹீரோ, கதை சொல்லும் பாணி, ஓவியம் மற்றும் தொழில்நுட்பம் இல்லை எனலாம். அமர் சித்திர கதா இந்த அளவில் நன்கு செயல்பட்டு வருகிறது.. பிரதாப முதலியார் சரிதம், சீவக சிந்தாமணி போன்ற இலக்கிய வகைகளை பிரசுரித்திருக்கிறார்கள்.

தமிழ் காமிக் உலகம் மிகவும் பின்தள்ளியிருக்கிறதோ என தோன்றுகிறது.. சிறுவர்களிடம் இலக்கிய வாசிப்பை அறிமுகப்படுத்தும் மிக முக்கிய கருவியாக காமிக்ஸ் இருக்கின்றன. காமிக்ஸ்கள் சீரான கதியில் ஒரு வாசகனை தேர்ந்த இலக்கிய வாசிப்புக்கு நகர்த்துகிறது.

மார்வல் மற்றும் டிஸி காமிக்குளின் ஆதிக்கம் ஹாலிவுட்டில் மிக அதிகம். காமிக் ஹீரோக்களின் மிகச்சிறந்த இரசிகன் ஹாலிவுட் எனலாம்.சூப்பர் மேன் முதல் பார்ப் வயர் வரை.. தமிழில் பிதிக்கப்படும் காமிக்ஸ்கள் மிகச் சொற்பம். நம் பாடத்திட்டங்களிலும் படக்கதைகளுக்கு இடமில்லை. பத்திரிக்கைளிலோ அல்லது வாராந்திர இதழ்களிலோ மிகக் குறைந்த சதவீதத்தில் தான் - அதுவும் துணுக்குகளாக மட்டுமே - பிரசுரிக்கப் படுகின்றன. சித்திரக்கதைகள் என்ற உலகம் பற்றி அறியாமலேயே ஒரு தலைமுறை மெதுவாக தாய்மொழி இலக்கியத்தை வாசிக்கும் பழக்கத்தை இழக்கிறதோ?

சிறுவர்கள் ஹாலிவுட் படங்களிலும் கார்ட்டூன் சேனல்களில் மட்டுமே தங்கள் சாகஸ ஹீரோக்களை கண்டு ஆறுதலடைகிறார்கள் என தோன்றுகிறது.